இஷ்டப்பட்டு அம்பலப்படுத்தப்படும் அந்தரங்கங்கள்
BIG DATA - தகவல்சூழ் உலகின் பிக் பிரதர்!
காம்கேர் கே.புவனேஸ்வரி - 3
திருட்டு, கொலை, கொள்ளை இன்னபிற வன்முறைகள் நடப்பதற்கு முன்பே அவை இனம் கண்டுகொள்ளப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுத்து நிறுத்தப்படும் வகையில் ஏராளமான, விதவிதமான நம்பகத்தன்மையுள்ள தகவல்களை அதிவேகமாக ஒன்றோடொன்று தொடர்புபடுத்தி பதிவு செய்து வைத்துக்கொண்டு, தேவையானதை தேவையானபோது அலசி ஆராய்ந்து நொடிப் பொழுதில் துல்லியமான பதிலைக் கொடுக்கும் சக்தி வாய்ந்ததாக உள்ளது ‘பிக் டேட்டா’.
 உதாரணத்துக்கு ஒரு சம்பவம். அயல்நாட்டில் வசிக்கும் ஒருவர் இந்தியாவில் வசிக்கும் தன் பெற்றோருக்கு தன் கிரெடிட் கார்டில் ‘ஆட் ஆன் கார்ட்’ வாங்கிக் கொடுத்திருந்தார். ஆனால், அவர்கள் அந்த கார்டைப் பயன்படுத்தவே இல்லை. ஒருநாள் திடீரென அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் வர மருத்துவமனைக்கு உடனடியாக ரூ.ஒரு இலட்சம் கட்டணம் செலுத்த வேண்டிய அவசர நிர்ப்பந்தம்.
அப்பா அந்த கிரெடிட் கார்ட் மூலம் கட்டணம் செலவழித்திருக்கிறார். கார்டு ஸ்வைப்பாகிய அடுத்த நொடி கிரெடிட் கார்டு கம்பெனியின் சர்வரில் இயங்கும் அனலிடிக்ஸ் சாப்ட்வேர் ‘அட! இந்த ஆட் ஆன் கிரெடிட் கார்ட் இந்தியாவில் ஒருமுறைகூட பயன்படுத்தப்பட்டதே இல்லையே’ என்று சந்தேகப்பட்டு கார்ட் ஸ்வைப் செய்யப்பட்ட மருத்துவமனைக்கு ‘எதற்கும் கிரெடிட் கார்ட் கொண்டு வந்தவரை யார் என்ன என விசாரித்து ஏதேனும் ஓர் அடையாள அட்டை பெற்றுக் கொண்டு, கையொப்பமும் வாங்கிக் கொள்ளுங்கள்’ என்று ஒரு அலர்ட் போன் கால் வருகிறது.
மகனுடைய கார்டைப் பயன்படுத்திய அப்பாவிடமே அடையாள விவரங்களை கையொப்பமுடன் பெற்றுக்கொண்ட பின்னரே பணம் மருத்துவமனை அக்கவுண்ட்டுக்கு கிரெடிட் செய்யப்பட்டது. இதில் இரண்டு விஷயங்கள் அடங்கியுள்ளன. ஒன்று, கிரெடிட் கார்ட் மூலம் கொடுக்கப்பட்ட தொகையின் மதிப்பு அதிகம். இரண்டாவது, ஆட் ஆன் கார்ட் 10 வருடங்களாக பயன்படுத்தப்படாமல் இருந்ததால் சாஃப்ட்வேர் இந்த இரண்டு பாயிண்ட்டுகளை வைத்து அலசி ஆராய்ந்து கிரெடிட் கார்ட் தேய்க்கப்பட்ட இடத்துக்கு அவசர எச்சரிக்கை செய்தியை அனுப்பி வைக்கும்.
