ஒட்டுக்கேட்கிறதா மத்திய அரசு..? வெடிக்கும் பெகாசஸ் ஸ்பைவேர் விவகாரம்!



இஸ்ரேலின் பெகா சஸ் என்ற ஸ்பைவேர் மூலம் இந்தியாவில் பத்திரிகையாளர்கள், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்ட செய்திதான் இப்போதைய அரசியல் அரங்கில் அனலடிக்கும் வைரல். உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பல சர்வதேச ஊடகங்கள் இந்த விஷயத்தை அம்பலப்

படுத்தியுள்ளன.
ஸ்பைவேர் என்பது, ஒருவருக்குத் தெரியாமல் அவரை வேவு பார்க்கப் பயன்படுத்தப்படும் ஒருவகை மென்பொருள்.இந்த பெகாசஸ் மென்பொருளை வங்க தேசம், மெக்சிகோ, சவுதி அரேபியா போன்ற பல நாடுகள் என்எஸ்ஓ நிறுவனத்திடம் இருந்து வாங்கி பயன்படுத்துகின்றன. இதைக் கொண்டு ஒருவரின் செல்போனை ஒட்டுக்கேட்பது மட்டுமின்றி, அவரின் அனுமதியின்றி இயக்கவும் முடியும் என்கிறார்கள்.

பெகாசஸ் என்ற இந்த இஸ்ரேலிய நிறுவனம் இதுவரை ஐம்பதாயிரம் பேரின் அலைபேசிகளை ஒட்டுக்கேட்டுள்ளதாக பிரான்சின் ‘ஃபார்பிட்டன் ஸ்டோரிஸ்’ என்ற புலனாய்வு இதழ் அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள சமூக உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களின் செல்போன்கள் இஸ்ரேலின் பெகாசஸ் நிறுவனத்தின் ஸ்பைவேர் மூலம் ஒட்டுக் கேட்கப்பட்டு, அந்தத் தகவல்கள் அரசுகளிடம் விற்கப்பட்டுள்ளன. அதில் இந்தி யாவைச் சேர்ந்த 40 பத்திரிகையாளர்கள் உட்பட பலர் அடங்கியுள்ளனர் என்று சொல்கிறார்கள். மொத்தமாக, 21 நாடுகளைச் சேர்ந்த 200 பத்திரிகையாளர்கள் கண்காணிப்பு செய்யப்பட்டுள்ளனராம்.

மேலும் அரபு அரச குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், 64 தொழில்துறை நிர்வாகிகள், 85 மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள், 600க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், 189 பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட ஐம்பதாயிரம் பேரின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளதாம்.பெகாசஸ் மென்பொருள் குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு எதிரான பயன்பாட்டிற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், இது நல்ல மனித உரிமை பதிவுகளைக் கொண்ட நாடுகளைச் சேர்ந்த இராணுவம், சட்ட அமலாக்க மற்றும் உளவுத்துறை நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது என்றும் பெகாசஸ் செயலியின் என்எஸ்ஓ நிறுவனம் கூறியுள்ளது.

அதாவது, குழந்தைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் குழுக்களைக் கண்டுபிடிக்கவும், போதைப் பொருள் கடத்தல் கும்பல்களைக் கண்டுபிடிக்கவும், காணாமல் போன மற்றும் கடத்தப்படும் குழந்தைகளைக் கண்டுபிடிக்கவும், இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பவர்களைக் கண்டு பிடிக்கவும், ட்ரோன்களிடம் இருந்து வான் பரப்புகளைப் பாதுகாக்கவும் எங்கள் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது என்றும் என்எஸ்ஓ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், மூன்று எதிர்க்கட்சித் தலைவர்கள், பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இரண்டு அமைச்சர்கள் மற்றும் பல தொழிலதிபர்களின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஏற்கெனவே, பெகாசஸ் மூலம் 1,400 மொபைல் போன்களில் சைபர் தாக்குதல் நடத்தியதாகக் கடந்த 2019ம் ஆண்டு என்எஸ்ஓ நிறுவனத்துக்கு எதிராக வாட்ஸ்அப் வழக்கு தொடர்ந்தது.

