சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சூரியனும் செவ்வாயும் தரும் யோகங்கள்



கிரகங்கள் தரும் யோகங்கள்

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

ஓவியம்: மணியம் செல்வன்

நீங்கள் சிம்ம லக்னத்தில் பிறந்தவரா? உங்களின் வாழ்வை மேம்படுத்தவே இந்தப் பகுதி!



சூரியனும் செவ்வாயும் இணைவதை ‘ஆதித்ய மங்கள யோகம்’ என்பார்கள். பொதுவாக இரண்டு உஷ்ண கிரகங்கள் சேரும்போது அகத்தில் ஒரு நெருப்பு எரிந்துகொண்டே இருக்கும். இந்த சேர்க்கை கொண்டவர்கள் யாரும் சமூக சீர்கேடுகள், அநியாயம் போன்றவற்றை பொதுவாகவே பொறுக்க மாட்டார்கள். கிளர்ந்தெழுவார்கள்.

ரத்த பந்தங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். அதேசமயம் இவர்கள் எப்போதும் நண்பர்களைத்தான் நம்புவார்கள். சூரியனும் செவ்வாயும் சமூகத்தை மாற்றும் வல்லமை கொண்ட சக்திகளாகும். சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சொந்த ஜாதகத்தில் எந்தெந்த இடங்களில் சூரியனும் செவ்வாயும் இணைந்திருந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என இனி பார்க்கலாம்... ஒன்றாம் இடமான லக்னத்திலேயே சூரியனும் செவ்வாயும் சேர்ந்து அமர்வதென்பது விசேஷமாகும்.

அதாவது பாக்யாதிபதியும், நான்காம் இடத்திற்கு அதிபதியுமான செவ்வாயோடு சூரியன் சேர்ந்திருந்தால் அடிப்படை வசதிகள் எதற்குமே குறைவில்லாமல் இருப்பார்கள். சொந்த ஊரில் மக்கள் சூழ வாழ்வார்கள். எப்போதும் கம்பீரமும் புன்னகையுமாக வலம் வருவார்கள். மலைப் பிரதேசங்களுக்கு பயணம் செய்தபடி இருப்பார்கள். முன்னோர்களின் புகழை நிலைநாட்டுவதிலேயே குறியாக இருப்பார்கள். பெரும்பாலும் பூர்வீகச் சொத்தை எப்பாடுபட்டாவது காப்பாற்றுவார்கள்.

எந்த வேலையாக இருந்தாலும் அதில் தலைமைப் பொறுப்பாளராக அமர்வதைத்தான் விரும்புவார்கள். தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களை பின்னாட்களில் எழுதி வைத்து புத்தகமாகக் கொண்டு வருவார்கள். எல்லா விஷயங்களிலும் ஒரு ராணுவ ஒழுங்கை கடைப்பிடிப்பார்கள். இரண்டு நெருப்பு கிரகங்கள் ஒன்று சேர்வதால் லட்சிய வெறியோடு அலைவார்கள்.

அடுத்ததாக சூரியனும் செவ்வாயும் கன்னி ராசியில்  அதாவது இரண்டாம் இடத்தில் அமர்ந்தால் அவ்வளவு நன்மைகள் இருக்குமென்று சொல்ல முடியாது. மேலும், செவ்வாய் புதன் வீட்டில் அமர்வதால் எல்லாவற்றிற்கும் உணர்ச்சிவசப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். ரத்த அழுத்தம் அல்லது கண்களில் அழுத்தம் வர வாய்ப்பிருக்கிறது. தூக்கமின்மையால் பெரும் அவஸ்தைக்கு உள்ளாவார்கள். பணப் புழக்கத்திற்கு எந்தப் பிரச்னையும் இருக்காது. இவர்கள் பேச்சால் மற்றவர்களின் மனதைப் புண்படுத்தக் கூடாது.

பேச்சில் நயம் வேண்டும். இல்லையெனில் உங்களை நெருங்கவே பயப்படுவார்கள். ஆச்சரியமாக இந்த விஷயத்தில் ஒரு பக்குவம் வந்து விட்டால் கட்சியில் கொள்கைப் பரப்புச் செயலாளராகவோ, தன்னம்பிக்கை தரும் பேச்சாளராகவோ பிரகாசிப்பார்கள். இது குடும்ப ஸ்தானத்தையும் சேர்த்துக் குறிப்பதால் வீட்டிலிருக்கும்போது நிம்மதியோடும், சந்தோஷத்தோடும் இருக்க வேண்டும். வெளியுலக எரிச்சலையெல்லாம் அங்கு காட்டக் கூடாது. பேச்சில் காரத்தைக் குறைத்து இனிப்பைச் சேர்க்க வேண்டும்.

