முருகன் அவதாரத்தில் ஓர் இஸ்லாமியக் கலைஞன்!
இராஜா முகமதுவின் கால்ஷீட் இல்லை என்றால் தென் தமிழ்நாட்டின் பல கிராமங்களில் ஊர் திருவிழா நடக்காது, கோவில் கொண்டாட்டம் கிடையாது, காது குத்து இல்லை, கல்யாணம் இல்லை.  காரணம், இராஜா முகமதுவின் கம்பீரமான இசைக் குரல்.கோவில் என்றால் உபன்யாசம், ஊர் திருவிழா என்றால் இசை நாடகம், வீட்டு விசேஷம் என்றால் பஜனை என்பதுதான் இராஜா முகமதுவின் அன்றாடத் தொழில். இவரது இயற்பெயரான ஷேக் சாகுல் அமீத் என்பதை மாற்றி இராஜா முகமது என்று பெயரிட்டவர் கிருபானந்த வாரியார்.  இராஜா முகமது என்ற பெயர் இஸ்லாமியப் பெயர் கிடையாது… அது முருகனின் இன்னொரு பெயர் என்று ஆறுதலும் உறுதியும் கொடுத்தவரும் அதே வாரியார்தான். ‘வள்ளித் திருமணம்’, ‘மதுரை வீரன்’, ‘சத்யவான் சாவித்ரி’ என்று இசை நாடகத்தின் மூலம் தென் மாவட்ட கிராமங்களில் தன் கணீர் குரலால் பல வேஷங்கள் இட்ட இராஜா முகமது, இதில் ‘சங்கீத கோவலன்’ போன்ற அரிய நாடகப் பிரதிகளையும் தமிழ் ரசிகர்களிடையே மறக்காமல் இருக்கப் பண்ணி வருகிறார்.
 இரண்டு ஆண் பிள்ளைகள், ஒரு பெண் என குடும்பமாக வாழும் இராஜா முகமது அரசு தொலைபேசி துறையில் நீண்ட நாட்கள் வேலை செய்து இரண்டு வருடம் முன்பு விருப்ப ஓய்வு பெற்றிருக்கிறார். அவருடன் உரையாடினோம்.‘‘அந்தக் கால மதுரை மாவட்டத்தின் திண்டுக்கல்லில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கிராமமான பெரிய கலிக்கம்பட்டிதான் என் சொந்த ஊர்.
கொள்ளுத் தாத்தாவின் அப்பா மைசூர் மகாராஜாவாக இருந்த ஹைதர் அலியின் கவர்னராக இந்த கிராமத்தில் இருந்திருக்கிறார். அப்பா ஷேக் தாவூத் சாயுபு ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். காமராஜரின் நண்பர். ஊரில் 5 வது வரைக்கும்தான் பள்ளி இருந்ததால் என் தாய்மாமன் வீடான திண்டுக்கல்லுக்குப் படிக்கப்போனேன்...’’ என்கிற, இராஜா திண்டுக்கல்லில் இருந்த இசை மேதைகளால்தான், தான் ஒரு இசைக் கலைஞனாக உயர்ந்தேன் என்கிறார்.
‘‘அந்தக் காலத்தில் திண்டுக்கல்லில் இரண்டு பெரிய பணக்கார குடும்பங்கள் இருந்தன. ஒன்று அங்குவிலாஸ் பொன்னுசாமிப் பிள்ளை. மற்றது தானாபீனா சொக்கலால் ராம்சேட் குடும்பம். சொக்கலால் குடும்பம்தான் பீடித்தொழிலில் பணக்காரர்களானது. இந்த இரண்டு பணக்காரக் குடும்பங்களும் ஆளுக்கொரு இசைக் குழுக்களை வைத்திருந்தன.
அந்தக் காலத்தில் குழுக்களைத் தனியார் வைப்பது பெரிய சிரமம். அவ்வளவு செலவு பிடிக்கும். அங்குவிலாஸ் குடும்பத்தை தரிசித்து பலன் பெற பெரிய, பெரிய வித்துவான்கள் எல்லாம் வருவார்கள். சி.எஸ்.ஜெயராமன், சீர்காழி கோவிந்தராஜன், குன்னக்குடி வைத்தியநாதன் எல்லாம் அங்கே வருவார்கள்.
இந்த பொன்னுசாமிப் பிள்ளையின் இசைக்குழுவில் மிருதங்க வித்துவானாக இருந்தவர் சுப்புராம ஐயர் எனும் ஒரு வித்துவான். இவரின் வீடு எங்கள் வீட்டுக்கு எதிரேதான் இருந்தது. இவருக்கு இரண்டு மனைவிகள்.