அந்த நேரத்தில், என்எஸ்ஓ எந்த தவறும் செய்யவில்லை என்று மறுத்தது. ஆனால், அந்த நிறுவனம் வாட்ஸ்அப்பை பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது.இந்த வேவு பார்க்கும் மென்பொருளை அரசுகள் பயன்படுத்துவது குறித்து ஏற்கெனவே பலமுறை கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. அத்துடன் ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் என்எஸ்ஓ நிறுவனத்துக்கு எதிராக வழக்கும் தொடர்ந்துள்ளன. ஆனால், இந்தியா இந்த மென்பொருளை வாங்கியதா இல்லையா என்பது  அதிகாரபூர்வமாகத் தெரியவில்லை.

நாட்டின் பாதுகாப்புக்காகவே பெகாசஸை வாங்குவதாகப் பல நாட்டின் அரசுகள் கூறினாலும், அவை மக்களை வேவு பார்க்க இந்த மென்பொருளைப் பயன்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஒருவரின் ஐபோன் அல்லது ஆண்ட்ராய்ட் போனை தொலைவிலிருந்தே ஹேக் செய்யலாம். இதன் மூலம் ஹேக்கர்கள், அந்த போனில் இருந்து மெசேஜ், புகைப்படங்கள், மின்னஞ்சல், பயனாளர் செல்லும் இடம் போன்ற அனைத்து தகவல்களையும் திருட முடியும். தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக் கேட்க முடியும். அந்தப் போனையும் தொலைவிலிருந்தே இயக்க முடியும்.

மேலும், ரகசியக் குறியீட்டில் எழுதப்பட்ட (Encrypted) தகவல்களைக்கூட இந்த மென்பொருள் வாசித்துவிடும் என்பதால் இதனை அரசுகள் ஆர்வமாக வாங்குகின்றன. இந்த ரகசிய குறியீட்டுத் தகவல்களை அனுப்புநர் மற்றும் பெறுநரால் மட்டுமே வாசிக்க முடியும். தகவல் பரிமாற்றத் தளங்களை நடத்தும் வாட்ஸ்அப் போன்ற நிறுவனங்களால்கூட வாசிக்க இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு நபரின் போனில் பெகாசஸ் நுழைந்தவுடன், வேவு பார்ப்பதற்குத் தேவையான மாட்யூல்களை இன்ஸ்டால் செய்யும். பின்னர் ஃபோனின் முழுக் கட்டுப்பாட்டையும் எடுத்துக்கொள்ளும்.

மேலும் அதைக் கட்டுப்படுத்துபவர்களுடன் 60 நாட்களுக்கு மேலாக தொடர்புகொள்ள முடியவில்லை என்றாலோ அல்லது தவறான ஃபோனில் இன்ஸ்டால் செய்யப்பட்டாலோ தானாக அழிந்துவிடும் வகையில் அது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த பெகாசஸ் மூலம் மக்கள் உளவுபார்க்கப்படுவதை 2016ம் ஆண்டு ஐக்கிய அரசு அமீரகத்தைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர் அகமது மன்சூர் கண்டறிந்தார்.
மன்சூரின் செல்போனுக்கு பல எஸ்எம்எஸ்கள் வந்துள்ளன. அதில் உள்ள இணைப்புகள் தவறான நோக்கத்திற்காக அனுப்பப் பட்டிருக்கலாம் என அவர் சந்தேகப்பட்டார்.
இதனால், டொரண்டோ பல்கலைக்கழகத்தின் சிட்டிசன் ஆய்வகத்தில் உள்ள சைபர் செக்யூரிட்டி நிபுணர்களிடம் தனது செல்ஃபோனை ஒப்படைத்து, தனக்கு வந்துள்ள எஸ்எம்எஸ்-கள் குறித்து ஆராயுமாறு கூறியுள்ளார்.

