ஹைவே!



இந்தியாவின் முக்கிய நெடுஞ்சாலைகளில் பைசா செலவில்லாமல் ஜாலியாக ஒரு டிரிப் அடித்து வர ஆசையா?
உடனே ஹாட்ஸ்டாரில் இலவசமாகக் கிடைக்கும் ‘ஹைவே’ என்ற இந்திப்படத்தைப் பாருங்கள்.கடத்தப்பட்ட இளம் பெண்ணுக்கும் கடத்தல்காரனுக்கும் இடையில் மலரும் அபூர்வ காதல்தான் படத்தின் ஒன்லைன். துடிப்பான இளம்பெண் வீரா. விடிந்தால் அவளுக்குத் திருமணம். அதற்கு முன் நள்ளிரவில் வருங்காலக் கணவர் வினய்யுடன் காரில் ஜாலியாக ஊர் சுத்த விரும்புகிறாள்.

வேண்டா வெறுப்புடன் வினய் சம்மதிக்க, குஷியாகிறாள் வீரா. பெட்ரோல் போட ஒரு ஹைவேயில் கார் நிற்க, திடீரென்று அங்கே வரும் ஒரு கும்பல் வீராவைக் கடத்திவிடுகிறது.

கடத்தப்பட்ட வீரா பெரும் தொழில் அதிபர் மற்றும் அரசியல் செல்வாக்கு மிகுந்த திரிபாதியின் மகள் என்று தெரிய வர, வீராவைக் கடத்திய இடத்திலேயே கொண்டுபோய் விட்டுவிடலாம் என்று கும்பலைச் சேர்ந்தவர்கள் நினைக்கிறார்கள். மகளைக் கடத்தியது யார் என்று தெரிந்தால் திரிபாதி அவர்களின் கதையை முடித்துவிடுவார் என்ற அச்சம்.

ஆனால், மகாபீர் மட்டும் பணம் கிடைக்காமல் வீராவைத் திருப்பி அனுப்பப் போவதில்லை என்பதில் உறுதியாக நிற்கிறான். வீராவிடம் இன்னும் கடுமையாக நடந்துகொள்கிறான். காவல்துறை வீராவைத் தேடும் வேட்டையில் இறங்க, வீராவுடன் ஒவ்வொரு நகரமாக டிரக் வண்டியில் பயணிக்கிறான்  மகாபீர். யாராலும் கண்டுபிடிக்க முடியாத இடங்களில் வீராவை மறைத்து வைக்கிறான்.

தில்லியிலிருந்து இமாச்சலப் பிரதேசம், காஷ்மீர் என இந்தியாவின் முக்கிய நெடுஞ்சாலைகளில் அவர்களின் பயணம் நீள்கிறது.
இந்தப் பயணத்தில் தன்னைக் கடத்திய மகாபீரின் மீது கோபம் கொள்ளாமல் காதல் வயப்படுகிறாள் வீரா. இந்தக் காதல் அவர்களை எதுவரை அழைத்துச் செல்கிறது என்பதுதான் க்ளைமேக்ஸ்.

வீராவுக்கு ஒன்பது வயதாக இருந்தபோது அவளது மாமாவால் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறாள். இது அவள் மனதை வெகுவாக பாதித்து வீட்டின் மீது ஒரு வெறுப்பை உண்டாக்குகிறது.

வீட்டில் கிடைக்காத சுதந்திரத்தையும் மகிழ்ச்சியையும் தன்னைக் கடத்திய மகாபீரிடம் கண்டடைகிறாள். இன்னொரு பக்கம் மகாபீர் குழந்தையாக இருந்தபோது அவனையும் அவன் அம்மாவையும் அவன் அப்பா கொடுமைப் படுத்தியிருக்கிறார். அதனால் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டான்.

மகாபீருக்கு வீட்டில் கிடைக்காத ஆதரவும் அன்பும் வீராவிடம் கிடைக்கிறது. இப்படி குழந்தைப்பருவத்தில் பாதிக்கப்பட்ட இருவருக்கும் இடையிலான காதல் காட்சிகள் தெய்வீகம். பின்னணியாக ஒலிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை அவர்களின் காதலையும் பயணத்தையும் இன்னும்
அழகாக்குகிறது.

மகாபீராக ரந்தீப் ஹூடாவும் வீராவாக அலியா பட்டும் நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள். என்றென்றும் மறக்க முடியாத ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் இம்தியாஸ் அலி.