சிறுகதை - இயல்பு
‘‘உள்ளே வாங்க, சட்னு...” பல்லைக் கடித்தவாறேதான் திண்ணை வாயிலில் நின்று கூப்பிட்டாள் மாலினி.கையில் எடுத்திருந்த உலர்ந்த துணிகளைப் பக்கத்து வீட்டு காம்பவுண்ட் உட்பகுதிக்குள் போட்டுவிட்டு விருட்டென்று வீட்டுக்குள் நுழைந்தேன்.‘‘என்ன? என்ன? எதுக்கு இப்டி அவசரமாக் கூப்பிட்டே?’’‘‘ம்ம்ம்... பொங்கல் திங்கறதுக்கு!’’
 ‘‘அதுக்குள்ளே கோபம் வந்திருச்சா..? விஷயத்தைச் சொல்லு...’’‘‘நீங்க என்னா, பக்கத்து வீட்டுத் துணியையெல்லாம் தொட்டு எடுத்திட்டிருக்கீங்க? அசடு மாதிரி?’’‘எடுத்திட்டிருக்கீங்க’ என்பதோடு நிறுத்தியிருக்கலாம். அசடு, சற்று அதிகம்தான். கட்டின பெண்டாட்டிதானே... ஒரு வார்த்தை கூடச் சொல்ல உரிமையில்லையா? ‘‘மாடில உலர்த்தப் போட்டிருக்காங்க. அது பறந்து நம்ம வீட்டுப் பக்கம் விழுந்திருக்கு. எடுத்துப் போட்டேன். இதிலென்ன தப்பு?’’
‘‘மாடில அப்டி கல்லைப் பாரமா வச்சு உலர்த்தாதீங்க... இந்தப் பக்கம் பெருக்கி சுத்தம் செய்ய வர்றப்போ காத்தடிச்சு தலைல விழுந்திடுச்சின்னா சங்கடம்னு எத்தனையோவாட்டி அவுங்ககிட்டே சொல்லிட்டேன். கேட்குறாப்புல இல்லை. கொடில உலர்த்துற துணிகளுக்குக் கிளிப்பும் போடமாட்டேங்குறாங்க.
இதுல நீங்க வேறே வசதியா துணிகளை எடுத்துப் போடுறீங்க... ரொம்ப நல்லதாப் போச்சுன்னு விட்ருவாங்க. வேணும்னா வந்து எடுத்துக்கட்டுமே...’’‘‘வந்து எடுக்கணும்னா..? ரோட்டுப் பக்கமா வந்து, நம்ம வீட்டு கேட்டைத் திறந்து பர்மிஷன் கேட்டு உள்ளே வந்து எடுக்கணும். எதுக்கு இவ்வளவு சிரமம்? போகுது விடு...’’‘‘அப்ப தினமும் எடுத்துப் போடறேங்கிறீங்களா?’’ ‘‘போட்டா போச்சு. ஓர் உதவிதானே. கல்லு வைக்காத துணிக காத்துல பறந்து விழுகுது. அப்டி விழுந்திருக்கோன்னு அவுங்க தெரிஞ்சிக்கிறதுக்கு முன்னாடி நாம எடுத்துப் போட்டுட்டா பிரச்னை முடிஞ்சிது பாரு...’’‘‘உங்களுக்குக் கொஞ்சங் கூட விவஸ்தையே கிடையாது...’’ ‘‘இதிலென்ன விவஸ்தை கெட்டுப் போச்சு? உதவி செய்றது தப்பா?’’ ‘‘உதவிங்கிறது கேட்டு செய்றது... இது நல்லாயில்லியே?’’
‘‘உனக்கு நல்லால்லே... எனக்கு அப்டி ஒண்ணும் தோணலை...’’ ‘‘அந்தம்மா பாவாடை, ரவிக்கைன்னு வித்தியாசம் பார்க்காம எடுத்துப் போடுவீங்களாக்கும்... போதாக்குறைக்கு நம்ம வீட்டுக்கு வர்ற கேபிள் வயர்லயும் உலர்த்துறாங்க. மாடில கைக்கு வாகா எதெது தெரியுதோ அங்கெல்லாம் துணிகளைப் போட்டுடுவாங்க போலிருக்கு.
