'ஓர் இரவு' - தன்னுடன் தங்கி ஊழியம் பார்த்த ஒருவர் வாழ்க்கைக்கு ஒற்றை வரியில் ஒளி கொடுத்து செதுக்கிய அறிஞர் அண்ணா... அறிஞர்தான். ஃப்ளாஷ்பிளாக்... உயிரோவியம்!
- எம்.ஜி.பரத், திண்டுக்கல்.
'ரைட் டைம் ரைட் க்ளிக்!' - சந்தோஷ்ராஜின் போட்டோக்கள் ஒவ்வொன்றும் ஒரு நூறு கதை சொல்லும் போலிருக்கிறதே! ஆஹா... அற்புதம்! ஆனந்தம்! பரவசம்! சந்தோஷம்!
- பி.ராஜசேகரன், மதுரை-10.
சொத்துகள் தெரியாத வரையில் ஆண்டவன், கோயில் எல்லாம் மக்கள் அனைவருக்கும் சொந்தம். சொத்துகள் தெரிய வந்தால் யாருக்குச் சொந்தம் என்ற பிரச்னை வந்து விடுகிறது. பக்தி, சொத்து... எது பெரிதோ?
- எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.
பிறரிடம் யாசித்துப் பெற்ற பணமாயினும் அதில் பாதியை பிச்சைக்காரர்களுக்குக் கொடுக்கும் சுந்தரம் வித்தியாசமானவர்தான்! செய்யும் தொழிலே தெய்வம்!
- டி.மோகன்தாஸ், திண்டுக்கல்.
'தமிழ்மண்ணின் பாரம்பரியச் சேலைகள்' பகுதியில் கும்பகோணம் ஜங்க்ளா பட்டு பற்றி படித்தபோது இப்பவே கும்பகோணத்துக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை வந்தது.
- எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.
'காந்தக் கண்ணழகி' அமலா பாலின் பேட்டி அருமை. 'என்னோட வெட்கத்தைப் போக்கினார் விக்ரம்' என அவங்க சொன்னதை பரபரவெனப் படித்த பிறகுதான் தெரியுது உம்மோட குறும்புத்தனமான தலைப்பு!
- ந.பேச்சியம்மாள், கடலூர்.
'சுவடுகள்' பகுதியில் ஆஸ்திரேலியாவில் இறந்தவர்களுக்கான உடைகளைத் தயாரிக்கும் பியா இன்டர்லேண்டியைப் பற்றிப் படித்து எங்களின் இரு புருவங்களும் தூக்கின. உலகத்துல இப்படியும் சிலர் இருக்கத்தானே செய்கிறார்கள்!
- டி.வெங்கடேஷ்பாபு, காரமடை.