சித்தி 2 ஸ்பெஷல் மீண்டும் சித்தி..!



மகிழ்ச்சியில் குதூகலிக்கிறார்கள் 90’s kids. தொண்ணூறுகளில் உலகம் முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்களை கட்டிப்போட்ட சின்னத்திரை சீரியல் சன் டிவியின் ‘சித்தி’. அப்போது இரவு 9.30 மணியானால் சென்னையின் பரபரப்பான அண்ணா சாலை கூட வெறிச்சோடிய அதிசயமும் நடந்திருக்கிறது.  

அப்படி ஒரு மாஸ் வரவேற்பை அள்ளிய தொடர் ‘சித்தி’அதில் இடம்பெறும் ‘கண்ணின் மணி... கண்ணின் மணி... நிஜம் கேளம்மா...’ என்ற நித்யயின் கணீர் குரலும் அதனைத் தொடர்ந்து வரும் ‘சித்தி…’ என்ற பாசமும் நேசமுமான குழந்தையின் வாய்ஸும் இன்றும் இனிக்கும் சங்கீதம். 
இப்போது மீண்டும் அதே குரல் தாலாட்ட, அதே ‘சித்தி’யாக ராதிகா ஜொலிக்க... லேட்டஸ்ட் வெர்ஷன் ‘2.0’ போல ‘சித்தி 2’ வரவிருக்கிறது. இது 2020 கிட்ஸையும் எமோஷன் + என்டர்டெயின்மென்ட்டில் கவரவிருக்கிறது.

யெஸ். வருகிற 27ம் தேதி முதல் உங்கள் சன் டிவியில் நாள்தோறும் இரவு 9 மணிக்கு இனிதே தொடங்குகிறது. மயிலாப்பூரில் உள்ள ஒரு பிரமாண்ட வீட்டில் ‘சித்தி 2’வின் படப்பிடிப்பில் சித்தி குடும்பத்தினரைச் சந்தித்தோம்.டிவி மானிட்டரின் அருகே கையில் மைக்குடன் பிசியாக இருந்தார் ‘சித்தி 2’வின் இயக்குநரான சுந்தர் கே.விஜயன். ‘‘சாரதாவை கொஞ்சம் ஜூம் பண்ணிக்குங்க... டேக் போலாமா..? ஆக்‌ஷன்...’’ என அவர் குரல் கொடுக்க... ஃபிரேமில்  புன்னகைத்துக் கொண்டிருந்தார் சித்தி சாரதா (ராதிகா).

அவரது கணவர் சண்முகப்பிரியனாக பொன்வண்ணன், அவரது தங்கையாக, அதாவது சாரதாவின் நாத்தனாராக ஷில்பா ஆகியோர் காம்பினேஷன் ஷாட்  பரபரத்தது. ஷாட்டை முடித்துவிட்டு நம்மிடம் வந்தார் டைரக்டர். அருகே இருந்த நடிகர்கள் பொன்வண்ணன், அருள்மணி, ஷில்பா, நிகிலா, அஸ்வின், சரவணன், வெண்பா, நந்தகுமார், மகாலட்சுமி என அத்தனை பேரையும் அறிமுகம் செய்து வைத்தார்.  

முகமெல்லாம் சிரிப்புடன் வரவேற்கிறார் ராதிகா: ‘‘உங்ககிட்ட மொதல்ல ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திடுறேன். இது, அப்ப வந்த ‘சித்தி’யின் தொடர்ச்சி இல்ல. ஃப்ரெஷ்ஷான தனிக்கதை. இன்னொரு சித்தியின் கதை. ஆனா, இதுலயும் நானிருக்கேன்!’’ சந்தோஷமாகப்
பேச ஆரம்பித்தார் ராதிகா.  

‘‘‘சித்தி 2’ புரொமோஷன் சன் டிவில வர ஆரம்பிச்சதும், அவ்ளோ ரெஸ்பான்ஸ். எல்லாருமே ஹேப்பியா வெல்கம் பண்றாங்க. சந்தோஷமா இருக்கு. ‘சித்தி’ ஆரம்பிக்கும் போது அது இவ்ளோ பெரிய ஐகானிக் சீரியலாகும்னு நாங்க யாருமே நினைக்கல. வழக்கமான சீரியலா இல்லாம, வித்தியாசமான தொடரா, ஒரு என்டர்டெயின்மென்டா, டெலிவிஷன்ல இன்னொரு உயரத்துக்கு போகக்கூடிய ஒரு தொடரா பண்ணணும்னு எண்ணி ஆரம்பிச்சோம்.

எங்களோட சிவகுமார் சார், ஷில்பா, யுவராணி, வாசு விக்ரம், அஜய் ரத்னம், டேனியல் பாலாஜினு ஏகப்பட்ட ஸ்டார் காஸ்ட் ‘சித்தி’ல இருந்தாங்க. நல்ல ஒரு பிரமாதமான டீம் அமைஞ்சது. எல்லாருமே சேர்ந்து கடுமையா உழைச்சாங்க. வெற்றியாச்சு. அதே சக்சஸை இந்த ‘சித்தி 2’வும் தொடும். இது கம்ப்ளீட் நியூ ஸ்டோரி. குடும்பம் ஒற்றுமையா இருக்கணும்னு நினைக்கற ஒரு நடுத்தர பெண்ணின் கதை.