உள்ளாடைகளையெல்லாம் வீட்டுக்குள்ளே உலர்த்தணும்னு தெரிய வேண்டாம்?’’‘‘அவுங்க மனசுக்கு அசிங்கமாத் தெரியலன்னு அர்த்தம். நீயே நா சமீபத்துல சொன்ன பின்னாடிதானே அப்டிச் செய்ய ஆரம்பிச்சே? ராத்திரி பாரா போற போலீஸ் லட்டியால கேட்டுக்கு மேலே கொடியைத் தூக்கிப் பார்த்திட்டுப் போறான்னு அவன் சந்தேகத்தைச் சொன்ன பின்னாடிதானே உனக்கே பயம் வந்தது?’’
‘‘போதும் அபத்தப் பேச்சு. இனிமே துணி எடுத்துப் போடுறதெல்லாம் நீங்க செய்யாதீங்க. பக்கத்து வீடு, எதிர் வீடுன்னு பார்த்தாங்கன்னா அசிங்கம். சிவனேன்னு வீட்டுக்குள்ள கிடக்க மாட்டீங்களா?’’
‘‘சிவனேன்னு நான் எங்க கெடக்குறது? அந்த செவன்தான நம்மள இந்தப் பாடுபடுத்துறான்...’’‘‘சினிமா வசனம் பேச ஆரம்பிச்சாச்சா? அதான் உங்களுக்கு எதுக்கும் விவஸ்தையே கிடையாதுன்னு முதல்லவே சொன்னேன். யாரு என்ன நினைச்சா உங்களுக்கென்ன? பொழுது போகணும் உங்களுக்கு. அதுக்கு எதையாச்சும் செய்திட்டே இருக்கணும்...’’
‘‘அடுத்தவன் இதை நினைப்பானோ, அதை நினைப்பானோன்னு எல்லாம் நாம தயங்கிட்டேயிருந்தா இந்த உலகத்துல எதையுமே செய்ய முடியாது. எதுத்தாப்ல அப்டி நினைக்கிறதா நீ சொல்றவங்களுக்குக் கூடத்தான் நான் உதவுறேன். வித்தியாசமா பார்க்கிறேன்? எதோ என்னாலான உபகாரம்...’’ ‘‘உபகாரம் செய்றதையும் சந்தேகப்படுறமாதிரி செய்யக் கூடாது. தெளிவாச் செய்யணுமாக்கும்...’’‘‘புரியல...’’
‘‘எதிர் வீட்டுல அவர் ஊர்லர்ந்து வந்தவுடனே தபால்களைக் கொண்டு கொடுத்தீங்களே... அப்போ நா சொன்ன மாதிரிச் செய்தீங்களா?’’‘‘இதிலென்னடி இருக்கு? அவர் என்ன நம்மளைச் சந்தேகமா படப்போறார்? அதான் தபாலோட தபாலாக் கொடுத்திட்டு வந்திட்டனே!’’‘‘கொடுத்திட்டீங்க சரி, அதுல அந்த ஒரு கவரை அட்ரசைப் பார்க்காமக் கட் பண்ணிட்டேன்னு சொல்லி ஸாரி கேட்டீங்களா?’’‘‘ஸாரி சொல்லாட்டி என்ன?
அவர்தான் ஒண்ணும் கேட்கலியே... அது சாதா தபால்தாண்டி. நமக்கு வந்த தபால்களோட அது இருந்ததுனால வரிசையா நுனியைக் கட் பண்ணும்போது, அதையும் சேர்த்துக் கட் பண்ணிட்டேன். இதிலென்ன தப்பிருக்கு?’’ ‘‘தப்புக்கு நா சொல்லலை. அந்த விபரத்தை அவர்ட்டச் சொல்லிக் கொடுத்திருக்கலாமே... வேணும்னே அவங்க தபாலைப் பிரிச்சுப் படிச்சதா ஆகாதா?’’
