பிள்ளை பிடிப்பவள்



மாடத்திக்கு, தான் சின்னப் பிள்ளையா இருக்கப்ப இருந்தே குழந்தைங்கன்னா ரொம்பப் புடிக்கும். எந்நேரமும் ஏதாவது ஒரு பிள்ளையை இடுப்புல இடுக்கிக்கிட்டே அலைவா. தம்பி தங்கச்சின்னாலும்சரி... சொந்தக்காரப் புள்ளைங்கன்னாலும் சரி... அப்படிப் பார்த்துக்கிடுவா... கூச்சப்படாம குழந்தையோட மூக்கை சிந்துறது என்ன… ஆய் இருந்தா கால் கழுவுறது என்ன… பெத்தவ கூட சமயத்தில அக்யானியப்படுவா.இவ கூச்சமே பட மாட்டா.

அதையெல்லாம் பாத்துட்டு எல்லாரும் அப்படித்தான் ஆச்சரியப்படுவாங்க. அவளைப் பார்த்தாலே ‘பிள்ளை பிடிக்கிறவ வந்துட்டா பாரு’ அப்படின்னு செல்லமாவும் விளையாட்டாவும் சொல்லுவாங்க. இருந்தாக்கூட அவகிட்ட பிள்ளையைத் தள்ளி விட்டுட்டு அவங்கவங்க வேலையை நிம்மதியாப் பாப்பாங்க.

அப்படி பிள்ளை ஆசை இருந்ததனாலதானோ என்னமோ, ‘ஏட்டி, மாமன் மகன், உன் முறை மாப்பிள்ளை, பொண்டாட்டியைப் பறி கொடுத்துட்டு, ரெண்டு பிள்ளைகளை வச்சிக்கிட்டு முழிச்சுகிட்டு இருக்கான்... அவனை ரெண்டாந்தாரமா கட்டிக்கிடுதியா?’ அப்படின்னு அவளோட ஆச்சி கேட்ட உடனே மண்டைய ஆட்டிட்டா... வேற என்ன செய்ய முடியும்? வீடு இருந்த நிலைமைக்கு அப்பன், ஆத்தா, நாலு பிள்ளைக கஞ்சி குடிக்கிறதே பெருசு... இதில் ரெண்டாந்தாரம் வேண்டாம், மூணாந்தாரம் வேண்டாம்னு சொல்ல முடியுமா?

மாமன் மகன் குடிகாரன்னும், அவன் இம்சை தாங்காமத்தான் மொதத் தாரத்துக்காரி போய்ச் சேர்ந்தான்னும் தெரிய முன்னாலேயே அவ பங்குக்கு இரண்டு பிள்ளைங்க பொறந்திருச்சு. அம்மா வீட்டுல ஆறு வயித்துக்குக் கஞ்சி வேணுமேன்னு யோசிச்சதுக்கு, இங்கே மாமியாக்காரியையும் சேர்த்து கணக்குக்கு ஏழு வயிறாகிப் போச்சு. ஊரைச் சுத்தி கடன் வேற... அக்கம் பக்கம் வீட்டு வேலைக்குப் போனாள் மாடத்தி.

அதுல ஒரு பாட்டி, இவ ஆசையா அவங்க பேத்தியை கொஞ்சுறதப் பார்த்துட்டு, ‘என் மகளுக்கு ஒத்தாசையா மெட்ராஸ்ல போயி ஆறு மாசம் இருக்கியா? அவ பிள்ளையப் பார்த்துக்கிட்டாப் போதும். வீட்டு வேலை கூடச் செய்ய வேண்டாம். மாசம் பத்தாயிரம் தர்றேன்’ அப்படின்னுச்சு.
‘என் பிள்ளைக நாலு வயசும் ஆறு வயசுமா இருக்குகம்மா. ரொம்பத் தொலைவு போக முடியாது. நான் இங்கனக்குள்ளேயே பாக்கிறேன்’ அப்படின்னுட்டு வந்துட்டா.

