தல! sixers story



டி20 யுகத்தின் காட்ஃபாதர்!

கிரிக்கெட்டைப் பொறுத்தவரை இந்திய அணி என்பது பழைய ஸ்கூட்டர் மாதிரி.லேட் பிக்கப்.1932ல் டெஸ்ட் கிரிக்கெட் ஆட ஆரம்பித்தது இந்திய அணி.இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய ஜாம்பவான் அணிகளோடு தொடர்ந்து ஆடியது.
தன்னுடைய முதல் டெஸ்ட் வெற்றியை இங்கிலாந்துக்கு எதிராக அது பெற்றது (நம்ம சென்னையில்தான்) 1952ல்.அதாவது முதல் வெற்றியை டெஸ்ட் கிரிக்கெட்டில் பதிவு செய்துகொள்வதற்கே இந்திய அணிக்கு இருபது ஆண்டுகள் தேவைப்பட்டது.போலவேதான் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும்.1974ல் முதன்முறையாக இங்கிலாந்துடன் மோதியது.

தன்னுடைய முதல் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் இங்கிலாந்தை எதிர்கொண்டு, மூன்று போட்டிகளிலுமே படுமோசமான தோல்வியைப் பெற்றது.
குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து 202 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வெற்றி கொண்டிருந்தது.
இந்தியா தன்னுடைய நான்காவது போட்டியில்தான் கிரிக்கெட்டுக்கு அவ்வளவாக அறிமுகமாகாத மொக்கை அணியான கிழக்கு ஆப்பிரிக்காவிடம் தன் முதல் வெற்றியை பதிவு செய்தது.

கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி 1983ல் உலகக்கோப்பை விளையாடச் செல்வதற்கு முன்பாக 9 ஆண்டுகளில் மொத்தம் 40 ஒருநாள் போட்டிகள் விளையாடி இருந்தன.அவற்றில் மொத்தம் 11 போட்டிகள் மட்டுமே வெற்றி. 29 போட்டிகளில் தோல்வி.வெற்றி பெற்ற பல போட்டிகளிலும் கூட மயிரிழையில்தான் போராடி வென்றது.அப்போதைய கத்துக்குட்டி அணியான இலங்கையுடன்தான் சொல்லிக் கொள்ளும் வகையில் மூன்று போட்டிகளில் பெரும் வெற்றி பெற்றிருந்தது.

எனவேதான் 1983ஆம் ஆண்டு உலகக்கோப்பை வெற்றிக்கு முன்பு வரை, ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு ரசிகர்களிடம் பெரிய ஆதரவு இல்லை.
லிமிட்டெட் ஓவர் ஒருநாள் கிரிக்கெட்டில் விக்கெட்டை தக்கவைப்பது முக்கியமல்ல.களத்தில் இருக்கும் நேரத்தில் குறைந்த பந்துகளில் அதிக ரன்களை சேகரிப்பதே வெற்றிக்கான வாய்ப்பு.

அதே நேரம் நமது அணியால் எவ்வளவு ரன்களை அதிகபட்சம் சேகரிக்க முடியுமோ, அந்த ரன்களைவிட 30, 40 ரன்கள் குறைவாக எதிரணியை வீழ்த்தக்கூடிய பவுலிங் வியூகமும் இருக்க வேண்டும்.இந்த இரு விஷயங்களையும் மனதில் கொண்டு கபில்தேவ் தீட்டிய திட்டங்களின் பலன்தான் எவருமே எதிர்பாராத வகையில் இந்தியாவுக்கு கிடைத்த உலகக்கோப்பை.

1983 வெற்றிக்குப் பிறகு இந்தியாவில் மட்டுமல்ல, உலகமெங்கும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கு மவுசு கூடியது.மக்கள் தொகை அடிப்படையில் உலகின் இரண்டாம் பெரிய நாடான இந்தியாவில் ஏற்பட்ட கிரிக்கெட் காய்ச்சல், கொரோனா கணக்காக நான்குகால் பாய்ச்சலில் பரவியது.

அப்போது இந்தியாவில் டிவிக்கும் மவுசு கூடிக் கொண்டிருந்தது.டிவியில் கிரிக்கெட் பார்க்கவும், ரேடியோவில் ஸ்கோர் கேட்கவும் பெரும் கூட்டம் காத்திருந்தது.

