மனிதர்களாக வாழும் ஏலியன்ஸ்!



ஆமாம். இந்த முறை கொளுத்திப் போட்டிருப்பது ஹார்வார்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.ஏலியன்ஸ், வேற்றுகிரக மனிதர்கள் குறித்த பேச்சு எக்காலத்திலும் சுவாரஸ்யமானவை. 
இதோ இப்பொழுது இந்த சுவாரஸ்யம்!சமீபத்தில் ஹார்வார்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஏலியன்கள் குறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். அதில் ‘வேற்றுகிரக வாசிகள் பூமியில் மனிதர்களோடு மனிதர்களாக ரகசியமாக வாழலாம்’ என்று தெரிவித்துள்ளனர்.  இப்படி மனிதர்கள் போல வாழக்கூடிய உயிரினங்களை ‘கிரிப்டோ டெரஸ்ட்ரியல்ஸ்’ (crypto terrestrials) என்கின்றனர்.  

அப்படியென்றால் இந்த ஏலியன்கள் எப்படி பூமிக்கு வந்திருக்கும்?

இந்த ஹார்வார்ட் ஆராய்ச்சியாளர்கள் ஏலியன்ஸ் நான்கு விதங்களில் பூமிக்கு வந்திருக்கலாம் என்கின்றனர்.

1. தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட பண்டைய மனித நாகரிகம் பல காலத்திற்கு முன்பே அழிந்துவிட்டது. ஆனால், சிலர் இதிலிருந்து தப்பிப் பிழைத்து தொடர்ந்து உயிர் வாழ்ந்திருக்கலாம்.

2. பரிணாம வளர்ச்சி என்பது அனைத்து உயிரினங்களுக்கும் உண்டு. அந்தவகையில் மனிதன் அல்லாத சில உயிரினங்கள் பரிணாமம் அடைந்து நிலத்தடியில் மறைந்து வாழலாம். இந்த உயிரினங்கள் குரங்கு போன்ற மனித இனத்தின் வழித்தோன்றலாகவோ அல்லது மிகவும் புத்திசாலித்தனமான டைனோசர்களின் வழித்தோன்றலாகவோ இருக்கலாம்.

3. இந்த உயிரினங்கள் பிரபஞ்சத்திலிருந்து பூமிக்கு  வந்திருக்கலாம் அல்லது மனிதனுடைய எதிர்காலத்தில் இருந்து (Human Future) பூமிக்கு வந்து தற்போது சந்திரனில் மறைந்து வாழ்ந்து கொண்டிருக்கலாம்.

4. இந்த உயிரினங்கள் ஏலியன்களாக அல்லாமல், தேவதைகள், குட்டிச்சாத்தான்கள், கடல் கன்னிகள் போன்ற வடிவங்களில் மனிதர்களைத் தொடர்பு கொள்ளலாம்.
பொதுவாக ஏலியன்கள் நவீன தொழில்நுட்ப அறிவு கொண்டவையாக பார்க்கப்படும். ஆனால், ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்ட இந்த உயிரினங்கள் குறைந்த தொழில்நுட்ப அறிவு  கொண்டவையாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன.ரைட்டு... நாமே கூட ஏலியன்ஸாக இருக்கலாம் அல்லது நம் மனைவி / கணவர் வேற்றுகிரகவாசியாக இருக்கலாம்!