சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக மாநிலம் முழுக்க பயணிக்கும் ஓவியர்!
ஒன்றல்ல... இரண்டல்ல... பதினாறு ஆண்டுகள்... தொடர்ந்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு சம்பந்தமான ஓவியக் கண்காட்சியை தமிழ்நாடு முழுவதும் நடத்தி வருகிறார் தமிழரசன்.
சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஓர் ஓவியர் இவர்.  ஏனெனில், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மூன்று மாதங்களும் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும், மாவட்டத்திற்கு ஒரு கல்லூரி வீதம் தேர்ந்தெடுத்து ஓவியக் கண்காட்சிக்காகவே பயணிக்கிறார். 
இயற்கை குறித்தும், இயற்கையை பாதுகாப்பதன் அவசியம் பற்றியும், சுற்றுச்சூழல் மாசுபாட்டின் தற்போதைய நிலைமையையும், காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் பாதிப்பு களையும் ஓவியங்கள் வழியாக மாணவர்களுக்குப் போதிக்கிறார் அவரிடம் பேசினோம். ‘‘ரொம்ப சந்தோஷமா இருக்கு.  பதினாறு ஆண்டுகள் கடந்து போனதே தெரியல. இந்த 2025ம் ஆண்டு கருத்துருவாக, ‘இயற்கையைக் காக்கும் பல்லுயிர்கள்’ என்ற தலைப்பில் ஓவியக் கண்காட்சி வச்சேன். எல்லா உயிர்களும் எப்படி இயற்கையைப் போற்றி காக்குது? நாம் எப்படி பாதுகாக்கிறோம்னு சொன்னேன்.
இன்னும் தொடர்ந்து பயணிக்க வேண்டியிருக்கு. இப்ப காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளை எல்லோரும் உணர ஆரம்பிச்சிட்டாங்க. இனி, இயற்கையை பாதுகாத்தால் மட்டுமே நாம் பேரழிவுகளிலிருந்து தப்பிக்க முடியும்...’’ என அழுத்தமாகப் பேசுகிறவரிடம் எப்படி தொடங்கியது இந்தப் பயணம் என்றோம்.
‘‘நான் அடிப்படையில் ஓவியர். சொந்த ஊர் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே மன்னம்பாடி என்ற கிராமம். சின்ன வயசிலிருந்தே ஓவியத்தில் ஆர்வம். சென்னை ஓவியக் கல்லூரியில் படிக்கிற வாய்ப்பு கிடைச்சது.
1990ம் ஆண்டு படிப்பை முடிச்சதும் நிறைய பேருக்கு ஓவியம் பண்ணிக் கொடுத்திட்டு இருந்தேன். அப்ப லயோலா கல்லூரியில் விலங்கியல் துறை பேராசிரியராக இருந்த வின்சென்ட் சார் எனக்கு பழக்கமானார்.
அப்ப அவர் இன்னும் பத்து பதினைந்து ஆண்டுகள் கழித்து குளோபல் வார்மிங் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரப்போகுது. சுற்றுச்சுழல் சம்பந்தமாக ஓவியங்கள் வரைஞ்சு தமிழ்நாடு முழுவதும் கொண்டுட்டு போங்க. நல்ல வரவேற்பு இருக்கும்னு சொன்னார்.
பிறகு, ‘ஈரநிலம்’னு ஒரு அறக்கட்டளை தொடங்கினேன். இந்தப் பெயரைக்கூட வின்சென்ட் சார்தான் தேர்ந்தெடுத்தார். கன்னியாகுமரியில் தொடங்கி சென்னை லயோலா கல்லூரியில் முடிக்கிறமாதிரி கல்லூரிகள்ல ஓவியக் கண்காட்சி நடத்துங்கனு சொல்லி என்னை ஊக்கப்படுத்தினார். அவரே சில கான்செப்ட் ஐடியாக்களும் தந்தார். அப்படியாக 2010ம் ஆண்டு இந்தப் பணியைத் தொடங்கினேன்.
‘புவியைக் காப்போம்’ என்ற தலைப்பில் ஐம்பது ஓவியங்கள் ஆயில் பெயிண்டிங்கில் தயார் செய்து அதை ஃபிரேம் பண்ணினேன். முதல்ல கன்னியாகுமரியில் காந்தி மண்டபத்தில் காட்சிக்கு வச்சேன். அங்க இதனை மாவட்ட ஆட்சியராக இருந்த ராஜேந்திர ரத்னு ஐஏஎஸ் தொடங்கி வச்சார்.
