ரத்த மகுடம்-54



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

‘‘வாருங்கள் அண்ணா!’’ அனந்தவர்மரை வரவேற்ற சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர், வாயில் அருகில் சங்கடத்துடன் நின்றிருந்த வீரனைக் கண்டதும் புன்னகை பூத்தார்.அவனது சங்கடத்துக்கான காரணம் விக்கிரமாதித்தருக்கு புரிந்தது. எல்லோரையும் போல் ‘மன்னரிடம் அனுமதி பெற்று உங்களை உள்ளே அனுப்புகிறேன்...’ என தன் அண்ணனிடம் சொல்ல முடியாமல் தவித்திருக்கிறான். மற்றவர்கள் போல் ‘மன்னரிடம் அனுமதி பெற்று வா...’ என அண்ணனும் அவனிடம் சொல்லவில்லை.

மாறாக அவன் இருப்பையே அலட்சியம் செய்தபடி தன் அந்தரங்க அறைக்குள் அனந்தவர்மர் நுழைந்திருக்கிறார். இதனால் எங்கே, தான் அவனைத் தண்டிப்போமோ என அஞ்சுகிறான்...புரிந்துகொண்டதற்கு அறிகுறியாக வீரனைப் பார்த்து மீண்டும் புன்னகைத்தார்.லேசான மனதுடன் அவரை வணங்கிவிட்டு அறையின் கதவை ஓசை எழுப்பாமல் இழுத்து மூடினான்.‘‘அமருங்கள்..!’’ மலர்ச்சியுடன் இருக்கையைக் காட்டினார்
விக்கிரமாதித்தர்.

‘‘அமர்வதற்காக நான் வரவில்லை விக்கிரமாதித்தா!’’ கர்ஜித்த அனந்தவர்மர், சுவரில் தொங்கிக் கொண்டிருந்த திரைச்சீலையில் தீட்டப்பட்டிருந்த சிவகாமியின் உருவத்தை வெறுப்புடன் பார்த்தார்.அண்ணனின் பார்வை சென்ற திக்கையும் அவரது முகமாறுதலையும் கண்ட சாளுக்கிய மன்னர், தன் முகத்தில் எந்த உணர்ச்சியையும் படரவிடவில்லை. சாதாரணமாகவே உரையாடலைத் தொடர்ந்தார். ‘‘இன்று விசாரணை மண்டபத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்ததா..?’’‘‘நடக்க வேண்டும் என்று நீ நினைத்தவை அனைத்தும் இம்மி பிசகாமல் அரங்கேறின!’’
‘‘நான் நினைத்ததா..?’’

‘‘ஆம். சாளுக்கிய மன்னனான நீ நினைத்தபடியே அசம்பாவிதங்கள் நடந்தன!’’ ‘கள்’ விகுதியை அழுத்திச் சொன்ன அனந்தவர்மர், ‘‘உன்னைப் பாராட்டத்தான் வேண்டும் விக்கிரமாதித்தா! எதுவுமே தெரியாதது போல் அப்பாவியாகக் கேள்வி கேட்கிறாய் பார்..!’’ என்றார்.
‘‘உண்மையிலேயே எதுவும் எனக்குத் தெரியாது அண்ணா!’’‘‘இதை நான் நம்ப வேண்டுமா..?’’

‘‘உங்கள் விருப்பம். ஆனால், அண்ணனிடம் ஒரு பொறுப்பை ஒப்படைத்தபிறகு அதுகுறித்து கவலையில்லாமல் இருப்பதுதான் இந்தத் தம்பியின் வழக்கம்! தாங்களும் அதை அறிவீர்கள் என நம்புகிறேன்!’’‘‘நீ சொல்வதை மட்டுமல்ல... வேறு சில விஷயங்களையும் அறிய நேர்ந்ததாலேயே இங்கு வந்திருக்கிறேன்... அதுவும் உன் மீதுள்ள நம்பிக்கையில்!’’‘‘எந்த நம்பிக்கையைக் குறிப்பிடுகிறீர்கள் அண்ணா? சாளுக்கிய மன்னன் என்ற முறையில் நம் நாட்டின் பெருமையைக் கட்டிக் காக்க நான் முற்படுவதைத்தானே?’’

