ஆமா... இதுல விஜய் சேதுபதி அரசியல் பேசறார்!
‘‘கமர்ஷியல் படத்துல சமூக அக்கறையோட ஒரு கன்டன்டை சொல்லும்போது சில விஷயங்களை கவனத்துல எடுத்துப்பேன். அதை அழகா சொல்லணும். ஜனங்களுக்கும் புரியணும். அதே டைம்ல யாருக்கும் தப்பாவும் தோணிடக்கூடாது. இதுல நான் ரொம்ப தெளிவா இருப்பேன்.இந்தக் கதையும் அப்படித்தான். கதையைக் கேட்டதும் விஜய் சேதுபதி சார் ரொம்பவே சந்தோஷமா சம்மதிச்சார். என்னை முழுசா நம்பினார். நானும் அவரை முழுசா நம்பினேன். எங்க ரெண்டு பேரோட நம்பிக்கைதான் இந்தப் படம்.
இதைத்தாண்டி இதோட தயாரிப்பாளர்களும் எங்களை நம்பினாங்க. ஏன்னா, இது கொஞ்சம் பெரிய பட்ஜெட். தயாரிப்பாளர் பாரதி மேம் இல்லைனா இப்படி ஒரு படம் சாத்தியமாகியிருக்காது...’’ நிறைவாகப் பேசுகிறார் இயக்குநர் விஜய் சந்தர். சிம்புவுக்கு ‘வாலு’, விக்ரமுக்கு ‘ஸ்கெட்ச்’ கொடுத்தவர் இப்போது விஜய் சேதுபதியை ‘சங்கத்தமிழன்’ ஆக்கியிருக்கிறார். படத்துல அரசியல் நிறைய இருக்குனு கோலிவுட்ல ஒரு பேச்சு இருக்கே..? உண்மைதான். என் ரெண்டாவது படம் ‘ஸ்கெட்ச்’ கமர்ஷியல்னாலும் அதுல நல்ல மெசேஜ் இருக்கும். சின்னப் பசங்க படிக்கணும்; அவங்க வேலைக்குப் போயிடக்கூடாதுனு அழுத்தமான மெசேஜ் வச்சிருந்தேன்.
அதைப்போல இதுலயும் மக்களுக்கான ஒரு பிரச்னையை தொட்டிருக்கேன். சமூகத்துல நடக்கற அநீதிகளைப் பார்த்ததும் நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோபம் இருக்கும். ஆனா, அதை தங்களுக்குள்ளாகவே புதைச்சிப்பாங்க. சொசைட்டில ஒரு பிரச்னை நடக்கும் போது யாராவது ஒருத்தர் குரல் கொடுக்கமாட்டாங்களானு காத்திருப்போம்.
அப்படிப்பட்ட சூழல்ல ஒருத்தர் குரல் கொடுக்க துணியும் போது அங்க அரசியல் பேச வேண்டியதாகிடுது. இன்றைய சூழல்ல இப்படி ஒரு படத்துல தைரியமா நடிக்க சம்மதிச்சதுக்காகவே விஜய் சேதிபதி சாருக்கு நன்றி சொல்லிக்கறேன். இதுல டயலாக்கும் கூர்மையா இருக்கும். ஒரு புரட்சிகரமான பாட்டும் இருக்கு. தன்னம்பிக்கையையும், ஒற்றுமையையும் வலுயுறுத்தும் அந்தப் பாடலை கார்க்கி எழுதியிருக்கார். சங்கர் மகாதேவன் பாடியிருக்கார்.முழுக்கவே அரசியல் படமா?
இல்லை! நான் கூட்டுக் குடும்பத்துல வாழறேன். தாத்தா, பாட்டி, சித்தி, சித்தப்பானு உறவுகள் சூழ்ந்து வீடே கலகலனு எப்பவும் கலர்ஃபுல்லா களைகட்டும். அப்படி ஒரு கூட்டுக்குடும்பப் பின்னணில ஃபேமிலி என்டர்டெயினரா இந்தப் படத்தை கொண்டு போயிருக்கேன். படத்துல ரெண்டு ஹீரோயின்கள் - ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ். ‘வாலு’வில் சிம்பு சார், சந்தானம் சார் கெமிஸ்ட்ரி மாதிரி இதுல சேதுபதி சார்- சூரி காம்போ பேசப்படும்.
