ரொம்ப நாள் கழிச்சு நிம்மதியா இருக்கேன்! நரேன் open talk



‘‘சினிமாவுக்கு வந்து 15 வருஷங்களாச்சு. நடிக்க வந்த புதுசுல ரொம்ப சூப்பரா டேக் ஆஃப் ஆச்சு. ‘அஞ்சாதே’வுக்குப் பிறகு ரொம்ப பெரிய இடத்துக்கு போவேன்னு இங்க எல்லோருமே எதிர்பார்த்தாங்க.

ஆனா, அப்புறம் நடந்தெல்லாம் தலைகீழ். இடைப்பட்ட காலத்தில் பெரிய இயக்குநர்கள், பெரிய ஹீரோக்கள் கூட, அவங்க என்னை சந்திக்கறப்ப ‘நீங்க தமிழ்ல ஏன் படங்களே பண்றதில்லை’னு கேட்பாங்க. அவங்ககிட்ட் நான் என்ன பதில் சொல்றதுனே தெரியாது.
ஒரு புன்னகையோட கடந்து போயிருக்கேன். இன்னொரு விஷயம், அப்ப வந்த ரோல்கள் எல்லாமே போலீஸா பண்றீங்களானு கேட்டே வந்தாங்க. சில படங்கள்ல நடிச்சிருந்தும் புரொடக்‌ஷன் சிக்கல்களால் ரிலீஸ் வருஷக்கணக்குல தள்ளிப் போயிருக்கு.

அப்பவெல்லாம் லோகேஷ் கனகராஜ் மாதிரி ஒரு நல்ல இயக்குநர் தேடி வரல. இப்ப விட்ட இடத்துல இருந்து பிடிச்சது மாதிரி ஒரு ஃபீல். எந்த
‘அஞ்சாதே’வுக்குப் பிறகு நான் நல்லா வருவேன்னு நினைச்சிருந்தேனோ அதே ‘அஞ்சாதே’ கேரக்டர் பிடிச்சுத்தான் இப்ப லோகேஷ் என்னை செலக்ட் பண்ணியிருக்கார்!

‘கைதி’ல எனக்கு ஒரு கிராண்ட் ரீ என்ட்ரி கிடைச்சிருக்கு. இதே படம் பத்து வருஷங்களுக்கு முன்னாடி அமைஞ்சிருந்தா எவ்ளோ நல்லா இருந்திருக்கும்! ஆனா, எல்லாத்துக்கும் ஒரு நேரம் வரணும். அந்த நேரம் இப்ப அமைஞ்சிருக்கு. இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்த கார்த்திக்கும், இயக்குநர் லோகேஷுக்கும் பெரிய தேங்க்ஸ். ரொம்ப நாள் கழிச்சு நிம்மதியா இருக்கேன். சந்தோஷமா இருக்கேன்!’’

அடி மனசில் இருந்து பேசுகிறார் நரேன். ‘கைதி’யில் ஸ்பெஷல் டாஸ்க் ஃபோர்ஸ் போலீசாக நடிப்பில் ஸ்கோர் செய்தவர்.
‘‘‘கைதி’ பார்த்துட்டு என் குருநாதர் ராஜீவ்மேனன் சாரும் அவங்க மிஸஸும் எனக்கு ஒரு பாராட்டு கடிதமும், ஸ்வீட்டான ஒரு கேக்கும் அனுப்பியிருந்தாங்க. முதல் பாராட்டும் அவங்களோடதுதான். சினிமாவில் ஒரு ஒளிப்பதிவாளராகத்தான் கேரியரைத் தொடங்கினேன். ராஜீவ்மேனன் சார்கிட்ட ரெண்டு வருஷங்கள் உதவியாளரா இருந்திருக்கேன். நான் ஆக்ட்டிங் பக்கம் காலூன்ற அவங்களும் ,மாஸ்டர் கோபாலி, அவங்க ஃபேமிலியும்
கொடுத்த உற்சாகம் ஒரு காரணம். அதனால அவங்களோட பாராட்டு எனக்கு ரொம்ப ஸ்பெஷல்.

அப்புறம், கார்த்திகிட்ட இருந்து போன். ரொம்ப சந்தோஷப்பட்டார். சினிமாவில் என் நலம் விரும்பிகள் நிறைய பேர் இருக்காங்க. அவங்க அத்தனை பேருமே படம் பார்த்துட்டு மனப்பூர்வமா பேசினாங்க. மலையாளத்திலேயும் ‘கைதி’ சூப்பர் ஹிட் ஆகியிருக்கு. அங்கே படம் முடிஞ்சதும் ஜனங்க எழுந்து நின்னு கைதட்டுறாங்க. பிஜுமேனன், ஜெய் சூர்யானு அங்குள்ள பலரும் பாராட்டினாங்க. மறுபடியும் பாராட்டு மழைக்குள் நனையறேன். ‘கைதி’ நிறைய தியேட்டர்கள்ல ஷோஸ் அதிகரிச்சிருக்காங்க. அதுவும் சந்தோஷமா இருக்கு. ரொம்ப நாள் கழிச்சு பெரிய ஹிட் கிடைச்சிருக்கு...’’ நெகிழ்கிறார் நரேன்.

