குயிக் காமர்ஸ்...இந்திய இளைஞர்களின் நண்பன்!
இந்தியாவில் வேகமாக, மிக மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் துறை எது? ஐடி? ஏஐ? சோஷியல் மீடியா இன்ஃபுளூயன்சர்ஸ்? யூடியூப்? ம்ஹும். இவை எதுவுமே அல்ல.பிறகு?

மக்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே ஆர்டர் செய்கிறார்களே... ஆர்டர் செய்ததும் பால், மளிகைப் பொருட்கள், மின்னணு சாதனங்கள், குழந்தைகளுக்கான பொம்மைகள்... உள்ளிட்ட அனைத்தையும் டெலிவரி செய்கிறார்களே... அந்த டெலிவரி சிஸ்டம்தான் ஜெட் வேகத்தில் இந்தியாவில் வளர்ந்து வருகிறது.  இதற்கெல்லாம் குயிக் காமர்ஸ் செயலிகளின் வருகையே காரணம்.ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றால் நாம் வீட்டில் இருந்து கிளம்பி கடைக்குச் சென்று வாங்கி வர வேண்டும் என்ற காலம் மலையேறிவிட்டது. காய்கறிகளைக்கூட நாம் இந்த செயலிகள் வாயிலாக வாங்கலாம். கிள்ளிப் பார்க்காதீர்கள். கனவல்ல; காதிலும் பூ சுற்றவில்லை. நிஜம். இந்தியாவில் குயிக் காமர்ஸ் பிரிவு எதிர்பார்த்ததைவிட வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது என்பதை நாம் சொல்லவில்லை; சர்வதேச நிதி நிறுவனமான மார்கன் ஸ்டான்லி அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிளிங்கிட், செப்டோ, இன்ஸ்டாமார்ட் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் குயிக் காமர்ஸ் சேவையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
சென்னை, பெங்களூரு, தில்லி, மும்பை என இந்தியாவின் பெரு நகரங்களில் நாம் செல்லும் போதெல்லாம் கண்டிப்பாக பிளிங்கிட், செப்டோ டெலிவரி ஏஜெண்டுகளை சாலையில் பார்த்துவிடுவோம். அந்த அளவுக்கு இந்தப் பிரிவு வேகமாக வளர்ந்து வருகிறது. மக்களும் முன்வந்து இந்த சேவைகளை பயன்படுத்துவதே இதற்கு முக்கிய காரணம். இந்நிலையில்தான் இந்தியாவில் குயிக் காமர்ஸ் பிரிவு 2030ம் ஆண்டுக்குள் 57 பில்லியன் டாலர்கள் கொண்ட சந்தையாக மாறும் என மார்கன் ஸ்டான்லி நிறுவனம் கணித்துள்ளது.
இதிலென்ன அதிசயம் என்கிறீர்களா?
இருக்கிறது. இதே மார்கன் ஸ்டான்லி, முன்பு 42 பில்லியன் டாலர்களாக இந்திய குயிக் காமர்ஸ் சேவை வளரும் என குறிப்பிட்டிருந்தது. இப்பொழுதோ, முன்பு தாங்கள் எழுதியதை அடித்துவிட்டு 57 பில்லியன் டாலர்கள் கொண்ட மார்க்கெட்டாக வளரும் என உயர்த்தி சத்தியம் செய்திருக்கிறது.
இது தொடர்பாக மார்கன் ஸ்டான்லி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் குயிக் காமர்ஸ் சேவை எதிர்பார்த்ததை விட வேகமாக வளர்ச்சி அடைகிறது என்றும், மெட்ரோ நகரங்களைத் தாண்டி மற்ற நகரங்களுக்கும் இந்த சேவைகள் வேகமாக விரிவாக்கம் செய்யப்படுகின்றன என்றும் தெரிவித்திருக்கிறது.
இந்தியாவில் தில்லி, மும்பை, சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பெருநகரங்களில் இந்தச் செயலிகளின் பயன்பாடு நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருவதற்குக் காரணம், அந்நகரங்களில் வெவ்வேறு பணிகளில் பணிபுரியும் மக்கள்தான். வேலைக்குச் செல்பவர்கள் பெரும்பாலும் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்க இந்த குயிக் காமர்ஸ் செயலிகளையே பயன்படுத்துகின்றனர்.
மக்கள் தங்கள் இருப்பிடத்திலிருந்து போனில் ஆர்டர் செய்து தங்களுக்குத் தேவையான பொருட்களை பத்திலிருந்து முப்பது நிமிடங்களுக்குள் டெலிவரி பெற்றுக் கொள்கின்றனர். இதனால் அவர்களுக்கு அலைச்சல், நேரம் மிச்சமாகிறது 2026 - 28ம் நிதியாண்டில் குயிக் காமர்ஸ் பிரிவின் கிராஸ் ஆர்டர் வேல்யூ என்பது 9ல் இருந்து 11 சதவீதமாக உயரும் என்றும் கூறி இருக்கிறது.
சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெரு நகரங்கள் மட்டுமல்லாமல் மற்ற நகரங்களுக்கும் தங்களுடைய சேவைகளை குயிக் காமர்ஸ் நிறுவனங்கள் தங்கள் செயலிகள் வழியாக விரிவாக்கம் செய்கின்றன. இதுவும் இந்த பிரிவு வளர்ச்சி அடைவதற்கு முக்கிய காரணமாக மார்கன் ஸ்டான்லி தெரிவித்திருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக இந்தியாவில் தற்போது பல்வேறு நகரங்களிலும் தங்களுடைய டார்க் ஸ்டோர் எனப்படும் கிடங்குகளை அமைத்து வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நடவடிக்கைகளை குயிக் காமர்ஸ் நிறுவனங்கள் தீவிர படுத்தியிருக்கின்றன.
அந்த வகையில் இந்தியாவில் குயிக் காமர்ஸ் சேவை பிரிவில் தற்சமயம் முதலிடத்தில் இருப்பது சோமேட்டோவுக்கு சொந்தமான பிளிங்கிட் நிறுவனம்தான் என்கிறது மார்கன் ஸ்டான்லி. இந்தியாவின் குயிக் காமர்ஸ் சந்தையில் பிளிங்கிட் நிறுவனம் 46 சதவீத பங்கினைக் கொண்டுள்ளது.
செப்டோ நிறுவனம் இந்தப் பிரிவில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்நிறுவனம் 29 சதவீத சந்தையைக் கொண்டுள்ளது. அடுத்ததாக ஸ்விக்கிக்கு சொந்தமான இன்ஸ்டாமார்ட் நிறுவனம் 23 சதவீத பங்களிப்புடன் இந்தப் பிரிவில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
சோமேட்டோ, ஸ்விக்கி உள்ளிட்ட உணவு டெலிவரி நிறுவனங்களின் வளர்ச்சி சில மாதங்களாக சற்றே மந்தமடைந்த நிலையில் அவை மீண்டு வந்திருப்பதாக மார்கன் ஸ்டான்லி கூறுகிறது.
இந்தியாவில் உணவு டெலிவரி பிரிவில் சோமேட்டோதான் முதலிடத்தில் இருக்கிறது என்கிறது மார்கன் ஸ்டான்லி. மொத்தத்தில் உணவு டெலிவரி செயலிகள் பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்தாலும் , குயிக் காமர்ஸ் செயலிகள் அவற்றை விட வேகமாக வளர்ந்து வருகின்றன என்பது மட்டும் உண்மை.
காரணம், உணவு டெலிவரி செயலிகளின் சேவைகள் பெரும்பாலும் பெரு நகரங்களுக்குள்ளேயே முடங்கி இருப்பதுதான் என சுட்டிக்காட்டும் மோதிலால் ஓஸ்வால் நிறுவனம், இதற்கு மாறாக குயிக் காமர்ஸ் செயலிகள் இரண்டாம் நிலை நகரங்களுக்கும் விரிவடைந்து வருகின்றன... இவையே அதன் வளர்ச்சிக்குக் காரணம் என்கிறது.
குயிக் காமர்ஸ் செயலிகளில் பிளிங்கிட் உரிமையாளரான சோமேட்டோ, இன்ஸ்டாமார்ட்டின் உரிமையாளரான ஸ்விக்கி ஆகியவை ஏற்கனவே பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன. செப்டோ விரைவில் ஐபிஓ வெளியிட்டு பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட இருக்கிறது. இச்சூழலில் இந்தச் சந்தையில் பிளிப்கார்ட் நிறுவனம் மினிட்ஸ் என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது.இப்படி இத்துறை வேகமாக வளர்ந்து வரும் நிலையில் அண்மையில் மணி கண்ட்ரோல் வெளியிட்ட செய்தியில் குயிக் காமர்ஸ் நிறுவனங்கள் அடுத்த கட்டமாக குழந்தைகளுக்கான பொருட்களை டெலிவரி செய்வதில் தீவிரம் காட்டுவதாக தெரிவித்துள்ளது.
மொத்தத்தில் இந்தியாவில் குயிக் காமர்ஸ் சேவைகள் விரிவாக்கம் அடைவதன் மூலம் ஆயிரக்கணக்கான வேலைகள் உருவாகின்றன. இந்த டெலிவரி வேலைகள் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்கு வருமான ஆதாரமாக மாறியுள்ளன.
பெரு நகரங்களைத் தாண்டி இந்த வேலைகள் மற்ற நகரங்களுக்கும் விரிவாக்கம் அடைகின்றன. இதனாலேயே மத்திய, மாநில அரசுகள் இந்தப் பிரிவில் டெலிவரி ஏஜெண்டுகளாக பணி புரியும் நபர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டங்களைக் கொண்டு வருவதில் தீவிரம் காட்டுகின்றன. எப்படியோ மக்களின் வாழ்வாதாரத்துக்கு நல்லது நடந்தால் சரி!
என்.ஆனந்தி
|