விளம்பரதாரர்கள் இச்சூழலைப் பயன்படுத்தி தங்கள் தயாரிப்புகளை கிரிக்கெட் நட்சத்திரங்களை வைத்து விளம்பரப்படுத்தி வணிகத்தைப் பெருக்கிக் கொண்டார்கள்.அவ்வகையில் இந்தியாவில் கிரிக்கெட்டுடன், நாட்டின் பொருளாதாரமே இணைக்கப்பட்டு விட்டது.கிரிக்கெட் என்பது இங்கே வெறும் விளையாட்டல்ல.மதம்.83ல் கபில்தேவ் ஒருநாள் கிரிக்கெட்டில் செய்த அந்த அரிய சாதனையை, 24 ஆண்டுகள் கழித்து 2007ல் 20 ஓவர் டி20 கிரிக்கெட்டில் செய்தவர், ‘தல’ தோனி என்பதுதான் அவரது முக்கியத்துவமே.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் வெற்றிகரமான அணியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள பல்லாண்டுகள் இந்தியாவுக்கு தேவைப்பட்டது.
ஆனால், டி20-ஐப் பொறுத்தவரை எடுத்தவுடனேயே உலக சாம்பியன்தான்.இத்தனைக்கும் அப்போதைய இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் அணியில் இடம்பெறவில்லை.

பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் பெரும்பாலானவர்கள் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அவ்வளவாக அறிமுகமில்லாதவர்கள்.

அதற்கு ஆறு மாதங்களுக்கு முன்புதான் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பைத் தொடரில் மிகக்கேவலமான வகையில் வெளியேறியிருந்தது இந்திய அணி.
எல்லாவற்றையும் விட கேப்டன் தோனிக்கும் பெரிய அனுபவமில்லை.

பேட்ஸ்மேனாக, விக்கெட் கீப்பராக அவர் சற்று பெயர் பெற்றிருந்தாலும் கேப்டனாக என்னத்தைக் கிழிப்பார் என்கிற அலட்சியமே பெரும்பாலான ரசிகர்களுக்கு இருந்தது.பொய் சொல்லி ஆபீசுக்கு லீவு போட்டுவிட்டு, காய்ச்சல் என்று ஸ்கூலுக்கு கட் அடித்துவிட்டு டிவி பெட்டி முன்பாக தவம் கிடந்த தலைமுறைக்கு அப்போது சற்றே கிரிக்கெட் சலித்து விட்டிருந்தது.

அடுத்து வந்த தலைமுறையோ போனில் அவ்வப்போது கிரிக்கெட் ஸ்கோர் பார்த்தால் போதும் என்கிற அளவுக்கு கிரிக்கெட் மேல் பெரிய பிடிப்பு கொள்ளாமல் இருந்தது.எனவேதான் 2007ல் தோனி தலைமையிலான அணி பெற்ற டி20 உலகக்கோப்பை வெற்றியை, இன்னுமொரு வெற்றிக் கோப்பையாக மட்டுமே நம்மால் கருத முடியவில்லை.

அதுவொரு Game Changer.மீண்டும் கிரிக்கெட்டை மதமாக இங்கே ஸ்தாபித்த பெருமை தல தோனியையும் அவரது தலைமையில் ஆடிய துடிப்பான இளம் வீரர்களையுமே சாரும்.டி20 ஃபீவரின் விளைவே ஐபிஎல் என்று கடந்துபோன அத்தியாயங்களில் நாம் கோடிட்டுக் காட்டியிருந்தோம்.

கிரிக்கெட் என்பது மெட்ரோ நகரங்களுக்கு உரியது என்கிற மாயையை முற்றிலுமாக உடைத்தெறிந்தது டி20.கிரிக்கெட்டுக்கு எல்லையே இல்லை என்னுமளவுக்கு குக்கிராமங்களும் கூட ஆர்வத்தோடு மீண்டும் டிவி பெட்டி முன்பாக தவம் கிடக்கக் காரணமானது டி20.

2007 டி20 உலகக் கோப்பையில் முக்கியமான போட்டி ஒன்றில் ஸ்ரீசாந்த் ஷார்ட் ஃபைன் லெக் திசையில் பிடித்த கேட்ச், கவுதம் காம்பீர் பெற்ற அபாரமான மேன் ஆஃப் த மேட்ச், யுவராஜ்சிங்கின் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர், பாகிஸ்தானுக்கு எதிரான திரில்லிங்கான பவுல்டு அவுட், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தினேஷ் கார்த்திக்கின் சூப்பர் கேட்ச், ஆர்.பி.சிங் மற்றும் இர்ஃபான் பதானின் துல்லியமான பவுலிங்…

- என்று நாம் என்றென்றைக்கும் சிலிர்த்துக்கொள்ள ஏராளமான பசுமையான நினைவுகள் உண்டு.

இதையெல்லாம் தாண்டிய விஷயம் எம்.எஸ்.தோனி.கிரிக்கெட் அணியின் தலைமைப் பண்புகளுக்கு அவர் வகுத்த புதிய இலக்கணங்கள், அவ்விளையாட்டின் எதிர்காலத்தையே தாக்கப்படுத்தி இருக்கின்றன.சந்தேகமே இல்லை.டி20 யுகத்தின் காட்ஃபாதர் என்று அவரை நாம் உறுதியாகவே அழைக்கலாம்.

(அடித்து ஆடுவோம்)

- யுவகிருஷ்ணா

ஓவியம்: அரஸ்