எளிய பயிர் பாதுகாப்பு முறைகளும் தயாரிப்புகளும்...



ஹோம் அக்ரி - 30

மஞ்சள் கரைசல்: கொஞ்சம் பச்சையான மஞ்சள் கிழங்குகளை சிறிது சிறிதாக நறுக்கி அதுபோல பத்து மடங்கு கோமியத்தில் ஒரு நாள் ஊறவைக்க வேண்டும். மறுநாள் அதை அரைத்து 2 - 3 லிட்டர் தண்ணீரில் கலந்து நன்றாக வடிகட்டி உபயோகப்படுத்தலாம். கோமியம் கிடைக்காதவர்கள் வெறும் நீரிலும் செய்து கொள்ளலாம். மஞ்சள் எல்லா இடங்களிலும் வணிக ரீதியாக வளர்க்கமுடியாதென்றாலும், சிறிய அளவில், தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் வளர்த்து வீட்டிற்கும் மருந்துக்கும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். இந்தக் கரைசலால் கம்பளிப்புழு, அசுவணி மற்றும் சிவப்பு சிலந்தியை கட்டுப்படுத்தலாம்.

துளசி இலைக் கரைசல்: இதையும் மேற்கண்டவாறே செய்ய வேண்டும். மஞ்சளுக்கு பதில் துளசி இலை. இந்தக் கரைசலில் கம்பளிப்புழு, புள்ளி வண்டு, செதில் பூச்சி மற்றும் பழ ஈ இவைகளை கட்டுப்படுத்தலாம். வசம்புக் கரைசல்: காய்ந்த வசம்பை பொடி செய்து, இரவில் ஊற வைத்து, வடிகட்டி உபயோகப்படுத்தலாம். இது அசுவிணியைக் கட்டுப்படுத்தும். சீத்தாப்பழ இலைக்கரைசல்: சீத்தாப்பழ இலை மிகச்சிறந்த பூச்சி விரட்டும் தன்மை கொண்டது. இதை தனியாகவோ மற்ற இலைகளோடோ சேர்த்து உபயோகப்படுத்தலாம்.

இது இரசாயன பூச்சிக்கொல்லிகளுக்கு இணையாக துரிதமாகவும், திறமையாகவும் வேலை செய்யக்கூடியது. குறிப்பாக இலை சுருட்டுப்புழு மற்றும் செதில் பூச்சி, புள்ளி வண்டு இவைகளுக்கு எதிராக நன்றாக வேலை செய்யக்கூடியது. பூச்சியை விரட்டக்கூடிய அல்கலாய்டுகள் மற்றும் சில இயற்கை இரசாயனங்கள் இந்த இலைகளிலும், விதைகளிலும் இருக்கின்றன. இந்த இலைகளையும், விதைகளையும், இடித்து இரவு முழுவதும் நீரில் ஊற வைக்கவேண்டும். பின்னர் அரைத்து வடிகட்டி உபயோகப்படுத்தலாம். இந்த இலைக்கரைசலுடன் காய்ந்த அல்லது பச்சை மிளகாயிலிருந்து எடுத்த சாறு, மற்றும் வேப்பங்கொட்டை அல்லது வேப்ப இலை சாறை சேர்த்துக்கொண்டால் நல்ல பலன் இருக்கும்.

இஞ்சி பூண்டு மிளகாய் கரைசல்: இது பொதுவான பூச்சிக்கொல்லி / பூச்சி விரட்டி. காய்த்துளைப்பான், இலை உண்ணும் பூச்சிகள், இலைப்பேன் மற்ற சில பூச்சிகளையும் விரட்டக்கூடியது. இதை தயாரிக்க இந்த மூன்றையும் சமமான அளவிலோ, அல்லது பூண்டை மட்டும் கொஞ்சம் அதிகமான அளவிலோ எடுத்து அரைத்துக் கொள்ளவும். 100 கிராம் அளவுள்ள பொருளுக்கான கரைசலுக்கு 3 லிட்டர் நீர் கலந்து தெளிக்கலாம். பூண்டை நீரில் அரைப்பதைக் காட்டிலும், மண்ணெண்ணெயில் ஊறவைத்து அரைத்து மற்ற பொருட்களுடன் சேர்த்தால் அதிக பலன் கிடைக்கும்.

புகையிலைக் கரைசல்: புகையிலை ஒரு மிகச்சிறந்த பூச்சிக்கொல்லி. இது ஒரு இயற்கை முறையாக இருந்தாலும், இயற்கை விவசாய சான்றிதழ் வாங்கியிருப்பவர்கள் உபயோகப்படுத்தக்கூடாது. சான்றிதழ் விதிகளின்படி இது தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி. புகையிலையைப் பயன்படுத்த இலையை ஊறவைத்து நீரில் நன்றாகக் கொதிக்க விடவேண்டும். கொதிக்கும்போது தேவைப்பட்டால் வேப்ப இலையையும், பச்சை மிளகாயையும் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு கிலோ பொருளை 15 லிட்டர் நீரில் கொதிக்கவைக்கலாம். பிறகு வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.  

