விருச்சிக லக்னம் செவ்வாய் சூரியன் சேர்க்கை தரும் யோகங்கள்



கிரகங்கள் தரும் யோகங்கள் - 73

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

ஆக்ரோஷத்துக்குரிய கிரகமான செவ்வாயும், எதையும் தாங்கும் இதயத்தை தரும் கிரகமான சூரியனும் இணைந்தால் போராடும் குணம் மிகுந்திருக்கும். பயோ-டேட்டாவே நூறு பக்க புத்தகமாக இருக்கும். பத்து வருடத்தில் நாற்பது இடத்தில் வேலை பார்த்திருப்பார்கள். பதவி உயர்வு பட்டியலில் பெயர் இருந்தால் மேலதிகாரி வேறு ஊருக்குச் சென்று விடுவார். சரி, புதியதாக வருபவரோ இவருக்கு எதிராகவே மாறுவார்.

அதனால், நான்கு முழம் ஏறுவதற்குள் நாற்பது முழம் சறுக்குவார்கள். இந்த அமைப்பில் உள்ளோரின் வாழ்க்கைத் துணைவருக்கு சிறு சிறு அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியிருக்கும். எவ்வளவு பெரிய ஏற்ற இறக்கங்களை சந்தித்தாலும் கவலைப்படாமல் முன்னேறுவார்கள். எத்தனை பெரிய இக்கட்டான சூழநிலையாக இருந்தாலும் அடுத்தது என்ன என்று நகர்ந்துகொண்டேயிருப்பார்கள். சகோதரர்களோடு விட்டுக் கொடுத்து வாழ்வார்கள்.

அரசாங்கத்தில் பலமான பதவியில் அமர்வார்கள். யோகாதிபதிகளின் நட்சத்திர சாரங்களில் அமரும்போது நாடாளும் யோகமே உண்டு. பாதுகாப்புத்துறை, உளவுத்துறைகளில் எல்லாம் சாதிப்பார்கள். தந்தையை விஞ்சி சாதிக்க வேண்டுமென நினைப்பார்கள். மேலே சொன்னவை யாவும் விருச்சிக லக்னத்தின் சூரியன் செவ்வாய் சேர்க்கை தரும் பொதுப் பலன்களாகும். லக்னாதிபதியான செவ்வாயும், சூரியனும் ஒவ்வொரு ராசியிலும் தனித்து நின்றால் என்னென்ன பலனென்று பார்ப்போமா?

லக்னாதிபதியான செவ்வாயோடு பத்தாம் அதிபதியான சூரியன் லக்னத்திலேயே அதாவது விருச்சிகத்திலேயே இருந்தால் தேக ஆரோக்யத்துக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். இந்த இரண்டு கிரகங்களும் ஒரே பாகையில் அமர்ந்திருந்தால் எப்போதும் டென்ஷனும், படபடப்போடும் செயல்படுவார்கள். இதனால் முதுகுவலி, இரத்தக் கொதிப்பு போன்றவை அவ்வப்போது வந்து நீங்கியபடி இருக்கும். தனக்கென்று தனிப்பாதை வைத்துக்கொண்டு நகர்வார்கள்.

மாறுபட்ட சிந்தனைகளோடு இருப்பார்கள். பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பார்ப்பதற்கு பெரிய இடத்துப் பிள்ளைபோல காணப்படுவார்கள். செவ்வாயும் சூரியனும் சேர்ந்திருப்பதால் அதிக உஷ்ணத்தையும், மின்சார அதிர்ச்சியை தாக்குப் பிடிக்கும் உடல்வாகும் கொண்டவர்களாக இருப்பார்கள். தனுசு ராசியான இரண்டாம் இடத்தில் இவ்விரு கிரகங்களும் அமர்ந்தால், ஆரம்பக்கல்வி சுமாராக இருந்தாலும் உயர் கல்வியில் பிரகாசிப்பார்கள்.

மேலோட்டமான கேள்வியைக் காட்டிலும் நுட்பமான விஷயங்களையே அதிகம் யோசிப்பார்கள். பல் மற்றும் கண்ணில் நீர் வருவது போன்ற பிரச்னை வந்தால் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு இரண்டாமிடத்தில் இவ்விரு கிரகங்களும் இருந்தால் வாழ்க்கைத் துணையை எதிர்த்துப் பேசாமல் இருப்பது நல்லது. கையில் அதிகமாக பணத்தை வைத்துக் கொள்ளக்கூடாது. மகர ராசியான, மூன்றாம் இடத்தில் செவ்வாய் உச்சமாக உள்ளார். அங்கு சூரியனோடு சேரும்போது நெஞ்சுறுதி மிக்கவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் உள்ளங்கைகளில் கட்டை விரலுக்குக் கீழே கங்கண ரேகை ஒன்று ஓடும். குலையாத நம்பிக்கையோடு எப்போதும் திகழ்வார்கள். வேலையாட்கள் சிறப்பாக அமைவார்கள். சுளீரென்று பேசுவார்கள். இளைய சகோதரரோடு மனஸ்தாபங்கள் செலவுகள் வந்தாலும் இவர்கள் விட்டுக் கொடுத்துப் போவார்கள். கும்பத்தில் நான்காம் இடமாக செவ்வாயும், சூரியனும் அமரும்போது தாயாருடைய உடல்நிலையை பார்த்துக் கொள்ள வேண்டும். இவர்கள் ஒருபோதும் புகைப் பழக்கத்திற்கு ஆளாகக் கூடாது.

