கொரோனாவை வீழ்த்த நோய் எதிர்ப்பு சக்தியை எப்படி அதிகரிக்கலாம்..?



டிப்ஸ் தருகிறார் டாக்டர் எழிலன்

உலகையே சுக்கு நூறாக கலைத்துப் போட்டுள்ளது கொரோனா வைரஸ். இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. முறையான சிகிச்சையில்லை.
நோயாளிகளைக் காப்பாற்ற இரவு பகலாக மருத்துவர்கள் போராடி வருகின்றனர். அவர்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை நோய் எதிர்ப்புசக்தி மட்டுமே. மனிதனின் வெள்ளை அணுக்களை நம்பியே அனைத்து சிகிச்சை முறைகளும் சுழன்று வருகிறது. இதுவரை குணமாகி வீடு திரும்பியவர்கள் எல்லோரும் தங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை ஆயுதமாக்கி கொரோனாவை வென்றிருக்கிறார்கள்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்க மருத்துவர்கள் மேற்கொள்ளும் முயற்சியை விளக்குகிறார் மருத்துவர் எழிலன்:

‘‘சார்ஸ் வைரஸின் ஒரு பிரிவான கோவிட் - 19 மருத்துவர்களுக்குப் பெரும் சவாலாக இருக்கிறது. நம் அனைவருக்குள்ளும் இரண்டு வகையான நோய் எதிர்ப்புசக்திகள் உள்ளன. முதலாவது பல காலமாக பரிணாம வளர்ச்சியில் உருவான இமியூனிட்டி பவர். அடுத்து உணவின் மூலம் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி. வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்று ஏற்படும் போது நம் உடலில் உள்ள வெள்ளை அணுக்கள் அதை எதிர்த்துப் போராட புதிய ஆன்டி வைரஸ் செல்களை உருவாக்கும். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.

நோயாளியின் உடலில் இதை உருவாக்கத்தான் மருத்துவர்கள் போராடி வருகிறார்கள். அத்துடன் ஹெப்படைட்டிஸ் பி, மலேரியா போன்ற நோய்களுக்கு தரக்கூடிய மருந்துகளை தந்து நோய்த்தொற்றின் வீரியத்தை குறைத்து சிகிச்சை தருகிறோம்...’’ என்று ஆரம்பித்தார் எழிலன்.
‘‘கேரளாவில் கன்வேலேசன்ட் முறையில் கொரோனா தொற்று தாக்கியவர்களுக்கு சிகிச்சை அளித்திருப்பது நல்ல பலனைத் தந்திருக்கிறது. இதற்கு இந்திய மருத்துவ ஆய்வுக் கழகமும் ஒப்புதல் வழங்கியுள்ளது. இப்போது தமிழ் நாட்டிலும் இந்த பிளாஸ்மா சிகிச்சையைத் தொடங்கி
யுள்ளனர்.

அடிப்படையில் இரண்டு காரணங்களுக்காகத்தான் இந்த பிளாஸ்மா சிகிச்சை முறையைப் பற்றிய யோசனையே வந்தது. கோவிட் - 19 சிகிச்சைக்கு குறிப்பான ஆன்டி வைரல் ஏஜென்டுகள் இல்லை என்பது ஒரு காரணம். மருத்துவ உலகம் இன்னமும் உறுதியான சிகிச்சை வழிமுறைகளை வகுக்கவில்லை என்பது இன்னொரு காரணம்.

அதனால்தான் இந்த பிளாஸ்மா சிகிச்சையை செய்கிறோம். இதுவும் நூற்றாண்டுப் பழமையான ஒரு சிகிச்சை முறைதான்.
சார்ஸ், மெர்ஸ், எச்1என்1 போன்ற தொற்றுநோய்களில் இருந்து மீண்டவர்களின் உடலில் எந்த அளவுக்கு எதிரணுக்கள் உள்ளன என்பதைக் கண்டறிய எலிசா சோதனை செய்யப்படும். இதற்குப் பிறகுதான் பிளாஸ்மா சிகிச்சை முறையைப் பயன்படுத்த இந்திய மருத்துவ ஆய்வுக்கழகம் அனுமதி அளித்துள்ளது.

இதன்படி கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் உடலில் அந்த தொற்றினை போராடி அழிக்கும் வெள்ளை எதிரணுக்கள் இருக்கும். அவற்றின் மூலம் நோய் தொற்றுயுடையவர்களின் உடலைப் பாதுகாப்பதுதான் இந்த சிகிச்சையின் அடிப்படை. அதாவது கொரோனா நோயிலிருந்து குணமடைந்தவர்கள் உடலிலிருந்து எடுக்கப்படும் இந்த பிளாஸ்மா, நோயால் பாதிக்கப்பட்டுள்ளவரின் உடலில் செலுத்தப்படும். அப்போது அந்த பிளாஸ்மா அவர்கள் உடலில் உள்ள கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடி அழிக்க உதவும்.