வெறும் சீரியலா இல்லாம, நம்ம எல்லோர் குடும்பத்திலும் நடக்கற விஷயங்களின் தொகுப்பா, ஒவ்வொருத்தருமே எளிதா கனெக்ட் ஆகக்கூடிய ஒரு கதையா இருக்கும். எனக்கு ஜோடியா பொன்வண்ணன் நடிக்கறார். ‘அண்ணாமலை’க்குப் பிறகு சினிமாவில் பிசியானவர், மறுபடியும் சீரியல் பக்கம் வரல. ‘சித்தி’யோட கதையைக் கேட்டதும் இம்ப்ரஸாகிட்டார். மறுபடியும் ‘சித்தி’க்காக சின்னத்திரைக்கு வந்திருக்கார்.

தொடர்ல நிறைய சஸ்பென்ஸ் வச்சிருக்கோம்...’’ என கேரன்டி கொடுக்கும் ராதிகா, ‘‘இனி ஓவர் டு டைரக்டர்...’’ என சிரித்தபடி சுந்தர் கே.விஜயனை கைகாட்டினார்.தெளசண்ட் வாட்ஸ் உற்சாகத்துடன் பேச ஆரம்பித்தார் சுந்தர் கே.விஜயன்: ‘‘ராதிகா மேடம் சொன்னா மாதிரி இது இன்னொரு சித்தியின் கதை.  

இந்த சித்திக்கும் அதே டைட்டில் இருக்கணும்னு சன் நெட் ஒர்க்கின் சேர்மன் கலாநிதி மாறன் சார் விரும்பி வச்சாங்க. புரொமோஷன் ஒளிபரப்பான அடுத்த விநாடியே, அதோட ரீச்சை பார்த்து பிரமிப்பாகிடுச்சு. இந்தக் கதைக்கும், இப்படி ஒரு டைட்டில் வைச்சதுக்காகவே சேர்மன் சார் அவர்களுக்கும் ஸ்பெஷல் தேங்க்ஸ்!

‘சித்தி’யில் ஒலித்த அதே குரல்கள் இதோட ஓப்பனிங்லேயும் இருக்கணும்னு சேர்மன் விரும்பினார். சார் ஏன் அப்படி அதே டோன் கேட்டார்னு ஆரம்பத்துல எனக்கு புரியல. ஆனா, இது இவ்ளோ ரீச் ஆனதுக்கு அதான் மிகப்பெரிய ஒரு காரணமா இருந்ததுனு புரிஞ்சதும் சாரோட கணிப்பைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன்.

‘சித்தி 2’ புரொமோஷன் யூ டியூப்ல வெளியானதும், கமெண்ட்ஸ் எல்லாம் படிச்சுப் பார்த்தேன். இதைப் பார்த்த அத்தனை பேருக்குமே அதே நெகிழ்ச்சி. அதே எதிர்பார்ப்பு. ‘சித்தி...னுகுரலைக்கேட்டதும் மறுபடியும் மலரும் நினைவுக்கு போயிட்டோம். வெல்கம் சித்தி’னு பாசிட்டிவ்வான கமெண்ட்ஸ் குவிஞ்சிருந்தது.

சன் டிவி - ராதிகா மேம் காம்பினேஷன்ல இதுக்கு முன்னாடி ‘அண்ணாமலை’ல ஐநூறு எபிசோடுகள் ஒர்க் பண்ணியிருக்கேன். புரொமோஷனுக்கு கிடைச்ச வரவேற்பைப் பார்த்து, இன்னும் பொறுப்பா, கவனமா, கூடுதல் சுவாரசியத்தோட ‘சித்தி 2’வை கொண்டு போக உழைச்சுட்டு இருக்கோம்.

நிச்சயம் வழக்கமான சீரியல் பார்க்கறது மாதிரி ‘சித்தி 2’ இருக்காது. சினிமா மாதிரி மேக்கிங் இருக்கும். இந்த ஜெனரேசன் கிட்ஸையும் கவர்கிற ஸ்கிரிப்ட் இது.

‘சித்தி’யில இருந்த ராதிகா மேம் - சிவகுமார் சார் கணவன் - மனைவி கெமிஸ்ட்ரியை விட பல மடங்கு சாரதா - சண்முகப்பிரியன் தம்பதியின் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருக்குனு நினைப்பீங்க.

