கல்விக்கண் திறப்பாள் சாரதாம்பாள்



திருச்சி - ஸ்ரீரங்கம்

ஸ்ரீரங்கம் ராஜ கோபுரத்திலிருந்து அம்மா மண்டபம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. அன்னை ஸ்ரீசாரதாம்பாள் ஆலயம். சிருங்கேரி சங்கர மடம் என்று வடிவமைக்கப்பட்ட அரைவட்ட முகப்பைக் கடந்ததுமே ஆலய முகப்பைக் காணலாம். உள்ளே நுழைந்ததும் இடது புறம் வித்யா கணபதி சந்நதியும், வலப்புறம் பாலசுப்ரமணியர் சந்நதியும் அமைந்துள்ளன. இந்த பிள்ளையார் மற்றும் முருகனின் திருமேனிகள் வெள்ளை சலவைக் கல்லால் ஆனது. நம்மை சிலிர்க்க வைப்பவை. அடுத்ததாக உள்ளது மகா மண்டபம். 16 பிரமாண்ட தூண்களுடன் அனிவெட்டி முறையில் அமைந்துள்ளது.  

மண்டபத்தைச் சுற்றி மேல்புறம் ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாறு வண்ண ஓவியத்தில் தீட்டப்பட்டுள்ளது. மேலும், பஞ்சபூத தலங்களிலுள்ள இறைவனின் தோற்றங்கள் வண்ணக் கலவையில் மிக அழகாக வரையப்பட்டுள்ளன. அடுத்துள்ள அர்த்த மண்டபம் சற்றே வித்தியாசமான முறையில் காட்சி தருகின்றது. இந்த மண்டபத்தின் மேல்புறம் எண் சதுர வடிவில் அமைந்திருப்பதுடன் அஷ்டலட்சுமிகளின் திருமேனிகள் சுதை வடிவில் அழகுற அமைந்துள்ளன. கருவறையில் அன்னை சாரதாம்பாள் பத்மாசன நிலையில் இரு கால்களை மடக்கியபடி அமர்ந்த திருக்கோலத்தில் இளநகை தவழும் இன்முகத்துடன் அருள்பாலிக்கின்றாள்.

இங்கு அன்னைக்கு நான்கு கரங்கள். அன்னை தனது மேல் வலது கரத்தில் கிளியையும் இடது மேல் கரத்தில் அமிர்த கலத்தையும் தாங்கி, கீழிரு கரங்கள் அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடன் காட்சி தருகிறாள். கீழ் கரங்களில் ஜப மாலையையும் புத்தகத்தையும் தாங்கி நிற்கிறாள். இந்த அன்னையின் திருமேனி வெண் பளிங்குக் கல்லினால் உருவாக்கப்பட்டுள்ளதால், அன்னையின் முகம் ஜொலிக்கின்றது. அன்னையின் கரத்திலிருக்கும் புத்தகம் கல்வியையும், ஜபமாலை தியானத்தையும் கிளி ஞானத்தையும், அமிர்த கலசம் அழிவற்ற நிலையான முக்தி நிலையையும் உணர்த்துவதாக கூறுகின்றனர்.

அன்னையின் வலதுபுறம் ஆகி சங்கரர் சந்நதியும், இடதுபுறம் சாரதா பீடத்தின் 33வது பீடாதிபதி ஸ்ரீசச்சிதானந்த சிவாபிநவ நரசிம்ம பாரதி சந்நதியும் உள்ளன. மூலவரின் இருப்பிட அமைப்பும், மூலவரின் விமானமும் எண்கோண அமைப்பிலேயே அமைந்துள்ளது. விமானத்தின் எட்டு திசைகளிலும் குரு, கிருஷ்ணர், முருகன், விஷ்ணு, சிவ பெருமான், பார்வதி, பிரம்மா, தத்தாத்ரேயர் என எட்டு பேர்களின் சுதை வடிவத் திருமேனிகள் ஆளுக்கொரு திசையாக எட்டு திசை நோக்கி அருள்பாலிக்கின்றன. தாமரைப் பூவை கவிழ்த்து வைத்த தோற்றத்தில் இந்த விமானம் காணப்படுகிறது.

