ராகு-கேது பெயர்ச்சி பொதுப் பலன்கள்



நிகழும் மங்களகரமான 1191ம் ஆண்டு ஸ்வஸ்தி மன்மத வருஷம் தக்ஷிணாயனம் ஹேமந்த ருது மார்கழி மாதம் 23ம் தேதி - 08-01-2016 கிருஷ்ண சதுர்த்தசியும் வெள்ளிக்கிழமையும் மூலம் நக்ஷத்ரமும் விருத்தி நாமயோகமும் பத்ரை கரணமும் அமிர்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 15.00க்கு பகல் மணி 12.37க்கு மீன லக்னத்தில் சூரிய ஹோரையில் ராகு பகவான் கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கும், கேது பகவான் மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கும் மாறுகிறார்கள்.

ராகுவும் கேதுவும் சகோதரர்கள், சாயா கிரகங்கள். ஆனால், மற்ற கிரகங்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு இந்த கிரகங்களுக்கு உண்டு. எந்த வீட்டில் இருக்கிறார்களோ அவர்களது ஆதிபத்தியத்தை இந்த கிரகங்கள் நமக்குக் கொடுப்பார்கள். உதாரணமாக ஜனன கால ஜாதகத்தில் மேஷ ராசியில் ராகு இருக்கிறார் என்றால் அவர் மேஷ ராசியின் அதிபதியாகிய செவ்வாயின் ஆதிபத்தியத்தை எடுத்துக் கொள்வார்.

அறிவியல் பூர்வமாக நமது DNAதான் நம்மைப் பற்றியும் நமது முன்னோர்களைப் பற்றியும் சொல்லும் விஷயமாகும். ராகு - கேது என்னும் கிரகங்கள் DNA போலதான். ராகுவை வைத்து தகப்பனார் வழிகளையும் - கேதுவை வைத்து தாயார் வழிகளையும் தெரிந்து கொள்ள இயலும். எனவே தான் ராகுவை தந்தை வழிகாரகன் என்றும் கேதுவை தாய் வழிகாரகன் என்றும் சொல்கின்றனர்.

ராகு-கேதுவை வைத்துதான் தார தோஷம். களத்திர தோஷம், பிதுர் தோஷம், புத்திர தோஷம் போன்றவற்றை சொல்ல முடியும்.கல்வி, ஞானம். திருமணம், மக்கட்பேறு, வேலை, வெளிநாட்டு சம்பாத்தியம், கர்மா போன்ற நமது வாழ்வின் இன்றியமையாத அம்சங்களுக்கும் ராகு-கேது முக்கியமானவர்கள்.

ராகு-கேது பெயர்ச்சியின் போது குரு அதிசாரமாக கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார். ஆனால், பிப்ரவரி 7ம் தேதி மீண்டும் வக்ர நிவர்த்தியாகி சிம்ம ராசியில் ராகுவுடன் இணைகிறார். பின் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் சிம்ம ராசியிலேயே இருக்கிறார். பொதுவில் உலகளவில் அரசு சார்ந்த விஷயங்களில் சிறிது பிரச்னைகள் தலைதூக்கலாம். உத்திர நட்சத்திரத்தில் ராகுவும், பூரட்டாதி நட்சத்திரத்தில் கேதுவும் சஞ்சாரம் செய்கிறார்கள்.

ராகு சூரியன் அம்சத்திலும், கேது குரு + சனி அம்சத்திலும் இருக்கிறார்கள். அரசாங்கத்தில் சில துறையினர் தவறாக முடிவெடுப்பதும் அதற்கு பரிகாரமாக மேலதிகாரிகள் அதை சரி செய்வதுமாக இருக்கும். ராகுவினுடைய மாற்றம் சூரியன் வீட்டில் இருக்கிறது. அது அவருக்கு பகை வீடாகும். எனவே நாடுகளுக்குள் மோதல்கள் வரலாம். இவ்வருடம் வெப்பம் அதிகமாக இருக்கும். பண நடமாட்டம் சீராக இருக்கும்.

கல்வி சார்ந்த விஷயங்களில் தொய்வு ஏற்படும். அதே வேளையில் குரு-கேது சம பார்வையால் ஆன்மிகம் மிக அதிகமான வளர்ச்சி காணும். பூமி நிலம் சம்பந்தமான பிரச்னைகள் அதிகமாவதும் அதை தீர்க்க நீதிமன்றத்தை நாடுவதுமாக இருக்கும். ராகு இருக்கும் ரண-ருண-ரோக ஸ்தானமான மகர ராசியை சனி பார்க்கிறார். அறுவை சிகிச்சை சம்பந்தமான புதிய கண்டுபிடிப்பு உருவாகும். அதே வேளையில் கேதுவிற்கு கேந்திரத்தில் சனி பகவான் இருக்கிறார். ஆன்மிகம் சம்பந்தமான பிரச்னைகளில் சிறிது சுணக்கம் ஏற்படும்.

ராகு - கேது சஞ்சாரம் செய்யும் இடங்களால் கலப்புத் திருமணங்கள் அதிகமாகும். நிலம் - நீர் - காற்று - ஆகாயம் - நெருப்பு என பஞ்சபூதங்கள் மூலமாகவும் மக்களுக்கு பிரச்னைகள் ஏற்படும். தற்கொலைகள் அதிகமாகும். குருப் பெயர்ச்சிக்குப் பின் ஜீவகாருண்யம் மிக அற்பமாக இருக்கும். பொது பரிகாரம்: ராகுவும் கேதுவும் நாகம் சம்பந்தமான கிரகங்கள் என்பதால் அடிக்கடி நாகதேவதையை வணங்குவது நல்லது.

ராகுவிற்கு துர்க்கை அம்சமுள்ள
அம்மனையும் - கேதுவிற்கு விநாயகர்-
ஆஞ்சநேயரையும் வணங்குவது நன்மை தரும்.
இந்த பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள்
ரிஷபம் - கன்னி - விருச்சிகம் - தனுசு - மீனம்.
இந்த பெயர்ச்சியால் பரிகாரத்தின் மூலம் நன்மை அடையும் ராசிகள்
மேஷம் - மிதுனம் - துலாம் - மகரம்.
இந்த பெயர்ச்சியால் அனுபவத்தை
பெறப் போகும் ராசிகள்
கடகம் - சிம்மம் - கும்பம்.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்