‘‘ஆம். சின்ன திருத்தத்துடன்!’’ அனந்தவர்மரின் உதட்டில் இகழ்ச்சி பூத்தது.‘‘என்ன திருத்தம்?’’‘‘சாளுக்கியர்களின் பெருமையைக் குழி தோண்டிப் புதைக்கும் வேலையில் நீ இறங்கியிருக்கிறாய் என்ற நம்பிக்கையுடன்!’’
‘‘உங்கள் குற்றச்சாட்டுக்கு ஆதாரம்..?’’‘‘இன்று விசாரணை மண்டபத்தில் அரங்கேறிய சம்பவங்கள்!’’
‘‘என்ன நடந்தது அண்ணா..?’’

‘‘நீ திட்டமிட்டவை அனைத்தும்! பல்லவர்களின் உபசேனாதிபதியும் சோழ இளவரசனுமான கரிகாலன் காஞ்சியில் இருந்து தப்பிக்க உதவி புரிந்ததாகக் கைது செய்யப்பட்ட கடிகையைச் சேர்ந்த பாலகன் தப்பித்துவிட்டான்!’’‘‘அடாடா... சூழ்ந்திருந்த நம் வீரர்களை மீறி எப்படி அந்தப் பாலகன் தப்பினான்..?’’கேட்ட விக்கிரமாதித்தரை சுட்டெரிக்கும் விழிகளுடன் அனந்தவர்மர் நோக்கினார். ‘‘ஐந்து புறாக்களால்!’’
எதையோ சொல்ல முற்பட்ட சாளுக்கிய மன்னர் சட்டென்று மவுனமானார்.

‘‘ஏன் அமைதியாகிவிட்டாய் விக்கிரமாதித்தா..? ‘ஐந்து புறாக்கள்’ என்ற தகவல் உன் வாயைக் கட்டிவிட்டதா..? காஞ்சிக்கும் பல்லவர்களுக்கும் வேண்டுமானால் இதன் அர்த்தம் புரியாமல் இருக்கலாம். ஆனால், சாளுக்கிய தேசத்தைச் சேர்ந்த ஒவ்வொருவனுக்கும் இந்த ‘ஐந்து புறாக்கள்’ என்பது மிகப்பெரிய எழுச்சியைத் தரக் கூடியது.

ஏனெனில் அது நம் தந்தை இரண்டாம் புலிகேசி கண்டறிந்த போர் வியூகம். வடக்கிலிருந்து ஹர்ஷவர்த்தனர் படைகளுடன் புறப்பட்டு தெற்கு நோக்கி வந்தபோது அவரைத் தடுத்து நிறுத்திய நம் படை, முதல் முறையாக ‘ஐந்து புறாக்கள்’ தந்திரத்தைப் பயன்படுத்தியது. இதை உருவாக்கியவர் நம் தந்தை இரண்டாம் புலிகேசி.

பழக்கப்படுத்தப்படாத புரவிகளை எதிரிகளின் படைக்குள் ஓடவிட்டு அவர்களது அணிவகுப்பைச் சிதைப்பதுதான் இந்த வியூகம்! அதே தந்திரத்தைப் பயன்படுத்தித்தான் இன்று விசாரணை மண்டபத்தில் குற்றம்சாட்டப்பட்டு நின்றுகொண்டிருந்த பாலகனைத் தூக்கிச் சென்றிருக்கிறான்!’’
‘‘யார்..?’’

‘‘யாருக்கு உதவ நீ முற்பட்டாயோ அவனேதான்! கரிகாலன்! பாரதத்திலேயே தலைசிறந்த அசுவ சாஸ்திரியாக இன்றிருப்பது அவன்தானே!’’
‘‘சாளுக்கியர்களுக்கு இழுக்கை ஏற்படுத்தும் எந்த
செய்கையையும் நான் செய்யவில்லை... செய்யவும் மாட்டேன்!’’
‘‘இதை எந்த சாளுக்கியனும் நம்பத் தயாராக இல்லை!’’

‘‘உண்மை வெளிப்படும்போது நிச்சயம் நம்புவான்!’’
‘‘எந்த உண்மையை..?’’
‘‘ஒரு மன்னனாக நாட்டின் நலத்தில் மட்டுமே நான் கவனம் செலுத்துகிறேன் என்ற உண்மையை!’’
‘‘இதன் ஒரு பகுதியாகத்தான் கரிகாலனுக்கும் கடிகை பாலகனுக்கும் உதவுகிறாயா..?’’ தன் தம்பியின் அருகில் வந்து நின்று கேட்டார் அனந்தவர்மர்.
அண்ணனை நேருக்கு நேர் பார்த்தாரே தவிர விக்கிரமாதித்தர் பதிலேதும் சொல்லவில்லை.

