கும்ப லக்னம் - சனி - கேது சேர்க்கை தரும் யோகங்கள்



கிரகங்கள் தரும் யோகங்கள் - 110

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

ஞானகாரகன் என்றழைக்கப்படும் கேதுவின் ஆதிக்கமும், உழைப்பாளிகளின் கிரகமான சனியின் அம்சமும் ஒன்றாகப் பொலிகின்ற இவர்கள் காற்றைப்போல கட்டுக்கடங்காதவர்கள். எப்போதும் முகஸ்துதிக்கு மயங்க மாட்டார்கள். தகுதியில்லாதவர்களைப் புகழ மாட்டார்கள். கார்ல் மார்க்ஸின் பொதுவுடைமையை விரும்பும் இவர்கள், விவேகானந்தரின் வீர ஆன்மிகத்தையும் சேர்த்து விரும்புவார்கள்.

நகைக்கடை வைத்திருந்தாலும் நான்கு முழ வேட்டி அணிந்து கொண்டு, நாலுகிராம் மோதிரத்தோடுதான் இருப்பார்கள். தான் இருக்குமிடங்களில் தனக்கென ஒரு கௌரவம் இருக்கிறதா என்று நிச்சயப்படுத்திக் கொண்டுதான் பழகுவார்கள். அடுத்தவருடைய சொத்துக்கு ஆசைப்படமாட்டார்கள். அநாவசியமாகவும் வாரி வழங்கிவிட மாட்டார்கள்.

மேலே சொன்னவை பொதுவான பலன்களாகும். ஆனால், ஒவ்வொரு ராசியிலும் லக்னாதிபதியான சனியும் கேதுவும் சேர்ந்து நின்றால் என்ன பலனென்று பார்ப்போமா? கும்ப லக்னத்திலேயேப் அதாவது ஒன்றாம் இடத்திலேயே சனியும் கேதுவும் சேர்க்கை பெற்றால், ராவண பரம்பரையில் பிறந்திருந்தாலும் ராமனைப்பற்றியே பெருமையாகப் பேசுவார்கள்.

மந்தமான கிரகமான சனியானவர் கேதுவோடு சேரும்போது ஜாதகரை ஞானமயமாக மாற்றும் ரசவாதம் புரிகிறார். அதேசமயம் பொருளாதாரத்தில் பெரிய வளர்ச்சியை அடைய முடியாது போகும். பேரும் புகழும் கிடைக்கும் அளவுக்கு, தனக்கென்று எதையும் சேர்த்து வைக்க முடியாமல் போகும். இதனாலேயே சாமர்த்தியமில்லாதவர் என்கிற பேர் எப்போதும் இருக்கும்.

இரண்டாம் இடமான மீனத்தில் சனியும் கேதுவும் சேர்ந்திருக்கும் இந்த அமைப்பை அவ்வளவு விசேஷமாகச் சொல்ல முடியாது. பால்யத்தில் கொஞ்சம் பார்வை சரியாக நிலைக்காது. ஐந்து வயதுக்குப் பிறகே சரியாகும். கண்களில் ஏதேனும் தொந்தரவு வந்தபடி இருக்கும். மாலைக் கண் நோய், திக்கித் திக்கிப் பேசுவார்கள். சிங்கப் பல் உண்டு. கள் விற்று கலம் பணம் சம்பாதிப்பதை விட கற்பூரம் விற்று கால் பணம் சம்பாதிப்பது மேல் என்று வாழ்க்கையில் மாற்றுப்பாதையில் சென்று திருந்துவார்கள். இவர்கள் சாத்வீகமாகவே பேசினாலும் தேவைப்பட்டால் சாக்கடை வார்த்தைகளையும் உபயோகப்படுத்துவார்கள்.

மூன்றாம் இடமான மேஷத்தில் சனியும் கேதுவும் அமரும்போது, இந்த இடத்தில் சனி நீசமாகிறார். அதனால் கேதுவின் ஆளுமை அதிகமாக இருக்கும். நிறைய விஷயங்களில் போராடிப் போராடித்தான் எதையும் பெற வேண்டியிருக்கும். தைரியம் குறைவானவர்களாக இருப்பார்கள். எதற்கெடுத்தாலும் பயந்தபடி இருப்பார்கள். முடிவெடுப்பதில் நிறைய தடுமாற்றம் இருக்கும். போக வாழ்க்கை சரியாக அமையாது. அதாவது தாம்பத்தியத்தில் ஏதேனும் பிரச்னை வந்தபடி இருக்கும். இவர்கள் யோகா, தியானம் என்று கற்றுக்கொண்டு முன்னேறினால் வாழ்வின் சகல தடைகளையும் எளிதாகக் கடக்கலாம். இவர்களில் பெரும்பாலோர் சித்த வைத்தியம் கற்றுக்கொள்வார்கள்.