ஆனால், யாருக்கும் பிள்ளைகள் இல்லை. நான் அடிக்கடி அந்த வீட்டுக்கு சிறுவயதில் போய் வருவேன். பிள்ளை இல்லாததால் என்னை அவரின் பிள்ளை போல சுப்புராமையர் பார்த்துக்கொள்வார். அவரின் அறையில் பலவகையான புத்தகங்கள் இருக்கும். அவற்றை எனக்கும் படிக்கக் கொடுப்பார். புராணம், இசை, இலக்கியம், சமயம் தொடர்பான ஏராளமான புத்தகங்கள் இருக்கும். அவற்றைப் படித்தால் அதிலிருந்து பாடக் கேட்பார் சுப்புராைமயர். அதிலும் உபன்யாசத் தொனியில் அவருக்கு பாடிக் காட்டவேண்டும். உபன்யாசத் தொனியில் பாடுவது ராகத்தோடு பாடுவதற்குச் சமமானது. இப்படித்தான் நான் பாடும் திறனைப் பெற்றேன்...’’ என்கிற இராஜா , இதில் சில சிக்கல் வந்ததாகவும் அதிலிருந்து மீண்ட அனுபவத்தையும் பகிர்ந்தார்.
‘‘சரிகமபதநியில் 7 சுவரங்கள் இருக்கிறது. கர்நாடக இசையில் இந்த 7 சுவரங்களை நீட்டி 16 சுவரங்கள் என்பார்கள். அதாவது, இந்த 7 சுவரத்துக்கும் ஒரு எண் கொடுப்பதால் அது 16 சுவரமாகும். ஆனால், தமிழில் இந்த 7க்கும் எண் கொடுத்தால் 12 சுவரம்தான் மொத்தமாக வரும். இந்த சந்தேகத்தை நான் பல பேராசியர்களிடம் கேட்டேன். அப்போது திண்டுக்கல்லில் இருந்த ஒரு கல்லூரியில் நான் எம்.ஏ தமிழ் படித்தேன்.
மதுரையில் இருந்த ஒரு பேராசிரியர் தமிழ் பேராசிரியர்களுக்கு எழுத்து இலக்கணம்தான் தெரியும். இசை இலக்கணம் தெரியாது. ஆகையால் மதுரையில் இருந்த இன்னொரு பேராசிரியரான வி.பா.கா சுந்தரத்தை போய் பார்க்கச் சொன்னார்.
இந்த வி.பா.கா சுந்தரம் என்பவர் பாரதிதாசனின் நண்பர். அப்போது ஒரு சித்த வைத்திய நண்பர் ஒருவர் என்னிடம் ‘பூர்வ சங்கீத உண்மை’ எனும் ஒரு புத்தகத்தையும் கொடுத்திருந்தார். அது எனக்கு புரிபடவில்லை.
சுந்தரத்தை பார்த்தேன். ‘தமிழ் இசையில் 12 சுவரங்கள்தான்… 16 சுவரம் என்று சொல்வது எல்லாம் திரிபு’ என்று சொல்லி சுந்தரம் என்னை ஆசுவாசப்படுத்தினார். அதன் பின் என் தமிழ் இசை ஆர்வம் கூடிக்கொண்டே போனது...’’ என்கிற இராஜா, தன் சிறு வயது அனுபவம் பற்றியும் எம்.ஜி.ஆரைச் சந்தித்தது பற்றியும் கூறினார்.
‘‘ சிறு வயதில் நெற்றியில் குங்குமம், விபூதி பட்டை, இடுப்பில் வேட்டி, தலையில் விரிந்து விழும் முடியுடன் நான் பாகவதர் மாதிரி தோற்றம் பூண்டு ஊர் ஊராக பாடிக்கொண்டிருந்தேன். அப்போது எம்.ஜி.ஆர் புதுக்கட்சி ஆரம்பித்திருந்தார். ஒருமுறை எங்கள் ஊருக்கு பக்கத்து ஊருக்கு வந்திருந்த எம்.ஜி.ஆரைப் பார்க்க நானும் போயிருந்தேன். அவரைப் பற்றி நான் பாடவும் என்னை மடியில் உட்கார வைத்து பண நோட்டுகளை எனக்கு பரிசளித்தார். நான் வேண்டாம் என்று சொல்லவே எனக்கு ‘இளைய இசை முரசு’ எனும் பட்டத்தைக் கொடுத்தார். கட்சி பிரச்சாரத்துக்கு என்னை வரும்படியும் கேட்டுக்கொண்டார். நான் 6வது படிக்க திண்டுக்கல்லுக்குச் சென்றுவிட்டேன்...’’ எனும் இராஜா, வாரியார் சந்திப்பு குறித்தும் பேசினார்.
