நியூஸ் வியூஸ்-சோலைவனம் ஆகும் பாலைவனம்!
இரும்பை தங்கமாக்கும் ரசவாத வித்தையைவிட கடினமான ஒரு செயல், மணலை மண் ஆக்குவது.ஆச்சரியமாக இருக்கிறதா? மணலும், மண்ணும் ஒன்று என்றே பலரும் கருதுகிறார்கள்.மணலில் (sand) நுண்ணுயிர் செயல்பாடு குறைவு. அதில் செடிகொடிகள் வளராது. மண்ணில் (soil) நுண்ணுயிர்ப் பெருக்கம் உண்டு. இதன் காரணமாக உருவாகக்கூடிய ஊட்டச்சத்தில்தான் விவசாயம் செய்யமுடியும்.
“என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்? ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்?” என்று கவிஞர் மருதகாசி பாடியது நம் மண்ணின் வளத்தை முன்வைத்துத்தான். அந்தப் பாடல் எழுதி ஐம்பது ஆண்டுகள் கழிந்தும் இன்னும் நாம் நம் மண்ணின் வளத்தை முழுமையாகப் பயன்படுத்தவில்லை. வெளிநாடுகளிடம்தான் கையேந்திக் கொண்டிருக்கிறோம்.
ஆனால், மண்ணே இல்லாமல் மணல் மட்டுமே நிரம்பிய ஐக்கிய அரபு அமீரகம், தன் பாலைவன பூமியை வேகவேகமாக சோலைவனமாக்கிக் கொண்டிருக்கிறது!அரேபியப் பாலைவனங்களில் மண் இல்லை. மழை இல்லை. இருந்தாலும் 70களின் தொடக்கத்தில் தாங்களும் விவசாயம் செய்ய முடியுமா என்று கனவு கண்டார்கள்.
தங்கள் கனவை நனவாக்க இரவும் பகலுமாகப் பாடுபட்டார்கள். பாலைவனங்களுக்கு நடுவே இயற்கை அமைத்த சோலைகளாக மிகவும் அரிதாக சில பாலைவனச் சோலைகள் அமைந்திருப்பதுண்டு. இங்கே நீர் இருக்கும். ஈச்சமரங்கள் வளரும்.அம்மாதிரியான சோலை வனங்களுக்கு அருகே கோதுமை பயிரிட ஆரம்பித்தார்கள்.
1981ல் சவுதி அரேபியாவில் 1,48,000 டன் கோதுமை விளைவித்து உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்கள். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மணலை மட்டுமே கண்டு கண்கள் பூத்துப் போயிருந்தவர்களுக்கு பசுமை சொர்க்கமாகத் தெரிந்தது. அரேபிய விவசாயிகள் பலனை எதிர்பாராமல் உழைக்கத் தொடங்க, 1990களின் மத்தியில் 40 லட்சம் டன் வரை கோதுமை உற்பத்தி செய்து உலக சாதனை புரிந்தார்கள். புதியதாக மூன்று லட்சம் ஏக்கர் விவசாய நிலத்தை உருவாக்கியிருந்தார்கள். இதுதான் வளைகுடா நாடுகள் அத்தனையும் விவசாயம் மீது ஆர்வம் கொள்ளக் காரணமாக அமைந்தது.
90களின் தொடக்கத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் விவசாயம் என்பது ஒட்டுமொத்த உற்பத்தியில் 4%தான். மீன்பிடித் தொழிலையும் அங்கே விவசாயத்துக்குள் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும் பேரீச்சம்பழ விவசாயம்தான். பாலைவனத்தில் ஈச்சமரம்தானே வளரும்? எல்லாமே வளரவேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். அரசாங்கத்தை நோக்கி கோரிக்கை வைத்தார்கள். அரசுக்கும் ஆசைதான்.
ஆனால், மரம் செடி கொடிகள் வளர ஏதுவான தட்பவெப்ப நிலையோ, நிலமோ, நீரோ இல்லாமல் என்னதான் செய்வது? இந்தத் தடைகளையும் மீறி ஆங்காங்கே தென்படும் பாலைவனச் சோலைகளில் விவசாயம் செய்ய முன்வரும் விவசாயிகளுக்கு உரம், விதை, பூச்சி மருந்து என்று அனைத்து உற்பத்தி சார்ந்த தேவைகளுக்கு ஐம்பது சதவிகித மானியத்தை அரசு வழங்கியது.
அரசின் ஊக்கத்தைத் தொடர்ந்து ஆங்காங்கே பரிசோதனை முறையிலான பண்ணைகளும், விவசாய ஆராய்ச்சி நிறுவனங்களும் தொடங்கப்பட்டன. நிலத்தடி நீரை நிறுவனங்கள் உறிஞ்சுவதற்கு ஏராளமான கட்டுப்பாடுகளை அரசு விதிக்கத் தொடங்கியது.இத்தனை கால முயற்சிகளுக்குப் பிறகு இப்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் ராசல் கைமா, அல் அய்ன், புஜைரா உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயப் பண்ணைகள் உருவாகியிருக்கின்றன. இங்கே வெள்ளரிக்காய், கத்தரிக்காய், தக்காளி, பீட்ரூட், மிளகாய் மற்றும் கிழங்கு வகைகள் பயிரிடப்படுகின்றன.
