ரீசார்ஜ் செய்யாமல் 90 நாட்கள் சிம் ஆக்டிவாக இருக்குமா?



இரண்டு சிம் கார்டுகள் பயன்படுத்தும் நபர்களுக்கு பெரும் தலைவலியாக இருப்பது செகண்டரி சிம் கார்டை ஆக்டிவாக வைத்திருப்பதற்காகவே ஒவ்வொரு மாதமும் ரீசார்ஜ் செய்வதே.
அதிலும், பிரைமரி சிம் கார்டுக்கு அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் டேட்டா பேக்கேஜ் ஏற்கெனவே இருந்தாலும், செகண்டரி சிம் கார்டுக்கு அதே அளவில் ரீசார்ஜ் செய்ய வேண்டியிருக்கும்.
இதனால், சிம் கார்டு ஆக்டிவாக வைத்திருப்பதற்காக மட்டும் புதிய பிளானை தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் அந்தந்த தொலைத் தொடர்பு நிறுவனங்களின் பயனாளர்களின் மத்தியில் இருக்கிறது.

இந்நிலையில்தான், இரண்டு சிம் கார்டுகள் வைத்திருப்பவர்கள் தங்களின் செகண்டரி சிம் கார்டுக்கு ரீசார்ஜ் செய்யவில்லை என்றாலும், கடைசியாக ரீசார்ஜ் செய்யப்பட்ட நாளிலிருந்து 90 நாள்களுக்கு அந்த சிம் ஆக்டிவாக இருக்கும் என்றும், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) இத்தகைய புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது என்றும் இணையத்தில் செய்திகள் பரவி வருகின்றன.

இச்சூழலில், மத்திய அரசின் PIB உண்மை சரிபார்ப்புக் குழு ‘எக்ஸ்’ தளத்தில் இத்தகைய செய்திகள் குறித்து உண்மை நிலவரத்தைப் பதிவிட்டிருக்கிறது. அந்தப் பதிவில், ‘‘ரீசார்ஜ் செய்யாவிட்டாலும் 90 நாள்களுக்கு சிம் கார்டுகள் ஆக்டிவாக இருக்கும் புதிய வழிகாட்டுதல்களை TRAI வெளியிட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. அவை தவறானவை...’’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மேலும், ‘‘TCPR ஆறாவது திருத்தத்தின்படி, ப்ரீபெய்டு நுகர்வோர் கணக்கில் ரூ.20க்கு மேல் இருந்தால், குறைந்தபட்சம் 90 நாள்களுக்குப் பயன்பாட்டில் இல்லையென்றாலும் அதன் இணைப்பு செயலிழக்கப்படாது. 

அதேபோல், நுகர்வோர் தங்களின் தேவையான சேவைகளுக்கு மட்டுமே பணம் செலுத்தும் வகையில், வாய்ஸ் கால்ஸ் மற்றும் எஸ்.எம்.எஸ்-க்கு மட்டும் பிளான்களைக் கட்டாயமாக்கியுள்ளது. இதனால், நுகர்வோர் தங்களுக்குத் தேவையில்லாத சேவைகளுக்குப் பணம் செலுத்த வேண்டியதில்லை...’’ என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

என்.ஆனந்தி