செவ்வாயும் சூரியனும் மூன்றாம் இடமான துலாம் ராசியில் இணைந்திருப்பது இளைய சகோதர, சகோதரிகளுக்கு மிகுந்த அனுகூலத்தைத் தருவதாக இருக்கும். துலாம் ராசியில் சூரியன் நீசமாகிறார். இதனால் பயந்த சுபாவியாக இருப்பார்கள். ஆனால், செவ்வாய் உடன் இருப்பதால் ஒருமுறை பதுங்கி இரண்டாவது முறை வெற்றிகரமாக முடித்துக் காட்டுவார்கள். நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கும். கீழே வேலை செய்யும் வேலையாட்களோடு பிரச்னை இருந்தபடி இருக்கும்.

சிற்றின்ப விஷயங்களில் மிகுந்த ஈடுபாடு காட்டுவார்கள். காதில் ஏதேனும் பிரச்னை என்றால், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. இவர்கள் ஒரு விஷயத்தை ஒன்றுக்கு நான்கு முறை சொன்னால்தான் புரிந்து கொள்வார்கள். அதிகாரம் மிக்க பதவியைத் தேடிப் பிடித்து அமர்வார்கள். விலையுயர்ந்த ரத்தினங்கள், வைரக் கடுக்கன் என விரும்பி அணிவார்கள். எந்த வாக்குவாதத்திலும் தான் சொல்வதே சரி என சாதிப்பார்கள். 

விருச்சிக ராசியான நான்காம் இடத்தில் சூரியனோடு செவ்வாய் சேர்க்கை பெற்றிருந்தால், விசேஷ பலன்கள் கிடைக்கும். எந்த விஷயத்தை எடுத்தாலும் அதில் நுட்பத்தைப் புகுத்துவார்கள். தனித்த ஆளுமைத் திறனோடு விளங்குவார்கள். தாய்வழிச் சொத்து கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம். பள்ளியை விட கல்லூரிக்கால வாழ்க்கை செறிவுள்ளதாக இருக்கும். இவர்களின் வாழ்க்கைப் பாதை மேலே மேலே செல்லுமே தவிர ஒருபோதும் கீழிறங்காது. தாயாரோடு கருத்து மோதல் இருந்தாலும் சோப்புக் குமிழிபோல சட்டென்று தீர்ந்து போகும்.

அடிக்கடி வீட்டிற்கு செலவு செய்தபடி இருப்பார்கள். நிறைய ஜன்னல்கள் வைத்து வீடு கட்டுவார்கள். எந்தப் பிரச்னையாக இருந்தாலும் ரத்த பந்தங்களுக்கிடையே சென்று சிக்கிக் கொள்ளக் கூடாது. பித்தப் பிரச்னை இருக்கும். இங்கு செவ்வாய் ஆட்சி பெற்றிருப்பதால் தன்னால் முடிந்த அளவுக்கு செவ்வாய் பக்கபலமாக இருப்பார். ஐந்தாம் இடமான தனுசுக்குள் சூரியனும் செவ்வாயும் அமர்ந்தால் டென்ஷன் பார்ட்டி என்று பெயரெடுப்பார்கள். பூர்வீகச் சொத்துக்களை காப்பாற்றுவதற்காக போராடுவார்கள்.

எந்த ஒரு விஷயத்தையும் காதால் கேட்டு பிறகு தீர விசாரித்து முடிவுகளை எடுக்க வேண்டும். குழந்தை பாக்கியம் தாமதமாகும். இவ்விரு கிரகங்களும் முதல் ஐந்து பாகைகளுக்குள் இருந்தால் கர்ப்பப்பை சம்மந்தமாக ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். காவல் துறை, இயக்கங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள். தந்தையை விட பாட்டன் சொத்துக்கள்தான் நிலைத்து நிற்கும். மிகுந்த உள்ளுணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள். சட்ட வல்லுனர்களாகவும் சிறந்து விளங்குவார்கள்.