சிவ-விஷ்ணு பேதம் களையும் தலமாக இத்தலம் விளங்குவது உண்மையே. அன்னை சாரதாம்பாளின் கருவறையில் சிறிய அளவில் சிவபெருமானின் லிங்கத் திருமேனி உள்ளது. பிரதோஷ நாட்களில் இறைவனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெறுகின்றனர். அனைத்து பெளர்ணமி நாட்களிலும் ஸ்ரீசக்கர நவாவரண பூஜை நடைபெறுகிறது. அன்றே சுமங்கலி பூஜையும், கன்னியா பூஜையும் நடைபெறுகிறது.

இந்தப் பூஜை முடிந்ததும் சுமங்கலி பெண்களுக்கு புடவை, சட்டைத் துணி, மங்கலப் பொருட்களை தருவது வழக்கமாக உள்ளது. சிறுமிகளை அம்பாள் சொரூபமாகப் பாவித்து ஆடைகள், அணிகலன்களை தந்து வணங்குவர். தை - மாசி மாதத்தில் ராஜமாதங்கி நவராத்திரியும், ஆடி மாதத்தில் வாராகி நவராத்திரியும், பங்குனி-சித்திரை மாதத்தில் வசந்த நவராத்திரியும், புரட்டாசியில் சாரதா நவராத்திரியும் கொண்டாடப்படுகின்றன. இந்த நாட்களில் உற்சவர் அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகளும், மாலையில் எந்திரத்தை வைத்து ஆவரண பூஜையும் நடைபெறும். அன்னைக்கு தினமும் லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம் நடைபெறும். திருமணமாக வேண்டி கன்னிப் பெண்கள் அன்னையிடம் வேண்டிக் கொள்கின்றனர்.  

மணமானதும் அன்னைக்கு புடவை கொண்டு வந்து சாத்துகின்றனர். இந்தப் புடவைகளை ஆலய நிர்வாகம் குடிசைவாழ் பெண்களுக்கு தானமாகத் தந்து உதவுகின்றது. கல்விச் செல்வம் வேண்டி ஏராளமான மாணவர்கள் அன்னையை வேண்ட, அவர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறுவதை கண்கூடாகக் காணலாம். ஆலயத்தின் வடக்குப் பிராகாரத்தில் தசாவதாரத்தின் திருமேனிகள் வரிசையாக வீற்றிருக்கின்றன. ஆலயத்தின் வடகிழக்கு மூலையில் நவகிரக நாயகர்களின் சந்நதி உள்ளது. தனி மண்டபமாக காட்சி தரும் பொதுவாக வழிபாடு என்பது ஆறு வகைப்படும். சிவபெருமானை வழிபடுவது சைவ வழிபாடு எனவும், விஷ்ணுவை வழிபடுவது வைஷ்ணவம் எனவும்,

கணபதியை வழிபடுவது காணாபத்யம் எனவும், முருகனை வழிபடுவது கௌமாரம் எனவும், சூரியனை வழிபடுவது சௌரம் எனவும், சக்தியை வழிபடுவது சாக்தம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த அறு சமய வழிபாடுகள் இந்த ஆலயத்தில் நடைபெறுவது ஆச்சரியமான விஷயமாகும். தினமும் காலை நேரத்தில் இரண்டு மயில்கள் இறைவியின் விமானத்திற்கு அருகே மெல்லிய குரலில் அகவிவிட்டு செல்வது அதிசயமாக இருக்கிறது. திருச்சி - ஸ்ரீரங்கம் ராஜ கோபுரத்திலிருந்து இந்த ஆலயத்திற்கு நடந்தே சென்று விடலாம். ஆட்டோ வசதியும் உண்டு.

- ஜெயவண்ணன்