பெற்ற மகன் வாங்கிக்கொடுத்த ஆட் ஆன் கிரெடிட் கார்டைப் பயன்படுத்த தந்தையே அடையாள புரூஃப் காண்பிக்க வேண்டுமா என உங்களில் யாரேனும் யோசிக்கிறீர்களா? சாஃப்ட்வேருக்கு பெற்ற தந்தையும் ஒன்றுதான், திருடனும் ஒன்றுதான். ஒரு கணம் யோசியுங்கள். நம் கிரெடிட் கார்ட் தொலைந்துவிடுகிறது.
அதை எடுத்தவர்கள் அதைப் பயன்படுத்தி கடையில் பெரிய தொகை கொடுத்து பொருட்கள் வாங்க முற்படும்போது, ‘அட இந்தக் கார்ட் இதுநாள் வரை இத்தனை பெரிய தொகை மூலம் எந்தப் பொருளையும் வாங்கியதில்லையே’ என கிரெடிட் கார்ட் நிறுவனத்தின் அனலிடிக்ஸ் சாஃப்ட்வேர் அலர்ட் ஆகி அந்த கார்ட் தேய்க்கப்பட்ட இடத்தைத் தொடர்புகொண்டு செய்தி சொல்லும். அவர்கள் கார்டை தேய்ப்பவர்களிடம் புரூஃப் வாங்கி ஒப்பிடும்போது அவர்கள் பிடிபடுகிறார்கள்.
 இதுதான் ‘பிக் டேட்டா’ கான்செப்ட். வெறும் டேட்டாவை சேமித்து வைத்துக்கொள்வது மட்டும் அதன் பணி அல்ல. உதாரணத்துக்கு, நாம் எடுத்துக்கொண்ட கிரெடிட் கார்ட் விஷயத்தில் கவனியுங்கள். கிரெடிட் கார்ட் நிறுவனம் வாடிக்கையாளர் பெயர், முகவரி, அடையாள விவரங்கள், அவர்கள் பணி தொடர்பான தகவல்களை மட்டும் சேமித்து வைத்திருப்பதில்லை. அவை எப்போதெல்லாம் பயன்படுத்தப்படுகின்றன, எங்கு, எந்த மாதிரியான கடை, ஹோட்டல், தியேட்டர் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.
என்பதுபோன்ற நுணுக்கமான விஷயங்களையும் சேமித்து அதனடிப்படையில் அந்த கார்ட் தவறாக பயன்படுத்தப்படும்போது கண்காணித்து தவறு ஏதும் நடக்காமல் தடுக்கிறது. தகவல்களில் தனிநபர் தகவல்கள், நிறுவனம் மற்றும் அமைப்பு சார்ந்த தகவல்கள் என்ற பேதமெல்லாம் கிடையாது. உதாரணத்துக்கு, கோயில் எத்தனை மணிக்கு திறக்கப்படுகிறது, எத்தனை மணிக்கு அபிஷேக ஏற்பாடுகள் நடைபெற ஆரம்பிக்கிறது, என்னென்ன பிரசாதங்கள் தயார் செய்யப்படுகின்றன, எத்தனை ரூபாய் உண்டியலில் போடப்படுகிறது, கோயிலுக்குள் செல்லும் நபர்களின் எண்ணிக்கை என்று அமைப்பு சார்ந்த தகவல்கள் முதற்கொண்டு அங்குள்ள குளத்தில் எத்தனை பேர் குளித்தார்கள், எத்தனைபேர் காலை மட்டும் நனைத்தார்கள், எத்தனை பேர் செல்ஃபி எடுத்தார்கள் என்பதுபோன்ற தகவல்களையும் பதிவாக்கி வைத்துக்கொள்ளும்.
