சென்னையை நம்பிதான் இந்திய டிஜிட்டல் உள்கட்டமைப்பு இருக்கிறது!
தேவைக்கேற்ப பொருள் உற்பத்தி முறை மாற்றம் அடையும்போது நவீன விஞ்ஞான கருவிகளைக் கொண்டு தனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதில் சுலபமான வழிமுறைகளை மனித குலம் கையாள்கிறது. இந்த வகையில் லேட்டஸ்ட் ஆக இணைந்திருப்பது டேட்டா சென்டர்ஸ்.  உலகம் முழுவதும் உள்ள மனிதர்களின் எண்ணிக்கை மட்டுமின்றி விலங்குகள், தாவரங்கள், கடல் வாழ் உயிரினங்கள், கண்ணுக்குப் புலனாகாத பல்வேறு வகையான பாக்டீரியாக்கள், வைரஸ்கள் துவங்கி விவசாயத்திலிருந்து ராணுவ தளவாட உற்பத்தி வரை அனைத்தையும் தரவுகளாகத் திரட்டி வைத்துக் கொள்வதும் அதை விற்பனை செய்வதும் இதை வைத்து வேறொன்றை உருவாக்குவதும்தான் இன்றைய உலகின் முதன்மையான பணியாக இருக்கிறது.
வல்லரசு நாடுகள் முதல் வளரும் நாடுகள் ஈடாக மூன்றாம் உலக நாடுகள் வரை சகலத்தின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் எழுச்சியும் இன்று டேட்டா சென்டர்களையே மையம் கொண்டிருக்கின்றன.
ஆம். புதிய வகையில் உலகைக் கட்டுப்படுத்துவது இன்று டேட்டா சயின்ஸ்தான். தரவுகளை திரட்டி வைத்துக்கொண்டு அதனை தேவையானவர்களுக்கு, தேவையான நேரத்தில் விற்பனை செய்கின்ற டேட்டா சென்டர்கள்தான் தற்காலத்தில் உலகளவில் மிக முக்கியமான இடத்தை வகிக்கின்றன.
உலகின் மேல்நிலை வல்லரசாக தன்னை தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கும் அமெரிக்கா தன்னுடைய நாட்டில் மட்டும் 5381 தரவு திரட்டு மையங்களை வைத்துள்ளது என்றால் இதன் வீரியம் புரியும். 1940ம் ஆண்டு வாக்கில் இராணுவத்திற்குத் தேவையான தரவுகளைத் திரட்டி வைப்பதற்கு பொருத்தமான மிகப்பெரிய ‘எந்திரம்’ உருவாக்கப்பட்டது.
அதுதான் கம்ப்யூட்டர் என இன்று நாம் பயன்படுத்தும் கணினியின் ஆரம்பப் புள்ளி.அன்று ஓர் அறை முழுக்க ஆக்கிரமிக்கும் அளவுக்கு பகாசூரனாக உருவாக்கப்பட்ட கம்ப்யூட்டர்தான் டேட்டா சென்டர் என்பதன் தொடக்கம்.
அதன் பிறகு மைக்ரோ கம்ப்யூட்டர்ஸ் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு - 1980களில் - நவீன கம்ப்யூட்டர்கள் தரவு மையங்களாக மாறின.
1997க்கும் 2000க்கும் இடையில் ஏற்பட்ட டாட் காம் நெருக்கடி என்ற பிரச்னை - Y2K - கம்ப்யூட்டர் தரவு மையங்களின் மீதான நம்பிக்கையை சீர்குலைத்தது. தவிர திடீரென இத்தகைய கருவிகள் அனைத்தும் செயலிழந்து போகும் என்ற அச்சமும் அதிகரித்தது.ஆனால், இதிலிருந்து ஒரு வழியாக மீண்டு பிறகு 2010 வாக்கில் கிளவுட் டேட்டா சென்டர் (CDC) என்ற முறையில் உருவாகியுள்ள அதிநவீன முறையிலான தரவுகள் சேகரிப்பு & தரவுகள் திரட்டு மையங்கள்தான் இன்று உலகின் ஹாட் ஸ்பாட்.
தரவுகளைத் திரட்டி வைப்பதற்கு பயன்படுத்தப்படும் செயற்கை நுண்ணறிவு திறன் மற்றும் மெஷின் லேர்னிங் போன்ற தொழில்நுட்பங்களின் காரணமாக 2020ல் 64.25 ஜெட்டா பைட் கொண்ட தரவுகள் திரட்டு மையங்கள் நடப்புக்கு வந்தன. இந்த எண்ணிக்கை 2025ம் ஆண்டு இறுதிக்குள் 180 ஜெட்டா பைட் கொண்டதாக அதிகரிக்கும் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இத்தகைய சூழலில் சென்னை இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய தரவுகள் திரட்டு மையமாக உருவெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.அடுத்த இரு வருடங்களில் 1.54 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகள் இத்துறையில் வரும் என கணிக்கப்பட்டுள்ளது. இது, இந்தியாவுக்கு வரும் மொத்த டேட்டா சென்டர் முதலீடுகளில் சுமார் 27 சதவீதமாகும்.
சென்னையின் டேட்டா சென்டர் வளர்ச்சியைத் தூண்டும் முக்கிய காரணிகளாக இருப்பது நிலையான மின்சார சப்ளை, தேவைக்கு அதிகமாக திறன் வாய்ந்த ஊழியர்கள் படை, அரசின் கொள்கைகள், ஆறு கேபிள் லேண்டிங் நிலையங்கள் இருப்பதன் மூலம் உலகளாவிய நெட்வொர்க்குகளுடன் வலுவான இணைப்பை வழங்குவதுதான் என்கிறார்கள்.இன்றைய டிஜிட்டல் உள்கட்டமைப்பிற்கு முக்கியத் தேவையாக இருப்பது டேட்டா சென்டர்தான்.
அந்த வகையில் இந்தியாவின் மொத்த டிஜிட்டல் உள்கட்டமைப்பு தேவையில் பெரும் பங்கை சென்னை மட்டுமே பூர்த்தி செய்கிறது என்றால் மிகையில்லை. ஆம். சுமார் 88 MW திறன் கொண்ட டேட்டா சென்டர் கட்டமைப்பு சென்னையில் உள்ளது.சென்னையில் சிறுசேரி மற்றும் அம்பத்தூர் பகுதிகளில் இயங்குகின்ற தரவு சேகரிப்பு மையங்கள் மிகப்பெரும் அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்குகின்றன.
ஜான்சி
|