பெண்மையைப் போற்றும் பெருவழிபாடு... வங்கத்தின் துர்க்கா பூஜை



- ச.அன்பரசு

சக்தி வழிபாடு ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்த நிலத்தில் தொடரும் பழம்பெரும் ஆன்மிக மரபு. தாய் வழிச் சமூகத்தின் பண்பாட்டு எச்சமாக எஞ்சி நிற்கும் இது சாக்தம் என்ற பெயரில் தனி ஓர் ஆன்மிக மார்க்கமாக வளர்ந்தது. பிற்பாடு, பல்வேறு ஞான மார்க்கங்கள் மற்றும் பக்தி மார்க்கங்களின் பெருந்தொகுப்பாக மலர்ந்து இந்து மதத்தில் கலந்து நிலைகொண்டது.

இன்றும் இந்தியா முழுதும் சாக்த வழிபாடு உள்ளது. கேரளமும் வங்காளமும் சாக்த மரபின் பெருநிலங்கள். கேரளத்தின் பகவதி வழிபாடும்; வங்காளத்தின் துர்க்கை, காளி வழிபாடும் சாக்தம்தான். தசரா, ஆயுதபூஜை - சரஸ்வதி பூஜை, துர்கோஸ்தவம், நவராத்திரி என்று பல்வேறு பெயர்களால் நாடு முழுதும் கொண்டாடப்படும் இந்தப் பெருந்திருவிழாவை வங்கத்தில் துர்க்கை பூஜை என்று சொல்கிறார்கள்.

மகாளய அமாவாசையில் தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் நிலமதிர, மனமதிர நடக்கும் கோலாகல உற்சவம் இது. தாக் ட்ரம்ஸ்கள் அதிர மங்களவாத்தியங்கள் பிளிற பண்டிதர்களின் மந்திரமும், பெண்களின் கானமும் உருக ஒட்டுமொத்த வங்கமும் நுரைக்க நுரைக்க பக்திப் பெருக்கிலும் மகிழ்ச்சித் திளைப்பிலும் கழிக்கும் ஆனந்த வைபவம். இந்த வருடம் செப்டம்பர் 21 முதல் 30 வரை களைகட்டுகிறது இந்தத் திருவிழா. 

தீபாவளி போனஸ் போலவே கொல்கத்தாவில் துர்க்கை பூஜைக்கும் போனஸ், விடுமுறை போன்றவை உள்ளன. இரு மாதங்களுக்கு முன்பே விழாவுக்காக பஜார்களில் கலகலவென ஜரூர் பிஸினஸ் தொடங்கிவிடுவது வாடிக்கை. பத்து நாள் திருவிழாவில் ஆறாம் நாளுக்குப் பிறகே சஷ்டி, நவமி, தசமி என அன்லிமிடெட் அமர்க்களங்கள் ஆரம்பமாகின்றன. துர்க்கை, அவரது மகளான லக்ஷ்மி, சரஸ்வதி, விநாயகர், கார்த்திகேயன் ஆகியோர் உருவங்களை ஒரே வார்ப்பில் வடிப்பார்கள்.

ராமன் ராவணனை வென்று தீயூட்டிய தினமான தசமியில் துர்க்கை சிலைகள் குளங்களில், நதிகளில் கரைக்கப்படும். பத்தாம் நாளுக்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன. வங்காள இந்துக்களின் துர்க்கை பூஜை, மகிஷாசுரனைக் கொன்ற நாள், தட்சனின் யாகத்தில் சிவனின் மனைவி சதி உயிர்துறந்த நாள், ராமர் ராவணனை கொல்வதற்கு முன் துர்க்கைக்கு பூஜை செய்த தினம் எனப் புராணங்களில் இந்த நாளுக்குப் பல்வேறு சிறப்புகள் சொல்லப்படுகின்றன.

1556 - 1605ம் ஆண்டு அக்பர் ஆட்சிக் காலத்தில் ராஜ்ஷாலி மாவட்டத்தில் உள்ள தாஹிர்பூர் ராஜா காங்ஸா நாராயணன் மேற்கு வங்காளத்தில் துர்க்கா பூஜையைத் தொடங்கியதாக நம்பப்படுகிறது. 1710 - 1783ம் ஆண்டுகளில் நாடியாவை ஆண்ட ராஜாவான கிருஷ்ண சந்திராராய் இந்த வழிபாட்டை பிரபலப்படுத்தினார் என்றும் கணிசமானவர்கள் நம்புகின்றனர்.

