இரண்டு அரசுப் பள்ளிகளை கெத்தாக மாற்றிய தலைமையாசிரியர்..!



பரிசு வாங்குகிறார்... பரிசுப் பணத்தை எல்லாம் பள்ளிக்கே செலவிடுகிறார்...

ஒரு சமுதாயத்தின் தூணாக இருப்பவர்கள் ஆசிரியர்கள். அவர்கள் நினைத்தால் மாணவர்களின் எதிர்காலத்தை மட்டுமில்லாமல் சமுதாயத்தையே சிறப்பாகக் கட்டமைக்க முடியும்.
அப்படியானவர்களால் தங்கள் பள்ளியைச் சிறப்பாக மாற்ற முடியாதா என்ன? முடியும்தானே! அதற்கு ஓர் ஆகச்சிறந்த உதாரணம்தான் நல்லாசிரியை வசந்தி. திருநெல்வேலி மாவட்டம் வன்னிக்கோனேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் இவர்.   

கடந்த 12 ஆண்டுகளாக தலைமையாசிரியராக இருக்கும் இவர், முதல் எட்டு ஆண்டுகள் தூத்துக்குடி மாவட்டம் ராமானுஜம் புதூர் என்ற கிராமத்து அரசு மேல்நிலைப் பள்ளியைச் சிறப்பாக சீரமைத்தார். 
அப்போது நல்லாசிரியர் விருதும் பெற்றார். இப்போது கடந்த 2022ம் ஆண்டிலிருந்து வன்னிக்கோனேந்தல் பள்ளியின் தலைமையாசிரியாகி, அந்தப் பள்ளியையும் சீரமைத்து அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது, பசுமைப் பள்ளி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்று சாதித்துள்ளார்.

அவர் பணியாற்றும் பள்ளிக்குச் செல்பவர்கள் நிச்சயம், ‘இது அரசுப் பள்ளி தானா’ என ஆச்சரியமாகக் கேட்கக்கூடும். அந்தளவுக்குப் பள்ளியை சீரும் சிறப்புமாக மாற்றி, மாணவர்களின் முன்னேற்றத்திற்கும் வழிவகுத்துள்ளார்.  ‘‘கடந்த 2013ம் ஆண்டுதான் எனக்கு தலைமையாசிரியராக ப்ரொமோஷன் கிடைச்சது. 

அதுக்கு முன்பு இதே வன்னிக்கோனேந்தல் பள்ளியில் இயற்பியல் முதுகலை ஆசிரியராக பதிமூன்று ஆண்டுகள் வேலை செய்தேன். முதல்முறையா நான் தலைமையாசிரியராக ராமானுஜம் புதூர் கிராமத்திற்கு போனப்ப அந்தப் பள்ளியின் நிலை ரொம்ப மோசமாக இருந்தது. நான்கு இடங்கள்ல பள்ளி செயல்பட்டு வந்தது. 11, 12ம் வகுப்புகள் ஓரிடத்திலும், 9,10ம் வகுப்புகள் ஓரிடத்திலும், 6 டூ 8 வகுப்புகள் வெவ்வேறு இடங்களிலும் இருந்தன. எல்லாமே அரை கிமீ தூரம்.

இதனால், ஓராண்டிலேயே அந்தப் பள்ளியை விட்டு போயிடணும்னு நினைச்சேன். ஆனா, அந்தப் பிள்ளைகள் எல்லாம் நல்லா படிப்பாங்க. கிராம மக்களும் ரொம்ப பாசமாக இருந்தாங்க. அவங்க எல்லோரும் இந்தப் பள்ளியை எப்படியாவது வளர்த்தெடுக்கணும்னு நினைச்சாங்க. அதனால், முதல்ல அங்கிருந்த பிரச்னைகளை சரிசெய்தேன். 

ஊர் தலைவரைச் சந்திச்சு பேசினேன். அவர் 2 ஏக்கர் நிலம் இலவசமாக தந்தார். அந்த இடத்தில் நபார்டு வங்கியின் நிதியுடன் ஒரே வளாகமாக பள்ளியைக் கட்டியெழுப்பினேன். கழிப்பறை, சைக்கிள் செட், ஆய்வகம், பஸ் போக்குவரத்துனு அடிப்படை வசதிகள் அனைத்தையும் உருவாக்கினேன்.

அதுமட்டுமில்ல, பள்ளி தனித்தனிக் கட்டடத்தில் செயல்பட்ட போதே நான்கு ஆண்டுகள் தொடர்ந்து பள்ளியை சென்டம் ரிசல்ட் வாங்க வச்சேன். அப்பதான் என் பள்ளியை எல்லோரும் திரும்பிப் பார்த்தாங்க. எனக்கு எப்பவுமே பள்ளிக் கல்வி அதிகாரிகள் ரொம்ப உதவிகரமாக இருப்பாங்க. முதன்மை பள்ளிக் கல்வி அதிகாரியிலிருந்து அனைத்து கல்வி அதிகாரிகளிடமும் அலுவல் ரீதியாக போகும்போது எல்லோருமே நல்லா உதவி செய்வாங்க.   

