22 வருடங்களாக பாதாள சாக்கடைக் குழியில் வசிக்கும் காதலர்கள்!



-த.சக்திவேல்

‘‘இந்த உலகத்துல ரெண்டே விதமான மனுஷங்கதான் இருக்காங்க. ஒண்ணு, என்ன இருந்தாலும் இல்லாததை நினைச்சு ஏங்கறவங்க. ரெண்டாவது, இருக்கிறதை வெச்சு சந்தோஷமா வாழ்றவங்க. நாங்க ரெண்டாவது வகை!’’ சிரித்துக்கொண்டே சொல்கிறார்கள் மிகுலும் அவரது மனைவி மரியாவும்.

இருவரும் கொலம்பிய நடைபாதை வாசிகள். முதல் அறிமுகத்திலேயே காதல் பற்றிக் கொள்ள... திருமணம் புரிந்திருக்கிறார்கள். அதன்பின் கடந்த 22 வருடங்களாக அவர்கள் எங்கு வாழ்கிறார்கள் தெரியுமா? பாதாள சாக்கடைக் குழியில்! இதுதான் அவர்களது வீடு. நிமிர்ந்தால் தலை இடிக்கும். என்றாலும் அந்த வீட்டில் மின்சாரம், டிவி, ஃபேன் என சகலமும் இருக்கிறது. குழந்தையைப் போல ஒரு நாயையும் வளர்த்து வருகிறார்கள். நாயுடன் சேர்ந்து மூவரும் ஒன்றாகவே உறங்குகிறார்கள்.

இன்று அன்பின் முன்னுதாரணமாகத் திகழும் மிகுலும், மரியாவும் இளமையில் போதை அடிமைகளாம். காதல்தான் இருவரையும் மீட்டு புது வாழ்வை அமைத்துக் கொடுத்திருக்கிறது! ‘‘எங்கே வாழ்ந்தாலும் வாழ்க்கை வாழ்க்கைதான். மனம் தளராமல் மனிதனாக வாழ்வதுதான் முக்கியம்’’ என்கிறார் மிகுல் உறுதியாக.