‘‘அம்மா தாயே ஆள விடு. கொடுத்தாச்சு. முடிஞ்சு போச்சு. ஒரு மாசம் ஓடிப்போச்சு. இப்பப் போய் இத நீ நோண்டாத.
அவரே ஒண்ணும் கேட்கலை...’’ ‘‘இதத்தான் நான் அப்பவே சொன்னேன் எதுக்கும் உங்களுக்கு விவஸ்தையே கிடையாதுன்னு. விவஸ்தைன்னா என்னன்னு முதல்ல தெரிஞ்சிக்குங்க. தோணினபடியெல்லாம் இருக்கிறதுங்கிறது அழகில்ல. நீங்க இருக்கிற பிரகாரம் எல்லாரும் உங்களை யதார்த்தமா ஏத்துக்கமாட்டாங்க...’’‘‘ஆரம்பிச்சிட்டியா பழையபடி...’’ சொல்லிவிட்டு தன் அறைக்குள் புகுந்து கொண்டார் நாராயணன்.கண்களை மூடினாரோ இல்லியோ அந்த இன்னொரு விஷயம் உடனே விழித்துக் கொண்டது.
அவர் பார்வை மேஜையின் மேல் சென்றது. எதிர்வீட்டுக்காரருக்கு என்று வந்த தபால்கள். வாங்கிச் சேர்த்து ஒரு ரப்பர் பேண்ட் போட்டு பத்திரமாய் வைத்திருந்தார்.
‘‘ஸார்... நாராயணன் ஸார்...’’‘‘யாரு? ஓ ராஜாராமா? வாங்க... வாங்க...’’ ‘‘இல்ல இருக்கட்டும். ஊருக்குப் போயிட்டிருக்கேன்.
இப்ப ஆட்டோ வந்திடும். கொஞ்சம் வீட்டைப் பார்த்துக்குங்க. சாயங்காலம் மட்டும் வாசல் லைட்டைப் போட்டு, பத்து மணிக்கு அணைச்சிடுங்க...’’‘‘வழக்கமாச் செய்றதுதானே? நான் பார்த்துக்கிறேன். நீங்க கவலைப்படாமப் போயிட்டு வாங்க...’’ ‘‘அப்டியே தபாலும்...’’
‘‘அதான் வாங்கி வச்சிடுவேனே. நா போஸ்ட்மேன்கிட்டயே சொல்லிடுவேன் எதுத்த வீட்டுத் தபாலை எங்கிட்டக் கொடுத்திடுங்கன்னு...’’‘‘அதுக்கில்லை சார்... பையனோட பாஸ்போர்ட் வரும் ரிஜிஸ்டர்ல. அத உங்ககிட்டே தரமாட்டேன்னுவான். அதுக்காகத்தான் இந்த ஆதரிசேஷன் லெட்டர். என் கையெழுத்துக்கு மேலே உங்க கையெழுத்தைக் கொஞ்சம் போட்டுக்கிடுங்க. அப்பத்தான் அட்டெஸ்ட் பண்ணினதா ஆகும்.
இதப் போஸ்ட்மேன்கிட்ட கொடுத்தீங்கன்னா பாஸ்போர்ட் ரிஜிஸ்டர் தபாலை உங்ககிட்டே கொடுத்திடுவான். ஆளில்லாம ரிடர்ன் ஆயிடுச்சின்னா அப்புறம் சங்கடம்...’’கொஞ்சம் சங்கடப்பட்டுக்கொண்டே போஸ்ட்மேன் சங்குமணி வாங்கிக் கொண்டதை நினைத்துக் கொண்டார்.