இதன்பிறகு 2022ல வன்னிக்கோனந்தல் பள்ளிக்கு வந்தேன்...’’ என்கிற ஆசிரியர் வசந்தி இந்தப் பள்ளியும் மோசமான நிலையில் இருந்ததாகக் குறிப்பிடுகிறார். ‘‘இந்தப் பள்ளி 13 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 

ஆனா, முழுவதும் புதர் மண்டி பாதுகாப்பு இல்லாத நிலையில் கிடந்தது. உடனே பஞ்சாயத்து தலைவரை சந்திச்சு உதவ கோரிக்கை வச்சேன். அவர் ஜேசிபியும் பணியாளர்களும் அனுப்பி சுத்தம் செய்து தந்தார். ஏற்கனவே இங்க 13 ஆண்டுகள் வேலை செய்ததால் இப்ப தலைமையாசிரியராக வந்ததும் பழைய மாணவர்கள் எல்லோரும் என்னைப் பார்க்க வந்தாங்க. அவங்க குழந்தைகள் இங்க ஆறு, எட்டாம் வகுப்புகள்னு படிக்கிறாங்க.

அந்த அறிமுகத்தால் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் போட்டு பள்ளியின் முன்னேற்றத்திற்கான வழிகளைப் பேசினேன். மக்களும் நிறைய சப்போர்ட் பண்ணினாங்க. பழைய மாணவர்கள் சேர்ந்து நான்கு லட்சம் ரூபாய் நிதியுதவி கொடுத்தாங்க.

 இன்னொருத்தர் ஒரு லட்சம் ரூபாய் தந்தார். இந்தப் பணத்தில் மாணவிகளுக்கான பழைய கழிப்பறைகளை இடித்துவிட்டு புதிதாகக் கட்டினோம். தண்ணீர் இல்லாமல் கிணத்து தண்ணீரைக் குடிச்சிட்டு இருந்தாங்க. அதனால் இரண்டு ஆர்.ஓ.போட்டு சுத்தமான தண்ணீர் பருகும்படி செய்தேன்.

அடுத்து சின்டெக்ஸ் வச்சு கழிப்பறைகளுக்கும், கை கழுவவும் தண்ணீர் வசதி ஏற்படுத்தினேன். பள்ளியைச் சுற்றி 18 கேமிராக்கள் பொருத்தி மாணவர்களை கண்காணிப்பு வளை
யத்திற்குள் கொண்டு வந்தேன்.   இதற்கிடையில் எனக்கு டி.ஓ.வாக ப்ரொமோஷன் வந்துச்சு. ஆனா, இந்தப் பள்ளியை மேம்படுத்தணும்னு அந்த ப்ரொமோஷனை வேண்டாம்னு சொல்லிட்டேன். 

பிறகு அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருதுக்கு என்னை அப்ளை பண்ணச் சொன்னாங்க. இதில் தேர்ந்தெடுக்கப்பட்டால் பத்து லட்சம் ரூபாய் கிடைக்கும். உடனே பள்ளியில் செய்த விஷயங்கள் எல்லாவற்றையும் புகைப்படங்களுடன் அனுப்பி வச்சேன். எனக்கு ஆசிரியர்கள் ரொம்பவே சப்போர்ட் பண்ணினாங்க.  

இதுக்காக பள்ளியை பார்வையிட வந்தாங்க. ‘எனக்கு விருது பெரிய விஷயமில்ல. அந்த பத்து லட்சம் ரூபாய் கிடைச்சால் இந்தக் கிராமப் பள்ளிக்கு ஏதாவது சிறப்பாகச் செய்திட்டு போகலாம் ஆசைப்பட்டே விண்ணப்பிச்சேன்’னு சொன்னேன். என்னுடைய விண்ணப்பம் தேர்ந்தெடுக்கப்பட்டுச்சு. 

அமைச்சர் கையால் திருச்சியில்  விருதும், பத்து லட்சம் ரூபாய் பரிசும் பெற்றேன். அதை வச்சு பள்ளியைப் பசுமையாக மாத்தினேன். பள்ளி முழுவதும் பெயிண்டிங் பண்ணினேன். அப்புறம், ரெண்டு வகுப்பறைகள், ஒரு நூலக அறையும் கட்டினோம். நூலக அறைக்குத் தேவையான ஃபர்னிச்சர்களும், ஆய்வகத்துல மாணவர்கள் உட்கார ஸ்டூல்களும் வாங்கிப் போட்டோம்.

