தனுசு லக்னம் - குரு - ராகு சேர்க்கை தரும் யோகங்கள்



கிரகங்கள் தரும் யோகங்கள் - 89

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

நெறிமுறைகளுக்குரிய கிரகமான குரு, மனித நேயத்திற்குரிய கிரகமான ராகுவோடு சேர்ந்தால் நடைமுறை வாழ்க்கைக்கு எது உதவும் என்றுதான் முதலில் பார்ப்பார்கள். சட்டம், விதிமுறைகள் எல்லாவற்றையும் கொஞ்சம் தளர்த்தி உதவுபவராகவே ராகு இங்கு செயல்படுவார். படிப்பாளி, படைப்பாளிகளோடு மட்டும்தான் குரு பழகுவார்.

ஆனால், ராகுவின் இந்தச் சேர்க்கையானது பாமரன், அடித்தட்டு மக்களோடும் பழக வைத்து அவர்களின் வலிகளையும் உணர வைப்பார். சாமிக்கு மட்டுமே பூக்கள் சொந்தமில்லை. வீட்டிலிருக்கும் மனைவிக்கும், தங்கைக்கும் கூட பூக்கள் சொந்தம் என்று பேச வைப்பார். மேலே சொன்னவை பொதுவான பலன்களாகும். ஆனால், ஒவ்வொரு ராசியிலும் குருவும் ராகுவும் சேர்ந்திருக்கும் பலன்களையும் பார்ப்போமா!

தனுசு லக்னத்திலேயே - அதாவது ஒன்றாம் இடத்திலேயே குருவும் ராகுவும் சேர்க்கை பெற்றிருந்தால் எந்தவொரு விஷயத்தையும் உடனே புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பது, மனதில் ரகசியங்களை வைத்துக் கொள்ளத் தெரியாமல் சங்கடப்படுவதும் உண்டு. ஆனால், ஆராய்ச்சி மனப்பான்மை வயது ஏற ஏற அதிகரிக்கும்.

அக்கு வேறு ஆணிவேறாக எதையும் அலசுவார்கள். அடிப்படையான வாழ்க்கை விஷயங்கள் அனைத்தும் இவர்களுக்கு இயல்பிலேயே அமைந்துவிடும். மேலும், கணவனை இழந்த பெண்களால் யோகம் ஏற்படும். பார்ப்பதற்கு அமைதியான தோற்றத்தோடு இருப்பார்கள். இரண்டாம் இடமான மகரத்தில் குரு, ராகுவோடு சேர்ந்தால் இவர்களுக்கு மேடைப் பேச்சில் மிகவும் ஆர்வம் இருக்கும்.

வக்கீலாக இருந்தால் வெளுத்து வாங்குவார்கள். இடது கண் பாதிப்பு இருக்கும். மத்திம வயதில் குடும்பத்தில், கணவன்-மனைவிக்குள் விரிசல் ஏற்படும். மறந்துபோயும் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடக்கூடாது. தவறான தொடர்புகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவர்களை இதுதான் படிக்கவேண்டும் என்று சொன்னால் படிக்க மாட்டார்கள்.

ஆனால், அவர்களாக படித்தால் மிக நன்றாகப் படிப்பார்கள். ‘பாத்திரமறிந்து பிச்சையிடு’ எனும் வாக்கியத்தை இவர்கள் மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். மூன்றாம் இடமான கும்பத்தில் குருவும், ராகுவும் இருந்தால் மிதமிஞ்சிய போகமும், ஆடம்பரமும் இருக்கும். ஆனால், அதேசமயம் எல்லா விஷயத்திலும் மிக நுட்பமான பார்வை இருக்கும்.