வீட்டை புதுமையான முறையில் கட்டுவார்கள். உயர் ரக வாகனங்களை வாங்கி உபயோகப்படுத்துவார்கள். மீனம் ராசியான ஐந்தாம் வீடான பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் அமரும்போது சிறந்த மக்கட்பேறு கிட்டும். நீருக்குள் நெருப்புபோல இருப்பார்கள். இவர்களின் வாரிசுகளுக்கு இரத்த உறைதலில் பிரச்னை வந்து நீங்கும். திருமணக் காலங்களில் சரியானபடி பொருத்தம் பார்த்துச் சேர்க்க வேண்டும். பூர்வீகத்தை விட்டு வெளியூருக்கு வந்தால்தான் வளர்ச்சி ஏற்படும்.

இவர்கள் அருள்வாக்கு, குறிசொல்லுதல், சித்த வைத்தியம், அனுமனை உபாசித்தல் என்று சில விஷயங்களில் ஈடுபடுவார்கள். ஆறாம் இடமான மேஷத்தில் செவ்வாய் ஆட்சி பெறுகிறார். சூரியன் உச்சமடைகிறார். சிறிய வயதிலேயே நாட்டுப்பற்று, இனப்பற்று, மொழிப்பற்று என்று திகழ்வார்கள். சத்தியத்துக்குக் கட்டுப்படுவார்கள். எப்போதும் மனசாட்சி சொல்வதைத்தான் கேட்பார்கள். ஆனால், இவர்தான் தனக்கு எதிரி என்று தெரிந்துவிட்டால் அவர்களை இரண்டில் ஒன்று பார்த்துவிடுவார்கள்.

சகோதரர்களின் மீது அளவு கடந்த பாசம் வைத்திருப்பார்கள். ஆனால், அவர்கள் இவரை புரிந்துகொள்ளவே மாட்டார்கள். போராட்ட குணம் மேலோங்கியே இருக்கும். இவர்கள் நகத்தை கூட அதிகமாக வைத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில், உணர்ச்சி மேலீட்டில் அதையே ஆயுதமாக்கித் தாக்குவார்கள். வழக்கில் எப்போதும் இவர்களுக்குத்தான் வெற்றி. ஏழாமிடமான ரிஷபத்தில் செவ்வாயும் சூரியனும் இருந்தால் வாழ்க்கைத் துணையே தாமதமாகத்தான் அமையும். வாழ்க்கைத் துணையின் உடல்நிலை அவ்வப்போது பாதித்தபடி இருக்கும்.

இவர்களுக்கு சகல பொருத்தங்களும் பார்த்துத்தான் திருமணம் செய்து வைக்க வேண்டும். இல்லையெனில் கணவனும் மனைவியுமே ஒரு இடத்தில் சேர்ந்தாற்போல் பத்து நிமிடம் பேசிக் கொண்டிருக்க முடியாது. ஏதேனும் பிரச்னை வந்தபடியே இருக்கும். மேலும், ஏழாமிடத்து செவ்வாய் என்பதே தோஷத்தைக் காட்டுகிறது. எனவே, இன்னொரு தோஷமுள்ள ஜாதகரைத்தான் இவர்களுக்குச் சேர்க்க வேண்டும்.

எட்டாமிடமான மிதுனத்தில் செவ்வாயும் சூரியனும் இருந்தால் திடீர் பிரயாணங்கள் உண்டு. வெளி மாநிலம், வெளி மாவட்டம் என்றெல்லாம் சென்றபடி இருப்பார்கள். தங்களின் பூர்வீகத்தில் இருக்க மாட்டார்கள். இவர்கள் கடனை வாங்கி மற்றொரு கடனை அடைக்கக் கூடாது. இவர்கள் கையிலுள்ள பணத்தைக் கொண்டுதான் அடைக்க வேண்டும். இல்லையெனில், கடன் ஒருபக்கம் ஏறிக்கொண்டே இருக்கும்.

ஒன்பதாம் இடமான கடகத்தில் செவ்வாய் நீசம். கூடவே சூரியனும் அமர்ந்ததால் ‘தந்தையை விஞ்ச வேண்டும்’ என்கிற எண்ணம் இருக்கும். தந்தைக்கும் பிள்ளைக்குமிடையே ஏதோவொரு பனிப்போர் இருந்துகொண்டே இருக்கும். தந்தையின் சொத்துக்களை வீண் செலவு செய்து அழிப்பார்கள். இவர்களை சரியான முறையில் கொண்டுபோகவில்லையெனில் வீண் ஜம்பம், பந்தா என்றே வாழ்வார்கள். சொல்லில் இருக்கும் வீரம் செயலில் இருக்காது.

