திருமுடி - திருவடி



திருமுடி

* திருச்சியில் தேன் நிறைந்த பூக்களைத் தன் தலையில் சூடியவள் எனும் பொருள்படும் வகையில் ‘மட்டுவார்குழலி’ எனும் திருப்பெயரில் அம்பிகை வணங்கப்படுகிறாள்.
* திருவாலங்காட்டில் வண்டுகள் சூழ்ந்த பூக்களைச் சூடியவள் எனும் பொருள் கொண்ட ‘வண்டார்குழலி’யாய் அம்பிகை அருள்புரிகிறாள்.
* திருக்கூடலையாற்றில் சுருண்ட கூந்தலை உடையவளாக ‘பிரிகுழல் அம்பிகை’ எனும் பெயரில் தேவி அருள்கிறாள்.

கண்கள்

*கோடியக்கரை குழகர் கோயிலில் மை எழுதிய பெரிய கண்களை உடையவள் எனும் பொருளில் ‘மையார் தடங்கண்ணி’யை தரிசிக்கலாம்.
* திருமால்பூரில் அஞ்சனம் எழுதிய கண்களைக் கொண்ட ‘அஞ்சனாட்சி’யை தரிசிக்கலாம். காஞ்சியில் ஆதிசங்கரர் சக்ரத்தில் நிறுவிய வசின்யாதி வாக்தேவதைகள் எண்வரும் இந்த அஞ்சனாட்சியின் பீடத்தில் நின்றருள்கிறார்கள்.
* வடுகூரில் பிளந்த மாவடுவைப் போன்ற கண்களைக் கொண்டவள் எனும் பொருளில் ‘வடுவகிர்க்கண்ணம்மை’ அருளாட்சி புரிகிறாள்.

வாய், மொழி

* கரும்பினும் இனிமையான சொல்லுடையவள் என்னும் பொருளில் ‘கரும்பன்னசொல்லம்மை’யை திருப்புறம்பயத்தில் தரிசிக்கலாம்.
* வீணையையும் பழிக்கும் நாதக்குரலுடையாளாக வேதாரண்யத்தில் ‘யாழைப்பழித்த மொழியாள்’ அருள்புரிகிறாள். இதனாலேயே இத்தல சரஸ்வதியின் கையில் வீணை இல்லை.
* குயில் போன்ற குரல் உடையவள் எனும்படி ‘குயில்மொழியம்மை’யாக திருஇடும்பை மாகாளத்தில் தேவி கோலோச்சுகிறாள்.

புன்னகை

* முல்லைப்பூ போன்ற பற்களைக் கொண்ட ‘தவள வெண்ணகை அம்மை’யை திருப்பாலைத் துறையில் தரிசிக்கலாம்.

தோள்

* திருப்பந்தணைநல்லூரில் ‘காம்பனதோளி’ எனும் திருப்பெயரில் அன்னை அருள்கிறாள்.
* வேயுறுதோளியம்மை எனும் பெயரில் திருநீடுரில் தேவியை தரிசிக்கலாம்.

மார்பகங்கள்

* உண்ணாமுலையம்மை எனும் பெயரில் இறைவி திருவருள் புரியும் தலம் திருவண்ணாமலை.
* திருவோத்தூரில் ‘இளமுலைநாயகி’ எனும் பெயரில் அம்பிகை அருள்கிறாள்.
* திருநள்ளாறில் ‘போகமார்த்த பூண்முலையம்மை’ எனும் பெயரில் அம்பிகையை தரிசிக்கலாம்.
* திருவாவடுதுறை தலத்தில் ‘ஒப்பிலா முலையம்மை’யான அம்பிகை அருளாட்சி செய்கிறாள்.

கை

* திருவைகாவூர் தலத்தில் வளையல்களைப் பூண்ட ‘வளைக்கை நாயகி’யாய் பராசக்தி பொலிகின்றாள்.

இடை

* வடதிருமுல்லைவாயிலில் கொடி போன்ற இடையைக் கொண்ட ‘கொடியிடைநாயகி’ தண்ணருளைப் பரப்பி
விளங்குகிறாள்.
* சிறிய இடையைக் கொண்ட ‘சிற்றிடைநாயகி’யை திருஇடையாற்றில் தரிசிக்கலாம்.

திருவடி

* திருவாரூர் பரவையுன்மண்டலி தலத்தில் பஞ்சினும் மெல்லிய அடிகளை உடையவள் எனும் பொருள் படும்படி ‘பஞ்சின் மெல்லடியம்மை’யை தரிசிக்கலாம்.