நான்காம் இடமான ரிஷபத்தில் சனியும் கேதுவும் ஒன்றாக இருந்தால் தாயாருக்கு ஏதேனும் பாதிப்புகளை அளித்தபடி இருக்கும். செயல் மற்றும் நடத்தைக் கோலம் சரியாக இருக்காது. இதனால் அக்கம்பக்கத்தாரிடம் கெட்ட பெயர் வாங்குவார்கள். தன் பெயரில் எந்த அசையாச் சொத்தையும் வைத்துக் கொள்ளக்கூடாது. ஆனால், தொழில் ஸ்தாபனங்களை இவர்களின் பெயரில் வைத்துக்கொள்ளலாம். தாயாருக்கு நியூரோ தொந்தரவுகள் வந்து நீங்கும்.

ஐந்தாமிடமான மிதுனத்தில் சனியும் கேதுவும் சேர்க்கை பெற்றால் முரட்டுக் குழந்தைகளாக இருப்பார்கள். சிறியதாக ஒரு விரக்தி மனப்பான்மை இருந்துகொண்டே இருக்கும். திறமையிருந்தும் வெளிப்படுத்தும்போது ஒரு தடுமாற்றம் இருக்கும். வாரிசுகள் தாமதப்பட்டோ அல்லது ஒரு கருக்கலைப்புக்குப் பிறகோதான் கிட்டும். இந்த அமைப்பிலுள்ள குழந்தைகளுக்கு  மஞ்சள் காமாலை வந்து நீங்கும். பூர்வீகச் சொத்து நிலைக்காது. சொந்த ஊரிலிருந்து வடக்கு அல்லது வடமேற்குத் திசைநோக்கிச் சென்றால் நல்ல வளர்ச்சி இருக்கும். இவர்களின் உள்ளுணர்வு அபாரமானது. அருள்வாக்கு, குறி சொல்லுதலில் எல்லோரையும் கவர்ந்திழுப்பார்கள்.

ஆறாம் இடமான கடகத்தில் சனியும் கேதுவும் சேர்க்கை பெற்றிருக்கிறது. இதில் சனி பகைவீட்டில் அமர்ந்தாலும் ஆறாமிடமாக இருப்பதால் சில நன்மையான பலன்கள் கிட்டவே செய்யும். அகழ்வாராய்ச்சி, ஆயுர்வேதம், வேர்கள், மூலிகைகள் ஆராய்ச்சியில் ஈடுபடுவார்கள். பெரும்பாலான நேரம் தனிமையிலேயே இருப்பார்கள். வழக்கில் எப்போதுமே வெற்றியடைவார்கள். அயல்நாட்டுத் தொடர்புகளின் மூலம் வியாபாரத்தை விருத்தி செய்வார்கள். எப்போதும் பிரயாணம் செய்தபடியே இருப்பார்கள்.

ஏழாம் இடமான சிம்மத்தில் சனியும் கேதுவும் இருந்தால் திருமண வாழ்க்கை மிகுந்த சிரமத்தை தருவதாக இருக்கும். சொந்தத்தில் திருமணம் செய்யக்கூடாது. கலப்புத் திருமணத்திற்குத்தான் நிறைய வாய்ப்புண்டு. தாமதமாக திருமணம் செய்து கொள்வது நல்லது. கூட்டுத்தொழில் கூடவே கூடாது. பூரம் நடத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மேற்கண்ட தாக்கமெல்லாம் நிச்சயம் குறையும்.

எட்டாமிடமான கன்னியில் சனியும் கேதுவும்  மறைவதால் கொஞ்சம் முன்கோபம், வாக்குவாதம், சொன்னதையே திரும்பச் சொல்லும் போதாமை இருக்கும். புதன் வீட்டில் சனியும் கேதுவும் இருப்பதால் ஆராய்ச்சியாளராக இருப்பார்கள். பழைய பொருட்களை, அதாவது சோழர் கால நாணயங்கள் உள்ளிட்ட பொருட்களை மிகுந்த ஆர்வத்தோடு சேமிப்பார்கள். இவர்களில் பெரும்பாலோர் மத்திம வயது வரை வெளிமாநிலம் அல்லது வெளிநாடுகளில் இருந்துவிட்டு தாய்நாடு திரும்புவார்கள். மிகுந்த செலவாளியாகவும் இருப்பார்கள்.

தனக்கு அதிர்ஷ்டமே இல்லை என்று அடிக்கடி புலம்பியபடி இருப்பார்கள். பேச்சில் ஒரு அலுப்பு இருந்து கொண்டே இருக்கும். ஒன்பதாம் இடமான துலா ராசியில் சனியும் கேதுவும் சேர்க்கையுற்றிருந்தால் தந்தையாரோடு ஒத்துப் போக முடியாது. ஆனால், தகப்பனார் சமூகத்தில் பெரிய நிலையில் இருப்பார். இவர்கள் தன் உழைப்பிலேயே எல்லாவற்றையும் சாதித்துக் கொள்வார்கள். பினாமி சொத்தை வைத்துக் கொள்ளக்கூடாது. கரன்சியை அடுக்கி வைத்துக் கொள்ளாமல் எல்லாவற்றையும் ஷேராக மாற்றி வைத்துக்கொள்வார்கள்.

