என்ன சொல்கிறது, என் ஜாதகம்?



நம்பிக்கையுடன் காத்திருங்கள்!

? என் மகடனுடைய ஜாதகம் இணைத்துள்ளேன். பள்ளிக் கல்வி மற்றும் பொறியியல் பட்டப் படிப்பையும் நன்கு படித்து முடித்தான். ஆனால், இன்றுவரை முறையான, தகுதியான வேலை கிடைக்கவில்லை. கடந்த பத்து ஆண்டுகளாக பல்வேறு பயிற்சிகளையும், முயற்சிகளையும்  மேற்கொண்டும், நல்ல நிலையான பணியில் அமர முடியவில்லை. இதனால் மனக் குழப்பமடைந்து குடும்பமே விரக்தியில் இருக்கிறோம். இந்த நிலை எப்போது மாறும்? அரசுப் பணி கிடைக்குமா?
- டி.தனஞ்ஜெயன், பண்ருட்டி.

தங்கள் மகன் ஜாதகப்படி லக்னாதிபதி செவ்வாய் 7ல் சனியுடன் இருப்பது அவருடைய மனநிலையில் ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்தும். அதேவேளையில் பாக்ய ஸ்தானாதிபதி குரு சொந்த வீட்டில் இருப்பது நல்ல பலன்களை கண்டிப்பாக கொடுக்கும். சொந்தமாக எடுக்கும் எந்த முயற்சியும் வெற்றியை அளிக்கும். தற்பொழுது குரு தசையில் கேது புக்தி 2018 பிப்ரவரி வரை உள்ளது.

இந்த காலகட்டத்தில் மனக் குழப்பம், இடமாற்றம், விரக்தி போன்றவை ஏற்படும். ஆனாலும், இந்த காலகட்டத்திலேயே தெளிவான முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். அரசு வேலைக்கான சாத்தியங்கள் குறைவு. குலதெய்வ வழிபாடும், திங்கட்கிழமைகளில் சிவார்ச்சனையையும் அவசியம் செய்ய வேண்டும். இது கெடுபலன்களைப் பெருமளவு  குறைத்து மனஅமைதியை ஏற்படுத்தும். சித்திரை 1 முதல் சூரியனின் சஞ்சாரம் சாதகமாகஇருப்பதால் நம்பிக்கையுடன் காத்திருங்கள்.

மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே. கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும், பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே.

- என்ற அபிராமி அந்தாதியின் ஸ்லோகத்தை பக்தியுடன் தினமும் பாராயணம் செய்து வர ஸ்திரமான வேலை மற்றும் செல்வாக்கு கிடைக்கும்.
? எனது அண்ணன் மகனுக்கு வெகுநாட்களாக திருமணம் தடைபட்டு வருகிறது. நிறைய பரிகாரம் செய்தாகி விட்டது. இவருக்கு எப்பொழுது திருமணம் நடைபெறும்?.
- ஆர்.ராமசுப்ரமணியன்.

அவர் ஜாதகப்படி, 7ல் சுக்கிரன் இருப்பது களத்திர தோஷமாகிறது. அதேபோல் 7க்கு உடைய புதன் சூரியனுடன் 6ல் இருப்பதும், 8ல் ராகு இருப்பதும் களத்திர தோஷமே. இவ்வகை தோஷம் கொண்ட ஜாதகர்களுக்கு 34 வயதுக்குள் செய்யப்படும் திருமணங்கள் எதிர்பார்த்த சந்தோஷத்தைத் தராமல், அவர்கள் பிரிவை சந்திக்க நேரிடலாம். சிலருக்கு இரு தாரம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. ஜாதகர் அந்த காலகட்டத்தைக் கடந்துவிட்டால் அடுத்த ஒன்றரை வருடத்திற்குள் திருமண யோகம் உண்டு, கவலை வேண்டாம்.

குலதெய்வ வழிபாடும், ஞாயிற்றுக் கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கைக்கு தீபம் ஏற்றி வருவதும், பசுவிற்கு உணவளித்து வருவதும் தோஷத்தின் தாக்கத்தை குறைத்து நல்ல திருமண வாழ்க்கை அமைய துணை செய்யும்.

வெளிநின்ற நின்திருமேனியைப் பார்த்தென் விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரைகண்டதில்லை, கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது, என்ன திருவுளமோ?
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே.

- என்ற அபிராமி அந்தாதியின் ஸ்லோகத்தை பக்தியுடன் தினமும் பாராயணம் செய்து வர திருமணத்தடை நீங்கி அற்புத வாழ்வு அடையலாம்.
? எனது சகோதரரின் ஜாதகம் இணைத்திருக்கிறேன். களத்திரகாரகன் அஸ்தங்கம் ஆகிவிட்டபடியால் திருமண வாழ்க்கை அமைய வாய்ப்பில்லை என்று ஒரு ஜோதிடர் கூறி விட்டார். அப்படியானால் அவருக்குத் திருமண வாழ்க்கை உண்டாக வாய்ப்பே இல்லையா?
- ரா.பாஸ்கரன், பெங்களூர்.

