சூரியப் புயல் பூமியைத் தாக்குமா?
பயம் காட்டும் ஹாலிவுட் படங்களின் கதையைப் போல் தலைப்பு இருக்கிறதா?
நோ இஷ்யூஸ். இது சினிமா அல்ல; விஞ்ஞானிகளின் தலையை கிறுகிறுக்க வைக்கும் மேட்டர்!‘சுமார் 10 லட்சம் கிமீ நீளம் கொண்ட சூரியப் புயல் ஒன்று, எப்போது பூமியைத் தாக்கும் என்பது தெரியாது. இதற்கான வாய்ப்புகள் எந்த அளவுக்கு இருக்கிறது என்பது கூடத் தெரியவில்லை... ஆனால்...’ என இழுக்கிறார்கள் விஞ்ஞானிகள். இந்த சூரியப் புயலுக்கு ஆய்வாளர்கள் AR4087 என பெயரிட்டிருக்கின்றனர்.

சில நாட்களுக்கு முன் இந்திய நேரப்படி அதிகாலை 4:25 மணியளவில் இந்த வெடிப்பு நிகழ்ந்திருக்கிறது. இதனால் ஐரோப்பா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு முழுவதும் ரேடியோ சிக்னல் தடை ஏற்பட்டிருக்கிறது.
இது X2.7 என்கிற வகையைச் சேர்ந்தது என்கிறார்கள் ஆய்வாளர்கள். சூரியப் புயல்களை A, B, C, M மற்றும் X என ஆய்வாளர்கள் பிரித்திருக்கிறார்கள். இதில் A என்பது ஆபத்தானது எனில், அதை விட 10 மடங்கு ஆபத்தானதாக B இருக்கும். அப்படிப்பார்த்தால் X வகைதான் மிகவும் பயங்கரமாக இருக்கும்.
இப்போது வெடித்துக் கிளம்பியுள்ள சூரியப் புயல் ஒரு நெருப்பு பறவையைப் போல இருக்கிறது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது கொஞ்சம் தீவிரமாக இருந்தால் கொரோனல் மாஸ் எஜெக்ஷன் எனும் நிலைக்கு சென்றிருக்கும்.
ஆங்கிலத்தில் இதனை CME என்று சொல்வார்கள். இந்த CME நம் பூமியை தாக்கினால் மொத்தமாக காந்தப் புலத்தை வழித்து எடுத்துச் சென்றுவிடும். ஆனால், AR4087 சூரியப் புயல், இன்னும் இந்த நிலையை அடையவில்லை. அல்லது இது அந்த அளவுக்கு வீரியமாக இல்லை என்கிறது நாசா.
AR4087 இன்னும் சூரியனுக்கு பக்கத்தில்தான் இருக்கிறது என்பதால் நாம் அச்சப்பட வேண்டியதில்லை. ஆனால், எப்போது வேண்டுமானாலும் பூமியை நோக்கி இது திரும்பவும் வாய்ப்பிருக்கிறதாம்.என்னதான் உயிர்களை வாழ வைக்க சூரியன் தேவையாக இருந்தாலும் கூட, இதே சூரியன்தான் நம்மை அழிக்கவும் செய்கிறது.
சூரியனிலிருந்து வெளி வரும் சூரியப் புயல் பூமியில் உள்ள மின்காந்த சக்தியை அடித்து நொறுக்கிவிடும். மின்காந்தப் புலம் இருப்பதால்தான் நம்மால் வடக்கு எது, தெற்கு எது என்று அடையாளம் காண முடிகிறது.
மட்டுமல்ல, சூரியனிலிருந்து வெளிவரும் ஆபத்தான கதிர்களையும் இதுதான் தடுக்கிறது. செவ்வாய் கிரகம் இன்று இப்படி இருப்பதற்குக் காரணமே அங்கு மின்காந்தப் புலன் இல்லாததுதான்.
சூரியனிலிருந்து வெடிப்புகள் கிளம்புவது புதிதல்ல... சாதாரணமான விஷயம்தான். இது காலம் காலமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. பூமி இதில் ஒருமுறை மட்டுமே சிக்கியிருக்கிறது. இப்படி நடந்தபோது நாம் தந்திக்கருவிகளை மட்டுமே பயன்படுத்தி வந்திருந்தோம். மின்சாரக் கருவிகளுக்கு முழுமையாக மாறியிருக்கவில்லை. அப்பொழுது சூரியப் புயல் தாக்கியதும் தந்தி சேவை மொத்தமும் பாதிக்கப்பட்டது என்கிறார்கள்.
இப்போது செல்போன் தொடங்கி, செயற்கைக்கோள்கள் மற்றும் அணு உலை பாதுகாப்பு வரை கணினிகள்தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை அனைத்தையும் சூரியப் புயல் தாக்கி அழிக்கும். அப்படி நடந்தால் இந்த பாதிப்பிலிருந்து நாம் மீள குறைந்தது 30 - 40 ஆண்டுகள் வரை ஆகலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
‘அதெல்லாம் விடு... சூரியப் புயல் பூமியைத் தாக்குமா தாக்காதா..? அத மட்டும் சொல்லு...’ என்கிறீர்களா?
நாசாவுக்கே இதற்கு விடை தெரியவில்லை பாஸ்! பூமியைச் சுற்றி வரும் செயற்கைக்கொள்கள் எப்போது எங்கு விழும் என்பதை கணிக்கவே முடியாது. அணு உலைகள் வெடித்துச்சிதறும். வங்கிகள், செல்போன்கள் எதுவும் வேலை செய்யாது. பணத்தை பலரும் வங்கிகளில்தான் சேமித்து வைத்திருக்கிறார்கள். அப்படியெனில் அவர்களின் நிலை என்னவாகும் என யோசித்துப் பாருங்கள்? இதைத்தான் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
ஜான்சி
|