இருப்பினும் இன்றுவரை தங்கள் உணவுத்தேவைக்காக 80% அளவுக்கு இறக்குமதியையே அவர்கள் நம்பியிருக்கிறார்கள். 20% உணவுத் தேவையை மட்டுமே உள்ளூர் உற்பத்தி ஈடு செய்கிறது. இந்த விகிதத்தை அடுத்த முப்பது ஆண்டுகளில் அப்படியே தலைகீழாக மாற்றித் தீருவது என்று பேய்த்தனமாக வேலை பார்த்து வருகிறார்கள்.
குறைவான நிலத்தை பயன்படுத்தி அதிக மகசூல் கொடுக்கக்கூடிய பயிர் முறைகள், மண் தேவைப்படாத hydroponics விவசாய முறை, new greenhouse gas technology என்று நவீன தொழில்நுட்பமுறைகளை பயன்படுத்தத் துவங்கி இருக்கிறார்கள். இதற்காக ஐநா உணவு மற்றும் விவசாயக் கூட்டமைப்பு போன்ற நிறுவனங்களோடு இணைந்து பணியாற்றுகிறார்கள்.
விவசாய உற்பத்தியில் மட்டுமின்றி, வேறு சில நாடுகளில் உற்பத்தியாகும் பொருட்களை வாங்கி, வேறு சில நாடுகளுக்கு விற்கும் (re-export) வேலைகளுக்கான கட்டமைப்புகளையும் உருவாக்கி வருகிறார்கள். இதற்காக உணவுப் பொருட்களை பதமாக பாதுகாக்கும் பெரிய கிடங்கு அமைப்புகளையும் உருவாக்கி இருக்கிறார்கள்.
உணவு தயாரிப்பு மற்றும் இறக்குமதி தொடர்பாக சமீப காலத்தில் இந்தியாவுடன் கூட 15க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் ஐக்கிய அரபு அமீரகம் கையெழுத்திட்டிருக்கிறது. உலகம் முழுக்க பல்வேறு நாடுகளிலும் இதேபோன்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்வதற்கு அவர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
நிலத்தில் மட்டுமின்றி கட்டடங்களின் மாடி மற்றும் பக்கவாட்டுச் சுவர்களில் பயிர் செய்வதற்கு ஏதுவான முறைகளை அங்கிருக்கும் சுற்றுச் சூழல் அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.துபாயில் இருக்கும் சர்வதேச விவசாய மையம் ஒன்று மரபான பயிர்த்தேவைகளுக்கான நீரில் 10 சதம் மட்டுமே பயன்படுத்தி அதே அளவு மகசூலை பெறக்கூடிய ஒரு புதிய விவசாய முறை குறித்த ஆராய்ச்சியில் கிட்டத்தட்ட வெற்றியடையும் நிலையில் இருக்கிறது.
அபுதாபியில் இருக்கும் உணவு பாதுகாப்பு அமைப்பு, பாதுகாக்கப்பட்ட விவசாயத் திட்டம் என்கிற பெயரில் ஒரு திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. பல்வேறு பயன்பாடுகளுக்காக பயன்படுத்தி வீணாகும் நீரைச் சுத்திகரித்து inbuilt cooling system உருவாக்கி, பயிர்கள் வளர்வதற்கு ஏதுவான தட்பவெப்பத்தை செயற்கையாக உருவாக்கும் முன்னோடித் திட்டம் அது.
பாலைவனத்தை சோலைவனமாக்கும் முயற்சி, கிட்டத்தட்ட கல்லிலே நார் உரிக்கும் கதைதான். இருப்பினும் அதிலும் பாராட்டத்தக்க முயற்சியாக இயற்கை விவசாயத்துக்காக கிட்டத்தட்ட 50,000 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி இருக்கிறார்கள். ஆர்கானிக் உணவுப் பொருட்கள் மீது உலகம் முழுக்கவே உருவாகி இருக்கும் மதிப்பை அவர்களும் உணர்ந்திருக்கிறார்கள். இயற்கை விவசாயம் செய்ய முன்வரும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக Mawroothna privilege card என்கிற ஒரு திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். இதன் மூலம் அவர்களுக்கு தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு பலன்கள் கிடைக்கும்.
ஐக்கிய அரபு அமீரகம், தங்கள் நாடுகளில் மட்டுமின்றி நமீபியா, தென்னாப்பிரிக்கா, சூடான் போன்ற நாடுகளில் பெரும் முதலீடு போட்டு ‘ஆஃப்ஷோர் விவசாயம்’ செய்துவருகிறது. அதாவது முதலீடு இவர்களுடையது. அந்தந்த நாடுகளில் இருக்கும் விவசாயிகள், பயிர்களை விளைவித்து தங்களுக்குரிய லாபத்தை எடுத்துக் கொண்டு இவர்களுக்கு சப்ளை செய்ய வேண்டும்.
ஊர் கூடி தேர் இழுப்பது மாதிரி விவசாயத்தைக் காப்பதற்கு பாலைவன நாடுகள் போராடிக் கொண்டிருக்கின்றன. UAE விண்வெளி அமைப்பு, ஜப்பானியர்களோடு தங்கள் பகுதி விவசாயப் பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்து ஆலோசித்து வருகிறது.
சாட்டிலைட் மூலமாக பயிர்கள் வளர்ச்சியைக் கண்காணிப்பது, பயிர்களை பூச்சி தாக்குவதை முன்கூட்டியே கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சித்து வருகிறார்கள்.ஒன்றுமே இல்லாமல் அவர்கள் என்னென்னமோ செய்துகொண்டிருக்கிறார்கள். பொன் விளையும் வயல்களை ஒழித்து மீத்தேன் எடுக்க நாம் நம் அன்னை பூமியைச் சிதைத்துக் கொண்டிருக்கிறோம்!
யுவகிருஷ்ணா
|