மீன லக்னம் குரு - சனி சேர்க்கை தரும் யோகங்கள்



கிரகங்கள் தரும் யோகங்கள் - 118

புலனடக்க கிரகமான சனியும், வேதங்களுக்கும் உபநிஷதங்களுக்கும் உரிய குருவும் ஒன்று சேரும்போது முதல்பாதி நம்பிக்கையின்மையிலும், அடுத்த பாதி பக்தியோடும் வாழ்க்கை அமையும். குருவும் சனியும் சேர்ந்திருந்தால் ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடுவார்கள். எப்போதும் அலைச்சல், டென்ஷன் என்றுதான் இருப்பார்கள். நல்ல விஷய ஞானம் இருக்கும். ஏதேனும் ஒன்றில் நிபுணத்துவமும் இருக்கும். ஆனால், எல்லாம் காலம் கடந்த பின்னரே கிட்டும். தான் சார்ந்திருக்கக் கூடிய சம்பிரதாயங்களை ஏன், எதற்கு என்று கேள்வி கேட்பார்கள். நிறைய சம்பாதித்து, சகலத்தையும் அனுபவித்து பின்னர் வாழ்க்கையே நீர்க்குமிழிதான் என்று தத்துவம் பேசுவார்கள்.

ஆழமாய் அனைத்தையும் அறிந்திருந்தும் அவசியப்பட்டால் மட்டும் வெளிப்படுத்துவார்கள். எல்லோரும் விரும்புகிறார்களே என்று ஒரு விஷயத்திற்கு ஆதரவு தரமாட்டார்கள். தனக்குரிய கடமைகளில் எப்போதும் எந்த நிலையிலும் தவற மாட்டார்கள். வயதானவர்கள், மிகவும் முடியாதவர்கள் என்றிருப்போரை வைத்துக் காப்பாற்றுவார்கள். நிர்க்கதியாக இருப்போரின் புகலிடமே இவர்கள்தான் எனில் மிகையில்லை. மேலே சொன்னவை பொதுவான பலன்கள். இனி, ஒவ்வொரு ராசியிலும் லக்னாதிபதியான குருவும் சனியும் தனித்து நின்றால் என்ன பலனென்று பார்ப்போமா?

மீன லக்னத்திலேயே, அதாவது ஒன்றாம் இடத்திலேயே குருவும் சனியும் சேர்ந்திருந்தால் மூத்த சகோதரங்கள் அனுசரணையாக இருப்பார்கள். அறக்கட்டளைகள் மூலம் பள்ளிகளைத் தொடங்கி நடத்துவார்கள். இந்த அமைப்பிலேயே மிகுந்த தொண்டு மனப்பான்மை மிகுந்தவராக இருப்பார்கள். எந்த நியதிப்படி வாழ்கிறோமோ அதை அவ்வளவாக மாற்ற விரும்பமாட்டார்கள். ஆடாமல் அசையாமல் வெகுநேரம் தியானத்தில் அமர்வார்கள். மிக நேர்த்தியாக உடைகளை அணிவார்கள். நல்ல நிர்வாகத் திறனுள்ளவர்களாக விளங்குவார்கள். பணம் இருக்கிறதோ இல்லையோ பெரிய பட்ஜெட்டாக போடுவார்கள். இரண்டாம் இடமான மேஷத்தில் குருவும் சனியும் நின்றால் உண்மையான பகுத்தறிவுத் திறனுக்கு விளக்கமாகத் திகழ்வார்கள். சட்டக் கல்வி பயில்வார்கள்.

ஆனால், ஆரம்பக் கல்வியை போராடியே முடிப்பார்கள். எந்த விஷயத்திற்கும் அக்கறையோடு ஆலோசனைகள் கூறுவார்கள். சிறுவயதிலேயே வாழ்க்கைப் பாடத்தை படிக்கத் தொடங்கி விடுவார்கள். அவசரப்பட்டு யாரையும் எதுவும் கடுஞ்சொல்லால் பேசாமல் இருப்பது நல்லது. தனக்கு சமமான அந்தஸ்தில் இருப்பவர்களைவிட, தமக்கு பணிவிடை செய்பவர்களை மட்டும் முன்னுக்கு கொண்டு வருவீர்கள். கல்லூரியில் அரசியல், நிர்வாகம் சார்ந்த படிப்புகளை தேர்ந்தெடுக்க வேண்டும். மருத்துவத் துறையில் கண், மூளை, கபாலம், முகம் சம்பந்தமான துறை சரியாக வரும். மூன்றாம் இடமான ரிஷபத்தில் குருவும் சனியும் இருந்தால் சனியினுடைய தன்மைதான் ஆளுமை செய்யும்.