இந்தி வில்லன் ரவிகிஷன், அஸ்ரஃப் ராணா, நாசர் சார், மன், துளசி, ‘கடைக்குட்டிசிங்கம்’ தீபா, இந்துனு பெரிய பட்டாளமே இருக்கு. மொத்த கூட்டத்தையும் ஒரே ஃபிரேம்ல பார்க்கும்போது திருவிழா மாதிரி ஜொலிக்கும். வேல்ராஜ் சார் ஒளிப்பதிவு பண்ணியிருக்கார். ‘குலேபகாவலி’ விவேக் மெர்வின் இசையமைக்கறாங்க. முதல்நாள் கம்போஸிங்கின் போதே, அவங்களோட செட் ஆகிட்டேன்.
ஒரு பாடலை ராத்திரி பதினொரு மணிக்கு துவங்கி அதிகாலை அஞ்சு மணிக்குள்ள எழுத வேண்டிய சூழல். விவேகா அதை அழகா செய்திருக்கார். அந்தப் பாடலை விவேக்கும் மெர்வினும் சேர்ந்து அன்னிக்கு காலையில ஏழு மணிக்குள்ளாகவே பாடி ஒலிப்பதிவும் பண்ணி அசத்திட்டாங்க. ஓபனிங் பாடலுக்கு ராஜுசுந்தரம் சார் நடனம் அமைச்சிருக்கார். மொத்த படத்தையும் அழகா வடிவமைச்சிருக்கார் எடிட்டர் பிர்வீன். அனல் அரசு வின் ஸ்டண்ட்ஸும், பிரபாகரின் ஆர்ட் டைரக்ஷனும் பேசப்படும்.
விக்ரமோட ‘ஸ்கெட்ச்’சுக்கு அப்புறம் விஜய் சேதுபதி..? ஆமாங்க. விஜய் சேதுபதி சாரை ரொம்ப வருஷமாவே தெரியும். ‘நம்ம காம்பினேஷன்ல ஒரு படம்’ பண்றோம்னு என்னை பார்க்கும்போதெல்லாம் சொல்லிட்டு இருப்பார். ‘சங்கத்தமிழன்’லதான் அது கைகூடியிருக்கு. இந்தப் படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கக் காரணமே நண்பர் மன் சார்தான். மத்தவங்களுக்கு அவர் ஆர்ட்டிஸ்ட்டா இருந்தாலும் எனக்கு அவர் அண்ணனாகிட்டார்.
விஜயாவுல புரொடக்ஷன் ஹெட்ஸ் ரவிச்சந்திரன் சார், குமரன் சார்கிட்ட என்னை அவர் அறிமுகப்படுத்தினார். வெங்கட்ராமரெட்டி சார், பாரதி ரெட்டி மேம்கிட்ட இந்தக் கதையைச் சொன்னதும் அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. ஷூட்டிங் கிளம்பிட்டோம். இதற்கிடையே உடல்நலமில்லாமல் இருந்த வெங்கட்ராமரெட்டி சார் திடீர்னு இறந்துட்டார். மேற்கொண்டு இந்த புராஜெக்ட் நடக்குமானு கலங்கிட்டோம்.
அப்ப எங்களைக் கூப்பிட்டு ஆறுதல் சொன்னவர் பாரதி ரெட்டி மேம்தான். ‘வெங்கட் சாரோட கனவே, நல்லபடங்கள் நிறைய தயாரிக்கிறதுதான். ஸோ, நீங்க ஷூட்டிங்கை தொடரலாம்’னு சொல்லி, எங்களுக்கு உறுதுணையா நின்னாங்க. ஸ்பாட்ல எப்பவும் நிறைய ஷாட்ஸ் எடுப்பேன். எடிட்டருக்கு அது உதவும். என்கிட்ட உதவி இயக்குநரா என் தம்பி விஜய் பிரதீப் ஒர்க் பண்றார். என் உதவி இயக்குநர் டீமை எப்பவுமே ‘நாளைய இயக்குநர்கள்’னுதான் சொல்லுவேன். டைட்டில் கார்டுல கூட அப்படித்தான் இடம்பெற வைக்கறேன்.