தங்கள் சகோதரரின் ஜாதகப்படி களத்திரகாரகன் சுக்கிரன் அஸ்தங்கம் ஆகவில்லை. ஆனால் 8ல் இருப்பது களத்திர தோஷம். களத்திர ஸ்தானாதிபதி செவ்வாய் பகை வீட்டில் இருப்பதும், களத்திர ஸ்தானத்தில் ராகு இருப்பதும், சுக்கிரனின் 8ம் இட சஞ்சாரமும் திருமண யோகத்தை பாதிக்கின்றன. இது மிக காலதாமதமான திருமணத்திற்கு வழிவகுக்கும். தற்பொழுது ராகு தசை ஆரம்பித்து ராகு புக்தி நடைபெறுகிறது.

2018 டிசம்பர் வரை ராகு புக்தி உள்ளது. இந்த காலகட்டத்தில் திருமண பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உங்களின் எதிர்பார்ப்புகளை கொஞ்சம் தளர்த்திக் கொண்டால் விரைவில் நல்ல வரன் அமையும். குலதெய்வத்திற்கு தினமும் காலை 6.30 மணிக்குள் நெய் அல்லது நல்லெண்ணெய் விளக்கை வீட்டிலேயே ஏற்றி வரச் சொல்லவும். செவ்வாய்க்கிழமைகளில் அருகிலுள்ள திருக்கோயிலில் முருகனுக்கு தீபமேற்றி வரவேண்டும். திருமணமாகும் வரை இதனைத் தொடர்ந்து செய்து வரவேண்டும்.

சடையா யெனுமால் சரணநீ எனுமால்
விடையா யெனுமால் வெருவா விழுமால்
மடையார் குவளை மலரும் மருகல்
உடையார் தகுமோ இவளுண் மெலிவே...
- திருஞானசம்பந்தர் அருளிய ஷண்முகணின் இந்த பதிகத்தை தினசரி பாராயணம் செய்து வாருங்கள். விரைவில் கெட்டிமேளம் கொட்டும்.

?எனது இரண்டு மகள்களை உயர்கல்வியில் எந்தப் பாடத்திட்டத்தில் சேர்க்கலாம்? இவர்களின் கிரகநிலை எவ்வாறு உள்ளது? என்னென்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும்?
- சுரேஷ்பாபு.

தங்கள் கடிதத்தில் பெயர் மற்றும் பிறந்த தேதி மட்டுமே உள்ளது. சரியான ஜாதகப் பலன் பெற தயவு செய்து முழுமையான விபரங்களை அனுப்பவும். ஜாதக நகல் அல்லது பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த இடம் ஆகிய தகவல்கள் மிகவும் அவசியம்.

? இத்துடன் என் மகள் மற்றும் ஒரு வரனின் ஜாதகங்களை இணைத்துள்ளேன். இருவருக்கும் திருமணப் பொருத்தம் உள்ளதா? என் மகளுக்கு எப்பொழுது திருமணம் நடைபெறும்? பரிகாரங்கள் கூறுங்கள். .
- திரு.முருகேசன், மதுகுளம்.

தாங்கள் அனுப்பிய ஜாதகம் இரண்டிற்கும் சஷ்டாஷ்டக தோஷமுள்ளது. அதனால் வேறு பொருந்தக்கூடிய ஜாதகத்தைப் பார்ப்பது நல்லது. தங்கள் பெண்ணிற்கு தற்பொழுது குருதசை நடந்து வருகிறது. 2018 ஜூன் மாதத்திற்குள் நல்ல வரன் அமைய வாய்ப்புள்ளது. பரிகாரம் தேவையில்லை. குலதெய்வப் பிரார்த்தனை செய்துவர விரைவில் திருமணம் கைகூடும்.

நல்லார் பழிப்பினெழிற் செம்பவளத்தை நாணநின்ற
பொல்லா முகத்தெங்கள் போதகமே புரமூன்றெரித்த
வில்லானளித்த விநாயகனே யென்று மெய்ம்மகிழ
வல்லார் மனத்தன்றி மாட்டாளிருக்க மலர்த்திருவே.

- விநாயகப் பெருமானின் இந்த பதிகத்தை பக்தியுடன் தினசரி படித்து வர சகல நன்மை களும் நடக்கும்.

?இத்துடன் எனது இளைய மகனுடைய ஜாதகத்தை இணைத்துள்ளேன். பிரபல MNC கம்பெனி ஒன்றில் பத்து வருடங்களுக்கு மேல் வேலை பார்த்து வந்தான். எட்டு மாதங்களுக்கு முன் வேலையிலிருந்து விலக்கப்பட்டான். இன்னும் வேறு வேலை கிடைக்கவில்லை. எப்பொழுது நல்ல வேலை கிடைக்கும்?
- குப்புசாமி, பெங்களூர்.

லக்னாதிபதி 6ல் மறைந்து இருந்தாலும் சொந்த வீடானதால் கெடுபலன்கள் இல்லை. பாக்யஸ்தானாதிபதியும், 10க்கு உடையவனும் கேந்திரத்தில் சூரியனுடன் சேர்ந்துள்ளனர். புதன் அஸ்தங்கம் அடைந்துள்ளது.

