தேவியர் தரிசனம்!



* புதுக்கோட்டைக்கு அருகேயுள்ள குறிச்சியில் அருள்கிறாள் அஷ்டதசபுஜ மகாலட்சுமி. நவபாஷாணத்தால் ஆன மூர்த்தினி இவள். கல்வி, செல்வம், வீரம் எனும் மூன்றையும் இத்தல அம்பிகை அருள்கிறாள். ஒவ்வொரு மாதமும் உலக நன்மைக்காக ஆலயத்தின் சார்பில் திருவிளக்கு பூஜை நடக்கிறது.
* அன்னை ஆதிபராசக்தி நம்புநாயகியம்மனாக அருளும் தலம் ராமநாதபுரம், தனுஷ்கோடியில் உள்ளது. நவராத்திரியின்போது இத்தேவி நவசக்தி வடிவங்களாக அலங்கரிக்கப்பட்டு கொலுவீற்றருள்கிறாள். இந்த அம்மனுக்கு சாத்தப்படும் மஞ்சள்காப்பு தீராநோய் தீர்க்கும் மருந்தாகும்

* நெல்லை, சீவலப்பேரியில் திருமாலோடு துர்க்காம்பிகை ஒரே கருவறையில் அருள்கிறாள். நவராத்திரியின் எட்டாம் நாள் துர்க்காஷ்டமி அன்று இத்தலத்தில் மகாசண்டி யாகம் நடைபெறுகிறது.
* கோவை - கிணத்துக்கடவு பாதையில் உள்ளது முப்பெருந்தேவியர் ஆலயம். இங்கு மிகப்பெரிய அளவில் பொம்மைக்கொலு வைத்து நவராத்திரியைக் கொண்டாடுகிறார்கள். மகாலட்சுமியின் முன் உள்ள மேருவிற்கு அர்ச்சனை செய்யப்பட்ட குங்குமம் பிரசாதமாகத் தரப்படுகிறது.
* பந்தநல்லூர் வைத்தீஸ்வரன் வழித்தடத்தில் மணல்மேட்டிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது கிடாத்தலைமேடு. மகிஷனை அழித்த தோஷம், துர்க்கைக்கு நீங்கிய தலம் இது. இத்தலம் தோஷநிவர்த்தி தலமாக போற்றப்படுகிறது.
* சென்னை நங்கநல்லூரில் கருவறையில் மரகதக் கல்லினால் ஆன ராஜராஜேஸ்வரி தேவி தரிசனம் தருகிறாள். இதே கருவறையில், தீயில் மிதந்த தெய்வமணி, பின் தானே ராஜராஜேஸ்வரியாக மாறிய திருவுருவமும் உள்ளது. நவராத்திரி இக்கோயிலில் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.
* கன்னியாகுமரியில் பகவதியாய் தேவி அருள்கிறார். நவராத்திரி பத்தாம் நாள் விஜயதசமியன்று அன்னை வெள்ளிக் குதிரையில் ஆரோகணித்து 4 கி.மீ. தொலைவிலுள்ள மகாதானபுரத்திற்குச் சென்று பாணாசுர வதம் செய்வாள். அப்போது வழியெங்கும் எலுமிச்சை மாலை அணிவித்து பக்தர்கள் பிரார்த்தனையை நிறைவேற்றுவது வழக்கம்.
* தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை வழித்தடத்தில் உள்ள மணல்மேல்குடியில் அம்பிகை, ஜகத்ரட்சகி எனும் திருநாமத்தோடு அருள்கிறாள். நவராத்திரி விழா இத்தலத்தில் கொண்டாடப்படுகிறது. மழலை வரம் தருவதில் நிகரற்றவள் இத்தேவி.
* சென்னை, பழைய மகாபலிபுரம் சாலையில், நாவலூரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் தாழம்பூரில் த்ரிசக்தி அம்மன் ஆலயம் உள்ளது. இத்தல கருவறையில் லட்சுமி, மூகாம்பிகை, ஞானாம்பிகை மூவரும் திருவருள் பொழிந்து கொண்டிருக்கின்றனர். நவராத்திரி உற்சவம் இங்கு சிறப்பாக நடைபெறும்.