முழுதாக குணமடைந்த கோவிட் - 19 நோயாளி உடலில் இருந்து ஆஃபெரசிஸ் முறைப்படி ரத்தம் எடுக்கப்படும். இந்த முறையில் பிரித்தெடுக்கப்பட்டு மீதமுள்ள ரத்தம் கொடையாளிக்கே திரும்பச் செலுத்தப்பட்டுவிடும். பிளாஸ்மாவில் மட்டுமே வெள்ளை எதிரணுக்கள் இருக்கும். ஒரு கொடையாளி உடலிலிருந்து பெறப்பட்ட ரத்தத்திலிருந்து 800 மிலி வெள்ளை அணுக்கள் பிரித்தெடுக்கப்படும்.

ஒரு கோவிட் - 19 நோயாளிக்கு 200 மிலி-தான் செலுத்தப்படும். ஒரு குணமடைந்த நோயாளி உடலில் இருந்து எடுக்கப்படும் பிளாஸ்மாவை நான்கு நோயாளிகளுக்குச் செலுத்த முடியும்...” என்ற எழிலன் நோய் எதிர்ப்புச்சக்தி குறித்து விவரித்தார்.‘‘உடலில் புரதச்சத்து குறையும்போது நோய் எதிர்ப்பு சக்தியும் குறையும். இதனால் வயதானவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். அனைத்து வயதினரும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள புரதச்சத்து அதிகமுள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

வைட்டமின் ஏ, சி, ஈ, பீட்டா கரோட்டீன் புரதம் ஆகியவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியவை. அதனால் இந்தச் சத்துகள் உள்ள உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். பிறந்த குழந்தைகளுக்கு முதல் 6 மாதங்களுக்குத் தவிர்க்காமல் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதிகபட்சமாக 2 வருடங்கள் வரை கொடுக்கலாம். அதனால்தான் குழந்தைகளை இந்த நோய்
அதிகம் தாக்கவில்லை.

சிறு நீரகக் கோளாறு. புற்றுநோய் போன்ற உள் உறுப்பு பிரச்னை உள்ளவர்களுக்கு சுவாசக் குழாய் பொருத்தி ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்தி சிகிச்சை தருகிறோம். மக்கள் அனைவரையும் லாக்டவுனில் வைப்பதற்கு பதில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள மக்களை தனிமைப்படுத்தி வைக்கலாம். மேலும் புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தந்து நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டலாம்...’’ என்று முடித்தார் மருத்துவர் எழிலன்.

இதை தினமும் சாப்பிடுங்க...

வைட்டமின் ஏ (பீட்டா - கரோட்டீன்), வைட்டமின் சி மற்றும் வைட்டமின் இ ஆகியவை உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரித்து, உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் காரணிகளை அழிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கின்றன.

கேரட், பச்சைக் காய்கறிகள், தக்காளி, செர்ரி, நெல்லிக்காய், சிட்ரஸ் மற்றும் கொய்யாப் பழத்தில் இந்தச் சத்துக்கள் அதிகளவில் உள்ளன. உடலின் ஆரோக்கியம் மற்றும் பலத்தை அதிகரிக்க தினமும் ஐந்து பாதாம் பருப்புகளை சாப்பிட்டு வரலாம்.

துத்தநாகம்

துத்தநாக பற்றாக்குறை உடலின் நோய் எதிர்ப்புதன்மையை பாதிக்கிறது. கடும் பற்றாக்குறை ஏற்பட்டால் நோய் எதிர்ப்பு தன்மை முற்றிலுமாக செயல் இழந்து போக வாய்ப்புள்ளது. எனவே உடலில் துத்தநாக பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பீன்ஸ், சிப்பி வகை மீன்கள், பருப்புகள், தயிர் மற்றும் பால் ஆகியவற்றில் அதிகளவில் துத்தநாகம் இருக்கிறது.

ப்ரோபயாட்டிக்

தயிர் மற்றும் பால் சார்ந்த சில பொருட்களில் இருக்கின்ற நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்கு ‘ப்ரோபயாட்டிக்’ என்று பெயர்.
இவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. குடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்சைமான இம்யுனோகுளோபின் அதிகளவு சுரக்க ப்ரோபயாட்டிக் உதவுகிறது. இவை நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, தொற்றை எதிர்த்து போராட உதவுகிறது.

எலுமிச்சை சாறு

எலுமிச்சைசாறு உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது. இவை அமிலத்தன்மை வாய்ந்த சூழ்நிலையில் வேகமாக வளர்ச்சியடையும். உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ், பாக்டீரியாவை ஊக்குவிக்காமல், உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்கு சாதகமான வெப்ப நிலையை பராமரிக்கவும் எலுமிச்சை சாறு உதவுகிறது. எலுமிச்சை பழச்சாறை தண்ணீர், சூப்கள், கிரேவிக்கள் அல்லது சாலட்களில் கலந்து சாப்பிடலாம்.

திலீபன் புகழ்