ராடன் டீம் இதிலும் காஸ்ட்டிங்கை ரொம்ப நல்லா அமைச்சிருக்காங்க. பொன்வண்ணன் சார், பாக்யராஜ் சார், சமுத்திரக்கனி, ரூபிணி, பையன்கள் ரெண்டு பேர் கேரக்டர், மகள் கேரக்டர், ஒரு பாட்டி, ‘சித்தி’யில் சாத்தப்பனா நடிச்ச நந்த
குமார், அருள்மணினு பர்ஃபெக்ட் காஸ்ட்டிங், அருமையான கேரக்டர்ஸ்னு அமைஞ்சிருக்கு. எல்லார்கிட்டேயும் ராதிகா மேடமே பேசி, கமிட் பண்ணினாங்க...’’ என்கிறார் இயக்குநர் சுந்தர் கே.விஜயன்.

நீண்ட இடைவெளிக்குப் பின் சின்னத்திரை பக்கம் வந்திருக்கும் பொன்வண்ணனுக்கு ஹலோ சொன்னோம். ‘‘நானும் ராதிகா மேமும் அன்னி யோன்யமான தம்பதி. எனக்கு ரெண்டு பசங்க, ஒரு பொண்ணு. குடும்பப் பொறுப்பிற்காக ஏங்கும் ஒரு கணவனா நடிக்கறேன்.

இந்தக் கதையை ராதிகா மேம் சொன்னதும் வெறும் கேரக்டரா மட்டும் இல்லாமல் நடிப்பிற்கும் என் அனுபவத்திற்கு ஏற்ற ஒரு பாத்திரமா தெரிஞ்சது. மறுபடியும் சந்தோஷமா சின்னத்திரைக்குள் வந்திருக்கேன்...’’ என ஆனந்தமாகிறார்.

பொன்வண்ணனின் தங்கையாக நடிக்கும் ஷில்பா, ‘சித்தி பார்ட் ஒன்’னில் பிருந்தாவாக கலக்கியவர்.‘‘‘சித்தி’க்கு அப்புறம் நிறைய சீரியல்கள் நடிச்சிட்டேன். ஆனா, எங்கே ஷூட்டிங் போனாலும் என்னை பார்க்குறவங்க ‘சித்தியில் வரும் பிருந்தாதானே நீங்க’னு ஆர்வமா வந்து விசாரிப்பாங்க. சந்தோஷமா இருக்கும்.

மறுபடியும் ‘சித்தி’ வந்தா நல்லா இருக்கும்னு நினைச்சிருக்கேன். ஆசைப்பட்டது மாதிரியே கனவுகள் நனவாகியிருக்கு. இந்த ‘சித்தி 2’விலும் நல்ல கேரக்டர்...’’ என சந்தோஷ வானில் சிறகு விரிக்கிறார் ஷில்பா.ஷில்பாவின் கணவராக நடிக்கும் அருள்மணி, திரைப்படக் கல்லூரி மாணவர். நாசர், பப்லுவின் செட். ‘‘சீரியல்ல நடிச்சா சினிமா வாய்ப்புகள் வராதுனு நினைச்சே சின்னத்திரை பக்கம் வராமல் இருந்தேன்.

ராடன்ல இருந்து கூப்பிட்டாங்க. சன் டிவி தயாரிப்பது தெரிஞ்சதும் சந்தோஷமா நடிக்க வந்துட்டேன். எல்லோர் வீட்டுக்குள்ளும் இனி நானும் இருக்கறதால, ‘சித்தி 2’ என்னை உலகம் முழுவதும் பிரபலமாக்கும்...’’ என உற்சாகமாகிறார் அருள்மணி. அவர் மட்டுமல்ல.. புதுவரவுகள் அத்தனை பேரும் ஹேப்பியில் மிளிர்கிறார்கள்.

சட்டென நம் பக்கம் வந்தார் இயக்குநர் சுந்தர் கே.விஜயன்: ‘‘சன் குடும்ப விருதுகள்ல ராதிகா மேமுக்கு ‘சிங்கப் பெண்’ அவார்டு கொடுத்தாங்க. ஆனா, அவங்க சிங்கப் பெண் இல்ல. குழந்தை மனசுக்காரர்...’’ என கலகலத்தவர், மானிட்டரின் எதிரே வலதுபுறம் ‘ரெட்’ காமிராவில் ஆங்கிள் பார்த்துக்கொண்டிருந்த ஒளிப்பதிவாளர் சீனுவைக்கூப்பிட்டு அறிமுகப்படுத்தி வைத்தார்.

‘‘திரைக்கதையை சேக்கிழாரும், வசனத்தை வசுபாரதியும் எழுதுறாங்க. இந்த ‘சித்தி’ நிஜமாகவே விறுவிறுப்பா இருக்கும். நல்ல நல்ல திருப்பங்கள் இருக்கு. எந்த இடத்திலும் தொய்வு இருக்காது. நல்ல ஒரு குடும்பக் கதையை பார்க்கப் போறீங்க...’’ என சுந்தர் கே.விஜயன் சொல்ல, ராதிகாவிலிருந்து நிகிலா வரை அத்தனை பேரும் அதை மகிழ்ச்சி பொங்க ஆமோதித்தார்கள்!

மை.பாரதிராஜா

ஆ.வின்சென்ட் பால்