ஆப்பிள் குழந்தை!



கடந்த வருடத்தின் டிசம்பர் மாதம். இன்னும் நான்கு மாதங்களில் அம்மா ஆகிவிடுவோம் என்று கனவில் இருந்தாள் அந்தக் கர்ப்பிணிப் பெண். இந்நிலையில் உடல் நிலை சரியில்லை என்று அமெரிக்காவின் சான்டியாகோ நகரில் உள்ள ஷார்ப் மேரி பிர்ச் என்ற மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாள்.

இரத்தப் பரிசோதனை, ஸ்கேன் என எல்லா வகையான பரிசோதனைகளும் செய்யப்பட்டன. அவளுக்கிருக்கும் பிரச்னையை வாயில் நுழைய முடியாத பெயரைக் கொண்டு மருத்துவர்கள் அழைத்தார்கள். தவிர, உயர் ரத்த அழுத்தம் வேறு அவளை பாடாய் படுத்துகிறது. வயிற்றில் இருக்கும் 23 வாரமே ஆன குழந்தையை வெளியில் எடுத்தால் மட்டுமே அவள் உயிர் பிழைக்க முடியும். அறுவை சிகிச்சைக்கு அவளும் கணவனும் சம்மதித்தார்கள்.

அடுத்த நாள் இரவு பத்து மணிக்கு அறுவை சிகிச்சை முடிந்தது. ஒரு குட்டியூண்டு பெண் குழந்தை அவர்களுக்குப் பிறந்தது. ஓர் ஆப்பிளின் எடையளவே அந்தக் குழந்தை இருந்தது. அதாவது 245 கிராம்.  உலகின் மிகச் சிறிய குழந்தை என அக்குழந்தை இணையத்தில் வைரலானது. படுக்கையில் குழந்தையிருப்பதே தெரியாது. அருகில் போய்ப் பார்த்தால் மட்டுமே தெரியும். அந்தளவுக்கு சிறிய குழந்தை அது. ‘சேபி’ என்று செவிலியர்கள் அக்குழந்தைக்கு பெயரிட்டனர்.

இப்படி எடை குறைவாகவும் சிறிய அளவிலும் பிறக்கும் குழந்தைகள் சில மணி நேரத்திலேயே இறந்துவிடும். அதனால் மருத்துவர்கள் சேபியின் தந்தையிடம், ‘‘இன்னும் ஒரு மணி நேரத்தில் உங்கள் மகள் இறந்துவிடுவாள்...’’ என்றனர்.  துவண்டவர் ஒரு மணி நேரம் மகளின் அருகிலேயே கண்ணீருடன் காத்திருந்தார்.

என்ன ஆச்சர்யம்... சேபி மரணிக்கவில்லை. ஒரு மணி நேரம்... இரண்டு மணி நேரம் ஆனது. பின்னர் இரண்டு நாள்... இரண்டு மாதங்கள்! குழந்தை அப்படியே உயிருடன்! தீவிர சிகிச்சைப் பிரிவில் சேபி இருப்பதால் அவள் எடையும் நாளுக்கு நாள் அதிகரித்தது. இப்போது அந்தக் குழந்தை 2.2 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக உள்ளது!‘அதிசயக் குழந்தை’ என மருத்துவ உலகமே சேபியைக் கொண்டாடுகிறது!       
            

த.சக்திவேல்