ஸ்படிகம்



ஸ்படிகத்தை பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போலிருக்கும். அப்படியொரு வசீகரம் அதற்கு உண்டு. ஆன்மிகத்தில் ஸ்படிகத்திற்கென்று தனித்த முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. சரி, ஸ்படிகம் எப்படி உற்பத்தி ஆகிறது? அதை மாலையாகக் கோர்த்து அணிந்து கொள்வதால் என்ன பயன்? அதனை ஏன் அணிய வேண்டும்? என்பதைப்பற்றி அறிவோமா?

 பலநூறு ஆண்டுகளாக பூமிக்கு அடியில் உறைந்து போகும் நீர் பாறைகளாக உருப்பெற்று விடும். அந்த நீர்ப்பாறைகளை வெட்டி எடுத்து அதற்குள் அழுக்கில்லாத, தூசிகள் இல்லாத, கம்பிகள் இல்லாத, உடைசல்கள் இல்லாத, தூய்மையான கற்களை தேர்ந்தெடுத்து அதனை பலவித அளவுகளில் , உருண்டையாகவும், பட்டை தீட்டியும் தயாரிக்கலாம். பின்னர், ஒவ்வொரு மணியிலும் துவாரமிட்டு மாலையாக்கி அணியலாம். இதையே நாம் ஸ்படிக மாலை என்கிறோம்.

இந்த ஸ்படிகப் பாறைகள், பெரும் மலையின் பாறைகளைப் போலில்லாமல் ஆறு பட்டைகள் கொண்ட தூண்கள் போலவும், ஏழு பட்டைகள் கொண்ட குச்சிகள் போலவும் பூமிக்கு அடியில் கொட்டிக் கிடப்பதுண்டு. இந்த ஸ்படிக குச்சி வகைகளை பாலிஷ் செய்து ரெய்க்கி, ஹீலிங் பயிற்சிக்கு பயன்படுத்துவதும் உண்டு.

உயர்ந்த வகை ஸ்படிகமணி மாலையை நீரில் போட்டால் தெரியாது, நீரோடு நீராக ஒன்றி இருக்கும். முதல் தரம், இரண்டாம் தரம், மூன்றாம் தரம் என பத்தாம் தரம் வரை ஸ்படிக மாலைகள் கிடைக்கின்றன. முதல் தர ஸ்படிகமணி மாலைதான் நல்ல பலனைத் தரும். துல்லியமற்றதும், ஊடுருவும் தன்மையற்றதும், வெள்ளையாகவும் இருக்கும் ஸ்படிகமணி மாலைகள் எதற்கும் உபயோகமற்றதாகும்.

அப்படி என்னதான் இருக்கின்றது அந்த உயர்ந்த ஸ்படிகமணி மாலையில்? மனிதர்களாகிய நாம் ஒருநாளில் விடும் மூச்சு எண்ணிக்கை என்ன தெரியுமா? சராசரியாக 21,600 மூச்சாகும். ஆனால், இன்றைய பரபரப்பு உலகில் முப்பதாயிரம் வரை விடுவதாக சொல்கிறார்கள். இதனால் ஆயுள் குறையும் என்பது விஞ்ஞானபூர்வமான விளக்கமாகக் கருதப்படுகிறது. ஸ்படிக மணி ஒரு மணி நேரத்திற்கு 21,600 அதிர்வலைகளை வெளிப்படுத்துவதாக கண்டறிந்திருக்கின்றார்கள்.

அப்படியானால் நம் கழுத்தில் அணியும் 108 ஸ்படிகமணிகள் கொண்ட மாலை எவ்வளவு அதிர்வலைகளை நம்மைச் சுற்றிலும் பரவிடச் செய்யும் என்று எண்ணிப் பாருங்கள். ஒரு அரண்போல நம்மை பாதுகாக்கும். முழுமையான கவசமாக ஸ்படிக மணி விளங்குகிறது. இதனால், தெய்வ அருள், மன அமைதி, சாந்தம், நல்ல சிந்தனை, தெளிவான அறிவு , தீர்க்கமான முடிவு போன்ற அற்புதங்களை நம்முள் நிகழ்த்தும்.

ஸ்படிகமணி மாலையுடன் வேறு எந்த மணிகளையும் சேர்த்து மாலை அணியக்கூடாது. (ருத்ராட்சமாக இருந்தாலும் சேர்க்கக் கூடாது அதனை தனியாக அணிந்து கொள்ளலாம்) கொஞ்சம் தரமற்ற ஸ்படிகமணி மாலையாக இருந்தாலும் அது செயல்படாது. ஸ்படிக லிங்கமும் அநேக மடங்கு பலன் தரும். முக்தி லிங்கம், கேதார்நாத், வரலிங்கம்  நீலகண்ட ஷேத்திரம் (நேபாள்), மோட்ச லிங்கம் சிதம்பரம், போகலிங்கம் சிருங்கேரி, யோகலிங்கமாக சந்திரமௌலீஸ்வரராக காஞ்சியில் ஈசன் அருள்பாலிக்கிறார்.  இவையெல்லாமுமே ஸ்படிக லிங்கங்கள்தான். தினமும் விடியற்காலையில் இதற்கு பூஜைகள் செய்யப்படுகின்றன.

- குருசரண்