முதல்முறையா விஜய் சேதுபதியோட ஒர்க் பண்ணியிருக்கீங்க..?
சந்தோஷமா இருக்கு. இதுல அவர் ஹவுசிங் போர்டுல வசிக்கறவர். அவரது கேரக்டர் நம்ம பக்கத்து வீட்டுப் பையனை நினைவுபடுத்தலாம். எப்பவும் தன்னை ஒரு ஹீரோனு என்னிக்குமே அவர் காட்டிக்கிட்டதில்ல. யதார்த்தமான மனிதர். எல்லாத்தையும் பாசிட்டிவ்வா எடுத்துப்பார். சீன்ல சின்ன சேஞ்ஜ் சொல்ல வந்தாலும் கூட, ‘ப்ரோ இப்படிப் பண்ணிக்கலாமா? உங்களுக்கு இது ஓகேவா? அப்படிச் சொல்லலாமா’னு ஃப்ரெண்ட்லியா கேட்பார்.
அந்த கரெக்ஷனை ஓகே சொல்ல கொஞ்சம் நான் தயங்கி நின்னாக் கூட, ‘வேணாம்... உங்க முகம் சரியில்ல’னு புன்னகைப்பார். என்னோட கதை கெட்டுடக்கூடாதுனு நினைப்பார். எந்த ஒரு சூழலிலும் இயக்குநரைத் தாண்டி பண்ணணும்னு நினைக்க மாட்டார். முழுப்படமும் முடிச்சு விஜய் சேதுபதி சாரோட டப்பிங் முடிச்சதும், ‘மறுபடியும் அவரோட எப்போ ஒர்க் பண்ணப்போறோம்’னு ஃபீல் ஆகிடுச்சு. அதே ஃபீல்ல அவரும் இருந்தார்.
விக்ரம், சிம்பு, சந்தானம்... இவங்களோட டச்ல இருக்கீங்களா?
நிச்சயமா! எல்லார்கிட்டேயும் வாட்ஸ்அப்ல பேசிட்டுத்தான் இருக்கேன். சிம்பு சார்கிட்ட என்னைப் பத்தி யார் பேசினாலும் ரொம்பவும் பாசிட்டிவ்வா சொல்வார். என்னுடைய நலனை விரும்புறவர். அதேபோல சந்தானம் சார் இல்லேனா ‘வாலு’ தொடங்கியிருக்கவே முடியாது. அதோட ஒவ்வொரு தேக்க நிலையிலும் எனக்கு தைரியமும் நம்பிக்கையும் கொடுத்தவர். இப்ப அவர் ஹீரோவானாலும் என்னிக்குமே அவர் எனக்கு ஹீரோவாகத்தான் தெரியறார்.
‘ஸ்கெட்ச்’ ரிலீஸாகி ஐம்பதாவது நாள் ஓடிட்டிருக்கு. திடீர்னு விக்ரம் சார்கிட்ட இருந்து போன். ‘எங்க இருக்கீங்க’னு கேட்டார். வீட்லதான் இருந்தேன். அதைச் சொன்னேன். ‘நம்ப மாட்டேன். உடனே லொகேஷன் ஷேர் பண்ணுங்க’ன்னார். வாட்ஸ்அப்பில் நான் இருக்கும் இடத்தை ஷேர் பண்ணினேன். அடுத்த அரைமணிநேரத்துல விக்ரம் சார், அவரோடு மனைவி சகிதமா எங்க வீட்டுக்கு வந்து எங்களோட பேசிச் சிரிச்சு, சில மணி நேரம் செலவிட்டார்! ரொம்ப சந்தோஷமா இருந்தது!
மை.பாரதிராஜா
|