இதுவொரு நல்ல அமைப்பும் கூட. பெரிய பதவிகளெல்லாம் மிகச் சாதாரணமாக இவர்களை வந்தடையும். ‘‘எல்லா விஷயமும் தெரிஞ்சவரா இருக்காரு. ஏன் இப்படி தப்புமேல தப்பு பண்றாரு’’ என்று பேசுவார்கள். எல்லா விஷயங்களையும் அறிந்தும் புரிந்தும் வைத்திருப்பதால் முகத்தில் ஒரு முதிர்ச்சியிருக்கும். போகத்திலும் சுவையான உணவிலும் நாட்டம் அதிகமிருக்கும். கொஞ்சம் அதீத பிடிவாத குணத்தோடு இருப்பார்கள். நான்காம் இடமான மிதுனத்தில் குருவும் சனியும் இருந்தால் நரித் தந்திரத்தோடு இருப்பார்கள். இவர்களின் நடத்தைக்கோலம் கேள்விக்குறியாகும். ஓட்டப்பந்தயம், கால்பந்து போன்ற விளையாட்டுகளில் சிறிய வயதிலிருந்தே ஈடுபாடு காட்டுவார்கள்.

வாகனம், சொந்த வீடு என்று சிறு வயதிலேயே நல்ல வாழ்க்கை அமையும். இவர்கள் சொந்த ஊர், பூர்வீகம் என்று இருக்கக் கூடாது. இவர்கள் திறமையும், அர்ப்பணிப்பு குணமும், அடுத்தடுத்து புகழையும் பதவி உயர்வையும் பெற்றுத் தரும். தாயாருக்கு ஏதேனும் உடம்பு  படுத்தியபடியே இருக்கும். வித்தியாசமான சிந்தனையாளராக உருவெடுக்க எப்போதும் முயற்சித்தபடி இருப்பார்கள். ஐந்தாமிடமான கடகத்தில் குருவும் சனியும் நின்றிருந்தால், குழந்தை பாக்கியம் கொஞ்சம் தாமதமாகக் கிட்டும் என்பதைவிட வேறெந்த கெடுபலன்களையும் கூறமுடியாது. பூர்வீகச் சொத்தை நம்பியே இருக்கக் கூடாது.

கோயில் குளத்தை தூர்வாருதல், கோயில் உழவாரப் பணியை மேற்கொள்வீர்கள். முற்பிறவி குறித்த ஆராய்ச்சிகளில் அடிக்கடி ஈடுபடுவார்கள். குருவானவர் அரசாங்கத்தால் கிடைக்க வேண்டிய அத்தனை கௌரவங்களையும் கிடைக்கச் செய்வார். நிறைய அரசியல்வாதிகளைத் தெரிந்து வைத்திருப்பார்கள். தாய்மாமன் வழியிலும் ஏதேனும் அவ்வப்போது பிரச்னைகள் வந்தபடி இருக்கும். ஆறாம் இடமான சிம்மத்தில் குருவும் சனியும் இருந்தால் எதிரிகள் ஏதேனும் வழக்கை போட்டபடி இருப்பார்கள். தேவையற்ற ஆடம்பரத்தால் கடன் தொல்லையும் மிகும். சிறிய கடன்களை அடைக்க மறப்பார்கள். இதனால் வெளியிடங்களிலும் அலுவலகங்களிலும் நட்பை இழப்பார்கள்.

ஒருவரை எப்படி தப்ப வைப்பது என்பதையும் அறிந்தவர்களாக இருப்பார்கள். சிறுசிறு விபத்துகள் ஏற்பட்டு பல்லில் பாதிப்பு உண்டாகும். எப்போதும் எந்தச் செயலையும் தள்ளிப்போட்டு வேலை செய்யவே கூடாது. ஏழாம் இடமான கன்னியில் குருவும் சனியும் இருந்தால் வாழ்க்கைத் துணைவர் மிகவும் திறமையுள்ளவராக இருப்பார். பாரம்பரியமான குடும்பத்தைச் சார்ந்தவராக இருப்பார். இவர்களின் இயல்பே அறிவாற்றல் சேர்ப்பதில்தான் இருக்கும். நெருக்கடி நேரத்தில் மட்டும்தான் பணத்தைப்பற்றிய சிந்தனையே வரும். ஒருபோதும் கூட்டுத் தொழிலில் ஈடுபடக் கூடாது. உதவி என்றால் ஒளியாமல் முதலில் நிற்பார்கள்.

எந்த விஷயத்திற்கும் தடாலடி முடிவை எடுப்பார்கள். சிறிய வயதில் சூழ்ச்சிக்கார உறவினர்களால் பாதிக்கப்பட்டு பின்னர் மீளுவார்கள். எட்டாமிடமான துலாம் ராசியில் குருவும் சனியும் இடம் பெற்றிருந்தால் கொஞ்ச நாட்கள் வெளிநாட்டில் இருந்துவிட்டு மீண்டும் இங்கு வருவார்கள். பயணம் செய்து கொண்டேயிருப்பார்கள். ஷேர் மூலமாக உச்சத்தில் சென்று அமருவார்கள். சட்ட நுணுக்கங்களை நன்கு தெரிந்து வைத்திருப்பார்கள். எதையும் சீக்கிரமாக ஒப்புக் கொள்ள மாட்டார்கள். எதிர்த்து கேள்வி கேட்டபடி இருப்பார்கள் நான்கு இடத்திற்கு சுற்றி அலைந்து தான் இவர்கள் சம்பாதிப்பார்கள். தன்மானம் காக்க, சுதந்திரம் காக்க, மொழியைப் பேண என்று பல்வேறு முகங்கள் கொண்டிருப்பார்கள்.

