ஜாம்பி



சீரியஸான காட்டேரிகளை நகைச்சுவைக்கு உள்ளாக்கிப் பார்த்தால் அதுவே இந்த ‘ஜாம்பி’.டிக்டாக் மனைவியின் தொல்லை... பொண்டாட்டி - அம்மாவின் அடிதடி அவஸ்தை, கல்யாணம் பண்ணப் பயப்படும் நண்பன்... பாரில் சந்திக்கும் மொடாக்குடிகாரன்... என பலரும் தங்கள் குடும்பப் பிரச்னைகளை மறப்பதற்காக கைகோர்க்கிறார்கள்.

கோபி, பிஜிலி ரமேஷ், அன்புதாசன், சுதாகர் என அவர்கள் ஒன்று சேர்ந்து கூடிக் களிக்கிறார்கள். காட்டேஜில் குடித்துவிட்டு அங்கேயே தங்கி பொழுதைக் களிக்கிறார்கள். யாஷிகா ஆனந்தும் அங்கே தன் நண்பர்களுடன் பார்ட்டி கொண்டாட வருகிறார். அங்கே அவர்கள் சாப்பிட்ட சிக்கன்(!) மூலம் அவர்கள் ஜாம்பியாக மாறுகிறார்கள். அங்கே யோகிபாபுவும் சேர்ந்துவிட... அவர்கள் அங்கிருந்து எப்படி தப்பித்துத் திரும்புகிறார்கள் என்பதே மீதிக்கதை.

புதிதாக ஒரு கதையைச் சொல்லப்போகிறோம் என்ற வகையில் இயக்குநர் புவன் நலன் கொண்டிருந்த நம்பிக்கை வரவேற்கத்தக்கது.ஹாலிவுட்டில் அதிகம் பயமுறுத்தும் இது மாதிரி கதைகளுக்கு தனித்த ரசிகர் கூட்டமே இருக்கிறது. அந்த வகையில் இல்லாமல் இதில் சிரிப்பு மூட்ட முயன்றிருக்கிறார்கள். யூடியூப்பில் பெரிதும் கவர்ந்த கோபியும், சுதாகரும் இதிலும் தங்கள் கலகல ரகம். இன்னும் முயன்றால், அடுத்த வரிசைக்கு வந்து
விட வாய்ப்பிருக்கிறது.

யோகிபாபு வரும் போதெல்லாம் நமக்கு புன்னகை எட்டிப்பார்க்கிறது. அதிகமும் அவர் வருகையை நாம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். அவ்வப்போது இருக்கிற அசைன்மென்டையும் தவறவிட்டு விழிக்கும்போதெல்லாம் நம்மை அதிர சிரிக்க வைக்கிறார்கள்யாஷிகா ஆனந்த் கவர்ச்சியில் பஞ்சம் வைக்கவில்லை. அவரும் ரசிகர்களை ஏமாற்றவில்லை.

 குட்டியூண்டு டிரஸ்ஸில் வரும்போதெல்லாம் தியேட்டரே ‘ஹாட்’ ஆகிறது. ஒருநாள் இரவில் நடக்கும் சம்பவங்கள் என்றாலும் முடிந்தமட்டிலும் சுவாரஸ்யம் தர முற்படுகிறார்கள். யோகி பாபு, ‘விக்ரம் வேதா’ விஜய்சேதுபதி ரேஞ்சில் செம பில்டப்பாக வடையை எல்லாம் நசுக்கிப்போட்டு வரும்போது காமெடி ரகளை.

பிரேம்ஜியின் பின்னணி இசையில் படத்தின் திகில் கூடுகிறது. அவருக்கு ‘இசைக்காட்டேரி’ என பட்டமும் கொடுத்துள்ளனர். விஷ்ணுஸ்ரீயின் ஒளிப்பதிவும் ஜாம்பிகளின் மீதான பயத்தை அதிகரிக்கிறது. எடிட்டர் தினேஷ் பொன்ராஜ் இன்னும் கருணை வைத்து செதுக்கி
யிருந்தால் ஜாம்பிகளின் அட்டகாசத்தை இன்னும் கூட்டியிருக்கலாம்.

திகிலூட்டும் இடங்கள் படத்தில் குறைவாக இருப்பது வருந்தத்தக்கது. ஜாம்பிகளிடம் சிக்கிக்கொண்டோம் என யாரும் போலீஸுக்கு தெரிவிக்காமல் தங்களுக்குள்ளே மறுகி ஓடுவது வேடிக்கை.ஜாம்பிகளின் அட்டகாசத்திற்காகவும், காமெடிக்காகவும் ரசிக்கலாம்.

குங்குமம் விமர்சனக் குழு