என்ன சொல்றார் கார்த்தி?
கார்த்தியும் நானும் பத்து வருஷங்களுக்கு மேல ஃப்ரெண்ட்ஸ். அடிக்கடி பேசிப்போம். அவர் மணிரத்னம்கிட்ட அசிஸ்டென்டா இருந்தார். நானும் அசிஸ்டென்டா இருந்திருக்கேன்.

ஸோ, அப்படி ஒரு பாண்டிங் ஃப்ரெண்ட்ஷிப். நாங்க ஏதாவது ஹாலிவுட் படங்கள் பார்த்தால், அதோட டெக்னாலஜிஸ் பத்தி ஒருத்தருக்கொருத்தர் பேசிக்குவோம். ‘நம்ம ஊர்ல அப்படி பண்ணமுடியுமா’னு அவர் கேட்பார். ஃபேமிலியாகவும் பழகுவோம்.

‘கைதி’யில லோகேஷ், போலீஸ் கேரக்டருக்கு என் பெயரை கார்த்திகிட்ட சொன்னதும், ‘நம்ம நரேனா... நானே அவர்கிட்ட பேசிக்கிறேன்’னு சொல்லி, என்கிட்ட் பேசினார். கார்த்தியோட நடிச்சது இனிமையான அனுபவம். அதைப்போல, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ரொம்பவும் சிம்பிளானவரா இருக்கார். எனி டைம் ஒர்க் மோட்லேயே இருக்கற மனுஷன். சினிமா passion உள்ளவர். ரொம்பவும் பிராமிஸிங் டைரக்டர்.

அடுத்து..?
‘கைதி’க்குப் பிறகு படங்கள் இன்னும் கமிட் ஆகல. கதைகள் வருது. கேட்டுட்டிருக்கேன். ஆனா, அதுக்கு முன்னாடி நடிச்ச ‘சாம்பியன்’, ‘ஒத்தைக்கு ஒத்த’ படங்கள் ரிலீஸுக்கு ரெடியா இருக்கு. இதுல ‘சாம்பியன்’ சுசீந்திரன் இயக்கியிருக்கும் படம். கால்பந்து விளையாட்டு பத்தின கதை இது. அதுல கால்பந்து கோச்சா நடிச்சிருக்கேன்.

அடுத்து, அதர்வாவின் ‘ஒத்தைக்கு ஒத்த’யை பா.ரஞ்சித்தின் உதவியாளர் பர்னீஷ் இயக்கியிருக்கார். இது ஒரு காலேஜ் சப்ஜெக்ட். மலையாளத்துலேயும் படம் பண்ணிட்டிருக்கேன். தமிழ்ல வெரைட்டியான வித்தியாசமான கேரக்டர்கள் நிறைய பண்ணணும்னு விரும்புறேன்.  மல்லுவுட்ல அதிக படங்கள் பண்றீங்க போல... அங்க ஃபீல்டு எப்படியிருக்கு?

அங்க படம் பண்றேன். அவ்ளோதான். அதிகமானு சொல்லிடமுடியாது. இண்டஸ்ட்ரி அங்கயும் நல்லா இருக்கு. கடந்த பத்து வருஷமா அங்க ஃபீல்டு நல்லா இருக்கு. நிறைய புது இயக்குநர்கள், புது ரைட்டர்கள், புதுக்களங்களோட வர்றாங்க. ரொம்ப ரொம்ப சின்ன படஜெட்ல நல்ல நல்ல படங்கள் நிறைய வந்திட்டிருக்கு.

சிம்பிளான கதையை எடுத்துக்கொண்டு ட்ரீட்மென்ட்ல பிரமாதப்படுத்துறாங்க. அந்த சூழல் இங்கே இருபது வருஷமா நிலவுது. ஆனா, அங்கே ஹிட் ஆகுற சின்ன பட்ஜெட் படங்கள இங்கே ரீமேக்கினால் அது செட் ஆகாது. ‘கும்பளாங்கி நைட்ஸ்’, ‘ஜல்லிக்கட்டு’ இதெல்லாம் இங்கே ரீமேக் பண்ணினால் ஒர்க் அவுட் ஆகாது. ஏன்னா ஆடியன்ஸ் வேற. இப்ப அங்க நான் நடிக்கற படம் த்ரில்லர் கதை. அதுவும் பெயர் வாங்கிக் கொடுக்கும்னு நம்பறேன்.

மை.பாரதிராஜா