தொல்(லைக்) காப்பியம்



ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்னா, அதில் தமிழர்களுக்கு இருப்பது தனித்துவமான ஃபீலிங். ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் வெவ்வேறு பழக்கம்னா, தினசரி பழக்கவழக்கங்களில் வித்தியாசம் காட்டுறேன்னு விவஸ்தையில்லாத்தனம் காட்டுறதே தமிழர்களின் வழக்கம். நம்மூருல மட்டும்தான் கட்சித் தலைவர்கள்ல ஆரம்பிச்சு புதுசா கட்சி ஆரம்பிக்கப் போற நடிகர்கள் போட்டோ வரை பாக்கெட்டுல பல பேருக்கு தெரியற மாதிரி வச்சுக்கிட்டு சுத்துவாங்க தன்மானத் தொண்டர்கள்.

ஏன்டா ஏன், போட்டோவ பாக்கெட்டுல வச்சாக்கூட பத்து பேருக்குதான் தெரியும்... அதையே நெத்தில பச்சை குத்திக்குங்கடா... சுத்துபட்டுல இருக்கிற பத்து ஊருக்கும் உன் பாசம் தெரியும்!பரீட்சைல எழுதியிருந்தாக்கூட பத்து மார்க் வாங்கியிருக்கலாம். ஆனா, படிச்சதையும் பிடிச்சதையும் ஆட்டோக்கு பின்னால, லாரிக்கு பின்னால, பைக் நம்பர் ப்ளேட்லன்னு தெருவுல ஓடுற வாகனங்க முதுகுல எழுதி, தத்துவ திருவாசகத்தை எல்லாம் தெருவாசகமா மாத்தி விட்டிருக்காங்க!

‘பிரசவத்துக்கு இலவசம்’னு எழுதறது இருக்கட்டும்யா... நீங்க ஓட்டுறதுல பல பெண்களுக்கு பிரசவமே இலவசமா நடந்துடுதுய்யா!
எங்கடா கத்துக்கிட்டீங்க, நாலு வெக்ஸ்சான மூஞ்சியோட போட்டோ போட்டு ப்ளெக்ஸ் பேனர் வைக்கறத?

கல்யாணத்துக்கு வைக்கறீங்க, காதுகுத்துக்கு வைக்கறீங்க, முடி வெட்டுனா வைக்கறீங்க, மொட்டையடிச்சா வைக்கறீங்க, திருவிழாவுக்கு வைக்கறீங்க, தூங்கப்போறதுக்கு வைக்கறீங்க, பாஸானாலும் வைக்கறீங்க, லூசானாலும் வைக்கறீங்க...உங்க லொள்ளுக்கு அளவில்லடா. முள்ளு குத்துனா வைக்கறீங்க, அட பல்லு குத்துனா கூட வைக்கறீங்க. உங்க விளம்பரத்த கூட பொறுத்துக்கலாம்டா... ஆனா, அதுல எழுதறீங்க பாரு வாசகங்கள்... அதைத்தான்டா பொறுக்க முடியல.

கொல்லிமலையில கொள்ள நேரம் குந்த வச்சு யோசிச்சாக்கூட அப்படி வாசகங்கள் யோசிக்க முடியாதுப்பா.
‘வயல்களை வளமாக்கும் டிராக்டரே, வருங்கால வயித்து ஆபரேஷன் டாக்டரே, வாழ்வை வளமாக்கும் வாட்டரே, எட்டாங்கிளாஸ் பாசான என் டாட்டரே, உன்னை வாழ்த்த வயதில்லை... ஆனா, வாயிருக்கு அதனால வாழ்த்துகிறோம் - இப்படிக்கு உன் அப்பா, அம்மா, தவழும் தம்பி, ஆத்தா, தாத்தா’னு போன வாரம் ஒரு ப்ளெக்ஸ பார்த்தேன்... அடேய்ய்ய்!

