மனித நேயத்தை துளிர்க்க வைத்த டீரா!



மும்பையில் ஐ.டி கம்பெனியில் பணியாற்றும் மிஹிர் காமத்துக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. டீரா என்று பெயரிடப்பட்ட அந்தக் குழந்தை பிறந்து சில மாதங்களிலேயே,  தலையைத் தூக்க முடியாமலும், குடித்த பால் முழுவதையும் கக்கியும், சரியாக உட்காரவும் முடியாமல் இருந்துள்ளது.
குழந்தையின் நிலை அறிந்து மருத்துவரை அணுகியபோது, குழந்தைக்கு மிகவும் அபூர்வமான ‘ஸ்பைனல் மஸ்குலர் அட்ரொபி’ எனப்படும் ஒரு வகை நரம்பியல் கோளாறு இருப்பது தெரியவந்தது.

இந்த நோயை குணப்படுத்த இந்தியாவில் மருந்து இல்லை. ஒரே மருந்து மட்டும் இருக்கிறது. அதுவும் அமெரிக்காவில். இந்த நோயிலிருந்து குழந்தையை மீட்க சிகிச்சைக்கு மட்டுமே ரூ.16 கோடி செலவாகும் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டனர். மிஹிர் தம்பதியிடம் அந்த அளவு பணம் இல்லாததால், சிகிச்சைக்காக ஆன்லைனில் நிதி திரட்டும் இம்பேக்ட் குரு மற்றும் கோ-ஃபண்ட்மி ஆகிய ஆன்லைன் கம்பெனிகளின் உதவியை நாடினர்.

சிகிச்சைக்குத் தேவையான ரூ. 16 கோடிக்கு, 1 கோடி அதிகமாக ரூ.17 கோடி அளவுக்கு  நிதி கிடைத்திருக்கிறது. இந்த நிதியை  இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதுமிருந்து ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வெறும் 90 நாள்களில் நன்கொடையாக வழங்கியுள்ளனர். நிதி கிடைத்திருந்தாலும் மேலும் ஒரு சிக்கலை எதிர் கொண்டனர் மிஹிர் தம்பதியினர்.  

அமெரிக்காவில் இருந்து மருந்தை இறக்குமதி செய்வதாக இருந்தால் அதற்கு 6 கோடி ரூபாய் இறக்குமதி வரி கட்ட வேண்டும். உடனே குழந்தையின் பெற்றோர் மகாராஷ்டிராவில் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உதவியை நாடினர். அவர் மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டதால் ஓரிரு நாட்களில் அம்மருந்தை இறக்குமதி செய்ய பிரதமர் அலுவலகம் கட்டணச் சலுகை வழங்கியது.

ஒரு முறை ஊசி போடுவதற்கான மருந்து மட்டும் 2.1 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூபாய் 15,28,46,190) ஆகும். இம்மருந்தை செலுத்திய பிறகு டீராவுக்கு வழக்கமாகச் செய்யப்படும் பிசியோதெரபி சிகிச்சையளிக்கப்படும். அதன் பிறகுதான் டீரா எழுந்து உட்காருவாள். அந்த நன்னாளை இந்தியாவே எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.

சுடர்