நன்கொடை நாயகர்கள்!



சமீபத்தில் உலகப்புகழ் பெற்ற நடிகரான ஜாக்கிசான், தான் சம்பாதித்த 3400 கோடி ரூபாயை மக்களுக்குத் தருவதாக அறிவித்தார். தனது மகனுக்கு சொத்திலிருந்து ஒரு பைசாவைக் கூட தரப்போவதில்லை. மகனுக்குத் திறமையிருந்தால் அவரே சம்பாதித்துக் கொள்ளட்டும் என்றும் சொல்லியிருக்கிறார்.

ஜாக்கி சானின் நன்கொடை கல்வி, பேரிடர் நிவாரணம், காடு மற்றும் வன உயிர்கள் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தப்படும். இந்நிலையில் ஜாக்கிசானைப் போல, தான் சம்பாதித்த பணத்தில் பெரும்பகுதியை நன்கொடையாக தந்திருக்கும் முக்கியமான கொடை வள்ளல்களைப் பற்றிப் பார்ப்போம்.

பில்கேட்ஸ்

பில்கேட்ஸைப் பற்றிய அறிமுகம் தேவையில்லை. உலகம் அறிந்த நபர் அவர். மைக்ரோசாஃப்ட் என்றால் பில்கேட்ஸ். 25 வருடங்களுக்கு முன்பு தனது மனைவியுடன் இணைந்து ஒரு தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்தார். 
விவாகரத்துக்குப் பிறகு பில்கேட்ஸ் மட்டுமே அந்த தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இப்போது அந்த நிறுவனத்தின் பெயர், ‘கேட்ஸ் பவுண்டேஷன்’. உலகம் முழுவதும் தனது சேவையைச் செய்து வருகிறது இந்தத் தொண்டு நிறுவனம்.

ஹெல்த்கேர், கல்வி, வறுமை ஒழிப்பு, மருத்துவ ஆராய்ச்சி, சுகாதாரம் போன்ற பல்வேறு துறைகளின் மேம்பாட்டுக்காக 6,60,724 கோடி ரூபாயை நன்கொடையாகத் தந்திருக்கிறது ‘கேட்ஸ் பவுண்டேஷன்’.

இன்னும் இருபது வருடங்களில் தனது சொத்தில் ஒரு சதவீதத்தை மட்டுமே வாரிசுகளுக்கு ஒதுக்கிவிட்டு, மீதி 99 சதவீதத்தை நன்கொடையாக வழங்கப்போவதாக அறிவித்திருக்கிறார் பில்கேட்ஸ். இப்போது அவரது சொத்து மதிப்பு, 9,84,329 கோடி ரூபாய்.

மெக்கென்சி ஸ்காட்

‘அமேசான்’ நிறுவனத்தின் சேர்மன், ஜெப் பெஸோஸின் முன்னாள் மனைவி இவர். விவாகரத்தின் போது கிடைத்த பெரும் தொகையை சமூகத்தின் நலனுக்காகப் பயன்படுத்தி வருகிறார் மெக்கென்சி. 
இனம் மற்றும் பாலின சமத்துவம், பருவநிலை மாற்றம், பொது சுகாதாரம், கல்வி போன்றவற்றுக்காக வேலை செய்து வரும் தொண்டு நிறுவனங்களுக்கு ஏராளமான நன்கொடையை வழங்கியிருக்கிறார். இதுவரை 1,19,890 கோடி ரூபாயை நன்கொடையாகத் தந்திருக்கிறார் மெக்கென்சி.

வாரன் பஃபெட்

உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் இருப்பவர், வாரன் பஃபெட். முதலீட்டுத் துறையில் முடிசூடா மன்னனாக திகழும் இவரது சொத்து மதிப்பு, 13,71,130 கோடி ரூபாய். பில்கேட்ஸின் தொண்டு நிறுவனம் உட்பட ஏராளமான சமூக சேவை நிறுவனங்களுக்குக் கோடிக்கணக்கில் நன்கொடை வழங்கியுள்ளார் வாரன்.
குறிப்பாக குழந்தைகளின் நலனுக்காக அள்ளிக் கொடுத்திருக்கிறார்.

இதுவரை குழந்தைகளின் நலன், கல்வி உட்பட பல்வேறு சமூக நலன்களுக்காக 4,27,874 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியிருக்கிறார் வாரன். தனது சொத்தில் 99.5 சதவீதத்தை நன்கொடையாகத் தரப்போகிறேன் என்று சமீபத்தில் அறிவித்திருக்கிறார். இப்போது அவரது வயது 94.