‘‘தம்பி! உன் நோக்கம் உயர்வாக இருக்கலாம். ஆனால், அதற்காக நீ தேர்ந்தெடுத்திருக்கும் பாதை நமக்கே குழி பறிக்கக் கூடியது. நம் தலைநகரான வாதாபியில் நரசிம்மவர்ம பல்லவன் ஆடிய வெறியாட்டத்தை நீ மறந்திருக்க மாட்டாய் என மனதார நம்புகிறேன். வடக்கில் இருக்கும் மன்னர்களை எல்லாம் நடுங்கவைத்த நம் தந்தை, இந்தப் பல்லவர்களிடம் தோற்றதாக காஞ்சிபுரத்தில் பேசிக் கொள்கிறார்கள். பட்டயங்களும் கல்வெட்டுகளும் அத்தோல்வி குறித்துப் பேசுகின்றன! இந்த அவமானத்தைத் துடைக்கத்தானே நாம் படையெடுத்து வந்திருக்கிறோம்! பழிக்குப் பழி வாங்கத்தானே தென்னகத்தையே நம் குடையின் கீழ் கொண்டு வர முயற்சிக்கிறோம்!

அப்படியிருக்க, தனிப்பட்ட உன் விருப்பம் காரணமாக ஒட்டுமொத்த தேசத்தையும் படுகுழியில் தள்ளிவிட்டாயே! இதற்காகவா உன்னை சாளுக்கியர்களின் மன்னராக்கினோம்? விக்கிரமாதித்தா... இதற்கெல்லாம் நம் அவையில் நீ பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்! உன் பதில் ஏற்றுக்கொள்ளும்படி இல்லையென்றால் பதவியை விட்டு உன்னை அகற்றவும் தயங்க மாட்டோம்! நாட்டின் நலனை முன்னிட்டு, விசாரணை முடியும் வரை மன்னருக்குரிய எந்தக் கட்டளையையும் நீ இட முடியாது. உன் மனைவியை மட்டுமல்ல, யாரையுமே தற்சமயம் நீ சந்திக்க முடியாது; கூடாது.

அறை வாசலில் காவலைப் பலப்படுத்தி இருக்கிறோம். விரைவில் விசாரணை நடைபெறும். இதைச் சொல்லத்தான் நேரடியாக நானே வந்தேன்!’’சொல்லிவிட்டு வெளியேற முற்பட்ட அனந்தவர்மர், மீண்டும் சிவகாமியின் ஓவியம் வரையப்பட்ட திரைச்சீலையைப் பார்த்தார்.

‘‘இந்த ஆயுதமும் இப்பொழுது கரிகாலனின் வசத்தில் சிக்கி இருக்கிறது! சிவகாமி யார் என்ற உண்மை வெளிப்பட்டால் என்ன ஆகும் என கொஞ்சமாவது யோசித்தாயா..? மன்னிக்க முடியாத உன் குறித்த குற்றங்களின் பட்டியல் நீள்கிறது விக்கிரமாதித்தா!’’
முகத்தைத் திருப்பிக் கொண்டு திரும்பிப் பார்க்காமல் அறையை விட்டு வெளியேறிய அனந்தவர்மரை சலனமின்றி பார்த்துக் கொண்டிருந்தார் சாளுக்கிய மன்னர்.

பிறகு தன் படுக்கையில் அமர்ந்து தலையணைக்குக் கீழ் கையை விட்டு ஒரு மெல்லிய ஆடையை எடுத்து தன் முன் விரித்தார்.தென்னகத்தின் வரைபடம் அதில் தீட்டப்பட்டிருந்தது.அரக்கை எடுத்து அதில் சில இடங்களில் வட்டமிடத் தொடங்கினார்!‘‘தாமதமின்றி அவையைக் கூட்டுங்கள். எல்லோரும் வர வேண்டும் என்பதை அழுத்திச் சொல்லுங்கள்...’’ விடுவிடுவென்று ஸ்ரீராமபுண்ய வல்லபரிடம் கட்டளையிட்டார் அனந்தவர்மர்.

‘‘மன்னரை விசாரித்துத்தான் ஆகவேண்டுமா..?’’
‘‘நாட்டைவிட மன்னன் உயர்ந்தவனல்ல போர் அமைச்சரே! சொன்னதைச் செய்யுங்கள்!’’
‘‘உத்தரவு...’’ வணங்கிய ராமபுண்ய வல்லபர், தன் மடியில் இருந்து ஓலைக்குழல் ஒன்றை எடுத்து அனந்தவர்மரிடம் கொடுத்தார்.
‘‘என்ன இது..?’’