இதில் மக்களிடம் நன்கொடை பெற்று விழாவை சமத்துவமாக மாற்றியது கொல்கத்தாவின் ஹூக்ளியில் உள்ள குப்திபாரா என்ற இடத்தில் துர்க்கை பூஜையைக் கொண்டாடிய 12 நண்பர்களின் டீம்தான். அப்போது இதன் பெயர் பாரோயாரி பூஜை. ‘‘கொல்கத்தா முழுமைக்குமான விழாவாக மாற்றியதில் சனாதன் தர்மோத்சாஹின் என்ற அமைப்புக்கு முக்கிய பங்குண்டு...’’ என்கிறார் ஆய்வாளர் எம்.டி.முத்துக்
குமாரசுவாமி.

1840ம் ஆண்டு ஆங்கிலேய அரசு இந்த விழாவில் பங்கேற்க தடைவிதிக்கும் வரை அரசு ஆடிட்டர் ஜான் சிப்ஸ் உள்ளிட்டோர் துர்க்கை பூஜையில் பங்கேற்றிருப்பதை சுகந்த சௌத்ரி எழுதிய ‘Calcutta: living city, Vol.1’ என்ற நூல் குறிப்பிடுகிறது. ஸ்ரீபூமி ஸ்போர்ட்டிங் கிளப், மித்ரோ சாங்கோ, தேஷ்பிரியா கிளப் ஆகியவை துர்க்கைக்கான களிமண் சிற்பங்களைக் கலைநயத்துடன் தயாரிப்பதில் முன்னணி வகிக்கின்றன.

இமாலயத்தின் மகளான துர்க்கையின் போர் வெற்றியைக் கொண்டாடி, பூமாரி பொழிந்து திரும்ப அவளை கயிலாய மலைக்கு அனுப்பி வைக்கும் திருவிழாவின் இறுதிநாள் தசமி. அக்‌ஷரப்பியாசம் எனப்படும் குழந்தைகளுக்கு முதன் முதலில் எழுதக் கற்றுக்கொடுக்கும் தினமாகவும் இது இருக்கிறது.           

நவராத்திரி ஸ்பெஷல்!

காஷ்மீரில் அம்பா, குஜராத்தில் ஹிங்குலா, ருத்ரானி, பீகாரில் உமா, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அம்பிகா, தமிழகத்தில் கன்னியாகுமாரி என துர்க்கா பூஜை கொலு, சுண்டல் என அமர்க்களப்படும். மார்ச் - ஏப்ரலில் நடைபெறும் பூஜைக்கு பசந்தி பூஜை, அக்டோபர் - நவம்பரில் நடைபெறும் பூஜைக்கு சாரதீய பூஜை என்று பெயர்.

துர்க்கை பூஜையில் மூன்று வகைகள் உள்ளன. சாத்விக் பூஜையில் சைவ உணவுகளோடு, மந்திரங்கள் உச்சரிக்கப்பட்டு தியானம் நடைபெறும். ராஜஷிக் முறையில் விலங்கு பலியிடப்பட்டு அசைவ உணவுகள் பரிமாறப்படும். தாமஷிக் முறை மந்திரம் முழங்க சாராயமும், கறி விருந்தும் அமர்க்களப்படும். எட்டாவது நாளில் நடைபெறும் குமாரி பூஜையில் எட்டு வயது சிறுமிகள் வாழும் தேவியாக ஆடை அணிந்து பங்கேற்கும் நிகழ்வும் நடைபெறும். துர்க்கை சிலை தயாரிக்க உதவும் களிமண் ரூ.200 - 250க்கும், மூங்கில், வைக்கோல் ரூ.150 - 175க்கும் கிடைக்கின்றன.

டோன்ட் மிஸ் இட்!

வெள்ளி மற்றும் செம்புப் பாத்திரங்களில் அரிசி, பருப்பு, பாலில் செய்த கீர், மஞ்சள் பூசணி, பீன்ஸ் ஆகியவை தயாரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்படுகிறது. துர்காஷ்டமி அன்று நடைபெறும் துனுசி நாச் எனும் நடனம் ரொம்ப ஸ்பெஷல். ஷோவா பஜார் ராஜ்பாரி, சாட்டுபாபு லாட்டுபாபு பாரி ஆகிய நூற்றாண்டு கடந்த இல்லங்களை துர்க்கா பூஜையில் காணும் வாய்ப்பு இந்த சீசனில் மட்டுமே கிடைக்கும்.

ஜோத்பூர் பூங், குமார்துலி ஆகிய இடங்களில் அலங்கார துர்க்கா சிற்பங்களை கண்குளிர தரிசிக்கலாம். தாக் ட்ரம்ஸில் மெய்மறந்தபடி கங்கையில் கரைக்க துர்க்கை சிலைகளை எடுத்துச்செல்லும் நிகழ்வு, ஆட்டம் பாட்டம் என மெய்மறக்கச் செய்யும்.