இந்தியாவிலேயே தமிழக மக்கள்தான் அதிகம் செலவழிக்கிறார்கள்!



ஷாக்தான். ஆனால், நிஜம் என்கிறதே புள்ளிவிவரம்!

யெஸ். தமிழகத்தின் நகர மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்த மக்கள், மற்ற சில மாநில மக்களைவிட அதிக அளவில் பணத்தை செலவழிப்பதாக Household Consumption Expenditure 2022 - 23 (HCES) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.இந்த ஆய்வறிக்கையின்படி தமிழகத்தின் கிராமப்புறங்களைச் சேர்ந்த மக்கள் மாதம் ஒன்றுக்கு சராசரியாக 5,310 ரூபாயையும், நகரப்புறங்களைச் சேர்ந்த மக்கள் சராசரியாக 7,630 ரூபாயையும் செலவழிக்கிறார்கள். இது நாடு முழுவதற்குமான தேசிய சராசரியைவிட அதிகமாகும்.

ஏனெனில் தேசிய அளவில் கிராமப்புறங்களில் வாழும் மக்கள் சராசரியாக மாதந்தோறும் 3,773 ரூபாய் செலவழிக்கிறார்கள். நகர்ப்புறங்களில் வாழும் மக்கள் சராசரியாக 6,459 ரூபாய் செலவழிக்கிறார்கள்.தேசிய அளவில் பார்த்தால் நகரங்களில் வாழ்பவர்களைவிட கிராமங்களில் வாழ்பவர்கள் 71 சதவீதம் குறைவாக செலவழிக்கிறார்கள். ஆனால், தமிழகத்தில் நகரத்தைவிட கிராமத்து மக்கள் 44 சதவீதம் மட்டுமே குறைவாக செலவழிக்கிறார்கள். கிராமத்தில் இருந்து ஏராளமான மக்கள் நகரங்களுக்கு குடிபெயர்ந்துவிட்டதாலும் இந்த சதவீதம் குறைவதாக சொல்கிறார்கள்.

அதாவது “தேசிய அளவில் விவசாயத்தை முக்கிய தொழிலாகக் கொண்டு 48 சதவீதம் மக்கள் வாழ்கிறார்கள். ஆனால், தமிழகத்தில் 35 சதவீதம் பேர் மட்டுமே விவசாயத்தை நம்பி இருக்கிறார்கள். தமிழக கிராமப்பகுதிகளில் இருக்கும் மக்கள் அதிக அளவில் செலவழிப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்...” என்கிறார் தேசிய புள்ளியியல் கமிஷனின் முன்னாள் தலைவரான மகேந்திர தேவ்.தமிழக மக்கள் எந்தெந்த விஷயங்களுக்காக எவ்வளவு பணத்தை செலவழிக்கிறார்கள் என்ற விவரங்களும் இந்த ஆய்வில் வெளியாகி உள்ளன.

இதன்படி ஆடைகள், படுக்கை, காலணிகள் போன்றவற்றை வாங்க தமிழக கிராமப்புற மக்கள் 9.3 சதவீத பணத்தையும், நகர்ப்புற மக்கள் 7.1 சதவீத பணத்தையும் செலவழிக்கிறார்கள்.
போக்குவரத்துக்காக கிராமப்புற மக்கள் 18 சதவீதமும், நகர்ப்புற மக்கள் 16.1 சதவீதமும் செலவழிக்கிறார்கள்.

கிராமப்புற மக்களைப் பொறுத்தவரை நீண்ட காலம் உழைக்கும் பொருட்களை வாங்குவதற்காக 14.9 சதவீதமும், கல்விக்காக 6.1 சதவீதமும், எரிபொருள் மற்றும் மின்சாரத்துக்காக 9.2 சதவீதமும், மருந்துக்காக 11.6 சதவீதமும், பொழுதுபோக்கு உள்ளிட்ட விஷயங்களுக்காக 12.1 சதவீதமும் செலவழிக்கிறார்கள்.

நகர்ப்புற மக்களைப் பொறுத்தவரை நீண்ட கால பொருட்களுக்காக 11.1 சதவீதமும், கல்விக்காக 8.5 சதவீதமும், எரிபொருள் மற்றும் மின்சாரத்துக்காக 7.9 சதவீதமும், மருந்துக்காக 9.6 சதவீதமும், பொழுதுபோக்கு உள்ளிட்ட விஷயங்களுக்காக 11.2 சதவீதமும், மற்ற விஷயங்களுக்காக 28.3 சதவீதமும் செலவழிப்பதாக இந்த ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளது.

அதுமட்டுமல்ல... இந்தியாவிலேயே பதப்படுத்தப்பட்ட உணவுக்காக தமிழர்கள்தான் அதிகம் செலவு செய்கிறார்கள் என்பதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. தமிழக கிராமப்புற மக்கள் உணவுக்காக தாங்கள் செலவழிக்கும் பணத்தில் மொத்தம் 28.4 சதவீதத்தை பதப்படுத்தப்பட்ட உணவுக்காக செலவழிக்கிறார்கள். தமிழர்களுக்கு அடுத்ததாக கர்நாடக மாநிலத்தினர் 25.4 சதவீதமும், அசாம் மாநிலத்தினர் 24.6 சதவீதமும், ஒடிஷா மக்கள் 22.9 சதவீதமும் செலவழிக்கிறார்கள். இப்பிரிவில் தேசிய சராசரி 20.7 சதவீதமாகும்.

தமிழக நகர்ப்புற மக்களைப் பொறுத்தவரை உணவுக்காக தாங்கள் செலவு செய்யும் பணத்தில் 33.7 சதவீதத்தை பதப்படுத்தப்பட்ட உணவுக்காக செலவழிக்கிறார்கள்.
இந்தப் பிரிவில் தமிழகத்துக்கு அடுத்ததாக கர்நாடக மக்கள் 32.9 சதவீதத்தையும், தெலங்கானா மக்கள் 32.4 சதவீதமும், கேரள மக்கள் 28.4 சதவீதமும், ஆந்திர மக்கள் 28 சதவீதமும் பதப்படுத்தப்பட்ட உணவுக்காக செலவழிக்கிறார்கள். இப்பிரிவில் தேசிய சராசரி 27.2 சதவீதமாகும்.

என்.ஆனந்தி