சடலத்தை சுமந்த எஸ்ஐ!



ஆந்திரப்பிரதேசமாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், பலாச மண்டலம், காசிபுக்கு நகராட்சிக்கு உட்பட்டது அடவி கொத்தூர் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் இருப்பதாக பொதுமக்கள் காவல்துறையினருக்குத் தகவல்
தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து காசிபுக்கு காவல்நிலைய பெண் எஸ்ஐ சிரிஷா, சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை அங்குள்ள பொதுமக்கள் உதவியுடன் மீட்டு, இறுதிச் சடங்கு செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டார்.

ஆனால், சடலத்தை எடுப்பதற்கு பொதுமக்கள் முன்வரத் தயங்கினர்.எனவே, எஸ்ஐ சிரிஷா, உதவிக்கு வந்த சிலருடன் சேர்ந்து ஸ்ட்ரெச்சரில் வைத்து தனது தோளில் சுமந்தபடி இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து அந்த சடலத்தை ஊருக்கு வெளியே கொண்டு வந்தார்.

பின்னர் லலிதா தன்னார்வ அமைப்பின் மூலம் இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. இந்நிலையில், டிஜிபி கெளதம் சவாங் உள்பட காவல்துறை உயர் அதிகாரிகள் எஸ்ஐ சிரிஷாவின் சேவைக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். இதேபோல, சமூக வலைத்தளங்களிலும் சிரிஷாவிற்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

அன்னம் அரசு