‘‘போஸ்ட் மாஸ்டர் என்ன சொல்லுவாரோ, தெரிலயே ஸார்... கொடுத்துப் பார்க்கிறேன். நாங்க பாஸ்போர்ட்டையெல்லாம் வேறே யார்ட்டயும் கொடுக்கிறதில்லை. ஆதரிசேஷன் இருந்தாலும்... எங்களுக்கு உத்தரவு அப்டி!’’தயங்கியவாறே கொடுத்துப் போனார். நல்லவேளை இன்றுவரை ஒன்றுமில்லை.
ஏற்றுக்கொண்டது போல்தான் தோன்றுகிறது.வந்திருந்த தபால்களை மீண்டும் ஒரு முறை அடுக்கி சரி பார்த்துக் கொண்டார். மேலே ஒரு ஒன்சைடு பேப்பரைச் செருகி, ‘டூ மிஸ்டர் ராஜாராம்’ என்று எழுதி வைத்து விடுவார்.
மேஜையில் குவிந்துள்ள தன் தபால்களோடு கலந்து தொலைந்து போய்விடக் கூடாது. பயம். நாராயணனுக்கு எதுவும் துல்லியமாகத் தெரிய வேண்டும். எதிலும் குழப்பம் என்பது கூடாது. ‘‘உங்களை மாதிரி ஒருத்தர் அவருக்கு கிடைக்கணுமே?’’ என்றாள் மாலினி.
‘‘உதவி செய்றதுன்னு ஏத்துண்டுட்டோம்னா பர்ஃபெக்டா செய்துடணும்...’’‘‘நல்லா செய்யுங்க யார் வேண்டாம்னா? அகஸ்மாத்தா ஏற்பட்ட அந்தத் தவறைச் சொல்லிட்டுக் கொடுத்திருக்கலாமேன்னுதான் சொன்னேன்...’’மாலினி அன்று சொன்னது உறுத்திக்கொண்டேதான் இருக்கிறது.
இப்பொழுதும் அப்படியே ஒரு தவறு மீண்டும் நடந்து விட்டது. தபால்களைப் பிரிக்கும் பொழுதே எதிர் வீட்டுத் தபால்களையும் தன் தபால்களோடு சேர்த்து வைத்து விடுவான் போலிருக்கிறது.
கத்தையாக அப்படியே நீட்டிவிட்டுப் போய்விடுகிறார் போஸ்ட்மேன். அதில் ஒன்று ஒட்டிக்கொண்டிருக்க, கத்தரி போடும் போது நுனி சேர்ந்து கட்டாகிவிட்டது. பிரிக்கும் போது இரண்டு தபால்கள் வாயைப் பிளக்கின்றன. என்னடாவென்று பார்த்தால் ஒன்று அவருடையது. என்ன செய்வார் நாராயணன்?
அடக் கடவுளே என்று அலுத்துக் கொள்ளத்தான் முடிந்தது. சட்டென்று ஒரு முடிவுக்கு வந்தார். அதை மனைவியிடம் சொல்வதில்லையென்று. சர்வ ஜாக்கிரதையான முடிவுதான். ஆனால், ராஜாராமிடம் சொல்லியே கொடுத்துவிடுவதென்று. மனதுக்கு நிம்மதியாகிப் போனது.குறிப்பாக அந்தத் தபாலை இப்போது கவனமாகப் பார்த்துக் கொண்டார்.
எதிர்வீட்டில் சத்தம் கேட்டது. நிமிர்ந்து பார்த்தார். நல்ல இருட்டு. மணியைப் பார்த்தார். ஒன்பதரையை நெருங்கிக் கொண்டிருந்தது. வைகைல வந்திருப்பாரோ என்று நினைத்துக் கொண்டே வாசலுக்கு வந்தார்.
ராஜாராம்தான் கதவைத் திறந்து கொண்டிருந்தார். உடனேயே கொண்டு நீட்ட வேண்டாம். டூ மச் ஆஃப் சின்சியாரிட்டி லீட்ஸ் டு கேயாஸ்...