* மயிலாடுதுறை - திருவாரூர் பாதையில் கூத்தனூரில் வீணையில்லாத சரஸ்வதியை தரிசிக்கலாம். கம்பனுக்காக கிழங்கு விற்கும் பாட்டியாகவும், இடையர் பெண்ணாகவும் நேரில் தரிசனம் தந்த தேவி இவள்.
* சென்னை திருப்போரூரில் வள்ளி-தெய்வானை இருவருக்கும் நவராத்திரி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பொதுவாக, அவர்களுடைய மாமியாரான பார்வதி தேவிக்கு நடத்தப்படும் இவ்விழா, இங்கு மருமகள்களுக்கு நடத்தப்படுவது சிறப்பு.
* தில்லை நடராஜர் ஆலயத்தில் மிகப் பெரிய அளவில் கொலு வைத்து நவராத்திரியை சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். தினம் ஒரு அலங்காரத்தில் அன்னை சிவகாமசுந்தரியை தரிசிக்கலாம்.
* வனதுர்க்கா பரமேஸ்வரி எனும் பெயருடன் பராசக்தி அருளும் தலம், தஞ்சாவூரிலுள்ள கதிராமங்கலம். கிழக்கு நோக்கி இந்த துர்க்கை அருள்பாலிப்பது சிறப்பு. இந்த அன்னைக்கு அர்ச்சனை செய்யும் போது வலது உள்ளங்கையில் வியர்வை முத்துக்கள் வெளிப்படுவது பிரமிப்பு.
* எப்போதும் போர்க்கோலத்தில் காணப்படும் சாமுண்டீஸ்வரி, காஞ்சிபுரம், புதுப்பட்டினத்தில் தவக்கோலத்தில் அருள்கிறாள். மகிஷாசுரனை வதம் செய்த பிறகு அன்னை இங்கு வந்து தவமிருந்தாளாம்.
* திருத்தணியிலிருந்து 8 கி.மீ தொலைவில் பொன்பாடி ரயில்நிலையத்திற்கு மேற்கே 2 கி.மீ, தொலைவில் உள்ளது மத்தூர். இங்கே மஹிஷாசுரமர்த்தினியை தரிசிக்கலாம். அமாவாசை தினங்களில் 108 பால் குட அபிஷேகமும், பௌர்ணமி தினங்களில் 108 சங்காபிஷேகத்தோடு நவகலச பூஜைகளும் நடக்கும். இத்தலத்தின் வேப்பிலை கசப்பதில்லை!
* கும்பகோணம், அம்மன்குடியில் துர்க்காம்பிகை  எட்டுத் திருக்கரங்களுடன் அருளாட்சி புரிகிறாள். நவகிரகங்களுக்கு அதிபதியாக துர்க்கா தேவி கருதப்படுவதால்
இக்கோயிலில் நவகிரகங்கள் இல்லை.
* கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள பட்டீஸ்வரத்தில் துர்க்காம்பிகை அழகுத் திருக்கோலத்தில் அருள்கிறாள். ராகு தோஷத்தை இந்த அம்பிகை நிவர்த்தி செய்வதாக ஐதீகம்.
* திருவாரூர், ஆனந்தகுடி, சோமேஸ்வரர் ஆலயத்தில் கல்யாண துர்க்கை அருள்கிறாள். திருமணத்திற்காக காத்திருப்போர் இத்தேவியை தரிசிக்க அவர்களுக்கு உடனே திருமணம் நடக்கிறது.
* சென்னை, அம்பத்தூர், கள்ளிக்குப்பம் பரத்வாஜ ஆசிரமத்தில் புவனேஸ்வரிக்கு நவராத்திரி விழா நடைபெறுகிறது. அப்போது கோபூஜை, கஜபூஜை, வடுகபூஜை, சுவாசினி பூஜை, கன்யாபூஜை, தம்பதி பூஜை என பூஜைகள் நடைபெறுகின்றன.
* காஞ்சிபுரம் காமாட்சியம்மனை நவராத்திரி ஒன்பது நாட்களும் நவராத்திரி கொலு மண்டபத்தில் ஒவ்வொரு அலங்காரத்தில் தரிசனம் செய்யலாம்.