இவர்களுக்குப் பிறகு பிறக்கும் உடனடிச் சகோதரரோ அல்லது சகோதரியோ மிகப் பெரிய அளவில் சாதிப்பார்கள். நல்ல ஆசிரியர்களை வழிகாட்டிகளாக வைத்துக்கொண்டு முன்னேறுவார்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கைகள், பாரம்பரியமான பொருட்களைச் சேர்த்து வைத்துக் கொள்ளுதல் என்று ஆர்வத்தோடு செயல்படுவார்கள். பாரம்பரியத்தைக் கட்டிக் காப்பவர்களாக இருப்பார்கள்.

நான்காம் இடமான மீன ராசியில் குருவும் ராகுவும் சேர்க்கை பெற்றால் தந்தை வழிப் பாட்டனின் பெருமையைப் பேசுதல் பிடிக்கும். தாயாருக்கு அவ்வப்போது ஆரோக்கியத்தில் பிரச்னை இருந்துகொண்டே இருக்கும். தாய்வழி உறவினர்கள் மூலம் உதவி கிடைக்கும். வீடு, தோட்டம், வாகன வசதியோடு இருப்பார்கள்.

எங்கும் எப்போதும் சுத்தம் பார்த்தபடி இருப்பார்கள். சிறிய வயதில் சூழ்ச்சிக்கார உறவினர்களால் பாதிக்கப்பட்டு பின்னர் மீளுவார்கள். இவர்கள் நகரத்தில் வாழ்ந்தால் கூட மாடு, பசு என்று கால்நடைச் செல்வங்களை வளர்க்கவே விரும்புவார்கள். இவர்கள் தெருக்குத்து வீட்டை தவிர்ப்பது நல்லது.

ஐந்தாமிடமான மேஷத்தில் குருவோடு ராகு அமரும்போது எப்போதும் எதையாவது கண்டுபிடிக்க வேண்டுமென்கிற தீவிர வெறி இருக்கும். பூர்வீக சொத்து விஷயத்தில் பிரச்னைகள் வந்து நீங்கும். அதனால், பூர்வீகத்திற்கு பக்கத்து நகரத்தில் ஏதாவது தொழிலைத் தொடங்குவார்கள். ஒரு குடும்பத்தில் பத்து பேர் இருந்தால் அதில் இவர்கள் மட்டும் தனித்துத் தெரிவார்கள்.

தனக்கென்று புதிய பாதையை அமைத்துக் கொள்வார்கள். தான் சார்ந்திருக்கக் கூடிய சம்பிரதாயங்களை ஏன், எதற்கு என்று கேள்வி கேட்பார்கள். யாரிடமும் சென்று உதவி கேட்க மாட்டார்கள். மாந்திரீகம், மந்திரம் ஜபித்தல், ஆவிகளோடு பேசுதல், அருள்வாக்கு சொல்லுதல் என்று ஈடுபாடு கொண்டிருப்பார்கள். மூதாதையர்களின் அருளாசியைப் பெற்ற இவர்கள் தாம் சார்ந்திருக்கும் இனத்திற்கு நன்கு உதவுவார்கள்.

ஆறாம் இடமான ரிஷபத்தில் இவ்விருவரும் சேரும்போது, திடீர் யோகங்கள், பணவரவு, பங்குச் சந்தையில் ஈடுபட்டு பெரியதாக சம்பாதித்தல் என்றிருப்பார்கள். ஆறு, மலைப் பகுதிகளில் வசிப்பதற்கு பெரிதும் விரும்புவார்கள். புது எதிரிகள் எங்கிருந்தாலும் தங்களின் புத்தித் திறமையால் வீழ்த்தி முன்னுக்கு வருவார்கள். திடீரென்று பெரும்பதவிகள் கிடைத்து அதில் அமருவார்கள். ஆறாம் வீட்டில் சென்று ராகு இங்கு மறைகிறார்.

எனவே, எதிரிகள் இருக்க மாட்டார்கள். வழக்கில் பெரும்பாலும் வெற்றி பெறுவார்கள். இவர்கள் கண்ணுக்கு பாம்பு தெரிந்து கொண்டே இருக்கும். சிறியதாக  உடம்பில் பாதிப்பு தென்பட்டாலும் உடனடியாக அதை சரி செய்து கொள்ள வேண்டும். மத்திம வயதில் கொஞ்சம் மாறுபட்ட நட்பும், நிழல் வாழ்க்கையையும் வாழ்வார்கள்.