அந்தப் பாட்டி விடாம இவ மாமியாக்காரி கிட்டயே வந்து கேட்டுருச்சு. மாமியாக்காரி, ‘மாசம் பத்தாயிரம்னா ஆறு மாசத்துக்கு அறுவதாயிரம் ஆச்சே! மூணு பேரு கடனை பைசல் பண்ணிடுவேனே! ஆறு மாசம்தானே... பிள்ளைகள நான் பாத்துக்கிடுதேன். நீ போய்ட்டு வா’ அப்படின்னுச்சு.  
இவளும் அழுது பார்த்தா, அடம் புடிச்சுப் பாத்தா. முடியல. மாமியாக்காரி சும்மா இருக்காம அந்தப் பாட்டிக்கிட்ட போய் இருவதாயிரத்த அட்வான்ஸா வாங்கிட்டே வந்துட்டா...

அப்படித்தான் அன்னைக்கு அவ காலைச் சுத்திக்கிட்டே கிடந்த  நாலு பிள்ளைகளையும் திரும்பித் திரும்பி பார்த்துக்கிட்டே கெளம்புனா மாடத்தி.
அன்னைக்குக் கெளம்புனதுதான். அதுக்குப் பெறகு அதுவே பழக்கமாயிடுச்சு. ஆறு மாசம்னது பத்து மாசம், பதினோரு மாசம் ஆயிப் போச்சு.
சென்னையில, அந்தப் பாட்டியோட பேரப்பிள்ளை பள்ளிக்கூடம் போக ஆரம்பிக்கவும்தான் ஊருக்கு வந்தா. ஒரு ரெண்டு மாசம் இருந்துருப்பா... ‘இந்த மாதிரி, இன்னொரு வீட்ல கேட்காக... போயேன்…’ அப்படின்னு இழுத்தா மாமியா.

முடியவே முடியாதுன்னு சாதிச்சுட்டா மாடத்தி. ஏற்கனவே அவ பெத்த பிள்ளைக நறுங்கிப் போயிருந்துச்சுக. அதுகள அப்பத்தான் தேத்த ஆரம்பிச்சிருந்தா.போக மாட்டேன்னு முரண்டு புடிச்சுப் பாத்த ஒரு வாரம் பத்து நாளுக்குள்ளேயே அவ புருஷனுக்கு உடம்புக்கு வந்துருச்சு. குடல்ல ஓட்டையாம்… கொஞ்ச நஞ்சம் சேர்த்து வச்சதும் போச்சு. செலவுக்கும் காசு இல்ல.

மனசக் கல்லாக்கிட்டு திரும்பவும் வெளியூரில் பிள்ள வளக்க போகலாம்னு முடிவு பண்ணிட்டா… வேலைன்னு கேட்டா உடனே கிடைக்குமா? இவளாகவே நாலு இடத்துல விசாரிச்சுக்கிட்டு இருக்கும்போது, இந்த மாதிரி ஒரு ஏஜென்சி இருக்கு, அதுல இப்படி இப்படி வீட்டு வேலைக்கு ஆள் அனுப்புறாங்க... அப்படின்னு கேள்விப்பட்டு அங்கே போய்க் கேட்டா.

ஏஜென்சிக்காரங்க ரொம்ப தன்மையாத்தான் பேசுனாங்க. சின்ன ஃபோனெல்லாம் கூட வாங்கித் தந்தாங்க… ஒரு வீட்டுல வேலைக்குன்னு மதுரைக்கு அனுப்புனாங்க. அங்கன வீடு பழகி, மக்க மனுசாள தெரிஞ்சு அப்பத்தான் செட் ஆயிருக்கு... மதுரையிலிருந்து கிளம்பி வரச் சொல்லி, சொன்னாங்க. அதுவும் எப்படி? பொய் சொல்லி, புருஷனுக்கு சொகம் இல்ல... நாலு நாள் லீவு கொடுங்கன்னு கேட்டுட்டு வா அப்படின்னாங்க...
‘ஐயையோ என் புருஷனுக்கு என்னாச்சு?’ அப்படின்னு மாடத்தி பதறவும், ‘அதெல்லாம் அவருக்கு ஒன்னும் இல்ல... முதல்ல நீ இங்க வா, அப்புறம் விளக்கம் சொல்லறோம்’ அப்படின்னாங்க...