கேது தசையில் மார்ச் 19 முதல் செவ்வாய் புக்தி தொடங்குகிறது. இந்த லக்னாதிபதியின் அந்தரத்தில் கண்டிப்பாக நல்ல வேலை கிடைக்கும். செவ்வாய்க்கிழமைகளில் முருகனுக்கு தீபம் ஏற்றியும், வியாழக்கிழமைகளில் விநாயகருக்கு அறுகம்புல் சாத்தியும் வழிபட்டு வந்தால் தடையின்றி எண்ணம் ஈடேறும்.

?81ம் வயது ஆரம்பித்திருக்கும் எனக்கு ஏன் இன்னும் நிம்மதியில்லை? பித்ரு சாபமா? முன் வினைப் பயனா? எபோதோ செய்த பாபங்களா? விடை சொல்லுங்கள்.
 - ஒரு வாசகர்.

தங்கள் ஜாதகத்தின்படி தங்களுக்கு சூரிய தசையில் செவ்வாய் புக்தி 10.3.2017 முதல் நடைபெற்று வருகிறது. லக்னாதிபதி சுக்கிரன் 5ல் நீசம், செவ்வாய் 3ல் நீசம் அடைந்திருப்பதும் தங்களின் மனசஞ்சலத்தை காட்டுகிறது. ஆனால், சனியின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் தைரியத்திற்கு குறைவிருக்காது.

தினசரி விநாயகர் அகவல் படித்து வருவதும், ராம நாமம் ஜெபித்து வருவதும் தங்களின் இறுக்கமான மனதை லேசாக்கும். இந்த வயதில் தங்களின் முழு மனதையும் தெய்வத்தின் பக்கம் திருப்புவதும், தங்களின் நல்ல அனுபவங்களை இளம் வயதினருடன் பகிர்ந்து கொள்வதும், தங்களை உற்சாகப்படுத்தும். தங்களின் அனுபவம் மற்றவர்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும் இருக்கும்.

?என் மகளுக்கு 2012ல் நடைபெற்ற திரு மணம் 15 நாட்களிலேயே முறிந்து விட்டது. இரண்டாவது திருமணம் எப்பொழுது நடை பெறும்? சிறப்பாக நடைபெற பரிகாரம் என்ன?
 - ஒரு வாசகர்.

தங்கள் மகளின் ஜாதகப்படி சூரிய தசையில் ராகு புக்தி நடைபெற்று வருகிறது. வருகின்ற ஜூன் 6 முதல் குரு புக்தி ஆரம்பிக்கிறது. அதன்பிறகு திருமண யோகம் ஏற்பட பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன. ஏழுக்குடைய சந்திரன் 8ல் இருப்பதும், 7ல் குரு - கேது சேர்க்கையும் தோஷத்தை தருகின்றன.

வியாழக்கிழமையன்று நவகிரகத்திலுள்ள குருவிற்கு அர்ச்சனை செய்து, கொண்டைக் கடலை நிவேதனம் செய்து வருவதும் சங்கடஹர சதுர்த்திக்கு விரதமிருந்து விநாயகருக்கு அறுகம்புல் மாலை சாத்தி வருவதும் நல்லது. சுமங்கலி பிரார்த்தனை என்று சுமங்கலிகளால் இறந்த முன்னோருக்கான மேற்கொள்ளவேண்டிய பூஜை தடை பெற்றிருப்பதாகத் தோன்றுகிறது. விரைவாக ஒரு நல்ல நாளில் சுமங்கலி பூஜை நடத்துங்கள். பலன் உடனே தெரியும்.

ஸுமனஸ வந்தித ஸுந்தரி மாதவி, சந்த்ர ஸ ேஹாதரி ஹேமமயே
முனிகண வந்தித மோக்ஷப்ரதாயனி, மஞ்ஜுள பாஷிணி வேதனுதே
பங்கஜவாஸினி தேவ ஸுபூஜித, ஸத்குண வர்ஷிணி சாம்தியுதே
ஜய ஜயஸதாஹே மதுஸுதன காமினி, ஆதிலக்ஷ்மி பரிபாலய மாம்
- என்ற ஆதிலக்ஷ்மி ஸ்லோகத்தை தினசரி பாராயணம் செய்து வர சிறந்த வாழ்க்கை துணை அமையும்.

தம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண விரும்பும் வாசகர்கள் தங்களுடைய ஜாதக நகலுடன் தங்கள் பிரச்னையைத் தெளிவாக எழுதி அனுப்பலாம். கீழ்க்காணும் முகவரிக்கு அவ்வாறு அனுப்பி வைக்கும் உங்களுக்கு இப்போதே, வண்ணமயமான, வளமான வாழ்க்கைக்கு வாழ்த்து தெரிவிக்கிறோம்.

என்ன சொல்கிறது, என் ஜாதகம்?
ஆன்மிகம், தபால் பை எண். 2908,
மயிலாப்பூர், சென்னை - 600 004

ஸ்ரீவாராஹி உபாசர், ஜோதிடர்
தி.ஸ்ரீனிவாசராமன்