இதை எங்கப்பா கத்துக்கிட்டீங்க... சாலையில வண்டியோட்டி போறப்ப சாமிக்கு சலாம் போட்டுட்டு போறத?
வீட்டுல நூறு சாமி போட்டோ இருக்கறப்ப அங்கன கும்பிடாம ரோட்டுல டூ வீலர் ஓட்டுறப்ப கைய விட்டுட்டு கும்பிட்டு போனாக்கா, ரோட்டுல போற வண்டி மேட்டுல டிரெக்கிங் ஏறி சுடுகாட்டுலதான் பார்க்கிங் ஆகும்னு சுவாமி பல்சர்நாதர் சொல்லியிருக்காரு!

இனி ரோட்டுல போறப்ப கைய விட்டு சாமிய கும்பிடாதீங்கய்யா... அப்புறம் உன்ன போட்டோல புடிச்சு, உன் வீட்டுல உன்னைய சாமியா கும்பிட வேண்டி வரும்.இதை படிக்கும் தந்தைமார்களே, அந்த தந்தைமார்களை அடிக்கும் தாய்மார்களே, உங்க எல்லோருக்குமே தெரியும்... நாட்டுல கொட்டாவி விடுறவன விட கவிதை புக் விடுறவனுங்க எண்ணிக்கை அதிகமாயிடுச்சு.

நூத்துக்கு நாலு பேரு கவிஞர்களா இருந்தது மாறி, இப்ப நூத்துக்கு நூறு பேரும் கவிஞர்களா மாறிட்டாங்க!
கையெழுத்து போடத் தெரியாம கைநாட்டு வைக்கிறவங்க கூட, கால் குயர் நோட்டுல கவிதை எழுதி வச்சிருக்காங்க. இந்த கெட்ட பழக்கம் எப்படிடா வந்துச்சு உங்களுக்கு? சட்டை போடாட்டியும் கவிதை எழுதறதுல கொட்டை போட்ட தமிழ் முனிவன் திருவள்ளுவரே ரெண்டு வரிக்கு மேல எழுதலைடா! நீங்க ஏன்டா கவிதைங்கிற பேருல கட்டுரைய எழுதித் தள்ளுறீங்க!

சரி, தாகத்துக்கு தண்ணி பாட்டில் வாங்கி குடிச்சுட்டோம்... பிளாஸ்டிக் பாட்டில போட வேண்டிய குப்பைத்தொட்டில போட்டுட்டு, போயிக்கிட்டே இருக்க வேண்டியதுதானே..? எத்தனை காலி பாட்டில கொண்டு போயி வீட்டுல சொத்தாட்டம் சேர்த்து வைப்பீங்க? என்னய்யா பழக்கம் இது!
ப்ரிட்ஜ் முழுக்க பழைய பாட்டிலா கிடக்கு. காசு கொடுத்து வாங்குன வாட்டர் பாட்டில வீட்டுக்கு கொண்டு போறீங்களே... அதே காசு கொடுத்து வாங்குன குவாட்டர் பாட்டில கொண்டு போவீங்களா!

ஏன்பா நீங்கலாம் லார்டு லபக்தாஸ் பேரனுங்களா இல்லை மவுண்ட்பேட்டன் மச்சினன்களா? நவராத்திரி கொண்டாடிக்கிட்டு இருந்த பயலுக எப்பய்யா நியூ இயர் கொண்டாட ஆரம்பிச்சீங்க? ஜெனிபர் லோபஸ் புருஷனுங்க ஹேப்பி நியூ இயர் சொல்ல வந்துட்டாங்க. போதாக்குறைக்கு பஸ் டே, கிஸ் டேன்னு பலப் பல டே வேற...

உப்பு எடுத்து பல்லு விளக்கி, மண் எடுத்து மார்ல தேய்ச்சு குளிச்சுட்டு போன தாத்தா பாட்டி வழி வந்த நாம இன்னைக்கு சோப்ப போட்டு குளிக்கிறது, பேஸ்ட் போட்டு வெளக்குறது வரை வந்தது ஓகே. அதென்ன, கர்ச்சீப்ல பவுடர கொட்டி வச்சுக்கிறது... பாக்கெட்டுல சீப்ப வச்சுக்கிறதுன்னு திரிஞ்சுக்கிட்டு இருக்கீங்க! பாத்துக்கங்கப்பா... சீப்பு ஒரு நாள் உங்களுக்கே ஆப்பு ஆகிடப்போகுது.
அவனவன் நாட்டுல பொண்ணு கிடைக்கலன்னு பொண்ண தேடி ஓடிக்கிட்டு இருக்கான்... இதுல பொண்ண பார்க்க போயிட்டு பாட சொல்றது, ஆட சொல்றதுனு..?