‘உண்மைய சொல்லிட்டே வாரேனே… இவுக கிட்ட போய் பொய் சொல்லவா? நல்ல மனுசங்க’ அப்படின்னுதான் கேட்டா மாடத்தி.
‘அதெல்லாம் சொல்லிக்கிடலாம்… அவங்களுக்கும் பக்கத்திலருந்து ஒரு ஆளப் பார்த்தாச்சு. உனக்கும் கூட சீக்கிரமே உங்க ஊருக்குப் பக்கத்திலேயே வேலை வருது. அதுக்கு உன்னை அனுப்பறோம். உன் புள்ளக் குட்டி கூட இருந்த மாதிரி இருக்கும்’னாங்க.

சரிதான்னுட்டு கிளம்புனா... சொந்த ஊரும் இல்லாம, மதுரையும் இல்லாம மூணு பஸ் மாறிப் போற கரூருக்கு அனுப்பி வச்சுட்டாங்க.
வேறென்ன செய்ய? எப்பயும் ஏதாவது ஒரு செலவுக்குன்னு ஏஜன்சிக்காரங்கள்ட்ட அட்வான்ஸ் வாங்கியே காலம் கழியுது. அதுவும் இவ வெளியூர்ல இருக்கையில இவ புருசனோ மாமியாரோ போய் வாங்கிருவாக… என்னவோ எழுதி வேற வாங்கிருக்காங்க. அப்ப அவுக அனுப்புற எடத்துக்குப் போய்த்தானே ஆகணும்?

இப்படியே மாசத்துக்கு ஒரு ஊருங்குற மாதிரி ஆயிப்போச்சு. நடக்க முடியாம கிடையில் விழுந்தவங்களுக்கு பக்குவம் பாக்குறதுன்னு வெவ்வேற மாதிரி  சோலிக்கும் போகணும்.எல்லா வீட்லயும் மனுசங்க நல்லவங்கதான். ஒருசிலர் அப்படி இப்படி இருப்பாங்கல்ல... எல்லா வெரலும் ஒண்ணு போலயா இருக்கு? போன தடவை வேலை பாத்த வீட்டுல தனி தட்டு, டம்ளர் எல்லாம் கொடுத்தாங்களாம்... அட அத விடுங்க... அவ துணியக் காய போடக் கூட தனியா கொடி கட்டிக்கிடச் சொன்னாங்கன்னா பாத்துக்கோங்களேன்.

அந்த வீட்டுப் பிள்ளை கிட்ட என்ன சொன்னாகளோ, ‘டர்ட்டி ஆன்ட்டி’ அப்படின்னு சொல்லுமாம். அவ கொடுக்குற சாப்பாடு எல்லாம் வாங்கிக்கிடுமாம். ஆனா, இவளத் தொட்டுக் கொஞ்ச மட்டும் விடாதாம். மாடத்திக்கு புள்ளையக் கொஞ்சறதுதானே ஆதியில இருந்தே பிடிக்கும்..?
ஆனா, இப்ப இருந்த வீட்டுல உள்ளவங்க அப்படி இல்ல… தங்களுக்கு சமதையாக வெச்சிக்கிட்டாங்க. அந்தப் புள்ளையும் நல்லா ஒட்டிக்கிச்சு. நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்துச்சு.

மாடத்திக்கு கொஞ்சம் பழைய சினிமாப்பாட்டுக பாடறதுக்கு நல்லா வரும். அதுலயும் தாலாட்டுப் பாட்டுக. அதைப் பாத்துட்டு அந்த வீட்டுல இருந்தவங்க இவ ஃபோன்ல அப்படிச் சினிமாப்பாட்டெல்லாம் பதிஞ்சு கொடுத்தாங்க. அதைப் போட்டு விட்டுத் தானும் கூடவே மெதுவா பாடிப் பிள்ளையத் தூங்க வச்சிருவா.

