விஜயனின் வில்



கே.என்.சிவராமன் - 24

‘‘ஜஸ்ட் எ செக். இம்பார்டென்ட் கால்...’’ இருவருக்கும் பொதுவாக சொல்லிவிட்டு சற்று தள்ளி கிருஷ்ணன் வந்தான். இருதயத் துடிப்பு செவிகளில் எதிரொலித்தது. செல்போன் ஏந்திய கரத்தின் நடுக்கத்தை தன் நரம்புகளைத் தவிர வேறு யாரும் உணராதபடி பார்த்துக் கொள்ள அரும்பாடு பட்டான். ஒளி அணையவில்லை. ஒலி நிற்கவில்லை.

இடமிருந்து வலமாக தன் விரலால் ஸ்க்ரீனை நகர்த்தினான். ‘‘ஹலோ...’’ ‘‘இந்த நம்பர்லேந்து கால் வந்திருந்தது...’’ ஹஸ்கி வாய்ஸில் மறுமுனை கிசுகிசுத்தது. பெண் குரல்தான். ஹார்ட் பீட் அதிகரித்தது. ஒருவேளை..? செவியையும் வாயையும் இணைத்த செல்போனை தன் மறு கையால் மூடினான்.

‘‘தாரா..?’’ ‘‘ஆமா. நீங்க..?’’ என்னவென்று சொல்வது? அர்ஜுனனின் வில் எனக்கு வேண்டும். அது மறைந்திருக்கும் இடத்துக்கான க்ளூ உன்னிடம்தான் உள்ளது. உன்னைத் தேடித்தான் இந்தியா வந்திருக்கிறேன். இப்போது ரங்கத்திலிருக்கும் பாழடைந்த கோயிலுக்குள் நுழைய codeஐ பிரேக் செய்திருக்கிறேன் என்றா..? ‘‘ஹலோ... ஹலோ...’’ மறுமுனை அவனை நடப்புக்கு கொண்டு வந்தது. ‘‘நான்... கிருஷ்ணன்.

ஐஸ்வர்யா ஃப்ரெண்ட்...’’ ‘‘ஐஸ்?’’ ‘‘ஆமா. நீங்க எங்க இருக்கீங்க?’’பதிலில்லை. ‘‘ஹலோ... தாரா...’’மவுனம். மொபைலை எடுத்துப் பார்த்தான். அணைந்திருந்தது. கால் ஹிஸ்டரிக்கு சென்று வந்த எண்ணை டயல் செய்தான். நாட் ரீச்சபிள். ‘‘என்னடா... பேசிட்டியா..? சீக்கிரம் வா...’’ சந்தர்ப்பம் தெரியாமல் கத்துவதில் ஐஸ்வர்யாவுக்கு நிகர் யாருமில்லை.

ஆதி போலி. அவனை நம்புவது தற்கொலைக்கு சமம். தாராவின் அழைப்பு அதை நிரூபித்துவிட்டது. இப்போது என்ன செய்வது? காத்திருந்து தாராவை தொடர்பு கொள்வதா அல்லது தென்மேற்கு மூலை வழியாக இந்த பாழடைந்த கோயிலுக்குள் நுழைவதா? பெண்டுலம் ஆடியது. உள்ளே போனால் கார்க்கோடகரை மீட்கலாம். அவர்தான் தாராவுக்கே க்ளூவை கொடுத்தவர்.

தவிர மறைந்துவிட்டதாக கருதப்பட்ட ஹாபிட்ஸ் எப்படி, ஏன், எதற்காக ரங்கம் வந்திருக்கிறார்கள் என்று தெரிய வேண்டும். அவர்களுக்கும் அர்ஜுனனின் வில்லுக்கும் இருக்கும் தொடர்பும். இதன் பிறகு கூட தாராவை தொடர்பு கொள்ளலாம். சந்திக்கவும் செய்யலாம். வலதும் இடதுமாக ஊசலாடிய பெண்டுலம் தீர்மானத்துடன் இடது பக்கம் நின்றது.

‘‘யா... ஃபினிஷ்ட். வாங்க போகலாம்...’’ உற்சாகத்துடன் அவர்கள் அருகில் ஓடி வந்தான். சட்டென்று கிருஷ்ணனிடம் பூத்த துடிப்பு ஆதியை யோசிக்க வைத்தது. கண்கள் இடுங்க அவர்கள் இருவரையும் தொடர்ந்தான். மூவரும் அந்த பாழடைந்த கோயிலின் தென்மேற்குத் திசையை நோக்கி நடந்தார்கள்.

