ஜூனியர் நதியா(கள்)!



ஹோம்லி நடிகையாக கோலோச்சி, தன் பெயரிலேயே ஃபேஷன் அயிட்டங்கள் அறிமுகமாகக் காரணமாக இருந்தவர் நதியா!

அப்படிப்பட்டவரின் இரு மகள்களும் இப்போது என்ன செய்கிறார்கள்..? ‘பூவே பூச்சூடவா’ மூலம் தமிழுக்கு அறிமுகமான நதியா, மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போது திருமணம் செய்து கொண்டு ‘நடிப்புக்கு குட் பை’ சொல்லிவிட்டு போனார். அதன்பிறகு ‘எம்.குமரன் s/o மகாலட்சுமி’யில்தான் தனது செகண்ட் இன்னிங்ஸை தொடங்கினார். மும்பையில் வசித்துவரும் நதியா, இப்போது தேர்ந்தெடுத்து சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.    

நதியா ஏன் மும்பையில் வசிக்கிறார்?
அவரது கணவர் யார்? மகள்கள் என்ன செய்கிறார்கள்?

‘‘எங்க பூர்வீகம் கேரளானாலும் அப்பாவுக்கு மும்பையில் வேலை கிடைச்சதால, அங்க போயிட்டாங்க. நான் பிறந்து வளர்ந்தது மும்பைலதான். நான் காலேஜ் படிக்கும் போது 17 வயசிருக்கும். அப்ப புதுசா ஒரு அபார்ட்மென்ட்டுக்கு குடிபோனோம். அங்கதான், என் லைஃப் பார்ட்னர் கிரிஸ் காட்போலை சந்திச்சேன்.

அவருக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்ததும் திருமணம் பண்ணிக்கலாம்னு இருந்தோம். ஆனா, என் ஃபேமிலி நண்பர் பாசில் சார், என்னை நடிக்க அழைச்சிட்டு வந்துட்டார். மலையாளத்தில்தான் அறிமுகமானேன். அப்புறம் தமிழ்லயும் பாசில் சாரே அறிமுகப்படுத்தினார்.

அதன் பிறகு சில வருஷங்களில் கிரிஸை கல்யாணம் பண்ணிக்கிட்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிட்டேன். எங்களுக்கு சனம், ஜானானு ரெண்டு மகள்கள். கணவர் கிரிஷ் இன்ஸ்வெஸ்ட்மென்ட் பேங்கர். கிட்டத்தட்ட 12 வருஷங்கள் அமெரிக்காவில்தான் இருந்தோம். அதன்பிறகு லண்டன்ல சில வருஷங்கள். என் மகள்கள் வெளிநாடுகளில்தான் படித்தார்கள். லண்டன்ல இருந்து மும்பை வந்தோம். அங்கேயே செட்டில் ஆகிட்டோம்...’’ புன்னகைக்கிறார் நதியா.

சனமும், ஜானாவும் மும்பை கல்லூரியில் படிக்கிறார்கள். திரைப்படங்களில் நடிப்பார்களா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.அதுசரி... இந்த போட்டோவில் நதியா யார் என்று கண்டுபிடிக்க முடிகிறதா?!

மை.பாரதிராஜா