மன்சூரின் சந்தேகம் சரிதான். ஒருவேளை எஸ்எம்எஸ்-களில் இருந்த இணைப்புகளை அவர் கிளிக் செய்திருந்தால், அவரது ஃபோன் பெகாசஸ் மால்வேரால் பாதிக்கப்பட்டிருக்கும். மன்சூரின் போனை ஆராய்ந்த சைபர் செக்யூரிட்டி நிபுணர்கள், இந்த தாக்குதலைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமான ஒன்று எனக் கூறியுள்ளனர்.அதன் பின்னர் 2017ம் ஆண்டு பெகாசஸ் மூலம் மக்களை வேவு பார்ப்பதாக மெக்சிகோ அரசு மீது குற்றஞ்சாட்டப்பட்டது. மெக்சிகோவில் மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஊழல் எதிர்ப்பு ஆர்வலர்களுக்கு எதிராக பெகாசஸ் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்ற செய்தி கசிந்தது. உடனடியாக, தங்களது ஃபோன்களை ஒட்டுக் கேட்பதாகப் பிரபல பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மெக்சிகோ அரசுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தனர்.

ஆனால், தீவிரவாதிகளுக்கும் குற்றவாளிகளுக்கும் எதிராகவே பயன்படுத்துவோம் என்ற நிபந்தனையுடன்தான் மெக்சிகோ அரசுக்கு அந்த மென்பொருளை விற்றதாக நிறுவனம் கூறியது.

பயனர்களின் ஸ்மார்ட்போன்களில் ஹேக்கிங் மென்பொருளை ரகசியமாக அனுப்புவதற்கு, ஃபேஸ்புக் போன்ற ஒரு வலைத்தளத்தை என்எஸ்ஓ உருவாக்கியதாக 2020ம் ஆண்டு குற்றஞ்சாட்டப்பட்டது.

மதர்போர்டு எனும் செய்தி இணையதளம் நடத்திய புலனாய்வில், ஃபேஸ்புக் போலவே காட்சியளிக்கும் ஒரு தளத்தை உருவாக்கி அதன் மூலம் பெகாசஸ் ஹேக்கிங் டூலை என்எஸ்ஓ பரப்பியது கண்டறியப்பட்டது.இந்த குற்றச்சாட்டுகள் ‘இட்டுக்கட்டப்பட்டவை’ எனக் கூறி என்எஸ்ஓ மறுத்தது. இந்த இஸ்ரேலிய நிறுவனம் ஏற்கெனவே ஃபேஸ்புக் உடனான சட்டப் போரில் சிக்கியிருந்தும் இந்த வேலையைச் செய்திருக்கிறது.

வாட்ஸ்அப் மூலம் வேவு மென்பொருளை பரப்பி, தங்களது வாடிக்கையாளர்கள் மொபைல்களில் சைபர் தாக்குதல் நடத்தியதாகக் கடந்த 2019ம் ஆண்டு என்எஸ்ஓ நிறுவனத்துக்கு எதிராக ஃபேஸ்புக் வழக்கு தொடர்ந்தது.சவுதியைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி, கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம், துருக்கி இஸ்தான்புல்லில் உள்ள சவுதி துணைத் தூதரகத்துக்குச் சென்றபோது கொலை செய்யப்பட்டார். அவர் கொலை செய்யப்படுவதற்கு முன்பு அவரது செல்போனும், கொலை செய்யப்பட்டதற்குப் பின்பு அவரது குடும்பத்தினரின் செல்போன் களும் பெகாசஸ் மூலம் வேவு பார்க்கப்பட்டுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு பெகாசஸ் மென்பொருளை சவுதி அரேபியா வாங்கியது. நாட்டில் உள்ள மாறுபட்ட கருத்து கொண்டவர்களை நசுக்குவதற்கும், வெளிநாடுகளில் உள்ளவர்களைக் கண்காணிப்பதற்கும் இந்த மென்பொருளை சவுதி பயன்படுத்தியது என்கிறார்கள். இந்திய அரசு இந்த மென்பொருளைப் பயன்படுத்துகிறதா இல்லையா என்பதற்கு ஆதாரபூர்வமான தகவல்கள் இல்லை என்றாலும் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை எளிதில் விடுவதாக இல்லை. இது ஜனநாயகத்துக்கு விடப்பட்ட மோசமான அச்சுறுத்தல் என்று காரசாரமாக விளாசிக்கொண்டிருக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். அரசோ இதுவரை வாயைத் திறக்கவில்லை.

இளங்கோ கிருஷ்ணன்