சூரியனும் செவ்வாயும் மகர ராசியான ஆறாம் இடத்தில் சேர்ந்திருப்பது நல்லதுதான். மேலும், இங்கு செவ்வாய் உச்சமடைவதால் சொத்துச் சேர்க்கை, தோப்பு, பங்களா என்று ஏகபோகமான வாழ்க்கை அமையும். சிலர் அரசுத்துறையில் வலிமையான இடத்தில் அமர்வார்கள். எந்தத் துறையில் சேர்ந்தாலும் மிக நேர்மையாக நடந்து கொள்வார்கள். திடீரென்று யோகம் பெருகும் அமைப்பு இது. உடன்பிறந்தவர்கள் வகையில் அவ்வப்போது மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். இந்த அமைப்பு உள்ளவர்களோடு வெளிப்படையாகப் பழகுவதற்கு சுற்றியுள்ளோர் கொஞ்சம் பயப்படுவார்கள். அடிவயிற்றில் வலி வந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது. வெளிநாட்டிற்குச் சென்று செட்டில் ஆவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

ஏழாம் இடம், சனி பகவானின் வீடான கும்பம். இங்கு சூரியனும் செவ்வாயும் சேர்ந்திருந்தால் திருமணத் தடை ஏற்படும். மேலும் செவ்வாய் தோஷமும் இருக்கும். எதற்கெடுத்தாலும் வாக்குவாதம் செய்யும் வாழ்க்கைத்துணை அமைவார். எனவே, திருமணம் செய்யும்போது இதேபோல அமைப்புள்ள அல்லது செவ்வாய் தோஷமுள்ள வாழ்க்கைத்துணையாகச் சேர்ப்பது நல்லது. பணத்தைப் பார்க்காமல் நல்ல குடும்பமா என்று பார்த்து திருமணம் முடிப்பது நல்லது.

கூட்டுத் தொழிலைச் செய்யாமல் தனிப்பட்ட முறையில் தொழிலைச் செய்தால் நல்லபடியாக முன்னேறுவார்கள். பெரும்பாலும் இவர்கள் சில வருடங்கள் வெளிநாடுகளில் இருந்து விட்டு வந்தால் நல்லது. இந்த கிரகச் சேர்க்கை உடையவர்களின் சகோதரர்களுக்கும் உடனடியாக திருமணம் செய்து வைப்பது நல்லது. திடீரென்று பணக்காரராகும் ஆலோசனைகளைக்  கைவிட்டுவிட வேண்டும். ஏனெனில், இவர்களுக்கு அம்மாதிரியான நட்புகள் மிகச் சுலபமாக அமையும். 

எட்டாம் இடமான மீனத்தில் இந்த இரு கிரகங்களும் சேர்ந்திருந்தால் மாபெரும் ராஜதந்திரிகளாக விளங்குவார்கள். எப்போது வேலை, எப்போது பயணம் என்று தெரியாத அளவிற்கு சுற்றிக்கொண்டே இருப்பார்கள். சேமிப்பு என்கிற விஷயம் இவர்களுக்கு சுத்தமாக சரிவராது. இதில் சிலர் அயல்நாட்டு வாழ் உரிமம் பெற்று அங்கேயே இருப்பார்கள். இந்த அமைப்பில் பிறந்தோருக்கும் திருமணத்தடை வந்து நீங்கும். அல்லது காலதாமதமான திருமணம் நடக்கும். அடிக்கடி தலைவலி, கண்வலி என்றெல்லாம் வந்து போகும். எல்லோரும் மறந்துபோன பாரம்பரியமான, மரபான விஷயங்களை மீட்டெடுப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள்.

சமூகத்தில் ஏதேனும் பொதுநல வழக்குகளைப் போட்டபடி இருப்பார்கள். சிலர் வெளிநாட்டில் படிப்பை முடித்துவிட்டு மத்திம வயதில் தாய்நாட்டிற்குத் திரும்புவார்கள். சூரியனும் செவ்வாயும் ஒன்பதாம் இடமான மேஷத்தில் இருப்பது யோக பலன்களையே தரும். தந்தையை விட மாபெரும் புகழ் பெற்றிருப்பார்கள். ஆனால், பிதுர்க்காரகனான சூரியன் பிதுர் ஸ்தானத்தில் இருப்பதால் காரகா பாவ நாஸ்தி என்கிற தோஷத்தை அடைகிறது. இதனால் தந்தைக்கும் பிள்ளைக்கும் ஏதேனும் பிரச்னை வந்தவண்ணம் இருக்கும்.

இருப்பினும் சூரியன் உச்சமடைகிறார். செவ்வாய் ஆட்சி பெற்று அமர்கிறார். எனவே, இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை என்று ஆகிவிடும். இது பாக்கிய ஸ்தானமாக இருப்பதால் பூமி, வீடு, பாட்டனார் சொத்து என்றெல்லாம் நன்மையே கிட்டும். மத்திம வயதுக்குப் பின்னர் தீவிரமாக ஆன்மிகத்தில் ஈடுபடுவார்கள். சில சமயம் வறட்டு கௌரவத்திற்காக நல்ல நட்புகளை இழப்பார்கள்.