இது சக்திவாய்ந்த கரைசல். அதனால் 100 லிட்டர் நீருக்கு 3 லிட்டர் இந்தக் கரைசல் சேர்த்தால் போதுமானது. வடிகட்டி விட்டால் எந்த தெளிப்பானிலும் உபயோகப்படுத்தலாம். ஒரு இயற்கை விவசாயி கீழ்க்கண்டவைகளை எப்போதும் இருக்குமாறு பார்த்துக்கொண்டால், எளிதில் பூச்சிவிரட்டிகளைத் தயாரித்து உபயோகப்படுத்திக்கொள்ளலாம். பசுமாடு / காளை மாடு - கோமியம் மற்றும் சாணத்திற்காக; நொச்சி மரம் - 1; மஞ்சள் கிழங்கு - 15; சீத்தா மரம் - 1; வேப்ப மரம் - 1; பப்பாளி மரங்கள் - 5; புகையிலைக் கன்றுகள் - 10; எருக்கு - 2; புங்க மரம் - 1; வசம்பு கிழங்கு - 10; ஆடாதோடா - 1; நில வேம்பு - 15; காட்டாமணக்கு - 2; பிரண்டை - 2.

இதுதவிர எப்போதும் கைவசம் வேப்ப எண்ணெய், புங்க எண்ணெய், வேப்பங்கொட்டை, புங்க விதை, காய்ந்த புகையிலை, சோடா உப்பு, சமையல் சோடா, போராக்ஸ் பவுடர், ஒட்டும் திரவம், இனக்கவர்ச்சிப் பொறி, மஞ்சள் அட்டை, நீல அட்டை போன்றவற்றை வைத்திருக்க வேண்டும். இதனால் ஆரம்ப நிலையிலேயே பூச்சி அல்லது நோய் தாக்குதலை கட்டுப்படுத்தலாம். விளக்குப்பொறிகளை நாம் எளிதில் தயாரிக்கலாம் என்றாலும், சூரிய ஒளியில் இயங்கும் கடையில் கிடைக்கக்கூடிய பொறிகள் பயன்படுத்த எளிது.

அத்துடன் நாம் ஒவ்வொரு நாளும் பொறி வைத்திருக்கக்கூடிய இடத்திற்குச் செல்ல வேண்டிய தேவையைக் குறைக்கின்றன. இந்தப் பொறிகள் இனக்கவர்ச்சிப் பொறியோடு, தானாக மாலையில் ஆரம்பித்து காலையில் நின்றுவிடும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. பகல் நேரத்தில் பூச்சிகளை தொட்டியிலிருந்து எடுத்துக் கொட்டினால் போதும். இனக்கவர்ச்சிப்பொறிக்குத் தேவையானவற்றை தனியாக தீரத் தீர வாங்கிக்கொள்ளலாம் அல்லது நாமே தயாரித்துக் கொள்ளலாம்.

(வளரும்)

* ‘Simarouba glauca’ என்ற வெளிநாட்டு மூலிகையை பயன்படுத்தி முழு குணம் அடைந்திருக்கிறேன். இங்கு பெங்களூருவில் பலரும் இந்த மரத்தை வளர்ப்பதோடு, இலைகளை விலைக்கும் விற்கிறார்கள். இது குறித்து சொல்ல முடியுமா..?
- சீனிவாசன், பெங்களூரூ.

இதை கேரளாவில் பலரும் ‘லக்ஷ்மி தாரு’ என்ற பெயரில் வளர்த்து வருகிறார்கள். சொர்க்க மரம் என்றும் இதை அழைக்கிறார்கள். வெளி நாட்டு மரமாக இருந்தாலும், பெரும்பாலான ஆராய்ச்சிகள் இந்தியாவிலேயே செய்யப்பட்டுள்ளன. இது கேன்ஸர் செல்களை அழிக்கக்கூடியது என்று அமெரிக்காவின் தலைசிறந்த புற்று நோய் ஆராய்ச்சி நிறுவனங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பலவிதமான வயிற்றுக் கோளாறுகளை சரிசெய்யும் வல்லமையும் இதற்கு உண்டு. வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை வியாதிகளையும் கட்டுப்படுத்துகிறது. வயிற்றுப்புண் (ulcers) மற்றும் வெண்புள்ளிகளை குணப்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

* டிரே முறையில் நெல் நாற்று பாவியிருந்தேன். நாற்று தயாராகும் முன் அவை மஞ்சள் பழுப்பு நிறமாக மாறி பின் எல்லா நாற்றுகளுக்கும் பரவுகிறது. இந்த சமயத்தில் என்ன செய்யலாம்?
- குணசேகரன், மதுரை.

இது Bacterial blight அல்லது துங்ரோ வைரஸ் காரணத்தால் இருக்கும். நம்பிக்கையான இடத்திலிருந்து மட்டும் விதை வாங்கவும். இரண்டாவது, தங்கள் இடத்தில் நன்றாக வரக்கூடிய நெல்வகைகளை மட்டும் உபயோகப்படுத்தவும். வைரஸ், பாக்டீரியாவால் தாக்கப்பட்ட நாற்றுகளை உபயோகப்படுத்தாமல் இருப்பது நல்லது. இதற்கு வைத்தியம் பார்ப்பதைக் காட்டிலும், வேறு நாற்றுகளைப் பயன்படுத்தலாம். மேலும் பரவாமல் இருக்க மொத்த நாற்றையும் மண்ணில் புதைத்து விடவும். நீங்கள் டிரேயில் வளர்த்தது நல்லதாகப் போயிற்று. இல்லாவிட்டால் வயலில் இதன் தொற்று பரவி இருக்கும்.

- மன்னர் மன்னன்