கவிதை வனம்



உடைப்படும் வீடுகள்

அதிகாலையில் வீடுடைக்கச்
செல்பவர்களின்
கனவுகளில் குமிக்கப்பட்டுள்ளது
மிஞ்சிய கற்களும்
மணற் துகள்களும்
கற்களுக்குள் ஓராயிரம்
மொகஞ்சதாரோ கதைகள்
ஒவ்வொரு மண்
துகள்களுக்குள்ளும்
பல சிந்து சமவெளிகள்
மங்கல வீடொன்றில் கிடைத்த
ஒரே ஒரு செங்கல்லை
மட்டும் உடைக்காமல்
வைத்திருக்கிறார்கள்
அந்த ஒரு செங்கல்லில்தான்
கட்டிடங்களின்
அஸ்திவாரத்தை அமைப்பார்கள்
அவர்களைப் பொறுத்தவரை
உடைப்பது வேலை மட்டுமல்ல
எவரோ ஒருவரின் கனவின் தொடக்கம்.

- சீதா



சுடர் விளக்கு


குடிகார அப்பாவின்
பொட்டிட்ட
புகைப்படத்தின் கீழே
மண்ணெண்ணெய்
விளக்காய் சுடர்கிறது
குவாட்டர் பாட்டில்.

- தாமு