தேவையில்லாமல் மனதில் இப்படித் தோன்றியது. மனிதனுக்கு சிந்தனையே கூடாது. சிந்திக்காத வாழ்க்கைதான் சுகம். எதையும் ஆராயாமல் மேம்போக்காக வாழ்ந்து கழித்துவிட்டால்தான் நிம்மதி. உள்ளே போய் சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ளட்டும். பிறகு போகலாம். பத்து மணி நேரப் பயண அசதி இருக்கும். எண்ணிக் கொண்டே மீண்டும் அறைக்குள் வந்தார்.
‘‘அவர் வந்துட்டார் போலிருக்கு. போங்கோ... போய் தபால்களைக் கொடுத்திட்டு வந்திடுங்கோ...’’ மூக்கில் வியர்த்ததுபோல் வந்து நின்றாள் மாலினி.
பொறுப்புகளிலிருந்து விலகுவதற்கு, விச்ராந்தியாய் இருப்பதற்குத்தான் எத்தனை மனித யத்தனம். கொடுத்தால்தான் அவளுக்கு நிம்மதி. இல்லையென்றால் ராத்திரி தூங்க மாட்டாள். கிளம்பினார் நாராயணன்.கேட்டைத் திறக்கும்போதே தலையை நீட்டிவிட்டார் ராஜாராம். ‘‘வாங்க... வாங்க...’’‘‘இப்பத்தான் வந்தீங்க போலிருக்கு. இருங்க... இருங்க... டயர்டா இருப்பீங்க...’’ சொல்லிக்கொண்டே கையிலிருந்த தபால்களை நீட்டினார்.‘‘ஏஸிலதான் வந்தேன். இந்த வெயில்ல எங்க செகண்ட் ஸ்லீப்பர்ல வர்றது?’’
‘‘ஆமாமா... சரி பாருங்க. நா வர்றேன்...’’ திரும்பினார் நாராயணன்.‘‘சும்மா வாங்க ஸார். நீங்க என்ன வந்தவுடனே கிளம்புறீங்க? பால் காயுது. ஒரு வாய் காபி சாப்டுட்டுப் போங்க...’’‘‘நா இப்பக் காபியெல்லாம் சாப்பிடுறதில்லே. ராத்திரி காப்பி சாப்பிடாதீங்க. தூக்கம் வராது...’’வாசல் வரை வந்தவருக்கு அப்பொழுதுதான் ஞாபகம் வந்தது வந்த காரியம்.
‘‘அந்தத் தபால்ல ஒண்ணை, தெரியாம என் தபால்களோட சேர்த்துக் கட் பண்ணிட்டேன். ஸாரி...’’பதிலை எதிர்பார்க்காமல் கிளம்பினார். கொஞ்சம் வந்தவர், திரும்பி நோக்கினார். ராஜாராம் அந்தக் குறிப்பிட்ட தபாலை உருவி எடுத்திருந்தார்.‘‘அதான்... அதேதான். கவனிக்கலை...’’ இவரையறியாமல் வாய் குழறுவது போல் பிரமை. ‘‘போனவாட்டி கூட இதே போல ஒரு தபால் திறந்துதான் இருந்திச்சி...’’ ராஜாராம் தலையைக் குனிந்தபடியே சொல்லிவிட்டார்.கவனித்த இவருக்குச் சுருக்கென்றது. யதார்த்தமாய், சகஜமாய் வந்த வார்த்தைகள்தானா?
வீட்டைப் பார்த்து நடந்து கொண்டிருந்தார். மாலினி சொல்லும் அந்த விவஸ்தை இருந்திருந்தால் ஒருவேளை புரிந்திருக்குமோ? அது அவள் இயல்பு. வலியச் சொல்வது இவர் இயல்பு. கேட்டு விடுவது அவரின் இயல்பு போலும்? மனிதரில் எத்தனை நிறங்கள்?ஆனாலும் நெஞ்சில் எதுவோ தைத்தது போலிருந்தது. தன் மீதே கழிவிரக்கம் பிறந்தது நாராயணனுக்கு.
உஷாதீபன்
|