பத்தாம் இடமான விருச்சிகத்தில் சனியும் கேதுவும் இணைந்திருந்தால் கெமிக்கல் இன்ஜினியர், மயக்க மருந்து செலுத்தும் மருத்துவர், மூக்குப் பொடி வியாபாரம், ஆர்க்கிடெக்ட், மண்ணியல் துறையில் ஆராய்ச்சி, ஜெனிடிக் இன்ஜினியரிங் படித்துவிட்டு வேலையில் அமர்வார்கள். செங்கல் சூளை, சரும நோய் மருத்துவர், காயலாங்கடை வைத்து நடத்துதல், முடி திருத்துனர் என்று விதம்விதமான தொழிலில் இறங்கினால் இவர்களுக்கு செழிப்பான வாழ்க்கை அமையும்.

பதினோராம் இடமான தனுசு ராசியில் சனியும் கேதுவும் இடம் பெற்றிருந்தால் கம்பீரமான தோற்றத்தோடு வளைய வருவார்கள். எல்லா பெரிய மனிதர்களோடும் நல்ல தொடர்பு இருக்கும். மூத்த சகோதரர் இவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருப்பார். தலைமைப் பொறுப்பில் வேலையில் அமர்வார். யாராவது இவர்களை தாழ்த்திப் பேசினால் உடனடியாக பழி வாங்குவார்கள்.

பன்னிரண்டாம் இடமான மகர ராசியில் சனியும் கேதுவும் சேர்ந்திருந்தால் தேடல் உள்ளவர்களாக இருப்பார்கள். புனித நதிகளில் நீராடுவார்கள். யோகா கற்றுத்தரும் ஆசிரியராகவும் இருப்பார்கள். மத்திம வயதுக்குப் பிறகு கோயில் கட்டுவார்கள். தர்ம ஸ்தாபனங்களின் தலைமைப் பொறுப்பில் அமர்ந்து உதவி செய்த வண்ணம் இருப்பார்கள். சனி - கேது சேர்க்கை ஓரளவிற்குத்தான் நன்மைகளைத் தரும். ஆனாலும் கிரகங்களைத் தாண்டிய இறை சக்தியின் அண்மையினால், கிரகச் சேர்க்கையினால் விளையும் தீய பலன்களின் வீர்யத்தை குறைத்துக் கொள்ள முடியும்.

எனவே, இந்த அமைப்பைப் பெற்றவர்கள் மடப்புரம் தட்சிணாமூர்த்தி ஸ்வாமிகளின் ஜீவசமாதியை தரிசித்து திரும்புதல் நல்லது. திருவாரூரில் தியாகராஜ ஸ்வாமி ஆலயமும், பிரமாண்டமான தேரும், கமலாலயத் திருக்குளமும் பிரசித்தி பெற்றவை; திருவாரூரின் அடையாளம் சொல்பவை. இதே திருவாரூருக்கு இன்னோர் அடையாளமும் இருக்கிறது. அதுதான் குரு தட்சிணாமூர்த்தி ஸ்வாமிகளின் மடாலயம். குரு தட்சிணாமூர்த்தி ஸ்வாமிகள் இங்கே ஜீவசமாதி கொண்டுள்ளார்.

திருச்சி அருகே வசித்த சிவசிதம்பரம் பிள்ளை மற்றும் மீனாம்பிகை தம்பதிகளுக்கு நீண்ட நாட்களாக குழந்தைகள் இல்லை. போகாத கோயில்களே இல்லை. ஒருநாள் இருவர் கனவிலும் தோன்றிய அண்ணாமலையார், தாமே உமக்கு மகனாகப் பிறப்பதாக கூறினார். இன்ப அதிர்ச்சியுடன் காலையில் எழுந்த தம்பதி, நேராக திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரை வழிபட்டு திரும்பினர்.

இறைவாக்குப்படி பிறந்த ஆண் மகவுக்கு அருணாசலம் என்றே பெயர் சூட்டினர். குழந்தைமையை தாண்டிய ஞானம் பெற்றிருந்த அருணாசலம் சிறு வயது முதலே தியானத்தில் திளைத்தார். பின்னாட்களில் குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகளாக அறியப்பட்டார். இறை அருளால் இளம் பிராயத்திலேயேஞானம் கைவரப் பெற்று, பல சித்து வேலைகளைப் புரிந்தார்தட்சிணாமூர்த்தி ஸ்வாமிகள் வியாதிகளுடனும், விரக்தியுடனும் வாழ்ந்தவர்களை நல்வழிப்படுத்தினார்.

நாட்டின் பல பகுதிகளுக்கும் பயணித்த இவர், தனது இறுதிக் காலத்தில் திருவாரூரை வந்தடைந்தார். அங்கே மடப்புரம் பகுதியில், ஓடம்போக்கி ஆற்றின் கரையில் அமர்ந்து ஞானத்தபோதனராக விளங்கினார். 1835ஆம் ஆண்டு ஜீவசமாதியானார். ஸ்வாமிகள் ஜீவசமாதியான இடத்தின் மேலே ஒரு சிவலிங்கம் ஸ்தாபிக்கப்பட்டு, தினமும் வழிபாடுகள் நடந்து வருகின்றன.

(கிரகங்கள் சுழலும்)

ஓவியம்: மணியம் செல்வன்