எங்கள் வாழ்க்கை உங்களுக்கு போர்னோவா?



பொங்கி எழும் பெண்கள்!

பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம் கிடைத்துள்ளதுதான் கடந்த வார இணையதள உரையாடல்களில் ஹாட் டாபிக். கருவில் ஜனித்த பெண் சிசுவை அழிப்பதில் தொடங்கி மரணம் வரை பெண்களைப் பின் தொடரும் வன்முறை, வக்கிரங்களின் வகைகளைப் பட்டியலிட்டால் தீராது. அதில் சமீபகாலமாக இணைந்திருக்கிறது ஸ்பை கேம் போர்ன். ஒரு பெண்ணை அவரது சம்மதம் இல்லாமலோ சம்மதத்தோடோ நிர்வாணமாகப் படம் பிடித்துவிட்டு, பிறகு அவரது சம்மதம் இல்லாமலேயே அதை வெளியில் பரப்புவதன் பெயர்தான் ஸ்பை கேம் போர்ன்.

இதை, பழிவாங்கும் போர்ன், அதாவது Revenge Porn என்றும் அழைக்கிறார்கள். இப்படியான குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் அந்தப் பெண்ணுக்கு நன்கு தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என இருவகையாக உள்ளனர். துணிக் கடைகளில், தியேட்டர், பூங்கா, பொது நீச்சல் குளம் போன்றவற்றின் கழிப்பறைகளில் கேமராவை ரகசியமாக ஒளித்து வைத்து படம் பிடித்து அதைப் பரப்பும் சைக்கோக்கள் ஒருவகை. தன் காதலியாகவோ மனைவியாகவோ இருந்தபோது எடுத்த அந்தரங்கமான வீடியோக்கள், படங்களை பின்னர் அப்பெண்ணின் சம்மதம் இல்லாமலேயே பரப்புபவர்கள் இரண்டாவது வகை.

இந்தியாவைப் பொறுத்தவரை இரண்டாவது வகையான வீடியோக்கள்தான் அதிகமாகப் பரப்பப்படுகின்றன என்பதுதான் குரூரமான உண்மை. அந்தரங்கம் புனிதமானது என்பார்கள். தன்னை நம்பி வரும் ஒரு பெண்ணை அவளது விருப்பத்துடனோ விருப்பமின்றியோ வீடியோ எடுப்பதே தவறான விஷயம்தான். அதைப் பிற்பாடு வெளியில் பரப்புவது என்பது சைக்கோதனத்தின் உச்சம். இந்தியாவில் இப்படியான குற்றங்களுக்கு எதிராகக் கடுமையான சட்டங்கள் உள்ளன.

தொழில்நுட்ப குற்றச் சட்டம் 67 மற்றும் 67A இரண்டும் பாலியல் சுரண்டல் நோக்கங்களோடு செயல்படுவதைக் குறிக்கின்றன. பாலியல் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்களை யாரேனும் வெளியிட்டாலோ வெளியிட்டதைப் பகிர்ந்தாலோ அவர்கள் விதி 67ன்படி ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனையுடன் ஒரு லட்சம் ரூபாயை அபராதமாகக் கட்ட வேண்டும். விதி 67Aன்படி ஏழாண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டி இருக்கும். இதுபோக விதி 66E, ஒருவரின் தனிப்பட்ட படங்களை அவரது சம்மதமின்றி பரப்புவதற்கு எதிராக உள்ளது. இதைத் தவிர இந்திய கிரிமினல் சட்டம் 500ன் படி, புகழுக்குக் களங்கம் என்ற புகாரும் தரமுடியும்.

ரிவென்ஜ் போர்ன் தொடர்பான புகார்கள் தர பாதிக்கப்பட்ட பெண்தான் செல்ல வேண்டும் என்றில்லை. அவர் சார்பாக வேறு யார் வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம். அவசியம் எனில் வழக்கை ஒரு பெண் போலீஸ் அதிகாரி விசாரிக்கவும் கோரிக்கை வைக்கலாம். இவை எல்லாம் சட்டத்தில் உள்ளன. ஆனால், நடைமுறையில் இப்படியான குற்றங்களுக்கு எதிராக ஏதேனும் நடவடிக்கை உள்ளதா எனப் பார்த்தால் கிட்டத்தட்ட ஜீரோதான் பதில்.

இணையதளத்தின் வருகைக்குப் பின் ஆறாகப் பெருகும் பாலியல் வீடியோக்களின் வெள்ளத்தில் பாதிக்கு மேல் இப்படியான கேண்டிட் போர்ன்கள்தான். இவற்றுக்கு எதிராக மிகக் குறைந்த பெண்களே வழக்குத் தொடுக்கிறார்கள். பெண்கள் இதை தங்களுக்கு ஏற்பட்ட மானக்கேடு எனக் கருதாமல், தனக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று கருதும் நிலை இங்கு வரவேண்டும். அப்படி துணிச்சலாகப் புகார் தரும் பெண்களுக்கு இயல்பான எதிர்காலம் உத்தரவாதமாக்கப்பட வேண்டும். இந்த சமூக முதிர்ச்சி ஏற்படாத வரை எத்தனை சட்டங்கள் இருந்தாலும் இந்த அநீதி தீராது என்பதே கசப்பான உண்மை.

- இளங்கோ
கிருஷ்ணன்   

வழிகாட்டும் தென் கொரியா

கடந்த மாதம் தென் கொரியாவில் ஒரு பெண் ஓர் ஆணை ஸ்பை கேம் மூலம் படம் எடுத்தார் என்ற புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார். மீடியாவில் இது வைரலானபோது உடனடியாக இன்னொரு கேள்வியும் தீயாகப் பரவியது. ஆண்களுக்கு எதிரான இப்படியான புகாரில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் அது. தென் கொரியாவில் பெண்கள் பாதிக்கப்பட்ட வழக்குகள் ஆயிரக்கணக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் கிடப்பில் இருக்கின்றன. இப்படியான சூழலில் அரிதாய் ஓர் ஆண் பாதிக்கப்பட்டதற்கு மட்டும் தீவிர நடவடிக்கை எடுப்பதா என்று பெண்கள் வெகுண்டெழுந்தார்கள்.

‘பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்காக அணி திரள்வோம்’ என்ற கோஷத்துடன் சுமார் முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பெண் கள் திரண்டனர். ‘எங்கள் உடல் உங்களின் போர்னோ அல்ல!’ என்ற பதாகையுடன் அவர்கள் செய்த ஆர்ப்பாட்டம் உலகம் முழுதும் தொற்றிக் கொள்ள, இப்போது பல்வேறு நாடுகளிலும் அந்த அனலடித்துக் கொண்டிருக்கிறது.