ஏழாம் இடமான மிதுனத்தில் குருவும் ராகுவும் சேரும்போது திருமண விஷயத்தில் தோஷமில்லாத சுத்த ஜாதகமாகப் பார்த்துச் சேர்க்க வேண்டும் அல்லது ஏற்கனவே திருமணம் முடிந்து விவாகரத்து அல்லது வாழ்க்கைத் துணைவரை இழந்தவர்களாகப் பார்த்து திருமணத்தைச் செய்து கொள்ளலாம். ஏதேனும் சிறு குறையுள்ளவரை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்வது நல்லது.

வாழ்க்கைத் துணைவர் வழியே நிறைய உதவிகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணைவர் வழியில் வந்த சொந்தங்கள் இவர்களால் பயனடைவார்கள். வெளிநாட்டு வாழ் உரிமம் பெற்றிருப்பார்கள். எட்டாமிடமான கடகத்தில் குரு உச்சமாகிறார். ராகு உடன் அமரும்போது தீவிர இயக்கங்கள் மற்றும் தீவிரவாத இயக்கங்கள் மீதும் இவர்களுக்கு மென்மையான போக்கு இருக்கும்.

நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரித்தபடி இருப்பார்கள். பிறந்த ஊரிலிருந்து தென்மேற்குப் பக்கமாகப் பார்த்து குடியேற வேண்டும். வாகனத்தில் செல்லும்போது தேவையற்று விளையாட்டாகவும், பெருமைக்காகவும் வேகமாகச் செல்லக் கூடாது. சோம்பல், அதீத உணர்ச்சி வசப்படுதல், எதற்கெடுத்தாலும் கோபித்துக் கொள்ளுதல் என்றிருப்பார்கள்.

ஒன்பதாம் இடமான சிம்மத்தில் குருவும் ராகுவும் சேர்வதால் ஞானவானாகத் திகழ வைக்கும் அமைப்பைக் கொடுக்கும். தன்னைத்தானே நெறிப்படுத்திக் கொண்டு முன்னேறுவார்கள். தன் தந்தையாரின் தவறைக்கூட தட்டிக் கேட்டு மாற்றுவார்கள். நிறைய புத்தகங்களை படித்தபடி இருப்பார்கள். புராதனச் சொத்து, பாட்டன் சொத்தையெல்லாம் காப்பாற்றி வைத்துக் கொள்வார்கள்.

மரபுக் கலைகளை நவீன பூச்சு பூசி அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வார்கள். தந்தையாரோடு பிணக்கு வந்தாலும் பரவாயில்லை என்று விட்டுக் கொடுத்துச் சென்று விடுவார்கள். ஷேர் மார்க்கெட்டில் என்று ஈடுபட்டுச் சம்பாதிப்பார்கள். பத்தாம் இடமான கன்னியில் குருவும், ராகுவும் சேர்ந்தால் நாடாளும் யோகமும் உண்டாகும்.

கட்டுமானப் பொருட்களை விற்பனை செய்து வியாபாரத்தை நன்கு விரிவாக்கம் செய்வார்கள். இசைத் துறையில் ஈடுபட்டு சாதிப்பார்கள். அரசாங்கத் துறையான சிபிசிஐடி, காவல்துறையில் முக்கிய பொறுப்பில் அமர்வார்கள். அஸ்ட்ரோ பிஸிக்ஸ் மற்றும் ராக்கெட் சம்பந்தப்பட்ட துறையில் உயர் பதவியிலும் அமர்வார்கள். கல்வி சார்ந்த துறை நிறுவனங்களைத் தொடங்குவார்கள்.

