ராகு - கேது பரிகாரத் தலங்கள்
* ஸ்ரீகாளஹஸ்தி : சென்னையிலிருந்து 110 கி.மீ. தொலைவும், திருப்பதியிலிருந்து 40 கி.மீ. தொலைவும் உள்ளன. புகழ்பெற்ற ராகு-கேது தலமாகும். இறைவன் காளத்திநாதர் என்றும், அம்மை ஞானப்பூங்கோதை எனும் திருப்பெயரோடும் எழுந்தருளியுள்ளார்கள்.
* கீழப்பெரும்பள்ளம் : மயிலாடுதுறை மற்றும் சீர்காழியிலிருந்து இத்தலத்தை அடையலாம். மூலவர் நாகேஸ்வரர். கேது பகவானுக்குரிய பரிகார தலமாக விளங்குகிறது.
 * திருநாகேஸ்வரம் : கும்பகோணத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது. நாகேஸ்வரரையும், பிறையணிவாணுதலாள் அம்மனையும், இரண்டாம் பிராகாரத்திலுள்ள நாகராஜரையும் வணங்கி வாருங்கள்.
* கும்பகோணம் : நகரின் மையத்திலேயே அமைந்துள்ள நாகேஸ்வரன் கோயிலில் அருட்பாலிக்கும் நாகேஸ்வரரையும், பெரியநாயகியையும் தரிசியுங்கள். ஆதிசேஷன் வழிபட்ட தலம் இது.
* பாமணி : மன்னார்குடிக்கு வடக்கே 3 கி.மீ. தொலைவிலுள்ள இத்தலத்தில் சுயம்பு லிங்கமாக அருளும் நாகநாதரையும், அமிர்தநாயகியையும் தரிசியுங்கள். பாதாளத்திலிருந்து ஆதிசேஷன் தோன்றி வழிபட்டதால் பாதாளீச்சரம் என்று இத்தலத்தை அழைப்பர்.
* திருப்பாம்புரம் : கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையிலிருந்து பேரளம் வழியாக இத்தலத்தை அடையலாம். இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் பாம்புரேஸ்வரரையும், வண்டார் பூங்குழலியையும் தரிசியுங்கள். ஆதிசேஷன் வழிபட்ட தலம் இது.
* ஸ்ரீவாஞ்சியம் : கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையிருந்து நன்னிலம் வழியாக இத்தலத்தை அடையலாம். ராகுவும், கேதுவும் சேர்ந்திருக்கும் அரிய கோலத்தை இங்கு தரிசிக்கலாம்.
* நாகூர் : நாகப்பட்டினத்திற்கு அருகே உள்ள இத்தலத்தில் நாகவல்லி சமேத நாகநாதராக இறைவன் அருட்பாலிக்கிறார். நாகராஜன் பூஜித்து பேறுபெற்ற தலம் இது.
* பேரையூர் : புதுக்கோட்டைக்கு அருகேயுள்ள திருமயத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது. மூலவராக நாகநாதரும், அம்மன் பிரகதாம்பாள் எனும் திருப்பெயரோடும் திகழ்கிறார்கள். நாகராஜன் பூஜித்த தலம் இது.
* நயினார்கோவில் : ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. சௌந்தரநாயகி சமேத நாகநாதராக இங்கு இறைவன் அருட்பாலிக்கிறார்.
|