சிலசமயம் இவ்வளவு சொத்து இருந்தும், தந்தையின் அரவணைப்பு இருந்தும் ‘இவர் ஏன் இப்படி இருக்கிறார்’ என்றே அனைவரும் பேசுவார்கள். பத்தாம் வீடான சிம்மத்தில் இவ்விரு கிரகங்கள் அமரும்போது இருதய நோய் அறுவை சிகிச்சை நிபுணராக வருவார்கள். தங்க நகைகள் செய்யும் இடத்தில் வேலை செய்வார்கள். ரயில் என்சினை இயக்குபவராகவும் இருப்பார்கள். மின்சாரத்துறையில் நேரடியாக மின்சார சம்பந்தமுள்ள வேலையைச் செய்பவராக இருப்பார்கள். மருந்து உற்பத்தித் தொழிற்சாலைகளிலும் பணியாற்றுவார்கள்.

பதினொன்றாம் இடமான கன்னியில் செவ்வாயும் சூரியனும் அமர்ந்தால் பரமசாதுவாக இருப்பார்கள். எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்குவார்கள். அதே சமயத்தில் வீரமும் விவேகமும் ஒருசேர இவர்களிடத்தில் இருக்கும். எதிரிக்கும் உதவும் நல்ல உள்ளத்தோடு இருப்பார்கள். இவர்கள் சொத்து வாங்கும்போது தாய்ப் பத்திரங்களை சரிபார்த்துத்தான் வாங்க வேண்டும். மூத்த சகோதரர் மற்றும் சகோதரி மிகவும் அனுகூலமாக இருப்பார்.

பன்னிரண்டாம் இடமான துலாம் ராசியில் சூரியன் நீசமாகிறார். செவ்வாயும் மறைவதால் இதுவரை சமூகத்தால் மறக்கப்பட்ட விஷயங்களை இவர்கள் மீட்டெடுப்பார்கள். அதிதீவிர சிந்தனையாளர் களாக வருவார்கள். லக்னாதிபதி பன்னிரண்டில் மறைவதால் பயணம் செய்து கொண்டேயிருப்பார்கள். இவர்கள் கொஞ்சம் ஊதாரித்தனமாகவே செலவும் செய்வார்கள். இவர்கள் மத்திம வயதுக்கு மேல் தவறான தொடர்புகளில் சென்று சிக்கிக் கொள்ளக்கூடாது.

இந்த இரு கிரகங்களின் அம்சமே நீருக்குள் நெருப்பு போன்றதுதான். கோபப்பட்டுக்கொண்டே இருக்கும்போதே அப்படியே தணிந்து போவதும் இருக்கும். கொஞ்சம் கறாரான பேர் வழிகளாக இருப்பார்கள். இந்த அமைப்பு ஆளுமைப்பண்போடு சேர்த்து அதிகாரத்தில் அமர வைக்கக் கூடியதாகும். ஆனால், நீசம், பகை இடங்களுக்கு வரும்போது எதிர்மறையான பலன்களை அளிக்கும். இரு நெருப்பு கிரகங்கள் ஒன்றாக இருப்பதால் எதற்கெடுத்தாலும் கொதித்தபடி இருப்பார்கள்.

ஒவ்வொரு சொல்லையும் உணர்ச்சிப் பூர்வமாகவே வெளிப்படுத்துவார்கள். இது எல்லா இடத்திலும் நன்மையையே கொடுக்கும் என்று சொல்ல முடியாது. அதனால், குழப்பங்கள் நிகழவே வாய்ப்புகள் அதிகம். எமோஷனலாத்தான் இருப்பார் என்று பெயரெடுப்பார்கள். சூரியனும் செவ்வாயும் அக்னி கிரகங்கள் என்பதால் அக்னியே பூஜித்த தலங்களுக்கு இந்த இரு கிரக அமைப்புள்ளவர்கள் செல்லும்போது எதிர்மறையான பலன்கள் குறைந்து நற்பலன்களே கிட்டும்.

அப்படிப்பட்ட ஒரு தலமே திருப்புகலூர் ஆகும். அக்னி பகவான் பூஜித்த முக்கிய தலத்தில் இதுவொன்று. சுந்தரமூர்த்தி நாயனார் செங்கல்லை தலைக்கு வைத்து நித்திரை செய்து மறுநாள் காலையில் பார்க்கும்போது அது தங்கக் கல்லாக மாறியிருந்தது. அப்பர் சுவாமிகள் ஐக்கியமாகிய தலமும் இதுவே.

அக்னி பகவானின் அற்புதமான சிலை இங்குள்ளது. இத்தல ஈசனுக்கு அக்னீஸ்வரர், கோணப்பிரான் என்று பல்வேறு திருப்பெயர்கள் உண்டு. அம்பாளின் திருநாமம் கருந்தாழ்குழலி என்பதாகும். இத்தலம் கும்பகோணம், திருவாரூருக்கு அருகேயுள்ள நன்னிலத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது. அக்னீஸ்வரை தரிசித்து வாருங்கள் குளுமையான வாழ்வை வாழுங்கள்.

(கிரகங்கள் சுழலும்...)

ஓவியம்: மணியம் செல்வன்