என்ன ஆச்சோ தெரியல... ரெண்டு நாளா ஏஜென்சிக் காரங்களுக்கும் இவங்களுக்கும் பயங்கர சண்டை. போன்லேயே காச்சு மூச்சுன்னு இங்கிலீசுல கத்துனாங்க. பிறகு மாடத்திகிட்ட, ‘நீங்க இன்னைக்கு கிளம்புங்க. பஸ் ஏத்திவிடுதோம். உங்க ஏஜென்சி காண்ட்ராக்ட்டே வேண்டாம்’னு சொல்லிட்டாங்க. மாடத்திக்கு கண்ணீரே வந்துடுச்சு.

தன் பிள்ளைகளையும் விட்டுப் போட்டு வந்து, ஒவ்வொரு எடத்துலயும் கொஞ்சம் பிடிப்பு வரும்போது இப்படி பச்ச பிள்ளைக கிட்ட இருந்து பிரிச்சா எப்புடி? தாரை தாரையா கண்ணீர் விட்டு அழுதா. இவ அழுவுறதப் பார்த்துட்டு இவ வளத்துக்கிட்டு இருந்த பையன், தான் கடிச்ச ஒரு பிஸ்கட்டத் தந்தான். ரெண்டு வயசுதான் இருக்கும்… எம்புட்டு அறிவு பார்த்தீகளா? எம்புட்டுப் பாசம் பார்த்தீகளா? கண்ணீரோட பையன முத்தம் கொஞ்சிட்டு, பைக்குள்ள துணிமணிகளை அடுக்க ஆரம்பிச்சா..

இந்தா இப்ப பஸ்ல ஏத்தி விட்டுட்டாக... கைச்செலவுக்கு எரநூறு ரூவா தந்திருக்காக. பஸ்ஸும் நல்ல பஸ்ஸாத்தான் இருக்கு… பழைய பாட்டு எல்லாம் போடுதாக... அப்படியே வண்டி ஆட்டம் போடறது ஒரு பக்கம், அப்போது அழுதது ஒரு பக்கம்னு மாடத்திக்கு தூக்கம் சொக்குச்சு…
சுருக்குன்னு வயித்தில ஒரு வலி. வயித்தோட வச்சிருந்த பையைத் தூக்கி என்னன்னு பார்த்தா… எறும்பு. பையிலிருந்து தான் வந்துருக்கு. பையத் தட்டிப் பாத்தா…  நமத்துப் போன பிஸ்கட்டு. குட்டித் தம்பி காலையில தந்தது, கை மறதியா பைக்குள்ள போட்டது இப்ப எறும்பு அரிச்சுப் போய் கெடக்கு. ‘ப்பூ ப்பூ’னு எறும்புகள ஊதி விட்டுட்டு பிஸ்கட்ட வாயில போட்டுக்கிட்டா மாடத்தி.

பிஸ்கட்டு வாசம்  வாயில பட்ட உடனேயே ஏன்னு புரியலை அந்தப் புள்ள நெனப்பு வந்துருச்சு… பஸ்ஸுல பாட்டை நிறுத்தியிருந்தாங்க. இவ ஃபோன்ல உள்ள பாட்டைப் போட்டா.அந்தப் பயலுக்குப் புடிச்ச பாட்டுகன்னா இவளுக்கும் அப்ப இருந்தே புடிக்கும். அதையெல்லாம் பதியச் சொன்னது மாடத்திதான். பாட்டு ஓட ஆரம்பிச்சதும் பையன் ஞாவகம் திரும்பவும் வந்துட்டு... பாட்டு ஒரு பக்கம் ஓடுது. நெனப்பு ஒரு பக்கம் ஓடுது…
பாதி ஓடினப்பெறவுதான்  கவனிக்கவே ஆரம்பிச்சா...‘வற்றாத அன்பு என்னும் அமுதையே  யார் வழங்கினாலும் மயங்கும் செல்வம் குழந்தையே…’ அப்புடின்னு பாட்டு அது பாட்டுக்கு ஓடுது.