‘‘அநேகமா மேக்னடிக் வேவ்ஸ் இங்கேந்துதான் ஆரம்பிக்குதுனு நினைக்கறேன்...’’ சொன்ன ஆதி, இருவரையும் விலக்கிவிட்டு முன்னால் வந்தான். கண்ணாடியை அணிந்தான். ‘‘எக்ஸாக்ட்லி. மூணாவது அடிலேந்து தொடங்குது...’’ ‘‘நாம சரியான மூலைலதானே இருக்கோம்?’’ ஐஸ்வர்யா எச்சிலை விழுங்கினாள். ‘‘நீங்க codeஐ பிரேக் செஞ்சது சரினா நாம நிக்கற கார்னர் கரெக்ட்...’’ ஆதி திரும்பாமல் சொன்னான்.

‘‘இல்லைனா?’’ ‘‘தூக்கி வீசப்படுவோம் ஐஸ்...’’ கிருஷ்ணன் சிரித்தான். ‘‘டேய்...’’ ‘‘விடு ஐஸ்... பொது வாழ்க்கைல இதெல்லாம் சகஜம்... லெட்ஸ் மூவ். என்ன ஆகுதுனு பார்ப்போம்...’’ ‘‘கிருஷ் சொல்றது சரிதான். ஏற்கனவே நான் மேக்னடிக் வேவ்ஸோட தாக்கப்பட்டிருக்கேன். அது எப்படி இருக்கும்னு எனக்குத் தெரியும். ஸோ, நான் முன்னாடி போறேன். ஐஸ்வர்யா இரண்டாவதா வரட்டும்.

கிருஷ்... நீ லாஸ்ட்டா வா. நான் எங்க அடியெடுத்து வைக்கிறேனோ அதே இடத்துல உங்க பாதத்தை வைங்க. ஓகே..?’’ ‘‘ம்...’’ ஆதி கண்களை மூடி சில நொடிகள் கார்க்கோடகரை தியானித்தான். ‘‘போகலாமா..?’’ ‘‘யெஸ்...’’ கிருஷ்ணன் பதில் சொன்னான். ஐஸ்வர்யா தலையை அசைத்தாள். மெல்ல அடியெடுத்து வைத்தான். வைத்தாள். வைத்தான். ஒன்று... இரண்டு... மூன்று... ஷாக் அடிக்கவில்லை.

‘‘சரியான வாசல்லதான் நுழையறோம். கைகளை உயர்த்தாதீங்க... உடம்பை அசைக்காதீங்க. மின்காந்த அலைகளுக்குள்ள ஓராள் நடக்கிற பாதை. கவனம். நாம இப்ப கால் வழியா நுழையறோம்...’’ ஐஸ்வர்யா குறுக்கிட்டாள். ‘‘கால்..? ஆதி... இட்ஸ் இன்ட்ரஸ்டிங். கொஞ்சம் சொல்லிக் கிட்டே வா.

உன் பேச்சுல நாங்க கவனம் செலுத்தறது வழியா மேக்னடிக் வேவ்ஸ் குறித்த பயத்துலேந்து வெளில வருவோம்...’’ ‘‘நிலத்தை நம்ம முன்னோர்கள் உயிர்ப்புள்ள சக்தியா பார்த்தாங்க. அதனாலதான் வாஸ்து புருஷனை மையமா வைச்சு ஒவ்வொரு மனையையும் உருவகப்படுத்தினாங்க. வடகிழக்குல தலையையும் தென் மேற்குல காலையும் வைச்சபடி வாஸ்து புருஷன் ஒவ்வொரு மனைலயும் குப்புறப் படுத்திருக்கிறதா ஐதீகம்...’’ ‘‘அப்ப நாம தலையை நோக்கி போறோமா..?’’ கிருஷ்ணன் வாய் திறந்தான்.

‘‘ஆமா. ஒரு சதுர வடிவத்தை 64 இல்லைனா 81 கட்டங்களா பிரிக்கறதுதான் வாஸ்து மண்டலம். ஒவ்வொரு கட்டத்துக்கும், இல்லைனா குறிப்பிட்ட சில கட்டங்களோட தொகுப்புக்கு அதிபதியா ஒவ்வொரு தேவர்கள் இருக்காங்க. 81 கட்டங்கள்ல மையப் பகுதில இருக்கிற ஒன்பது கட்டங்களுக்கு பிரம்மாதான் அதிபதி.

அதனாலதான் அந்த மையப் பகுதி பிரம்மஸ்தானம்னு அழைக்கப்படுது...’’ ‘‘ஐ ஸீ... அப்ப எட்டுதிக் பாலகர்கள் எங்க வர்றாங்க ஆதி?’’ ‘‘இதோ நாம நடக்கிற இடங்கள்லதான் ஐஸ். வடக்குக்கு குபேரன், கிழக்குக்கு சூரியன், தெற்குக்கு எமன், மேற்குக்கு வருணன், வடமேற்குக்கு வாயு, வடகிழக்குக்கு ஈசன், தென் கிழக்குக்கு அக்னி, தென் மேற்குக்கு பித்ரு. இப்படி எட்டு தேவர்களும் எட்டு திசையை காவல் காக்கறாங்க...’’ ‘‘இதெல்லாம் மித்’தானே..?’’