இதுக்கிடையில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், ‘அன்பாடும் முன்றில்’னு ஒரு திட்டத்தை ஆரம்பிச்சார். அதற்கு ஒரு வீடியோ ஷூட் பண்ணணும்னு கேட்கும்போது முதன்மை கல்வி அலுவலர் வன்னிக்கோனேந்தல் பள்ளிக்கு போங்கனு அனுப்பி வைச்சார். அந்த குழு வந்து படப்பிடிப்பு நடத்தினாங்க. அப்ப நாங்க பள்ளியில் கலைத் திருவிழா நடத்திட்டு இருந்தோம். அவங்கதான் இங்குள்ள மரங்கள், பசுமையை எல்லாம் வெளியில் கொண்டு வந்தாங்க.

எங்கள் பள்ளி பசுமைப் பள்ளி விருதுக்குத் தேர்வாச்சு. இதன்வழியாக 20 லட்சம் ரூபாய் கிடைச்சது. இந்தப் பணத்தில் எஞ்சினியரிங், விவசாயம், தோட்டக்கலைத் துறையினர் எல்லோரும் சேர்ந்து பள்ளிகளில் சில வேலைகளை முன்னெடுத்தாங்க. இதில் தோட்டக்கலைத் துறையினர் பள்ளியில் பழம், மூலிகை, காய்கறி தோட்டங்கள்னு ஒரு பண்ணையே அமைச்சுக் கொடுத்தாங்க. அதுக்கு சொட்டு நீர்ப் பாசனமும் போட்டிருக்காங்க. எஞ்சினியரிங் துறை சோலார் பம்ப், சோலார் பேனல், மழைநீர் சேகரிப்புனு செய்தாங்க.  

மழைநீரை எல்லா கட்டடத்தில் இருந்தும் சேகரித்து பள்ளியில் உள்ள கிணற்றில் கொண்டு வந்து சேர்க்கிறாங்க. இப்ப சோலார் பேனல் வழியாகதான் பள்ளியின் மின்சாரத் தேவை பூர்த்தி செய்யப்படுது. இவற்றுடன் ஆறு லட்சம் ரூபாய் பணத்தை தலைமையாசிரியரின் அக்கவுண்டில் டிரான்ஸ்பர் பண்ணிட்டாங்க.

இந்தப் பணத்திலிருந்து ஒரு நபரை நியமிச்சு 2 ஆண்டுகள் இவற்றை பராமரிக்கணும்னு சொன்னாங்க. அதுக்கான நபரையும் நியமிச்சிட்டோம். இப்ப பள்ளியைச் சுற்றி வேலி அமைக்க இருக்கேன்...’’ என்கிறவர் மாணவர்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு விஷயங்கள் செய்துள்ளார்.

‘‘முன்னாடி எந்த ஆக்டிவிட்டியும் இல்லாமல் இருந்தாங்க. நான் வந்தபிறகு மாணவர்களை விளையாடவிட்டேன். பள்ளியில் இருந்த மன்றங்களை எல்லாம் செயல்பாட்டில் கொண்டு வந்தேன். ஸ்கவுட், ஜூனியர் ரெட் கிராஸ்னு எல்லா குழுக்களையும் ஆக்டிவ் ஆக்கினேன். முன்பு 588 மாணவ - மாணவிகள் இருந்தாங்க. 

இப்ப 673 மாணவ - மாணவிகளாக எண்ணிக்கை அதிகரிச்சிருக்கு. முன்னாடி பத்தாம் வகுப்பு வரை ஆங்கில வழி இருந்தது. 11, 12ம் வகுப்புகளுக்குக் கிடையாது. இதனால் வேறு பள்ளிகளுக்கு மாறினாங்க. நான் மேத்ஸ், பயாலஜி பிரிவை ஆங்கில வழியில் கொண்டுவந்தேன். இதனால், இங்கேயே ஆர்வமாகப் படிக்கிறாங்க.  

எங்க பள்ளியிலிருந்து ஆண்டுதோறும் மாதிரி பள்ளிக்கு பசங்க போறாங்க. அந்தளவுக்கு சிறப்பாக படிக்கிறாங்க. இந்த ஆண்டு பிளஸ் டூவில் 99 சதவீதம் எடுத்தோம். பத்தாம் வகுப்பு தேர்விலும் 99 சதவீதம் வாங்கினோம். இப்ப கால்நடை, வேளாண்மைனு தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளுக்கும் சென்று எங்க மாணவர்கள் படிக்கிறாங்க.

இந்த ஆண்டு டாடா சோலார் நிறுவனம், புதுப்பிக்க எரிசக்தி கோர்ஸ் ஒன்றை உதவித்தொகையுடன் ஆரம்பிச்சிருக்காங்க. இதுக்கும் எங்க பிள்ளைங்க 14 பேர் போயிருக்காங்க.

ஆசிரியர்கள் எல்லோரும் ஒத்துழைப்பு கொடுப்பதால்தான் என்னால் இவ்வளவு விஷயங்களை முன்னெடுக்க முடிஞ்சது. ரொம்ப சந்தோஷமா இருக்கு...’’ என்கிற தலைமை ஆசிரியர் வசந்தி, அடுத்த ஆண்டு ஓய்வுபெறப் போகிறார்.

பேராச்சி கண்ணன்