இதுக்கான ஏற்பாடுகளையும், வடிவமைப்பையும் என் நண்பர்கள் பேராசிரியர் சரவணனும், விஜயமாநகரம் பிரதீப் குமாரும் செய்தாங்க. அப்ப தமிழ்நாட்டுல 32 மாவட்டங்கள் இருந்தது. மாவட்டத்திற்கு ஒரு கல்லூரினு 32 கல்லூரிகள், 32 நாட்கள்னு தொடர்ந்து பயணிச்சு ஓவியங்கள் வழியாக விழிப்புணர்வு செய்தேன்.
அங்கே ஆரம்பிச்ச என் பயணம் இப்ப ஒவ்வொரு ஆண்டும் தொடருது...’’ என்கிறவர், இதற்காக பல்வேறு சிரமங்களையும் எதிர்கொண்டிருக்கிறார். ‘‘இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு கான்செப்ட் எடுத்து புதியதாக அறுபது ஓவியங்கள் வரைவேன். ஆரம்பத்துல ஆயில் பெயிண்டிங்தான் முழுவதும் செய்தேன். இப்ப சமீபமாக 60 ஓவியங்களில் 20 ஆயில் பெயிண்டிங், 20 வாட்டர் கலர், பத்து பதினைந்து லைன் டிராயிங் செய்றேன். இதில் இயற்கைக்கும் நமக்கும் என்ன தொடர்பு என்பது பற்றி பேசுவேன்.இப்படியாக இந்தப் பிரபஞ்சத்துல ஏதாவது ஒரு இடத்துல இயற்கைக்கு மாறாக நடந்தால் அது இன்னொரு இடத்தையும் பாதிக்கும்னு சுனாமியை ஒப்பிட்டு ஓவியங்கள் பண்ணியிருக்கேன்.
மரங்களை கர்ப்பிணி பெண்களுடன் ஒப்பிடுவது, ஒரு சிசுவை கொல்றதும் ஒரு மரத்தை வெட்டுவதும் ஒண்ணுதான்னு சொல்றது, இதன்வழியாக மரங்களின் அவசியம் பற்றிய புரிதலை ஏற்படுத்துறதுனு நிறைய ஓவியங்கள் பண்ணியிருக்கேன். ஆரம்பத்துல இந்த ஓவியங்களை எடுத்திட்டு தமிழ்நாடு முழுவதும் பஸ்சில் பயணம் செய்து ரொம்ப சிரமப்பட்டேன். அப்ப ஓவியக் கண்காட்சி என்றதும் ஆர்ட் கேலரியில் வைப்பதுபோல பெரிய கேன்வாஸ் போர்டில் வரைவேன்.
அதனை ஃபிரேம் போட்டு எடுத்திட்டுப் போவேன். ஆனா, பஸ்சில் அதனை ஏத்தமுடியாமல் நான் பட்ட சிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. கல்லூரியில் காட்சிக்கு வச்சு முடிச்சதும் மாலை 5 மணிக்கு பஸ்சில் ஏத்தணும். அப்ப கூட்டம் அதிகமாக இருக்கும். யாரும் ஏத்தமாட்டாங்க. இதனால், இரவு 10 மணி வரை பஸ் ஸ்டாண்டில் காத்திருந்துவிட்டு இயல்பாகவே காலியாக வரும் பஸ்சில் மேலே ஏத்தி கட்டிவிட்டு பயணிப்பேன். கல்லூரியிலிருந்து பஸ் ஸ்டாண்டிற்கு கொண்டு செல்ல இரண்டு மூன்று ஆட்டோக்கள் தேவைப்படும். இதேபோல் ஒவ்வொரு ஊர், ஒவ்வொரு கல்லூரினு அவ்வளவு சிரமங்கள். பிறகு டூவீலரில் இரண்டு ஆண்டுகள் பயணிச்சு ஓவியங்களைக் காட்சிக்கு வச்சேன். இப்ப சிறிய கேன்வாஸ் போர்டில் ஓவியங்கள் தீட்டி எளிதாக பஸ்சில் எடுத்திட்டுப் போகும்படி செய்திட்டேன்.
இப்ப இந்த ஓவியக் கண்காட்சி நல்லா ரீச் ஆகியிருக்கு. நிறைய பின்னூட்டங்கள் வருது. சில மாணவர்கள் எனக்கு நேரடியாக கடிதம் எழுதுறாங்க. இயற்கையையும் சூழலையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் அவங்களுக்குப் புரிய ஆரம்பிச்சிருக்குனு நினைக்கிறப்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.
அடுத்து 2026ம் ஆண்டு, ‘வனம் உயிர்களின் உயிர்’ என்கிற தலைப்பில் ஓவியக் கண்காட்சி பண்ணப் போறேன். காடுகள் ஏன் அவசியம்? காடுகள் இல்லனா என்னவாகும், வனங்களை அழிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் என்னனு எடுத்துரைக்கப் போறேன்...’’ என முத்தாய்ப்பாகச் சொல்கிறார் ஓவியர் தமிழரசன்.
பேராச்சி கண்ணன்
|