‘‘இல்லை க்ருஷ்... அப்படி ஒரேயடியா சொல்லிட முடியாது. இந்தப் பெயர்கள், தேவர்கள் எல்லாம் குறியீடுகள். சும்மா அடையாளத்துக்காக சொல்லப்படுது. ஆனா, உண்மை வேற. இப்ப கிழக்கு திசைல சூரியன் உதிக்கிறான். ஸோ, கிழக்கு திசைக்கு அதிபதி சூரியன் - அதாவது ஆதித்தன்னு வாஸ்து சொல்லுது.

இப்படி ஒவ்வொரு திசையும் இயற்கையோட, நம்ம சூழலோட சம்பந்தப்பட்டது. இதையெல்லாம் கணக்குல வைச்சுதான் வீட்டை/ கோயிலை கட்டச் சொன்னாங்க. எப்படி, எந்தத் திசைல வாசல் / ஜன்னல் இருந்தா காத்து வரும்னு இதுக்குள்ளயே அடங்கிடுது...’’
‘‘நீ சொல்றதெல்லாம்தான் வாஸ்து சாஸ்திரமா ஆதி..?’’

‘‘ஆமா க்ருஷ்...’’ ‘‘இந்த சாஸ்திரம் எப்ப எழுதப்பட்டது?’’ ‘‘நோ ஐடியா ஐஸ். ஆனா, அதர்வண வேதத்துல இதுக்கான குறிப்புகள் இருக்கு. வராஹமிஹிரர் தன்னோட ‘பிருஹத் சம்ஹிதை’ நூல்ல விரிவா இது பத்தி பேசியிருக்கார். அப்புறம் மயனால் எழுதப்பட்டதா சொல்லப்படுகிற ‘மயமதம்’, மானசாரர் உருவாக்கின ‘மானசாரம்’, விஸ்வகர்மாவோட ‘விஸ்வகர்மீயம்’ இப்படி வாஸ்து பத்தி நம்ம முன்னோர்கள் நிறைய நூல்கள் எழுதியிருக்காங்க.

ஒண்ணு தெரியுமா? 20ம் நூற்றாண்டுல வந்த ‘ஸ்ரீ லலிதா நவரத்னம்’ நூல்ல பண்டைக் காலத்துல சிற்பங்கள் / வாஸ்து தொடர்பா 32 புத்தகங்கள் இருந்ததா பட்டியலிடப்பட்டிருக்கு...’’ பேசிக்கொண்டே வந்த ஆதி -சட்டென்று நின்றான். மூன்றடி உயரம் கொண்ட 81 சித்திரக்குள்ளர்கள் @ ஹாபிட்ஸ் அவர்கள் மூவரையும் சுற்றி வளைத்தார்கள்.

(தொடரும்)

ஓவியம் : ஸ்யாம்

தாம்பரம் அரசி!

சென்னை தாம்பரத்தில் வசிப்பவர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி. அட்சய திருதியையை முன்னிட்டு ஜிஎஸ்டி சாலையில், மெப்ஸ் அருகே தனது புதிய விற்பனையகத்தை திறந்திருக்கிறது பிரின்ஸ் ஜுவல்லரி. இது அந்நிறுவனத்தின் நான்காவது கிளை. வாடிக்கையாளர்கள் மிகச் சிறந்த ஷாப்பிங் அனுபவத்தைப் பெறும் வகையில் ஒவ்வொரு தளமும் உருவாக்கப்பட்டுள்ளது.

பெண்களைக் கவர்ந்திழுக்கும் புதுப்புது டிசைன்களில் தங்கம், வெள்ளி, வைர நகைகள், முகூர்த்த கலெக்‌ஷன் என ஏராளமான நகைகள் குவிக்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கென ‘பேபி பிரின்ஸஸ்’ என்று தனியாக ஒரு தளமே இயங்குகிறது. மொத்தத்தில் பெண்கள் அனைவரையும் அரசியாகக் கருத வைப்பதில் பிரின்ஸுக்கு நிகர் பிரின்ஸ்தான்.

சொல்லி அடிக்கும் கில்லி!

வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனையில் நம்பர் ஒன் நிறுவனமான வசந்த் அண்ட் கோவின் விற்பனை ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. வசந்த் அண்ட் கோ நிறுவனத்துக்கு தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி முழுவதும் கிளைகள் உள்ளன. கடந்த ஆண்டு, இந்நிறுவனம், தன் விற்பனை இலக்காக ஆயிரம் கோடி ரூபாயை நிர்ணயித்து இருந்தது. இப்போது அந்த இலக்கை எட்டிவிட்டார்கள். அதை கொண்டாடும் வகையில் நிறுவன உரிமையாளர் வசந்தகுமார் கேக் வெட்டினார். நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.