‘‘கங்க இளவரசரிடம் இருந்து கைப்பற்றியது!’’
மேலும் கீழுமாக ஓலைக் குழலை ஆராய்ந்தார் அனந்தவர்மர்.
‘‘கங்க இளவரசரை என்ன செய்யலாம்..?’’

‘‘அவன் வெறும் அம்புதானே? எப்பொழுதும்போல் அரண்மனையில் நடமாட விடுங்கள். ஆனால், கண்காணிப்பு இருக்கட்டும்!’’
‘‘நம் இளவரசர் விநயாதித்தர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை..?’’ ராமபுண்ய வல்லபர் இழுத்தார்.

இதைக் கேட்டு வாய்விட்டுச் சிரித்தார் அனந்தவர்மர். ‘‘பல்லவ இளவரசன் ராஜசிம்மன் எங்கு இருக்கிறான் என பல்லவர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள்! சாளுக்கிய இளவரசர் விநயாதித்தன் எங்கிருக்கிறார் என சாளுக்கியர்கள் அலசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் இரு நாடுகளும் போருக்குத் தயாராகிறது! வேடிக்கையாக இல்லை..?’’ நகைத்தபடி, அவர் செல்லலாம் என சைகை காட்டினார்.
அதை ஏற்று ராமபுண்ய வல்லபர் வெளியேறினார்.

சாளுக்கிய போர் அமைச்சர் அகன்றதும் ஓலைக் குழலில் இருந்து ஓலையை எடுத்து அனந்தவர்மர் படிக்கத் தொடங்கினார்.அவர் நெற்றியில் முத்து முத்தாக வியர்க்கத் தொடங்கின!பாய்ந்து அறையைவிட்டு வெளியே வந்தார். சென்றுகொண்டிருந்த ஸ்ரீராமபுண்ய வல்லபரை அழைத்தார். ‘‘என்ன செய்வீர்கள் என்று தெரியாது. சிவகாமி இங்கு வந்தாக வேண்டும்! உயிருடனோ சடலமாகவோ!’’
‘‘அது... அது...’’

‘‘நடந்தாக வேண்டும் சாளுக்கிய போர் அமைச்சரே! சிவகாமியின் உடல் மர்மம் எக்காரணம் கொண்டும் கரிகாலன் அறிய வெளிப்படக் கூடாது!’’சிவகாமியின் உடலில் பொட்டுத் துணியில்லை. அவள் மீது பாய்ந்த அம்புகள் அனைத்தும் அகற்றப்பட்டிருந்தன. காயங்களுக்குக் களிம்பிடாமல் அவள் உடல் முழுக்க பச்சிலையைப் பூசத் தொடங்கினாள் மருத்துவச்சி!

இனி வாக்கரூ காலணிகளுடன்

Be Restless!

U4ic International நிறுவனத்தின் வாக்கரூ, VKC காலணிகளின் புதிய விளம்பரத் தூதராக நடிகர் அமீர்கான் நியமிக்கப்பட்டுள்ளார்!  முன்னேறத் துடிக்கும் இளைய சமுதாயத்துக்கு வழிகாட்டியாக இருக்கும் முந்தைய சமுதாயத்துக்கும் பொருத்தமான தாரக மந்திரமாக “Be Restless” அமைந்துள்ளது. இதனையே நவீன விளம்பர வாசகமாகவும் முன்மொழிந்துள்ளார்கள்.

கடந்த பல ஆண்டுகளாக இளையோர் முதல் முதியோர் வரை ஆண், பெண், குழந்தைகள் என அனைத்து தரப்பினரின் ஏகோபித்த தேர்வாக இருந்துவரும் வாக்கரூ, VKC காலணிகள் ஒவ்வொருவரின் தேவைக்கேற்ற பிரத்யேக காலணிகளையும் வழங்கி வருகிறது.  Flipflop, Sports Shoes, Life style Shoes, Casual Shoes, Sandals, Loafers என ஒவ்வொரு மாடலையும் கண்ணைக் கவரும் பலவித டிசைன்களிலும் வண்ணங்களிலும் நியாயமான விலையில் வழங்குவதுதான் இவர்கள் ஸ்பெஷல்.

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்