பெரும்பாலும் இவர்கள் ஆசிரியர் பணியில் அமர்வார்கள். பதினோராம் இடமான துலா ராசியில், பாதக ஸ்தானத்தில் இவ்விரு கிரகங்களும் இணைவதால் மூத்த சகோதரரோடு இணக்கமாக இருப்பார்கள். குடும்பமாகச் சேர்ந்தே வியாபாரத்தில் முன்னேறுவார்கள். ஏஜென்சி, புரோக்கரேஜ் போன்ற தொழிலில் கொடிகட்டிப் பறப்பார்கள். மூத்த சகோதரர்களைவிட சகோதரிகள் மிகுந்த அனுசரணையாக இருப்பார்கள்.

பன்னிரெண்டாம் இடமான விருச்சிகத்தில் குருவும், ராகுவும் சேர்ந்திருந்தால் அதிபுத்திசாலியாக இருப்பார்கள். ஆனால், சம்பாதிக்கத் தெரியாது. எல்லாமும் அறிந்தவராகப் பேசுவார்கள். வீண் பந்தாவும், தன் பேரை தானே கெடுத்துக் கொண்டும் சுற்றி வருவார்கள். இதய நோய் வந்து நீங்கும். தன்னை செலவாளியாகவும், கஞ்சத்தனம் உள்ளவர்களாகவும் காட்டிக் கொள்வார்கள்.

இந்த கிரகச் சேர்க்கை பெரும்பாலும் நவீனத்தையும் பழமையையும் இணைக்கும் பாலமாகவே இருக்கும். இதனால் இவர்களின் போக்கு அத்தனை சீக்கிரம் சுற்றியிருப்பவர்களுக்குப் புரியாது. எனவே, அவ்வப்போது எதிர்ப்புகளும் பிரச்னைகளும் இவர்களைத் துரத்தியபடி இருக்கும். பல சமயங்களில் கோபம் அதிகமாகி தன்னிலை மறப்பார்கள்.

இதுபோன்ற நேரங்களில் உலகமே அபத்தமாகத் தோன்றும். இதுபோன்ற நேரங்களில் நீங்கள் தரிசிக்க வேண்டிய, வணங்கப் பட வேண்டியவரே பதஞ்சலி முனிவர். இவரைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டு வணங்குங்கள். பதஞ்சலி முனிவர் நடராஜப் பெருமானின் திருநடனத்தைக் கண்டுகளிக்கும் பெரும்பேற்றினைப் பெற்றவர். பரந்தாமனின் படுக்கையான ஆதிசேஷன்தான் பதஞ்சலி முனிவராக அவதரித்தார்.

யோக சாஸ்திரங்களை உலகிற்கு அளித்தார். ஸ்ரீநடராஜரின் தாண்டவத்தின்போது பதஞ்சலியும் வியாக்ரபாதரும் இருபக்கங்களிலும் நின்று வணங்கி, சிவதாண்டவத்தில் முழுவதுமாகக் கலந்தார்கள். பதஞ்சலி முனிவர் சமாதி அடைந்ததாக சில திருத்தலங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று திருப்பட்டூர் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோவில். இவ்வாலயத்தில் பிரம்மன் சந்நிதிக்கு அருகில் பதஞ்சலி சமாதி உள்ளது.

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூருக்கு அருகே திருப்பட்டூர் அமைந்துள்ளது. இதுதவிர, ராமேஸ்வரம் ஸ்ரீராமநாதர் கோவிலில் மூன்றாவது பிராகாரத்திலும் அமைந்துள்ளது. பல திருத்தலங்களில் சிவபெருமானின் திருநடனத்தை தரிசித்த பதஞ்சலிமுனிவர், பல யோகக்கலை நூல்களையும், சூத்திரங்களையும் இயற்றியபின் வைகுண்டம் சென்றதாக புராணங்கள் கூறுகின்றன. எனவே, திருப்பட்டூருக்கோ அல்லது ராமேஸ்வரத்திற்கோ சென்று வாருங்கள்.

(கிரகங்கள் சுழலும்...)

ஓவியம்: மணியம் செல்வன்