மாடத்திக்கு நின்ன கண்ணீரு திரும்பப் பொங்குது. பக்கத்திலிருந்த பொம்பளை யாரோ சொன்னா, “அப்ப உள்ள பாட்டுக மாதிரி இப்ப வருதா தாயீ...”
வாஸ்தவந்தானே, பழைய பாட்டுக, பழைய வாழ்க்கை, பழைய மனுசங்க போல இன்னுமயும் வருமா… ஏஜென்சிக்காரன் எங்கே எந்த திக்குல எப்படி  சனங்கள்ட்ட அனுப்பப் போறானோ… நெனைக்கும்போதே பாட்டு நின்னு ஃபோனு அடிக்க ஆரம்பிச்சுருச்சு....

வேற யாரு பண்ணுவா, ஏஜென்சிக்காரங்கதான்… அவங்க பேச்சை ஆரம்பிக்கறதுக்கு முன்னயே மாடத்தி சொல்லுதா, ‘‘எங்கேன்னாலும் போறேன், புள்ளைங்களைப் பாத்துக்கற சோலி மட்டும் குடுங்கய்யா...” என்று அழுத குரலோடு சொன்னா. ஆமா, பழைய காலத்தில இந்த மூளை கெட்டவளுக்குப் பேரே ‘புள்ளை பிடிக்கிறவ’தானே!  

ஆக்டிங் + டப்பிங்!

ஜிம்மில் தவம் இருப்பதை விட்டுவிட்டு யோகா பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார் நந்திதா ஸ்வேதா. ‘‘யோகா ரியலி ஆசம். இதை மொதல்ல ஸ்டார்ட் பண்ணும்போது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அப்புறம் ஒரு சவாலா எடுத்து பண்ண ஆரம்பிச்சிட்டேன்...’’ என மகிழும் பேபி, தமிழில் மூன்று படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். ‘தபாங் 3’ கன்னடத்தில் வெளியான போது சோனாக்‌ஷிக்கு குரல் கொடுத்தது நந்திதாதானாம்.

ஹீரோயின்ஸ் மனதில் ஐஸ்!

சக ஹீரோயின்களின் படங்கள் ரிலீஸ் ஆனால், இமேஜ் பார்க்காமல் அவர்களை வாழ்த்தி மகிழ்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்த ஜில் பேபியின் அப்ரோச்சில் சக ஹீரோயின்களின் குட்புக்கில் ஐஸ் ஆஜர் ஆகியிருக்கிறார். அந்த வகையில் லேட்டஸ்ட் ஆக ஸ்ருதி ஹாசன் மனதில் இடம்பிடித்திருக்கிறார்!

வரேன்... வரேன்!

நெகிழ்ந்து பூரிக்கிறார் பூஜா ஹெக்டே. ‘முகமூடி’ ஹீரோயின். டோலிவுட்டிலும், பாலிவுட்டிலும் செம மாடர்னாக கலக்கும் பூஜாவிடம் தமிழ் ரசிகர்கள் பலரும், ‘நீங்க கோலிவுட் வாங்க’ என நச்சரிக்கிறார்களாம். ‘‘நீங்க எல்லாரும் என் மேல இவ்ளோ அன்பு வச்சிருக்கறது ஆச்சரியமா இருக்கு. நானும் தமிழ்ல ஒர்க் பண்ண விரும்புறேன். நல்ல ஸ்கிரிப்ட்டோட வாங்க. கண்டிப்பா நடிக்க தயாரா இருக்கேன்...’’ என டுவிட்டும் தட்டி மகிழ்கிறார் பூஜா.
நோட் பண்ணிக்குங்கப்பா!

அகிலாண்டபாரதி