சிக்ஸர் சிக்ஸராக விளாசிய குப்பை கூட்டிய இளைஞர்!



அணியின் வெற்றிக்கு ஒரு பந்தில் 2 ரன்களை எடுக்கவேண்டிய நிலை இருந்தாலே பல வீரர்களுக்கு கதிகலக்கும். ஆனால், சில நாட்களுக்கு முன்பு நடந்த ஐபிஎல் போட்டியில் கேகேஆர் அணியின் வெற்றிக்கு கடைசி 5 பந்துகளில் 28 ரன்கள் தேவைப்பட்டன. இந்த சூழலில், ‘அதென்ன 28... இன்னும் ரெண்டு கூட்டி 30 ரன்களாகவே வச்சுக்கோங்க...’ என்று கடைசி 5 பந்துகளிலும் ஐந்து சிக்சர்களை அடுத்தடுத்து விளாசி சாதனை படைத்துள்ளார் ரிங்கு சிங். இதன்மூலம் ஐபிஎல் 2023ன் சூப்பர் ஸ்டாராக உருவெடுத்துள்ளார்.

ஐபிஎல்லுக்கு முன்பு வரை பலருக்கும் - குறிப்பாக கிரிக்கெட் ரசிகர்களுக்கு - இந்த ரிங்கு சிங் யாரென்றே தெரியாது. ஆனால், ஐந்து பந்துகள்... ஐந்து சிக்சர்களுக்குப் பிறகு கூகுளே அலறும் அளவுக்கு அவரைக் குறித்து அனைவரும் தேடத் தொடங்கிவிட்டார்கள்.

யார் இந்த ரிங்கு சிங்?

பொதுவாக கிரிக்கெட் வீரர்கள் சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற மெட்ரோ நகரங்களில் இருந்துதான் உருவாவார்கள். அப்படி உருவாகும் கிரிக்கெட் வீரர்கள் பலரும் பணக்காரர்கள் வீட்டுப் பிள்ளைகளாகத்தான் இருப்பார்கள். கிரிக்கெட் பிட்ச் முதற்கொண்டு வீட்டிலேயே அனைத்தையும் சொந்தமாக வைத்திருப்பார்கள். ஆனால், இப்படி எந்த வசதியும் இல்லாத - இன்னும் சொல்லப்போனால் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்தான் ரிங்கு சிங்.

உத்தரப் பிரதேச மாநிலம்தான் ரிங்கு சிங்கின் சொந்த ஊர். அங்குள்ள அலிகார் பகுதியில் வீடுகளுக்கு காஸ் சிலிண்டர்களை சப்ளை செய்யும் கான்சந்திர சிங்கின் 3வது மகன்தான் ரிங்கு.
ரிங்குவின் அப்பாவுக்கு மொத்தம் 5 குழந்தைகள். அப்பாவுக்கு குறைந்த வருமானம் என்பதால் உணவுக்கே தட்டுப்பாடு. இப்படி படிக்க வைப்பதற்கே பணம் செலவு செய்ய யோசிக்கும் அப்பாவிடம் போய் கிரிக்கெட் கோச்சிங்குக்கு பணம் கேட்டால் கொடுப்பாரா?

“நமக்கெல்லாம் கிரிக்கெட் சரிப்பட்டு வராது... போய் ஒழுங்கா படி... இல்லைன்னா கூலி வேலை செய்து பொழைக்கற வேலையைப் பாரு...” என்று சொல்லிவிட்டார்.
ரிங்கு சிங் கவலைப்படவில்லை. அப்பா சொன்னபடி படிக்காவிட்டாலும், கூலி வேலை தேடினார். 13 வயதில் கிரிக்கெட் பயிற்சி மையத்தை கூட்டிப் பெருக்கும் வேலை கிடைத்தது.
அந்த வேலையில் சேர்ந்த ரிங்கு, மாலை நேரங்களில் கிரிக்கெட் கோச்சிங்கில் சேர்ந்தார். அப்பாவின் முதலாளி ஒரு பேட்டை வாங்கிக் கொடுக்க, அதையே மூலதனமாக்கி கிரிக்கெட்டில் கவனம் செலுத்தினார்.

உள்ளூர் போட்டிகளில் வாய்ப்பு கிடைக்க... கற்றுக்கொண்ட மொத்த வித்தையையும் இறக்கிவிட்டார். இதனால் உத்தரப்பிரதேச அணியில் அவருக்கு இடம் கிடைத்தது.
ஒரு கட்டத்தில் கேகேஆர் தேர்வாளர்களுக்கு அவரது ஆட்டத்தைப் பற்றி தெரியவர 2018ம் ஆண்டில் 80 லட்சம் கொடுத்து வாங்கிப் போட்டார்கள். ஆனால், போதுமான வாய்ப்புகள் இல்லாததால் அவரால் எதுவும் சாதிக்க முடியவில்லை. இதனால் 2021 ஏலத்தில் ரிங்குவின் மதிப்பு குறைந்தது. 2018ல் 80 லட்ச ரூபாய் கொடுத்து வாங்கிய கேகேஆர் அணியே இப்போது 55 லட்சம் ரூபாய்க்கு அவரை வாங்கியது.

தன் மதிப்பு குறைந்ததைப் பற்றி கவலைப்படாமல் எப்போதும்போல் உற்சாகமாக இருந்தார் ரிங்கு. அதேநேரம் மனதுக்குள் கொழுந்துவிட்டு எரிந்த நெருப்பை அணையாமல் பார்த்துக் கொண்டார். தனக்கென்று ஒரு வாய்ப்பு வரும் என்று அவர் நம்பிக்கையுடன் இருந்தார்.

அந்த நம்பிக்கைதான் இன்று அவரை ஹீரோவாக்கி உள்ளது. கடைசி 5 பந்துகளில் மொத்தம் 30 ரன்களை அடித்து கொல்கத்தாவை ஜெயிக்க வைத்திருக்கிறார்.
“வாழ்க்கையில் பலரும் எனக்காக பல உதவிகளைச் செய்திருக்கிறார்கள். இன்றைய இன்னிங்ஸை அவர்களுக்காக நான் அர்ப்பணிக்கிறேன்...” என்று கண்ணீர் மல்க தழுதழுத்திருக்கிறார் ரிங்கு சிங்.

ரிங்குவின் சாதனை பற்றி அவரது அப்பா, “நான் அவனுக்கு ஒரு கிரிக்கெட் பேட்டைக்கூட வாங்கிக் கொடுக்கவில்லை. மாறாக கிரிக்கெட் ஆடுவதற்கு பதில் படி என்றுதான் சொன்னேன். தானாக, உழைத்து இந்த நிலைக்கு அவன் உயர்ந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது...’’ என்று நெகிழ்ந்துள்ளார்.வசதியான சூழலில் வாழ்ந்தவர்கள் பெற்ற வெற்றியைவிட எந்த வசதியும் இல்லாத ரிங்குவின் வெற்றி பெருமைக்குரியது; வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டியது!

ஜான்சி