தவிர ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் நாமாகவே வலிய பதிவு செய்யும் தகவல்களின் அடிப்படையில் நாம் அந்தக் கோயிலுக்குச் சென்ற தேதி, கிழமை உட்பட யாருடன் சென்றோம், எங்கு தங்கினோம், எந்த ஹோட்டலில் சாப்பிட்டோம் என்ற தனிநபர் தகவல்களும் சேகரிக்கப்பட்டு தகவல் சூழ் உலகில் நம் அந்தரங்கங்களை நாமே டிஜிட்டல் தடயமாக விட்டுச் செல்கிறோம்.
நான் எழுதுகின்ற புத்தகங்களை வாசித்து வாசகர்களிடம் இருந்து சந்தேகங்கள் கேட்டு நிறைய போன்கால்கள் வரும். அப்படி ஒரு வாசகர் கேட்ட கேள்வி என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ‘மேடம், போனில் நாம் பேசும்போது எதிர் முனையில் இருப்பவருக்குத் தெரியாமல் நாம் அந்த காலை ரெகார்ட் செய்ய முடியுமா… அப்படியென்றால் எப்படி செய்ய வேண்டும்?’
‘முடியாது’ என்றேன் சற்றே கோபத்துடன். ‘ரெகார்ட் செய்ய முடியாதா… என் நண்பன் சொன்னான் ரெகார்ட் செய்ய முடியும் என்று…’ ‘சார்…. நான் முடியாது என்று சொன்னது என்னால் உங்கள் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது என்ற நோக்கத்தில்… தகவல் தொழில்நுட்பத்தை சரியான பாதைக்குப் பயன்படுத்தவே எழுதி வருகிறேன்… இதுபோல பிறர் அந்தரங்கங்களை பதிவு செய்து தவறான நோக்கத்துக்குப் பயன்படுத்த என்னால் சொல்லித்தர முடியாது….’ என அழுத்தமாக பதில் சொல்லி போனை வைத்தேன்.
இப்போதெல்லாம் என்ன நடக்கிறது தெரியுமா? காலையில் எத்தனை மணிக்கு எழுந்திருந்தேன்… எப்போது என்ன டிபன் யாருடன் சாப்பிட்டேன்… மனைவியுடன் / கணவனுடன் ஏற்பட்ட சின்ன சின்ன பிரச்னைகள்… பிள்ளைகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு… என அத்தனை பர்சனல் விவரங்களையும் புகைப்படத்துடன் மட்டுமில்லாமல் ஆடியோ, வீடியோவுடன் தங்கள் அந்தரங்கங்களை தாங்களே அம்பலப்படுத்தும் அவலமும் நடந்தேறிக்கொண்டுதான் இருக்கின்றன.
மேலும், தங்கள் எண்ணங்களையும், விருப்பு வெறுப்புகளையும் எழுத்து வடிவில் எந்த வடிகட்டலும் இல்லாமல் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் அப்படியே குப்பையாகக் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். தவிர, பதிவாக்கும் புகைப்படங்கள், ஆடியோ வீடியோக்களை எடிட் செய்து விருப்பம்போல மாற்றத் தேவையான எடிட்டிங் ஆப்களும் தயாரிக்கப்பட்டு வெளிவந்து கொண்டிருக்கின்றன.
ஒருவர் தாஜ்மகாலுக்கே செல்லாமல் அவருடைய நண்பருடன் / தோழியுடன் அங்கு சென்று உல்லாசமாக இருப்பதைப்போல வீடியோ தயாரிக்கும் அளவுக்கு எடிட்டிங் ஆப்கள் வலுவாக உள்ளன. தொழில்நுட்பங்களும் மீடியாக்களும் கார்ப்பரேட் நிறுவனங்களும் மக்களின் ஆர்வத்தைத்தான் பணமாக்குகின்றன. அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. நமக்கு என்ன தேவை என்பதில் நாம்தான் கவனமாக இருக்க வேண்டும். நம்மை வைத்து பிறர் மறைமுகமாக பணம் சம்பாதிக்க அனுமதிக்க வேண்டுமா வேண்டாமா என்பதையும் நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.
(தொடரும்)
|