‘‘நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம். பேராசியர் ஒருவர் கந்தபுராணத்தில் வரும் ஆறுபடை வீடு அழகர் கோயில்தான் என்று வாதம் புரிந்தார். நான் இல்லை என்று சொன்னேன். இப்படி இருக்கையில் திண்டுக்கல்லுக்குப் பக்கமாக இருந்த ஒரு கோயில் கும்பாபிஷேகத்துக்கு வாரியார் வந்திருந்தார். பேராசிரிய நண்பரும் ஆறுபடை வீடு பற்றி வாரியாரிடம் கேட்டிருக்கிறார்.
வாரியார் என்னை மாதிரியே அதை மறுத்திருக்கிறார். பின்பு என்னைப் பார்க்கவேண்டும் என்று வாரியார் கேட்டிருக்கிறார். வாரியாரைப் பார்த்ததும் சில பாடல்களைப் பாடினேன். பாடியதும் அவர் எனக்கு இனிமேல் நான் ஷேக் சாகுல் அமீது இல்லை…. இராஜா முகமது என்று புதிய பெயர் சூட்டினார்.
நான் இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டேன். இராஜா முகமது என்பது இஸ்லாமியப் பெயர் கிடையாது. அது முருகனின் இன்னொரு பெயர் என்று விளக்கினார். முருகனின் ஆறு முகங்களும் அவர்களை வளர்க்கும் பெண்களுக்கு அடையாளம் தெரியாதபடிக்கு இருந்ததால் ஆறுமுகமும், ஒரு முகமதுவாக, அதுவும் இராஜா முகமதுவாக மாறியதாக வாரியார் தன் தொனியில் பாடிக்காட்டி அந்தப் பெயரின் விசேஷத்தை விளக்கினார்...’’ என்கிற இராஜா, இசை நாடகத்தில் எப்படி கோலோச்சினார் என்பது பற்றியும் விளக்கினார்.
‘‘சுப்புராமையரின் மாணவன் அனுமந்த ஐயர்தான் என்னை சிறுவயதில் பஜனை, நாடகம் என்று கூட்டிட்டுப் போவான். ஆனால், நான் திண்டுக்கல் வந்ததும் கரூரில் நாடகத்தில் மிகப் பிரபலமாக இருந்த கலைமாமணி அம்பிகாபதி என்பவர் திண்டுக்கல்லுக்கு ஒருமுறை வந்திருந்தார்.
என் பாடும் திறனைப் பார்த்ததும் என்னைக் கரூருக்கு வரும்படிக் கேட்டார். நானும் கரூருக்கு சென்று நாடகங்களைக் கற்றுக்கொண்டதோடு, மானாமதுரை, திண்டுக்கல், மதுரையில் போடப்பட்ட நாடகங்களைப் படித்தும், அதை மேடையேற்றவும் கற்றுக்கொண்டேன். பலபேர் ‘சங்கீதக் கோவலன்’ எனும் ஒரு நாடகத்தைக் கேள்விப்பட்டிருக்கமாட்டார்கள். இதை இயற்றியது சங்கரதாஸ் சுமாமிகள். அவர்தான் இதையும் இயற்றினார் என்பதை பலர் மறந்துவிட்டார்கள்.
சிலப்பதிகாரத்தின் அடிப்படையில் இந்த நாடகத்தை அவர் படைத்திருப்பார். சங்கரதாஸ் சுவாமிகள் மாதிரியே அன்று மிகப் பிரபலமாக இருந்த நாடக வித்வான்கள் சங்கரலிங்க கவிராயர், முத்துச்சாமி கவிராயர் மற்றும் தென்னம்பட்டி பெருமாள் ராஜு. இவர்களை எல்லாம் இன்றைய நாடக வரலாற்று ஆசிரியர்கள் மறந்துவிட்டார்கள். இதை எல்லாம் நாம் மீண்டும் தோண்டி எடுக்கவேண்டும்...’’ என்று அழுத்தமாக முடித்தார் இராஜா முகமது.
டி.ரஞ்சித்
|