இப்படித்தான் நம்ம தாத்தாங்க பாட்டிங்கள கல்யாணம் பண்ணினாங்களா? என்னய்யா இது புது பழக்கம்? இப்ப பொண்ண பாட சொல்லி சன் சிங்கருக்கா அனுப்பப் போற? மூணு வயசு குழந்தைய எல்கேஜில சேர்த்த பிறகு மொத வேலையா பாட்டு கிளாஸ், டான்ஸ் கிளாஸ் அனுப்பறது... அடேய்ய்ய், அந்த கிளாஸுங்களுக்கு அனுப்பாட்டி கூட அந்த குழந்தைங்க அதைத்தானே வீட்டுல செய்யும்?!

கார் கண்ணாடில நாய் எட்டிப் பார்க்கிற மாதிரி ஸ்டிக்கர் ஒட்டுறீங்க, இல்ல நாய் பொம்மைய தூக்கி வைக்கறீங்களே... உன் காருக்கு பின்னால வர்றவன் எல்லாம் என்ன திருடனாய்யா? அந்த முருகப் பெருமானே ஆக்சிலேட்டர் இல்லாத மயில ஓட்டிக்கிட்டு இருக்காரு, எமதர்ம ராஜா பிரேக்கே இல்லாத எருமை மாட்டுல போயிக்கிட்டு இருக்காரு... அவங்களே டிராபிக் ரூல்ஸ ஃபாலோ பண்றாங்க. ஆனா, ஏசி காருல எல்லா வசதியோட சொகுசா போற நீங்க ஏன்டா டிராபிக் சிக்னல்ல மூணு நொடிக்கு முன்னாலயே விர்ருன்னு போறீங்க? அந்த மூணு நொடி முன்னால போயி மும்பையையா விலைக்கு வாங்கப் போறீங்க? எங்க இருந்து வந்தது இப்படி டிராபிக்க மதிக்காத பழக்கம்?

பத்து லட்ச ரூபா காரை வாங்கிட்டு ரெண்டு ரூபா எலுமிச்சம் பழத்தை காருக்கு முன்னால தொங்க விடுற பழக்கத்தை உங்களால மாத்த முடியாதுன்னு தெரியும். ஆனா, அந்த எலுமிச்சம்பழம், அந்த கொரியன் கம்பெனி லோகோவ மறைக்கிற மாதிரி கட்டுறீங்க பாரு... அதான்டா பொறுக்க முடியல!

ஏன்டா... எத்தனை கோடி போட்டு, ஆராய்ச்சி பண்ணி, அவன் காரு விட்டா, அவன் கம்பெனி லோகோவுக்கே நக சுத்தி வைக்கறீங்களே... இது நியாயமா?மக்களே... இன்னமும் பல கேள்விகள் இருக்கு. தமிழர்கள் எப்படி இப்படி ஆனார்கள்? சோறாக்குனா புருஷனுக்கு போடுங்கம்மா... அது என்னமா போட்டோ புடிச்சு ஃபேஸ்புக்ல போடுறது?

சொந்தமா யோசிச்சு பல இலக்கியங்களைத் தந்த தமிழினம் இன்னைக்கு சோறு திங்க ஹோட்டலுக்கு போனாக்கூட அடுத்தவன் இலைய பார்த்து ஆர்டர் கொடுக்குதே... அநியாயமில்லையா..? போங்கய்யா போங்க... இன்னமும் என்னென்ன செய்யணுமோ செய்யுங்க... செல்பி எடுத்துக்கிட்டு திரியுற உங்ககிட்ட நாம எப்படி மாறியிருக்கோம்னு அட்வைஸ் பண்றது வெயில்ல குல்பி ஐஸை காயப் போடுறா மாதிரி!நல்லா இருந்தா சரி!

தோட்டா ஜெகன்