கடன் தொல்லையைத் தீர்ப்பது எப்படி?



அதிக கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்றினால் படிப்படியாக கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம்:

*அஸ்வினி, அல்லது அனுஷம் நட்சத்திர நாளில் அசல் தொகையில் ஒரு பகுதியை கொடுத்தால் கடன் சுமை படிப் படியாக குறையும்.
*செவ்வாய்க்கிழமையன்று, செவ்வாய் ஓரையில் கடனை திருப்பித் தருவதால் கடன் பிரச்னை நீங்கும்.
*ஞாயிற்றுக்கிழமையில் வரும் சதுர்த்தி திதியன்றும் சனிக்கிழமையில் வரும் சதுர்த்தி திதியிலும் குளிகன் நேரத்தில் அசல் தொகையில் ஒரு
பகுதியை கொடுத்தால் கடன் சீக்கிரம் அடை படும்.
*அஸ்வினி நட்சத்திர நாளில் மேஷ லக்னம் நடைபெறும்போதும், அனுஷ நட்சத்திர நாளில் விருச்சிக லக்னம் நடைபெறும்போதும் யாரிடம் அதிக கடன்பட்டிருக்கிறோமோ அவரிடம் அசலில் ஒருசிறிய பகுதியை கொடுத்தால் அந்த முகூர்த்த விசேஷம் காரணமாக, உங்கள் கடன் விரைவாக
குறையும்.
*குளிகை காலத்திலும் கடனை அடைக்கலாம்.
*‘கரிநாள்’ என்று சொல்லப்படும் நாட்களிலும் கடன் அடைக்கலாம்.
*மரணயோகம் உள்ள நாட்களில் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கலாம். இதனால் யாரிடம் கடன் வாங்கினோமோ அந்த நபரிடமோ, அல்லது அந்த வங்கியிலோ மீண்டும் கடன் வாங்கவேண்டி வராது.
*தினசரி பக்தியுடனும் நம்பிக்கையுடனும் கந்த சஷ்டி கவசம் படித்துவர ருண, ரோக, சத்ரு தொல்லை நீங்கும். சஷ்டி திதியன்று
முருகன் கோயில்களில் சஷ்டி கவசம் படிக்க, கடன் நிவாரணம் ஏற்படும்.

பிரம்ம காயத்ரி

மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மா, படைப்புக் கடவுளாக போற்றப்படுகிறார். நான்முகன், அயன், கஞ்சன், விரிஞ்சி உள்ளிட்ட பல்வேறு பெயர்கள் இவருக்கு உண்டு. விஷ்ணுவின் நாபிக் கமலத்திலிருந்து தோன்றியவர் பிரம்மன்.

இவரது மனைவி கல்விக் கடவுளான சரஸ்வதி. பிரம்மனின் சகோதரியாக மகாலட்சுமியைச் சொல்வார்கள். பிரம்மதேவருக்கு சனகர், சனத்குமாரர், சனத்சுஜாதர், சனந்தனர், வசிஷ்டர், புலகர், புலஸ்தியர், பிருகு, தட்சிப்பிரஜாபதி, ஆங்கிரஸ், மரீசி, அத்ரி, நாரதர் ஆகிய மகன்கள் இருப்பதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன.பிரம்மதேவனை வழிபடும்போது, அவருக்குரிய காயத்ரி மந்திரத்தை சொல்வதுநன்மைகளைத் தரும் -

‘ஓம் வேதாத்மகாய வித்மஹே
ஹிரண்ய கர்ப்பாய தீமஹி
தன்னோ பிரஹ்மஹ்
ப்ரசோதயாத்’

‘‘வேதங்களை உருவாக்கியவரை நாம் அறிந்து கொள்வோம். ஹிரண்யன் என்னும் பெயர் பெற்ற அந்தப் பரம்பொருளை தியானம் செய்வோம். பிரம்மதேவனாகிய அவர், நமக்கு நன்மை அளித்து, காத்து அருள்வார்,’’ என்பது இதன் பொருள்.இந்த காயத்ரி மந்திரத்தை, தினமும் 108 முறை உச்சரித்து வந்தால் கேட்ட வரம் கிடைக்கும். வேதங்களில் சிறந்து விளங்கலாம். ஆயுள், ஆரோக்கியம் சிறப்பாக அமையும்.

- குருப்ரியா