ஆட்டோ அக்கா



‘‘இரவில் எப்போது எங்கிருந்தாலும் கூப்பிடுங்கள்... நான் வருவேன்! காசு இல்லையா? பரவாயில்லை.ஏறுங்கள்...’’ என பெண்களுக்கும், ஏழைகளுக்கும் கை கொடுக்கிறார் சென்னை பெண் ஆட்டோ ஓட்டுநர் பி.வி.ராஜி.

‘ராஜி அக்கா’, ‘ஆட்டோ அக்கா’ என எந்த ஆட்டோ நிறுத்தங்களில் விசாரித்தாலும் அக்காவின் அலைபேசி எண் கிடைக்கும். சிறந்த ஆட்டோ ஓட்டுநர் என காவல்துறையும் முதலமைச்சரும் விருது கொடுத்து கவுரப்படுத்தியிருக்கும் ராஜி அக்காதான் இந்திய அளவில் பிரபல டாக்ஸி ஆப்பில் அதிக ரேட்டிங் பெற்றிருப்பவர்!

‘‘சொந்த ஊரு பாலக்காடு. அப்பா மிகப்பெரிய வைத்தியர். பெரிய வசதியோட நல்ல பெயரோட எங்க குடும்பம் இருந்தது. அப்படிப்பட்டவங்க காதலை எப்படி ஏத்துப்பாங்க?

அதேதான், சாதிப் பிரச்னை. அப்படியே கிளம்பி கோவை வந்துட்டோம். என் கணவர் பேரு அசோக்குமார். அவருக்கு உதவியா இருக்குமேனுதான் ஆட்டோ லைசன்ஸ் எடுத்தேன். அதோடு முடிஞ்சது. அப்புறம் டிராவல்ஸ் கம்பெனில அக்கவுன்டன்ட்டா வேலைக்கு சேர்ந்தேன்...’’ புன்னகைக்கும் ராஜி அக்கா, தத்துவத்தில் பிஏ முடித்தவர். டைப்ரைட்டிங், கம்ப்யூட்டர் படித்தவர்.

‘‘கோவைல குண்டு வெடிச்ச நேரம்... எல்லா தொழிலும் இறங்குமுகமாச்சு. கணவருக்கும் பெரிசா சவாரி இல்ல. நான் வேலை பார்த்த டிராவல்ஸ் கம்பெனியும் நஷ்டத்துல போக ஆரம்பிச்சது. என் பிரதர் சென்னைக்கு வானு கூப்பிட்டார். புறப்பட்டு வந்தோம். எல்லா டிராவல்ஸ் நிறுவனத்துலயும் ஏறி இறங்கினேன். எதுவும் சரிப்பட்டு வரலை.

அப்பதான் கைல ஆட்டோ லைசன்ஸ் இருக்கறது நினைவுக்கு வந்தது. போதாதா..? ஆட்டோ ஓட்ட ஆரம்பிச்சேன்! உண்மையை சொல்லணும்னா அன்புனா என்னனு ஆட்டோகாரர்கள்கிட்டதான் கத்துக்கிட்டேன்...’’ நெகிழும் ராஜி அக்கா, சென்னைக்கு வந்து ஆட்டோ ஓட்ட ஆரம்பித்த நாள் முதலே நள்ளிரவில் வீட்டுக்குச் செல்ல முற்படும் பெண்களை தன் வண்டியில் ஏற்ற ஆரம்பித்திருக்கிறார்.

‘‘லேட் நைட்ல வேலை முடிச்சுட்டு வருவாங்க. நின்னு, ‘ஏறிக்குங்கமா’னு சொல்வேன். ‘இல்லக்கா... பஸ்ஸுக்குதான் காசு இருக்கு’னு சொல்வாங்க. ‘பரவாயில்லை ஏறுங்க. வீடு வரை சும்மாதான் போறேன். தனியா நீங்க போறது ஆபத்து. உங்க வீட்ல எறக்கிடறேன்’னு கூட்டிட்டுப் போவேன்...’’ என்ற ராஜி அக்கா பல பிரச்னைகளைச் சந்தித்திருக்கிறார்.

‘‘ஒருமுறை சவாரிக்கு வந்த ஒருத்தர், ‘பொண்ணுங்க யாராவது இருக்காங்களா’னு கேட்டார். ‘சார்... அதெல்லாம் எனக்குத் தெரியாது’னு சொன்னேன்.
உடனே, ‘அப்ப நீங்க வருவீங்களா’னு கேட்டார். கோபப்படலை... கத்தலை. மவுனமா கூட்டமா இருந்த இடத்துல ஆட்டோவை நிறுத்தி, ‘இந்த மாதிரி என்னை இந்தாள் கூப்பிடறார்’னு மக்கள்கிட்ட சொன்னேன்.

உடனே அவங்க அவரை கண்டிச்சு அனுப்பினாங்க. இப்ப அதுமாதிரி ஆட்களைப் பார்த்தேன்னா கண்டிப்பா அடிப்பேன்! வேலைக்குப் போற பெண்கள்... நைட்ல வேலை பார்க்கிற பெண்கள்னா இளக்காரமா?’’ என்று கேட்கும் ராஜி அக்காவை சவாரிக்கு அழைப்பது எளிது.

‘‘கூகுள்ல என் நம்பர் இருக்கு. தவிர பல பெண்கள் என்னைப் பத்தி அவங்க தோழிங்ககிட்ட சொல்லிச் சொல்லி வாய் வழியாவே என் நம்பர் பலர்கிட்ட இருக்கு. ரொம்ப லேட் ஆகிடுச்சு... எந்த வண்டியும் கிடைக்கலைனா தாராளமா என்னைக் கூப்பிடலாம். எவ்வளவு தூரமா இருந்தாலும் வந்துடுவேன்.

மீட்டர் போட்டுதான் வண்டி ஓட்டறேன். என் நண்பர்கள்கிட்டயும் ‘மீட்டர் போட்டு ஓட்டுங்க’னுதான் சொல்றேன். எல்லா ஆட்டோக்காரர்களும் மீட்டர் போட்டு வண்டி ஓட்டினா கார்ப்பரேட்காரங்க உள்ள வரமாட்டாங்க...’’ என்ற ராஜிக்கு ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள். பெண்ணுக்குத் திருமணமாகிவிட்டது. மகன் படித்து முடித்து அக்கவுன்டன்டாகஇருக்கிறார்.

‘‘ஆட்டோ ஓட்டினது போதும்னு பையன் சொல்றான். எனக்கு தெம்பு இருக்கற வரை நான் ஆட்டோ ஓட்டுவேன்னு அவன்கிட்ட சொல்லிட்டேன்!’’ அழகாகச் சிரிக்கிறார் ராஜி அக்கா!                

ஷாலினி நியூட்டன்

ஆ.வின்சென்ட் பால்