பத்தாம் இடமான ரிஷபத்தில் சூரியனும் செவ்வாயும் சேர்க்கை பெற்றிருந்தால் மருத்துவத் துறையில் பெரிதாக சாதிப்பார்கள். கெமிக்கல் எஞ்சினியர், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். என்று சமூகத்தின் முக்கிய துறைகளிலும் பிரகாசிப்பார்கள். தனியாகவே நிறுவனம் தொடங்குவார்கள். செங்கல் சூளை, உப்பளம், சுண்ணாம்பு, சிமென்ட் போன்ற துறைகளும் இவர்களுக்கு ஏற்றவையாக இருக்கும். காவல் துறையில் இவர்கள் பணியாற்றினால் தனி முத்திரை பதிப்பார்கள்.

சூரியனும் செவ்வாயும் முதல் 16 டிகிரிக்குள் இந்த ராசிக் கட்டத்திற்குள் அமர்ந்திருந்தால் மாபெரும் தொழிற்சாலையை அமைப்பார்கள். சிலர் பாரம்பரியமான தொழிலில் கொடிகட்டி பறப்பார்கள். சூரியனும் செவ்வாயும் மிதுனத்தில் அமர்வது ஓரளவு பரவாயில்லை என்றுதான் சொல்ல வேண்டும். லாப விஷயங்களெல்லாம் வந்தபடி இருக்கும். ஆனால், மூத்த சகோதரர்களோடு சரியாக வராது. சொத்துப் பிரச்னைகள் வந்து நீங்கும். இந்த அமைப்பில் இருப்போர்கள் பிரபலங்களுக்கு பினாமியாக இருப்பார்கள்.

கடக ராசியான பன்னிரெண்டாம் வீட்டில் சூரியனும் செவ்வாயும் அமர்ந்திருந்தால் ஆன்மிகத்தில் மிகத் தீவிரமாக ஈடுபடுவார்கள். உடலை வருத்தி விரதமிருந்து பாத யாத்திரையையெல்லாம் மேற்கொள்வார்கள். பலர் வீண் செலவு செய்வார்கள். எனவே அதைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது நல்லது. சூரியனும் செவ்வாயும் இணைந்திருந்தால் பொதுவாகவே நிர்வாகம், அரசியல், சமூகப் பிரச்னைகளை முன்னெடுத்தல் என்றெல்லாம் செல்வார்கள். அடிப்படை வசதிகள் முதல் அந்தஸ்து வரை எந்தப் பிரச்னையும் இருக்காது.

ஆனால், இந்த இரண்டு கிரகங்களும் நீசமானாலோ, பகை வீட்டில் அமர்ந்தாலோ, மறைந்தாலோ எதிர்மறைப் பலன்களை அளிக்கும். இப்படிப்பட்ட எதிர்மறைப் பலன்களைக் குறைத்து நற்பலன்களைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய தலமே கழுகுமலை ஆகும். சம்பாதி என்னும் கழுகு முனிவர் இவ்வூரில் முருகனை வழிபட்டதால் கழுகுமலை எனப் பெயர் பெற்றது. முருகனை கழுகாசலமூர்த்தி என அழைக்கின்றனர். குடவரைக் கோயிலான இதன் விமானம் மலைமீது அமைந்துள்ளது. கருவறையில் வள்ளி, தெய்வானையோடு முருகன் காட்சியளிக்கிறார்.

முருகனின் வாகனமான மயில் இடது பக்கம் முகம் காட்டுவது சிறப்பு. இங்கு இந்திரனே மயிலாகத் தோற்றமளிப்பதாகக் கூறப்படுகிறது. வள்ளி, தெய்வானை இருவரும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்தபடி முருகன் முன்னால் காட்சி தருவது மற்றொரு சிறப்பம்சம். எனவே அரக்கனை வதம் செய்தும்கூட, துணைவியர் முகம் பார்ப்பதால் சாந்த முருகனாய் பக்தர்களுக்கு அபயம் அளிக்கிறார் என்பது ஐதீகம்.

‘முருகனுக்கு ஒரு முகமும், ஆறு கரங்களும் உள்ள திருத்தலம் இது மட்டும்தான்’ என்கிறார்கள். கழுகுமலை திருத்தலம் ‘தென் பழனி’ என்றழைக்கப்படுகிறது. பழனியைப் போலவே முருகன் மேற்கு பார்த்து உள்ளார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி  சங்கரன்கோவில் பாதையில் 6வது கி.மீட்டரில் கழுகுமலை அமைந்திருக்கிறது.

(கிரகங்கள் சுழலும்...)