ஜார்ஜ் சோரோஸ்

மேற்கத்திய உலகில் மிகவும் பெருந்தன்மையான மனிதர் என்று புகழப்படுபவர், ஜார்ஜ் சோரோஸ். முதலீட்டுத்துறை பிசினஸில் அசைக்க முடியாத ஓர் ஆளுமையாக இருந்து வந்தவர்.

இன்றைய தேதியில் இவரது சொத்து மதிப்பு, 61,623 கோடி ரூபாய். அதே நேரத்தில் கடந்த ஐம்பது வருடங்களில் 2,73,967 கோடி ரூபாயை நன்கொடையாக வாரி வழங்கியிருக்கிறார்.

அதாவது, ஒவ்வொரு வருடமும், தான் சம்பாதித்ததில் பெரும் பங்கை நன்கொடையாகத் தந்திருக்கிறார். இவரது நன்கொடை உலகம் முழுவதும் கல்வி மற்றும் ஹெல்த்கேர் துறைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

அசிம் பிரேம்ஜி

இந்தியாவைச் சேர்ந்த முக்கியமான பிசினஸ்மேன் இவர். ‘விப்ரோ’ நிறுவனத்தின் சேர்மனான இவரது சொத்து மதிப்பு, சுமார் 2,75,675 கோடி ரூபாய். கடந்த 2001ம் வருடம் ‘அசிம் பிரேம்ஜி பவுண்டேஷன்’ என்ற தொண்டு நிறுவனத்தை அரம்பித்து, பல்வேறு சமூக சேவைகளைச் செய்து வருகிறார்.

2010ம் வருடமே இந்தியாவின் கல்வி முன்னேற்றத்துக்காக 17,122 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியிருக்கிறார். தனது சொத்தில் 25 சதவீதத்தை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கிவிட்டதாக 2013ம் வருடமே சொன்னார் அசிம். அதிக நன்கொடை வழங்கிய இந்தியர் என்ற பெருமையையும் தன்வசமாக்கியிருக்கிறார். இதுவரை இந்தியாவின் கல்வி மற்றும் ஹெல்த்கேர் துறைகளுக்காக 1,79,779 கோடி ரூபாயை நன்கொடையாகத் தந்திருக்கிறார் அசிம் பிரேம்ஜி.

ஜாம்ஷெட்ஜி டாட்டா

பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் ‘டாட்டா குழுமத்’தை உருவாக்கிய தொழில் அதிபர் இவர். ஜாம்ஷெட்ஜி இறந்து 120 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இருந்தாலும் அவர் செய்த
நற்காரியங்கள் இன்றும் பேசப்படுகின்றன. இந்தியாவில் கல்வி, வறுமை ஒழிப்பு, மருத்துவம் உள்பட பல சமூக நலனுக்காக நன்கொடைகளை அள்ளித் தந்திருக்கிறார். உலகின் முதன்மையான நன்கொடையாளர் என்றும் புகழப்படுகிறார். 120 வருடங்களுக்கு முன்பு ஜாம்ஷெட்ஜி நன்கொடையாக வழங்கிய தொகையின் இன்றைய மதிப்பு, 8,73,518 கோடி ரூபாய்.

மைக்கேல் ப்ளூம்பெர்க்

முன்னணி ஊடக நிறுவனமான ‘ப்ளூம்பெர்க்’கை உருவாக்கியவர்களில் ஒருவர், மைக்கேல் ப்ளூம்பெர்க். சூழலியல் சார்ந்த பிரச்னைகள், கலை, பொது சுகாதாரம், கல்வி போன்றவற்றுக்காக நன்கொடை அளித்து வருகிறார். இதுவரை 1,08,727 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியிருக்கிறார் மைக்கேல். 2004-ம் வருடத்திலிருந்து அதிகமாக நன்கொடை அளிக்கும் டாப் 10 அமெரிக்கர்களின் பட்டியலில் இடம்பிடித்து வருகிறார்.

லீ கா-ஸிங்

சீனாவைச் சேர்ந்த பெரும் பிசினஸ்மேன், லீ கா-ஸிங். பில்லியன் கணக்கில் நன்கொடை அளித்திருப்பதோடு, எளிமையான வாழ்க்கையையும் வாழ்ந்து வருகிறார். கல்வி மற்றும் ஹெல்த்கேர் துறைகளுக்காக 91,592 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியிருக்கிறார். ‘லீ கா-ஸிங் பவுண்டேஷன்’ என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கி 45 வருடங்களுக்கு மேலாக
நற்காரியங்களில் ஈடுபட்டு வருகிறார். ‘கேட்ஸ் பவுண்டேஷனு’க்குப் பிறகு உலகின் மிகப்பெரிய தனியார் தொண்டு நிறுவனம் லீ உடையதுதான்.

த.சக்திவேல்