ஒன்பதாம் இடமான விருச்சிகத்தில் குருவும் சனியும் இருந்தால் தந்தை தன் ஒட்டுமொத்த வியாபாரத்தையும் இவரிடம் கொடுத்துவிட்டு ஒதுங்கிக்கொள்வார். தந்தையின் கனவுகளை நனவாக்கும் பிள்ளைகளாகவே இவர்கள் இருப்பார்கள். அரசாங்க வரிகளை இவர்கள் சரியாகக் கட்ட வேண்டும். இல்லையெனில் பிரச்னை வரும். வாழ்வில் தொடக்கத்தில் அரிய வாய்ப்புகள் கதவைத் தட்டும்போதெல்லாம் ஏதோ ஒரு காரணத்தால் இவர்கள் அமுக்கப்படுவார்கள். பகைவர்களையெல்லாம் நண்பர்களாக்கிக் கொள்ளும் வித்தை தெரிந்தவர்களாக இருப்பார்கள். பத்தாம் இடமான தனுசில் குருவும் சனியும் இடம் பெற்றிருந்தால் புகழ் பெற்ற பத்திரிகையாளராகவும், விமர்சகர்களாகவும், பெரிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குபவர்களாகவும் விளங்குவார்கள்.

பதிப்பகம், பங்குச் சந்தை, நூலகம், இயற்பியல் துறை, தபால் துறை உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். ஆசிரியர், உளவியல் நிபுணர், மக்கள் தொடர்பு அதிகாரியாகவும் சிலர் திகழ்கிறார்கள். நகைக் கடை, ரசாயனம் & மருந்துக் கூடம், விளையாட்டுத்துறை, பள்ளி - கல்லூரி நடத்துதல் என்று ஈடுபடுவார்கள். மேலதிகாரிகள் இவர்களை அழைத்து கொஞ்சம் கடுமையாகப் பேசினாலும் அதிகம் வருத்தப்படுவார்கள். அதிகார வர்க்கத்திற்கும், தொழிலாளி வர்க்கத்திற்கும் மோதல்கள் ஏற்பட்டால் இவர்கள் எப்போதும் தொழிலாளிகளின் பக்கமே இருப்பார்கள். பதினோராம் இடமான மகர ராசியில் குருவும் சனியும் சேர்க்கை பெற்றால் நீசபங்க ராஜயோகப் பலன்கள் கிட்டும்.

மூத்த சகோதரராக இருப்பின் மோதல், முரண்பாடுகள் இருக்கும். ஆனால், மூத்தவர் சகோதரியாக இருந்தால் நெருக்கடி நேரத்தில் உட்பட எல்லா விதத்திலும் உதவக் கூடியவர்களாக இருப்பார்கள். பன்னிரண்டாம் இடமான கும்ப ராசியில் குருவும் சனியும் இருந்தால் அறிஞர்களையும், ஆன்மிகவாதிகளையும் ஆழம் பார்ப்பதில் கில்லாடிகளாக இருப்பார்கள். கனவுத் தொல்லைகளால் அவஸ்தைப்படுவார்கள். உறக்கமின்மையும் தொடரும். தனியாக இருக்கும்வரையில் சரியாக இருப்பார்கள். கூட்டு சேர்ந்தால் அதிகமாக செலவும் ஊதாரித்தனமும் சேர்ந்து கொள்ளும். இந்த குருவும் சனியும் சேர்ந்தால் ஏதேனும் ஒருவிஷயத்தில் சுற்றியுள்ளோரைத்  தூண்டிவிட்டுக் கொண்டே இருப்பார்கள்.

குரு சண்டாள யோகம் என்றும் இந்த அமைப்பைச் சொல்வார்கள். எல்லாவற்றையும் முதலில் எதிர்ப்பார்கள். பின்னர்,  ஒவ்வொன்றாக ஏற்றுக் கொள்வார்கள். இந்த அமைப்பிலுள்ளோர் அவ்வப்போது மன உளைச்சலுக்கு ஆளானபடியே இருப்பார்கள். சிறுசிறு தவறுகளால் சுற்றியுள்ளோரால் வெறுக்கப்படுவார்கள். எனவே, எப்போதுமே இவர்கள் பூரணை புஷ்கலை சமேத ஐய்யனாரப்பன் கோயிலுக்குச் சென்று வணங்குவது நல்லது. அப்படிப்பட்ட ஒரு கோயிலே காரையார் சொரிமுத்தைய்யனார் ஆகும். திருநெல்வேலியிலிருந்து 40 கி.மீ. தொலைவிலுள்ள அம்பாசமுத்திரத்திற்குச் சென்று அங்கிருந்து காரையார் சொரிமுத்தைய்யனார் ஆலயத்திற்குச் செல்லலாம்.

(கிரகங்கள் சுழலும்)

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்
ஓவியம்: மணியம் செல்வன்